சனி, 23 அக்டோபர், 2010

சவூதி: 4 மில்லியன் ரியால் கொள்ளை - ஆறுபேர் கைது !

சுமார் 4 மில்லியன் ரியால்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் ரியாத் காவல்துறையினர் சிறப்பாகச் செயற்பட்டு அறுவர் கொண்ட கொள்ளைக்கும்பலை கைது செய்துள்ளனர். இதில் ஐவர் ஆசிய நாட்டவர் என்றும் மற்ற ஒருவர் மண்ணின் மைந்தர் என்றும் தெரிய வந்துள்ளது
ரியாத் நிறுவனமொன்று வங்கியில் செலுத்த பணம் கொண்டு சென்றபோது, அந்த வாகனத்தை வழிமறித்த கொள்ளையர்கள் அதிலிருந்த ச.ரி 40 இலட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளர். வழிமறிக்க உதவியாக அவர்கள் கொண்டு வந்த வாகனமும் திருடப்பட்ட ஒன்று என்றும், சம்பவத்திற்குப் பிறகு, தடயத்தை அழிக்கும் முயற்சியில் அந்த வாகனத்தையும் திருடர்கள் தீவைத்து எரிக்க முயன்றனர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது
இது குறித்து நிருபர்களிடம் பேசிய ரியாத் நகர காவல்துறை மக்கள் தொடர்பாளர் சயீத் அல் கஹ்த்தானி, கொள்ளையர்களின் வசிப்பிடத்தை காவல்துறை ஆறுமணிநேரம் சோதனை செய்ததில் சுமார் 37 இலட்சம் ரியால்கள் மீட்கப்பட்டதாகவும், இஃதன்றி கைபேசிகள், கடவுச்சீட்டுகள், முத்திரைகள், இராணுவச் சீருடைகள், ச.ரி 6,000க்கான காசோலை ஒன்றும் கைப்பற்றப்பட்டன.
மேலும் அவர் தெரிவிக்கையில் "கொள்ளையடிக்கப்பட்டோர் முழுமையான விபரங்களைத் தராவிட்டாலும், காவல்துறை சிறப்பாகச் செயற்பட்டு பத்தே நாள்களில் இக்குற்றத்தை முறியடித்துள்ளது" என்றார்.

கருத்துகள் இல்லை: