திங்கள், 18 அக்டோபர், 2010

பிராமண நீதிபதிகள், தலித் மனுதாரர் - குஜராத் நீதிமன்றத்தில் சலசலப்பு!

அகமதாபாத் : தலித் ஒருவர் பணியாளர் நியமனத்தில் தான் தலித் என்ற ஒரே காரணத்துக்காக தனக்கு அநியாயம் இழைக்கப்பட்டதாகவும் பிராமணர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான மாவட்ட நீதிபதி பணியாளர்களை நியமித்து உத்தரவிட்டதாகவும் நியாயம் கோரி தொடர்ந்த வழக்கு, மற்றொரு பிராமண நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்ட சம்பவம் குஜராத் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
--------------------------------------------------------------------------------

குஜராத் உயர் நீதிமன்றத்தில் அஜித் மக்வானா என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்தவர், ஜுனாகாத் மாவட்ட நீதிபதி மீது புகார் ஒன்றைப் பதிவு செய்தார். அப்புகாரில், "மாவட்டத்தின் Class - III மற்றும் Class - IV பணியாளர்களை நியமிப்பதில் மாவட்ட நீதிபதி பிராமணர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார். பணிகளில் நியமிக்கப்பட்டவர்களில் 60 சதவிகிதம் பேர் பிராமணர்களாவர். இவ்வாறு தன் உயர் சமூகத்தைச் சேர்ந்த பிராமணர்களை நியமிப்பதற்காகவே விதிமுறை மீறி இருமுறை நேர்காணல் நடத்தி என்னை அப்பணிகளுக்குத் தகுதி இழக்க செய்தார்" என்று மக்வானா குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு குஜராத் உயர் நீதிநன்றத்தில் நீதிபதி R.R. திருப்தி அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் அஜித் மக்வானா சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் A.M. சௌஹான் உடனடியாக எழுந்து, "இவ்வழக்கு பிராமண சமூகத்தைச் சேர்ந்த நீதிபதியின் மீது தொடரப்பட்டுள்ளது. அவர் தன் சமூகத்துக்குச் சார்பாக நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த வழக்கில், நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் அதே பிராமண வகுப்பை சார்ந்தவர் என்பதால், இவ்வழக்கில் முறையான நியாயம் கிடைக்கும் என்ற அச்சம் தனக்கு உள்ளதாகவும் எனவே, நீதிபதி திருப்தி இந்த வாழ்க்கை விசாரிப்பதில் தனக்கு ஆட்சேபணை உள்ளதாகவும்" தெரிவித்தார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி R.R. திருப்தி, "ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் இவ்வாறு கூறுவது இதுவே முதன் முறை" என்றும், "இது நீதிமன்றத்தின் மீதான அவருடைய தவறான புரிதலை காட்டுவதாகவும்" சினத்துடன் கூறினார்.

தொடர்ந்து சினத்தோடு, "இவ்வாறு கூறியதற்காக வழக்கறிஞர் A.M. சௌஹான் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கவும், ஒருவேளை அவர் தனது கட்சிக்காரரான அஜித் மக்வானாவின் தூண்டுதலின் பேரில் அவ்வாறு பேசியிருந்தால் அவற்றின் மீதும் வழக்கு தொடுக்கவும் முடியும்" என்று கடுமையாகக் கூறிய நீதிபதி, ஒரு வழியாக தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டு,

"நீதிமன்றத்திற்கு ஒரு அழுத்தத்தை கொடுத்து தனக்கு சாதகமான தீர்ப்பைப் பெறுவதற்காகவோ அல்லது வேறு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்றவோ தான் வழக்கறிஞர் A.M. சௌஹான் இவ்வாறு பேசியுள்ளார். இது போன்ற செயல்பாடுகளை ஊக்குவிக்க கூடாது என்ற காரணத்திற்காக இவ்வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்" என்று கூறி வழக்கை மேற்கொண்டு விசாரிக்காமலேயே தள்ளுபடி செய்தார்.

மனித மாண்பை மழுங்கடிக்கும் இலவசம்!

பள்ளிப் படிப்பைப் பாதியிலே நிறுத்தியவர்கள், பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் தோல்வியுற்றவர்கள், குறைந்த மதிப்பெண் பெற்றதால் அடுத்த உயர்கல்விக்குப் போகாமல் வீட்டில் இருக்கிற மாணவ, மாணவியரைச் சந்திப்பதற்காக கிராமங்களுக்குச் சென்றேன். மாணவர்களுக்குத் தொழிற் பயிற்சிக் கற்றுத் தருகின்ற சமுதாயக் கல்லூரியில் சேருங்கள் என்று அவர்களிடம் சொன்னேன். உடனே, அவர்கள் கேட்ட கேள்வி, "எங்காவது இலவசமாகத் தொழிற் கல்வி கற்று தருவார்களா? அங்கே நாங்கப் போகத் தயார் என்று சொன்னார்கள்.

இன்னொரு முறை மகளிர் சுய உதவிக் ழுக்களில் செயல்படுகின்ற பெண்களிடம், தலைமைத்துவப் பயிற்சிக்கு வருவீர்களா? என்று கேட்டதற்கு ""அந்த பயிற்சிக்கு வந்தா ஏதாவது இலவசமா பணமோ, பொருளோ தருவீங்களா?'' என்று உடனே கேட்டார்கள். நான் ஒன்றும் பதில் பேச முடியவில்லை.

எல்லாம் இலவசமாகத் தரப்பட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. இலவசம் என்ற சிந்தனை எப்படி மக்களிடம் திணிக்கப்பட்டது?. இலவசம் என்ற கருத்து எங்கிருந்து முளைக்கிறது? இலவசம் கொடுப்பதால் ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கிடைக்கிற ஆதாயம் என்ன?. இலவசம் பெறுவதால் மக்களுக்கு ஏற்படுகின்ற உடனடி மற்றும் நீண்டகால பாதிப்புகள் என்ன? மிகுந்த கவலையோடும், சமூக அக்கறையோடும் அணுக வேண்டிய கேள்விகள்.

பள்ளிக் கூடங்களில் பயிலுகின்ற ஏழை மாணவ, மாணவியர் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காகவும், பசியின் காரணமாக அவர்கள் கல்வியைப் புறக்கணிக்கக் கூடாது என்பதற்காகவும் காமராஜர் காலத்தில் இலவச மதிய உணவும், எம்.ஜி.ஆர். காலத்தில் சத்துணவும் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அது காலப்போக்கில், பள்ளிக்கூட வாசல்களைக் கடந்து, பொது மக்களுக்கு வேண்டிய எல்லா அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தருகின்ற இலவசங்கள் ஒவ்வொன்றாகக் கொடுக்கப்பட்டன. இலவச சேலை, வேஷ்டி, இலவச சைக்கிள், இலவச சீருடை, இலவச பாடப்புத்தகம், எரிவாயு அடுப்பு, வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, ஒரு ரூபாய்க்கு அரிசி என்று இலவசத்தின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்த இலவசத் திட்டங்களை ஏன் அரசு முனைப்புடன் செயல்படுத்த விரும்புகிறது என்று நாம் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். வறுமைக்கும், அறியாமைக்கும் காலங்காலமாக வாக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களின் தாற்காலிகத் தேவைகளை இந்த இலவசங்கள், மிக நேர்த்தியாக பூர்த்தி செய்து விடுகின்றன. பல நாட்கள் தண்ணீரே குடிக்காமல் நாக்கு வறண்டு கிடக்கிற ஒரு மனிதனுக்கு ஒரு செம்பு தண்ணீர் கொடுத்தால் எவ்வளவு மகிழ்ச்சியடைவானோ, அதே மகிழ்ச்சியை இலவசம் பெறுகிறவர்களும் அடைகிறார்கள். ஆனால், அந்த மகிழ்ச்சி தொடருமா? நீண்ட நாட்களுக்கு நீடிக்குமா? என்று யாருமே யோசிப்பதில்லை.

மக்களின் நீண்ட காலத் தேவைகளைப் பூர்த்தி செய்கிற வகையில் அரசு பல திட்டங்களைத் தீட்டுவதில்லையே ஏன்? மக்களை எப்போதும் விளிம்பு நிலையில் வைத்திருந்தால்தான் ஆட்சியாளர்கள் அதிகாரத்தைத் தக்க வைக்க முடியும். மக்களின் நீண்ட காலத் தேவைகளை அரசு நிறைவேற்றினால், அவர்கள் சுயசார்புள்ளவராக மாறி விடுவதற்கான வாய்ப்பு உள்ளது. மக்கள் சுயமாக சிந்தித்து செயல்பட ஆரம்பித்து விட்டால், அரசின் திட்டங்களைக் கேள்வி கேட்கும் நிலைக்கு வளர்ந்து விடுவார்கள் என்ற பயம் உள்ளது. அதன் பின்பு விழிப்படைந்த நிலையில், இலவசமே வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். "எங்களுக்கு தன்மானம் உண்டு. நாங்கள் உழைத்து சாப்பிட விரும்புகிறோம்' என்று உறுதிப்பட சொல்லிவிடுவார்கள்.

மேலும், இலவசம் என்ற பெயரில் ஆளும் அரசியல் கட்சிகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் இடையில் எண்ணற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பாதாள அறையில் யாருக்கும் தெரியாமல் கையெழுத்தாகின்றன. இதனால், குறைந்த விலையில் தரமற்ற பொருட்களைத் தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்து அள்ளி வீசுகின்றன.

இலவசமாக விநியோகம் செய்யப்படுகின்ற பொருட்களுக்கு தரம் இருந்தால் என்ன?, இல்லாவிட்டால் என்ன? என்ற மனநிலையோடு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இலவசமாக கொடுக்கப்பட்ட வேஷ்டி, சேலை, சைக்கிள், வண்ணத் தொலைக்காட்சி பெட்டியின் தரத்தை பற்றி மக்களிடம் கேட்டுப் பார்த்தால்தான் தெரியும்.

இலவசம் பெறுவதால் மக்களுக்கு ஏற்படுகின்ற உடனடி மற்றும் நீண்ட கால பிரச்சினைகள் என்ன? இலவசப் பொருட்கள் அடிப்படையில் மனித மாண்பை சீர்குலைக்கிறது. உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிற யாரும் தன்னுடைய உடல் உழைப்பால் சம்பாதித்து முன்னேறவும், சொந்தக் காலில் நிற்கவும் தான் விரும்புவர். அதன் மூலம் தான் அவருக்கு தன்மானம் தக்கவைக்கப்படும்.

மேலும் இலவசம் என்ற கருத்தானது மக்களுடைய ஆளுமையில் கண்ணுக்குப் புலப்படாத பல மாற்றங்களை ஏற்படுத்திச் செல்கிறது. இலவசமாகப் பெறுகின்ற எதுக்கும் மதிப்பில்லை என்பதை நம்முடைய அன்றாட வாழ்வில் நாமே உணர்ந்திருப்போம். காரணம், அந்தப் பொருட்களை என்னுடைய தேவையறிந்து, வாங்கும் சக்தியறித்து, அதை வாங்கவில்லை. என்னுடைய விருப்பத்திற்கு மாறாகக் கொடுக்கப்பட்ட பொருட்களை நான் எப்படி பயன்படுத்தினால் என்ன? என்ற மனப்பாங்கு, நாளடைவில் சொந்தமாகப் பணம் போட்டு வாங்கிய பொருட்களையும் பொறுப்பற்ற வகையிலே பயன்படுத்துகின்ற அவல நிலைக்கு ஆளாகி விடுகின்றனர்.

ஜனநாயக நாட்டில் வாழுகின்ற எல்லோருக்கும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவது அரசின் கடமையாகும். மக்கள் சுய சார்புடன் வாழ்வதற்கு வேண்டிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது அரசின் கடமையாகும். கல்வி, மருத்துவம், போக்குவரத்து துறை, கட்டுமானப் பணிகள் ஆகிய துறைகளில் அரசே முன்னின்று மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் அக்கறை செலுத்த வேண்டும். தனியார் துறையின் ஆதிக்கத்தைக் குறைக்கும்போது, பொது மக்கள் எல்லோருக்கும் அவரவர் தகுதி மற்றும் திறமைக்கேற்ப வேலை வாய்ப்புகளை வழங்க முடியும். இதனால் தனிநபர் வருமானம் கூடுவதோடு, வாங்கும் சக்தியும் கூடும். அப்போது ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கேற்ப, அவரவர் விருப்பப்படி பொருட்களையும், சேவைகளையும் வாங்கிக் கொள்ள முடியும். இதைச் செய்யாத அரசு, இலவசம் என்ற பெயரில் மக்களை ஒரு வகையில் பிச்சைக்காரர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது.

இலவசங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்றால், அடித்தட்டு மக்கள் முதலில் விழிப்படைய வேண்டும். அறியாமை என்னும் சேற்றிலிருந்து எழுந்து, அறிவொளி வீசும் தெளிந்த நீரோடைக்கு வர வேண்டும். இலவசம் கொடுக்கிற அரசியல் தலைவர்களிடமிருந்து மாற்றம் ஒரு போதும் வராது. மாற்றம் கீழே இருந்து வரும்போதுதான் அது உண்மையானதாக இருக்கும். என்றைக்கும் நிலைத்து நிற்கும். இதை யார் முன்னெடுப்பது? எங்கிருந்து ஆரம்பிப்பது?

மனிதநேய ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள், மக்களின் நலனில் அக்கறையுள்ள தொண்டு நிறுவனங்கள் எல்லாம் கூட்டாக சேர்ந்து திட்டம் தீட்ட வேண்டும். இலவசங்கள் மனித மாண்பை மழுங்கடிக்கிறது என்ற உண்மையை மக்களுக்கு புரிகின்ற மொழியில், பாணியில் எளிமையாக எடுத்துரைக்க வேண்டும். இலவசத்தால் அரசியல் தலைவர்களுக்கு கிடைக்கிற நீண்டகால ஆதாயங்களையும், மக்களுக்கு ஏற்படுகின்ற இழப்புகளையும் தெளிவாக விளக்கிச் சொல்ல வேண்டும்.

சிந்தித்து செயல்படுகின்ற மக்கள் கூட்டத்தை யாரும், எந்தக் கவர்ச்சி மிகு இலவசத்தாலும் ஈர்க்க முடியாது என்பது வரலாற்று உண்மை. இந்த வரலாற்று உண்மையைப் பயன்படுத்தி அறிவாயுதம் ஏந்துவோம். ஆற்றல்மிகு எதிர்காலம் படைப்போம்...................

குவாண்டனாமோ ஒரு நரகம் - சிறையிலிருந்து விடுதலையான டேவிட் ஹிக்ஸ்!

ஆறு ஆண்டுகள் குவாண்டனாமோ சிறையில் அவதிப்பட்ட ஆஸ்திரேலிய குடிமகனான டேவிட் ஹிக்ஸ் இறுதியாக தனது மெளனத்தை கலைத்துள்ளார்.

ஆறுவருடங்கள் தான் அனுபவித்ததும், கண்ணால் கண்டதுமான கொடூரங்களை விவரிக்கும் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார் ஹிக்ஸ்.

அப்புத்தகத்தில் அவர் கூறும் சில விபரங்கள்:
"குவாண்டனாமோ சிறை ஒரு நரகமாகும். நான் ஜப்பானில் குதிரைப் பந்தயத்திற்காக பயிற்சி அளித்துக் கொண்டிருக்கும் வேளையில் இஸ்ரேலிய குடிமகன் ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவர்தான் எனக்கு உலகத்தை சுற்றிப்பார்க்கும் மோகத்தை ஏற்படுத்தினார். அந்தப் பயணம்தான் என்னை ஆப்கானிஸ்தானிற்கு கொண்டு சென்றது.

கஷ்மீரிகளின் சுதந்திரத்திற்கான போராட்டத்தின் மீது எனக்கு அனுதாபம் பிறந்தது. ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்க்குள்ளான வேளையில், தனது உயிரை பணயம் வைத்து ஒரு ஆப்கானி எனக்கு உதவினார். ஆனால், வழியில் வைத்து ஆக்கிரமிப்பு ராணுவ வீரன் ஒருவரிடம் நான் சிக்கினேன். தப்புவதற்கு நான் முயன்ற பொழுதும், துப்பாக்கியை நீட்டி மிரட்டியதால் நான் அந்த ராணுவவீரனை பின் தொடர்ந்தேன். இதுதான் எனது நரக வாழ்க்கையின் துவக்கமாகும்.

குவாண்டனாமோ சித்திரவதைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதல் குழுவில் நான் இடம் பெற்றிருந்தேன். திறந்தவெளி சிறையில் நாங்கள் தங்கவைக்கப்பட்டோம். எங்களின் துணைக்கு தேள்களும், பாம்புகளும், ஒன்பது இஞ்ச் நீளங்கொண்ட சிலந்திகளும் இருந்தன.

பின்னர் மூன்று அடி அகலமும், மூன்று அடி நீளமும் கொண்ட ஒரு கூட்டில் என்னை அடைத்தார்கள். அதில் இரண்டு பக்கெட்டுகள் இருந்தன. ஒன்று, குடிநீருக்காகவும், இன்னொன்று, மல,ஜலம் கழித்தவுடன் சுத்தப்படுத்தவும்.

கேம்ப் எக்ஸ்ரே என்றழைக்கப்பட்ட இந்த சிறைக்கூண்டில் முதல் இரண்டு வாரங்கள் உறங்குவதற்கோ, பேசுவதற்கோ, அசைவதற்கோ எங்களை அனுமதிக்கவில்லை. இவ்வேளையில் வெளியுலகிலிருந்து எந்த விபரமும் எங்களுக்கு கிடைக்கவில்லை. கூட்டின் நடுவே மட்டுமே இருப்பதற்கோ, படுப்பதற்கோ அனுமதியளித்தனர். உத்தரவில்லாமல் எழுந்திருக்கக்கூடாது. அதில் மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டது கூட்டின் கம்பிவலைகளை தொடுவதாகும். ஏதேனும், உத்தரவுகளை மீறினால் ராணுவ அதிகாரிகள் எங்களை தாக்குவர்.

செயற்கை கால் பொருத்தப்பட்ட ஒரு ஆப்கானியை உதைத்து கீழே தள்ளி ஐந்து பேர் சேர்ந்து தாக்கிவிட்டு, நாயை அவிழ்த்துவிட்டு கடிக்க வைத்ததையும் நான் ஒரு முறை என் கண்ணால் கண்டேன். 'உஸாமா என்னை காப்பாற்றுவார்' என்று தரையில் எழுத உத்தரவிட்டதை மறுத்ததற்காகத்தான் இந்த தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது." என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹிக்ஸ் 2007 ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியானார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை குவாண்டானாமோ சிறை அனுபவங்கள் குறித்து வெளியிட்ட நூலின் பெயர் குவாண்டானாமோ-எனது பயணம் என்பதாகும்.

சூடுபிடிக்கிறது தமிழக அரசியல் களம் : தேர்தல் கூட்டணிக்கு கட்சிகள் மாறுமா...?

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில், கூட்டணியை பலப்படுத்தவும், கூடுதல் கட்சிகளை இழுக்கவும் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆயத்தமாகிவிட்டன. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாமா? என ஏங்கிக் கொண்டிருந்த பா.ம.க.,வுக்கு தி.மு.க.,வின் கதவு தற்போது திறக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தலில் தி.மு.க., - காங்கிரஸ் - பா.ம.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்- புரட்சி பாரதம் என்ற, "வானவில்' கூட்டணி களத்தில் குதித்தது. அ.தி.மு.க.,- ம.தி.மு.க., - விடுதலைச் சிறுத்தைகள் - தேசிய லீக் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், தே.மு.தி.க., தனித்தும் போட்டியிட்டதால் மும்முனை போட்டி நிலவியது.தி.மு.க., வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. அ.தி.மு.க., தனது கட்சியின் தனித்துவத்தை இழக்காமல் 69 தொகுதிகளை கைப்பற்றியது. 13 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில், ஆளுங்கட்சி கூட்டணியிடம் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி வாய்ப்பு இழந்தது.



சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறியது. அதேபோல், விடுதலைச் சிறுத்தைகளும் அ.தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறி தி.மு.க., கூட்டணியில் இணைந்து லோக்சபா தேர்தலை சந்தித்தது.அ.தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., - பா.ம.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்டு 12 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றி, கூட்டணி செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டது. லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவிய பா.ம.க., "தொண்டர்கள் விருப்பம்' காரணமாக அக்கூட்டணியில் இருந்து வெளியேறியது.



தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., - இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், புதிய தமிழகம் - மனித நேய மக்கள் கட்சி -அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்- இந்திய தேசிய லீக் -தேசியவாத காங்கிரஸ்- இந்திய குடியரசு கட்சி- வன்னியர் கூட்டமைப்பு - அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி - அம்பேத்கர் மக்கள் கட்சி - மதச்சார்பற்ற ஜனதா தளம்- இந்திய தேசிய குடியரசு கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.



மேலும், கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம்- கிறிஸ்தவ மக்கள் கட்சி - தலித் மக்கள் முன்னணி - மறுமலர்ச்சி மக்கள் தமிழகம்- இந்திய குடியரசு கட்சி (தமிழ்நாடு)- ராஜிவ் மக்கள் காங்கிரஸ் - முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம், வன்னிய குல ஷத்ரிய நல அமைப்புகளின் மத்திய மையம் ஆகிய கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. போதாதகுறைக்கு காங்கிரஸ், பா.ம.க., - தே.மு.தி.க, ஆகிய கட்சிகளையும் கூட்டணியில் இடம் பெறவைத்து, "மெகா' கூட்டணியை உருவாக்கி, தி.மு.க.,வை பொது எதிரியாக காட்டவும் அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.



தற்போது தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் - புரட்சி பாரதம் - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் - தேசிய லீக் - உழவர் உழைப்பாளர் கட்சி - விவசாய தொழிலாளர்கள் கட்சி - தமிழ் மாநில முஸ்லிம் லீக் - மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - அருந்ததியர் மக்கள் கட்சி - எம்.ஜி.ஆர்., கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் இடம் பெற்ற கூட்டணிக் கட்சிகளான பா.ம.க., - இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த முறை கூட்டணியில் இல்லை என்பதால், அணியை பலப்படுத்த மீண்டும் பா.ம.க., - ம.தி.மு.க., - இரு கம்யூனிஸ்ட் கட்சிகளை இழுக்கவும் தி.மு.க., திட்டமிட்டுள்ளது.பா.ம.க.,வை பொருத்தவரை தி.மு.க., கூட்டணியில் இடம் பெறவே ஆசைப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை, எந்த அணியில் அதிக சீட்டுகளும், ஆட்சியில் பங்கும் தருகிற கட்சிகளோடு கூட்டணி வைக்கவும் தயாரான மனநிலையில் உள்ளது.



கட்சி ஆரம்பித்த நிலையில் இருந்து தனித்து தான் போட்டி என்ற லட்சியத்துடன் களமிறங்கிய தே.மு.தி.க.., கணிசமான ஓட்டுகளை வைத்துள்ளது. வரும் தேர்தலில் பா.ம.க., இல்லாத அணியில் இடம் பெற விரும்புகிறது.அதேசமயம், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மூன்றாவது அணி அமைக்கவும் விரும்புகிறது. தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் முறிவு இல்லை என்றால் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறவும் தே.மு.தி.க., திட்டமிட்டுள்ளது.



கோட்டையில் முதல்வர் கருணாநிதியை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தித்து பேசியது, அரசியல் களத்தில் கூட்டணி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அதிரடி பேச்சு, காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.கூட்டணி ஆட்சி அமைக்கும் பேரத்தை சட்டசபை தேர்தலில் முன்னிலைப்படுத்த காங்கிரஸ் தலைமை முன்வந்துள்ளதும் அக்கட்சி தொண்டர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. தி.மு.க., கூட்டணியில் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் கேட்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதால், தேர்தல் பரபரப்பு இப்போதே துவங்கிவிட்டது.



தென் மாவட்டங்களில் அ.தி.மு.க., அணி பலம் அதிகரிக்குமா...?கடந்த சட்டசபை தேர்தலில் தென்மாவட்டத்தில் உள்ள 26 சட்டசபை தொகுதிகளில் 50 ஓட்டுக்கள் முதல் 1,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது. தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில் இரு கம்யூனிஸ்டுகள், புதிய தமிழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், மனித நேய மக்கள் கட்சிகள் இணைந்துள்ளதால், தோல்விக்கு காரணமாக இருந்த குறைந்த ஓட்டு வித்தியாசங்களை சரிசெய்ய முடியும் என அ.தி.மு.க., கருதுகிறது. அதாவது, கடந்த சட்டசபை தேர்தலில் மேற்கண்ட கட்சிகள் அ.தி.மு.க., கூட்டணியில் இல்லை. தற்போது அக்கட்சிகள் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. மூவேந்தர் முன்னணி கழகத்தின் சார்பில், "மகாசேமம்' என்ற சுயஉதவிக்குழுவை நடத்தி வருகிறது.



இதில் ஐந்து லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். 68 சட்டசபை தொகுதிகளில் உள்ள 145 ஒன்றியங்களில், ஒன்றரை லட்சம் பெண்களுக்கு வெளிநாட்டு வங்கி உதவியுடன் 750 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.இந்த சுயஉதவிக்குழுவில் இடம் பெற்ற பெண்கள் ஓட்டு மட்டுமே ஒரு தொகுதிக்கு 5,000 ஓட்டுக்கள் அ.தி.மு.க., கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல், புதிய தமிழகத்திற்கு மட்டும் தென்மாவட்டத்தில் குறைந்த பட்சம் தொகுதிக்கு 10 ஆயிரம் ஓட்டுக்கள் உள்ளது.இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சேர்த்து தொகுதிக்கு 5,000 ஓட்டுக்களும், மனித நேய மக்கள் கட்சிக்கு தொகுதிக்கு 5,000 ஓட்டுக்களும் கணக்கிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் தற்போது தென்மாவட்டங்களில் மட்டும் மேற்கண்ட கட்சிகளால் தொகுதிக்கு கூடுதலாக 25 ஆயிரம் ஓட்டுக்கள் கிடைக்கவுள்ளது.



கடந்த தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. அக்கட்சி தற்போது தி.மு.க., கூட்டணியில் சேர்ந்துள்ளது. எனவே, அக்கட்சி சார்பில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க., பெற்றிருந்த ஓட்டுகளிலிருந்து 10 ஆயிரம் ஓட்டுக்களை கழித்து பார்த்தாலும் 15 ஆயிரம் ஓட்டுக்கள் கூடுதலாக அ.தி.மு.க.,வுக்கு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.இதன் மூலம், கடந்த தேர்தலில் மயிரிழையில் தோல்வி அடைந்த தொகுதிகளில், அ.தி.மு.க., வெற்றி பெறும் என்ற கணக்கையும் அ.தி.மு.க., வகுத்துள்ளது. எனவே, தென்மாவட்டத்தில் உள்ள 60 தொகுதிகளில் தே.மு.தி.க., காங்கிரஸ் போன்ற கட்சிகளின் கூட்டணி இல்லாமல், அ.தி.மு.க., கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.



மேற்கு மாவட்டங்களில் மட்டும் ஏறக்குறைய 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க., - ம.தி.மு.க., - இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பலமான ஓட்டு வங்கிகளை வைத்துள்ள தொகுதிகளாகும். அதனால் தான், திருப்பூர், சேலம், ஈரோடு, பொள்ளாச்சி, கோவை போன்ற லோக்சபா தொகுதிகளில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது.கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் ஓட்டுக்கள் மட்டும் அ.தி.மு.க.,வுக்கு கிடைக்குமானால், மேற்கு மாவட்டங்களிலும் கணிசமான தொகுதிகளை அ.தி.மு.க., அள்ளும் என்ற கணக்கும் போடப்பட்டுள்ளது.



கொங்கு பேரவையை அ.தி.மு.க.,வில் இழுப்பதற்குரிய பேச்சு வார்த்தையை கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர் நடத்தி வருகிறார். அதே சமயம், தி.மு.க., கூட்டணியில் அக்கட்சியை இழுக்கவும் தி.மு.க., அமைச்சர் ஒருவர் முயற்சித்து வருகிறார்.வட மாவட்டங்களில் உள்ள 70 தொகுதிகளில் அ.தி.மு.க., சில தொகுதிகளில் தான் வலுவாக இருக்கிறதே தவிர அக்கட்சிக்கு பலவீனமாக இருப்பது தான் உண்மை. கடந்த சட்டசபை தேர்தலின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்ததால் சில தொகுதிகளை அ.தி.மு.க., கைப்பற்றியது.



தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வும், விடுதலைச் சிறுத்தைகளும் இடம் பெற்றால், முதலியார் உள்ளிட்ட மற்ற சமுதாயத்தினரின் ஓட்டுக்கள் அ.தி.மு.க., கூட்டணிக்கு விழும் வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க., அணியில் தே.மு.தி.க., இடம் பெற்றால் அ.தி.மு.க., கூட்டணிக்கு ஓரளவு சாதகமாக இருக்கும்.இல்லையென்றால் வடமாவட்டங்களை பொருத்தவரையில் தி.மு.க., - காங்கிரஸ், பா.ம.க., கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஓட்டு வங்கிகளுக்காகவும், தேர்தல் கூட்டணிக்காகவும் கட்சிகள் அணி மாறுமா? என்ற கேள்வியுடன் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

பெற்றோர் குறித்து அல்லாஹ்வின் உபதேசம்!

தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம். அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்) சுமந்திருந்து, சிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள். அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்ததும், அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும் முப்பது மாதங்களாகும்.

முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது ஆண்டுகளை அவன் அடைந்திட்ட பொழுது, “என்னுடைய ரப்பே! நீ எனக்கும், எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும், எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாக! என் சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே (தவ்பாச் செய்து) மீண்டு விட்டேன். நிச்சயமாக நான் (உனக்கு வழிப்படுகின்ற) முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கின்றேன்” என்று அவன் கூறுகின்றான். (அல் குர்ஆன் 46:15)