திங்கள், 13 டிசம்பர், 2010

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆணையரகம், நலவாரியம் அமைக்கப்படும்; கருணாநிதியின் அறிவிப்பு தமிழர்கள் நலன் காக்குமா?


இந்தியாவைச்சேர்ந்த அதிலும் குறிப்பாக தமிழகத்தை  சேர்ந்த பல்லாயிரம் தமிழர்கள் அரபகங்கள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில்  பணியாற்றி  வருகின்றனர். இவர்கள் மூலம் இந்திய அரசிற்கு கணிசமான அந்நியச்செலவாணி கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தாயகம் துறந்து வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களில் கவுரவமான  பதவியில் இருப்பவர்கள் நீங்கலாக, மற்றவர்களில் பெரும்பாலோர் படும் இன்னல்களுக்கோ அளவில்லை.

வெளிநாட்டுப் பயணத்திற்காக போலி எஜெண்டுகளிடம் பணம் கொடுத்து ஏமாந்தோர் ஒருபுறம், அதையும் தாண்டி விமானம் ஏறி, வெளிநாட்டு மண்ணில் தடம் பதித்தவுடன், தாய்நாட்டில்  போலி ஏஜெண்டுகள் கூறியபடி சலுகைகள் இன்றி வெறும் குறைவான சம்பளத்திற்கு அதிகநேரம் மாடாய் உழைத்து  ஓடாய் தேயும் அவலநிலை.

குறைவான ஊதியமும் மாதம் நிறைவானவுடன்  வழங்காமல், பல மாதங்கள் பாக்கி வைத்து கழுத்தறுக்கும் கம்பெனிகளின் தொல்லை ஒருபுறம்; மறுபுறம் தாயகத்திலோ வட்டிக்கு பணம் தந்தவன் குடும்பத்தின் கழுத்தை  நெருக்கும் அவலம் மறுபுறம்.  இவ்வாறு கம்பெனிகளில் ஏற்படும் இன்னல்களை எழுத்தால் வடித்து எம்பஸி எனப்படும் தூதரகம் சென்றாலோ, எடுத்தெறிந்து பேசும், ஏளனம்  பேசும்  அதிகாரிகள் சிலரின்  கண்டுகொள்ளாமை. இதுபோக பணியாற்றும் நாட்டில் மரணம் சம்பவித்து விட்டாலோ, நஷ்டஈடு கிடைக்குதோ இல்லையோ, பாடி நாருவதற்கு முன் நாடுவந்து சேருமா என்பது கேள்விக்குறி.

இத்தகைய வெளிநாட்டு கனவுலக வாழ்கையில் வாழ்க்கையை தொலைத்து நிற்கும் ஏராளமான இந்தியர்களின் நிலையை சீராக்கவே வெளியுறவுத்துறை என்ற ஒன்று உண்டு. ஆனால் அந்த வெளியுறவுத்துறை அமைச்சர் அவ்வப்போது சில  நாடுகளுக்கு விசிட் அடித்து சில ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதோடு  கரையேறிவிடுவார். அவர் கையெழுத்திட்ட தொழிலாளர் நலன் சார்ந்த விசயங்கள் அமுல்படுத்தப்படாமல் கரையான் அறித்ததை பாவம் அவர் எங்கே அறிவார்?

இத்தகைய இன்னல்களுக்கு விடிவு தேவை என்ற அடிப்படையில் ஒவ்வொரு மாநில அரசும் வெளிநாடுவாழ் தமது மாநில மக்களுக்காக  தனி நலவாரியம் அமைத்து வரும் நிலையில், தமிழக அரசை நோக்கியும், வெளிநாடு வாழ் தமிழர்கள்  நலவாரியம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை பலரால் பரவலாக வைக்கப்பட்டது.

அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, முதல்வர் களமாக தேர்ந்தெடுத்தது  முஸ்லிம் லீக் மாநாடு என்பதில் ஒருவகை மகிழ்ச்சியே. ஏனெனில் தமிழர்களில் அதிகமாக வெளிநாட்டில் அவதியுறுவது முஸ்லிம்களே! இப்போது முதல்வரின் அறிவிப்பை பார்ப்போம்;

''தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடுகளில் பணிபுரிவதால் அவர்களின் நலனுக்காகவும், வெளிநாடுகளில் பணிபுரிகின்றபோது அங்கு அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து அவர்களை மீட்டிடவும், வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காகத் தனித்துறையை ஏற்படுத்திட வேண்டும் எனும் கோரிக்கையை ஏற்கும் வகையில், மறுவாழ்வுத்துறை இயக்குநரகத்தை, ``அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களின் நல ஆணையரகம்'' எனப் பெயர் மாற்றம் செய்திடவும், அந்த ஆணையரகத்தின்கீழ், "வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம்'' ஒன்றை ஏற்படுத்திடவும் இந்த அரசு முடிவு செய்துள்ளது. என்று கூறியுள்ளார் முதல்வர்.

நலவாரியம் அமைப்பது மகிழ்ச்சிக்குரியது என்றபோதிலும் அந்த வாரியம் பெயரளவில் இல்லாமல் வீரியமாக செயல்படுவதில்தான் முதல்வரின் என்னமும் மக்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறும் என்பதை முதல்வர் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் இந்த வாரியத்தின் சார்பாக,

  • வெளிநாடு வாழ் தமிழர்களின் பணிநேரம்- ஊதியம்- போனஸ்- உறைவிடங்கள்- உணவு- விடுமுறை- ஓய்வூதியம் போன்றவைகள் ஒப்பந்தப்படி வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவேண்டும்.
  • ஊதியங்கள் முறையாக மாதம் தோறும் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவேண்டும்.
  • வெளிநாடுகளில் ஏற்படும் விலைவாசி ஏற்றம்; மற்றும் வொர்க் பெர்மிட்டுக்கான கட்டணங்கள் இவைகள் ஆண்டு தோறும் உயர்வதற்கு ஈடாக, பனியாளர்களின் ஊதியமும் உயர்த்தப்பட  வழிவகை செய்தல். 
  • ஆண்டு விடுமுறை முறையாக வழங்க கம்பெனிகள் நிர்பந்தித்தல் மற்றும் விடுமுறைக்கான ஊதியம் வழங்க ஏற்பாடு செய்தல்.
  • பணியை நிரந்தரமாக முடித்து தாயகம் திருப்பும் பணியாளர்களுக்கு உரிய சர்வீஸ் தொகைகள் கிடைத்திட ஆவன செய்தல்.
  • பணி நேரத்தில் மரணித்தால் இழப்பீடு கிடைத்திட அவன செய்தல்.
  • மரணித்தவர்களின் உடலை விரைவாக உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை  மேற்கொள்ளல்.
  • வெளிநாடுகளில் சின்ன சின்ன குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையில் உள்ளவர்களை விடுவிக்க, சட்டரீதியாக அணுக ஒவ்வொரு நாட்டிலும் சட்ட மையம் ஏற்படுத்துதல்.
  • கொலை-தீவிரவாதம்- போதை- விபச்சாரம் போன்ற பெரிய குற்றங்கள் செய்தவர்கள் நீங்கலாக, மற்றவர்களை ஆண்டுதோறும் பொது மன்னிப்பின் மூலம் விடுதலை செய்ய வெளிநாட்டு அரசுகளை கோருதல்.
  • வாரியம் சார்பாக ஆண்டுதோறும் 'குறை தீர்க்கும் நாள்' என்ற நிகழ்ச்சி தமிழர்கள் வாழும் நாட்டில் நடத்தப்பட்டு, குறைகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை  மேற்கொள்வதோடு,  பணியாளர்களின் மன அழுத்தம் போக்க, மனோதத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்குதல்.
  • வெளிநாட்டில் பணியாற்றி திருப்பும் தமிழர்க்கு வங்கியில் வட்டியில்லா கடன் வழங்கி சுய தொழில்செய்ய உதவுதல்.
  • இவை எல்லாவற்றிற்கும்  மேலாக தமிழகத்தில் உள்ள போலி ஏஜெண்டுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல்.
இவை போன்ற இன்னும் ஏராளமான கோரிக்கைகள் தமிழர்கள் சார்பாக உண்டு. அவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால்தான் நலவாரியம் அமைத்ததற்கு பலனுண்டு. இல்லையேல் தமிழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டு  செயல்படாமல்  உள்ள நலவாரியங்கள் பட்டியலில் ஒன்று கூடியதுதான் மிச்சம். அரசு கவனத்தில் கொள்ளுமா?

சதாம் தூக்கு தண்டனை.. கடைசி நிமிடங்கள் :விக்கிலீக்ஸ்


 ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டபோது, கடைசி நேரத்தில் நடந்த சம்பவங்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
சதாம் உசேன் கடந்த 2006&ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி தூக்கிலிடப்பட்டார். அப்போது நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் கடந்த 2007&ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி அனுப்பியுள்ளனர். அந்த தகவல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. 

அதில் கூறப்பட்டிருப்பதாவது:பாக்தாத்தில் (அப்போதைய) அமெரிக்க தூதர் ஜல்மே கலில்சத் மற்றும் அரசு தலைமை வக்கீல் முன்கித் பரூன் ஆகியோர் சதாம் தூக்கு குறித்து ஆலோசனை நடத்தினர். தூக்கு மேடை சரியில்லை என்பதால் அமெரிக்க வீரர்கள் புதிதாக மேடை கட்டியதாக கலில்சத்திடம் பரூன் கூறியுள்ளார்.
சதாம் தூக்கிலிடப்படும் இடத்துக்கு ஈராக் அதிகாரிகள் 14 பேர் ஹெலிகாப்டரில் வருகின்றனர். அவர்களிடம் அமெரிக்க வீரர்கள் சோதனை நடத்தி செல்போன்களை கைப்பற்றுகின்றனர். பரூன் மற்றும் நீதிபதி ஆகியோர் சதாம் உசேனை சந்தித்து தீர்ப்பை வாசித்து காட்டுகின்றனர். பிறகு அவர் தூக்கு மேடைக்கு அழைத்து செல்லப்படுகிறார்.

பயமாக இருக்கிறதா என்று சதாமிடம் ஈராக்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொவாபக் அல் ரூபே கேட்கிறார். பயம் எதுவும் இல்லை. நான் ஆட்சிக்கு வரும்போதே எதிர்பார்த்ததுதான்என்கிறார் சதாம். தூக்கு மேடை ஏறும் வரை குர்ஆன் புத்தகத்தை கையில் வைத்திருந்த சதாம், அதை ஈராக் தலைமை நீதிபதியும் தனது நெருங்கிய உறவினருமான அவாத் அல்பந்தரின் மகனிடம் ஒப்படைக்கும்படி கூறி பரூனிடம் கொடுத்தார்.
எல்லாம் ஒழுங்காக நடக்க வேண்டும்என ஈராக் வீரர்களிடம் பரூன் சொல்கிறார். சதாமின் கால்களை வீரர்கள் கயிற்றால் கட்டினர். காலை கட்டுகிறீர்களே. தூக்கு மேடையில் எப்படி ஏறுவது?’ என்று சதாம் கேட்கிறார். நரகத்துக்கு போஎன சதாமை ஒரு வீரர் திட்டுகிறார். உடனே பரூன், ‘‘யாரும் எதுவும் பேசக் கூடாது’’ என எச்சரிக்கிறார்.
சதாமை வீரர்கள் தூக்கு மேடைக்கு தூக்கி செல்கின்றனர். தலையை மூடிக்கொள்ள கொடுத்த துணியை வேண்டாம் என்கிறார் சதாம். சிறிது நேரம் பிரார்த்தனை செய்த பின் அவரது கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்டது. சதாம் தூக்கில் தொங்கியபோது, அங்கு நின்றிருந்தவர்களில் ஒருவர் ‘‘முக்தடா, முக்தடா, முக்தடா’’ என கூச்சலிட்டார். முக்தடா அல் சதர் என்பவர் ஷியா பிரிவு மதத் தலைவரின் தந்தை. சதாம் ஆட்சியில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சத்தம் போடாதீர்கள் என பரூன் மீண்டும் எச்சரிக்கிறார்.
சதாம் இறந்ததும் தூக்கு மேடையில் இருந்து அவரது உடல் அகற்றப்பட்டு ஒரு பையில் வைக்கப்பட்டது. சதாமின் உடல் தண்ணீர் ஊற்றி கழுவப்பட்டதா என மத குரு ஒருவர் உறுதி செய்கிறார்.
இவ்வாறு விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதாம் உசேன் மீது ஈராக் சட்டப்படிதான் வழக்கு விசாரணை நடந்து, ஈராக் அரசுதான் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கியது என அமெரிக்கா கூறியது. தூக்குமேடையை அமெரிக்க வீரர்களே கட்டினர் என்பதையும் சதாம் தூக்கு தண்டனையில் அமெரிக்காவுக்கு நெருங்கிய தொடர்பிருப்பதையும் விக்கிலீக்ஸ் தற்போது அம்பலப்படுத்தியிருக்கிறது.

கர்நாடகாவா அல்லது சங்க்பரிவாரின் ராம ராஜ்யமா?

கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் உள்கட்சிப் பூசல்கள் மற்றும் ஊழல் ஆட்சியால் அம்மாநிலத்தில் பாஜக வேகமாக வளர்ந்தது. வலுவான சிறுபான்மை மக்களின் ஆதிக்கம் இல்லாத கர்நாடகாவில் சங்க்பரிவாரத்தின் மதவெறி அஜண்டாக்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கத் துவங்கியது.

தென்னிந்தியாவில் காவியின் ஆட்சி என்ற சங்க்பரிவாரத்தின் கனவை நினைவாக்கும் விதமாக அவர்களுக்கு ஆதரவான களத்தை உருவாகும் சூழலை காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஜனதாதளமும் ஏற்படுத்திக் கொடுத்தன. கிராம மக்களை மறந்துவிட்டு நகரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து முதலாளித்துவ சக்திகளின் விருப்பங்களுக்கு துணை நின்று, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வழியில் பயணித்தார் எஸ்.எம்.கிருஷ்ணா.

கிராம மக்களின் பிரச்சனைகளை கண்டும் காணாததுபோல் நடித்த எஸ்.எம்.கிருஷ்ணா, உலக ஐ.டி வரைப்படத்தில் பெங்களூரின் இடத்தை உறுதிச் செய்வதிலேயே குறியாக இருந்தார்.
ஐந்துவருடம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அடுத்த தேர்தலில் தோல்வியைத் தழுவியது. மதசார்பற்ற ஜனதாதளத்தின் குமாரசாமி பாரதீய ஜனதா ஆதரவுடன் கர்நாடகாவின் 18-வது முதல்வராக பதவியேற்றார். இது பா.ஜ.கவின் அதிகாரத்தை நோக்கி எடுத்துவைத்த காலடிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஒரு ஆண்டிற்கு பிறகு குமாரசாமி முதல்வர் பதவியை இழக்க கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. 2008 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெரும்பான்மைக் கிடைக்க 4 சீட்டுகள் குறைவான நிலையில் ஆட்சியில் அமர்ந்தது பா.ஜ.க.பின்னர் கர்நாடகத்தில் பா.ஜ.கவின் ஆட்சி ஊழலிலும், குதிரை வியாபாரத்திலும் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளியது. ஹிந்துத்துவத்தின் உயிர்தெழலுக்காக கடுமையாக உழைக்கும் சங்க்பரிவாரின் உண்மையான விருப்பம்தான் கர்நாடகாவில் தற்பொழுது நடந்துவரும் பகல் கொள்ளையாகும். பெல்லாரியின் ராஜாக்களாக வலம்வரும் ரெட்டி சகோதரர்கள்தான் ஊழலின் சூத்திரதாரிகள்.

ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஒரு மெட்ரிக் டன் இரும்பை விற்று அதில் 25 ரூபாயை வரியாக செலுத்துகிறார்களாம். பெல்லாரியின் மலைகளையெல்லாம் ரெட்டி சகோதரர்கள் தரைமட்டமாக்கி வருகின்றனர். கிடைப்பதில் ஒரு பங்கு டெல்லியில் பா.ஜ.க தலைவர்களின் சட்டைப் பையில் முறைதவறாமல் விழுந்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த பட்டப்பகல் கொள்ளையை ஆசிர்வதித்தவாறு கர்நாடகா ஆர்.எஸ்.எஸ் தலைவர் எம்.சி.ஜெயதேவும் எடியூரப்பாவுக்கு உறுதுணையாக உள்ளார். அதிகாரத்தை காப்பாற்றுவதற்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆட்சி ரிஸார்ட்டுகளுக்கும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குமிடையே சீரழிந்துக் கொண்டிருந்தது.

அதிகாரம்-அது மட்டுமே எடியூரப்பாவிற்கும், அவரது கூட்டாளிகளுக்கும் ஒரே லட்சியம். மூன்று வருடங்களுக்கு முன்பு எடியூரப்பா காங்கிரஸில் சேர்வதற்கு முயற்சி மேற்கொண்ட பொழுது ஜெயதேவ் தலையிட்டு தடுத்து நிறுத்தினார். அதேவேளையில் ஹிந்துத்துவாவின் மதவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஊழல் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆட்சியில் தனது செல்வாக்கை துஷ்பிரயோகம் செய்துக்கொண்டு பிரமோத் முத்தலிக்கின் ஸ்ரீராம சேனா ஒரு கலவரத்திற்கு பத்துலட்சம், இரண்டு கலவரத்திற்கு பணம் கட்டினால் ஒரு கலவரம் இலவசம் என்ற மூலதன சந்தையின் ஆஃபருடன் செயல்படத் துவங்கியது.

பாதிக்கப்பட்டவர்கள் தங்களது எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்தியதைக் கூட எடியூரப்பாவின் பாஜக அரசால் பொறுத்துக் கொள்ளவியலவில்லை. இதற்காக அவர்கள் நிழலுக தாதாக்களுடன் கூட்டணி வைக்கக்கூட தயங்கவில்லை. நவ்ஷாத் ஹாஸிம்ஜி ஒரு அரசு-நிழலுக தாதாக்கள் கூட்டணியின் கொடூரத்திற்கு தனது இன்னுயிரை பறிக்கொடுத்தார்.

மைசூரில் ஹலீமா ஸாதிய்யா மஸ்ஜிதில் சங்க்பரிவாரக் கும்பல் பன்றியின் இறைச்சியை எறிந்து முஸ்லிம் சமுதாயத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்த முனைந்தது. ஆனால், இதனைப் புரிந்துக் கொண்ட முஸ்லிம் அமைப்புகள் ஒரு கலவரத்தை திட்டமிட்ட சங்க்பரிவார ஆட்சியாளர்களின் முயற்சிகளை எதிர்த்தனர். ஆனால், கலவரத்தை கொளுந்துவிட்டு எரியச் செய்யலாம் எனக் கருதிய ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சார்ந்த கர்நாடகா மாநில உள்துறை அமைச்சர் ஆச்சார்யாவின் முயற்சி தோல்வியடைந்ததால், அவரது கவனம் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை சிறையில் அடைப்பதை நோக்கி திரும்பியது.

பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்களை கலவரத்தை தூண்ட முயன்றதாகக் கூறி கைதுச் செய்த ஆச்சார்யா, இதற்கெதிராக ஜனநாயகரீதியில் போராடிய பெண்கள் உள்ளிட்டவர்களை காவல்துறையின் மூலம் வீதியில் போட்டு கண்மூடித்தனமாக அடித்து உதைக்கச் செய்தார். இறுதியில் சட்டத்திற்கு புறம்பாக பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றமே தலையிட நேர்ந்தது. தொடர்ந்து எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைத் திருப்பவும், மக்களின் உணர்வுகளை கட்டுப்படுத்தவும் ஒரு தீவிரவாதியை உருவாக்கும் நிலைமைக்கு கர்நாடக பா.ஜ.க அரசு தள்ளப்பட்டது.

பலிகடாவை கண்டுபிடிக்கும் முயற்சி கடைசியாக கர்நாடகா எல்லையும் தாண்டி கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் சென்று முடிந்தது. ஊனமுற்றவராக ஒன்பது ஆண்டுகளை கோவைக் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டு பின்பு விடுதலையான அப்துல் நாஸர் மஃதனியை பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கிலும் கேரள அரசின் உதவியுடன் கைதுச்செய்து சிறையிலடைத்தது கர்நாடகா பா.ஜ.க அரசு.

வழக்கத்திற்கு மாறாக அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிரான முயற்சிகளைக் குறித்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன. மஃதனிக்கெதிரான சாட்சிகளும், வாக்குமூலங்களும் போலி என பல பக்கங்களிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கர்நாடகா மாநிலம் குடகு என்ற இடத்தில் நடந்த ரகசிய முகாமில் மஃதனி கலந்துக் கொண்டார் என்பதுதான் கர்நாடகா அரசு மஃதனிக்கு எதிராக முன்வைத்த முக்கிய சாட்சி .

கேரள போலீசாரின் கண்காணிப்பிலிருந்த அப்துல் நாஸர் மஃதனி அவர்களின் அனுமதியில்லாமல் எங்கும் செல்வதற்கான சுதந்திரத்தையும் இழந்திருந்தார். கேரள போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அப்துல் நாஸர் மஃதனி தனது ஒற்றைக் காலுடன் கர்நாடகா மாநிலம் குடகு ரகசிய முகாமில் பங்கேற்றார் என கர்நாடகா அரசு கூறியது. பிரபலமானவர் என்ற நிலையில் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் அப்துல் நாஸர் மஃதனியின் உருவம் அடிக்கடி தென்படுவதால் அவரை குடகில் வைத்து அடையாளம் கண்டதாக கூறி சாட்சி வாக்குமூலம் அளித்ததாக கர்நாடகா போலீஸ் தெரிவித்தது.

இதன் உண்மை நிலையை அறிவதற்காக ஏசியாநெட்டின் முன்னாள் செய்தியாளரான ஷாஹினா டெஹல்காவிற்காக கர்நாடகா அரசு மஃதனிக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததாக கூறும் சாட்சிகளை சந்தித்துள்ளார். சாட்சிகளில் ஒருவர் பா.ஜ.கவைச் சார்ந்த யோகானாந்த் என்பவராவார். பா.ஜ.க அரசு அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக சாட்சிகளாக முன்னிறுத்தியவர்களின் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றதுக்கூட தனக்கு தெரியாது என யோகானந்த் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, குடகில் நடந்ததாக கூறப்படும் சம்பவங்கள் குறித்த வாக்குமூலங்களுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என யோகானந்த் கூறியுள்ளார்.

உண்மை விபரங்கள் வெளிவந்தால் தங்களின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுவிடும் என அஞ்சிய பா.ஜ.க அரசு ஷாஹினாவுக்கெதிராக நடவடிக்கையை மேற்கொண்டது. சமீபத்தில் கேரளாவிலிருந்து தாய்லாந்திற்கு வர்த்தகம் தொடர்பாக பயணித்துவிட்டு திரும்பி வருகையில் பெங்களூர் வழியாக பயணித்த கேரளாவைச் சார்ந்த 9 நபர்களை அவர்கள் முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் தனியாக கடுமையான சோதனைகளை மேற்கொண்டது பா.ஜ.க அரசு. இவ்வாறு நாடு எக்கேடுக் கெட்டு குட்டிச்சுவாரானால் எங்களுக்கு என்ன? எங்கள் நோக்கம் நிறைவேறினால் போதும் என்ற மனோநிலையிலிருக்கும் கர்நாடகாவின் சங்க்பரிவார அரசுக்கு இனி குஜராத் மாதிரி இனப்படுகொலைதான் மீதமுள்ளதோ?