ஞாயிறு, 28 நவம்பர், 2010

2 தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து ரூ. 60 கோடியை ஆலோசனைக் கட்டணமாக பெற்றேன்-நீரா

டெல்லி: இரு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்காக முன்னாள் அமைச்சர் ராஜாவுடன் நான் பேசியது உண்மைதான். இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ஆலோசனைக் கட்டணமாக ரூ. 60 கோடி பெற்றேன் என்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் நீரா ராடியா ஒப்புக் கொண்டுள்ளாராம்.

கடந்த புதன்கிழமை நீரா ராடியாவை அழைத்து பல மணி நேரம் விசாரணை நடத்தியது அமலாக்கப் பிரிவு. அப்போது அவருக்கும், ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்புகள், பண பரிவர்த்தனைகள், ராஜாவுடன் ராடியாவுக்கு உள்ள தொடர்புகள் குறித்து அப்போது அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது, டாடா டெலிசர்வீஸஸ் நிறுவனம் உள்பட 2 நிறுவனங்களுக்காக தான் அமைச்சர் ராஜாவுடன் பேசியதாக நீரா ராடியா தெரிவித்தார். மேலும் இரு வாடிக்கையாளர்களிடமிருந்து (தொலைத் தொடர்பு நிறுவனங்கள்) சட்டப்பூர்வமான ஆலோசனைக் கட்டணமாக ரூ. 60 கோடியைப் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

ராஜாவுக்கும், ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கும், தனக்கும் இடையிலான தொடர்புகளையும் அவர் விளக்கிக் கூறியுள்ளார்.

வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் நீரா. இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்துள்ளவர் இவர். விசாரணையின்போது, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தனது பங்கு குறித்து தனது கைப்பட எழுதிய 20 பக்க வாக்குமூலத்தையும் நீரா அதிகாரிகளிடம் கொடுத்தார்.

இதை பண மோசடிச் சட்டம் 50வது பிரிவின் கீழ் அதிகாரிகள் பதிவு செய்து கொண்டுள்ளனர். இதை கோர்ட்டில் சாட்சியமாகவும் தாக்கல் செய்ய அமலாக்கப் பிரிவு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி மண்டல அமலாக்ப் பிரிவு துணை இயக்குநர் பிரபா காந்த் கூறுகையில், ராடியாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளோம். மேலும் சில ஆவணங்களைக் கேட்டுள்ளோம். தேவைப்படும்போது அவர் மீண்டும் அழைக்கப்படுவார் என்றார்.

இதற்கிடையே, தனது வாடிக்கையாளர்களான டாடா டெலிசர்வீஸஸ் மற்றும் யுனிடெக் வயர்லஸ் நிறுவனங்களுக்காக ராஜாவை, ராடியா நேரிலும் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

கூடைப் பந்தாட்டத்தில் ஒபாமா உதடு கிழிந்தது!

வெள்ளை மாளிகை: நண்பர்களுடன் கூடைப்பந்தாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று இடிபட்டதில், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் உதடு கிழிந்தது.

சனிக்கிழமை ஓய்வு தினம் என்பதால், வாஷிங்டனில் உள்ள ராணுவ விளையாட்டு மைதானத்தில் தனது உறவினர்கள், நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார் அதிபர் ஒபாமா. அப்போது எதிர் அணி வீரர் ஒருவர் ஒபாமாவிடம் இருந்து பந்தைப் பறிக்க முயன்றுள்ளார்.

ஆனால் மிகவும் சாமர்த்தியமாக பந்தை தன் வசமே ஒபாமா வைத்திருந்த போது, மற்றொரு வீரரின் கை மூட்டு ஒபாமாவின் உதட்டில் பலமாக இடித்துவிட்டது.

எதிர்பாராத அந்த நிகழ்வால் ஒபாமாவின் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. வலியால் துடித்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், முதலுதவி அளித்தனர்.

பின்னர் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு உதட்டில் 12 தையல்கள் போடப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேர ஓய்வுக்குப் பிறகு தனது பணிகளை கவனிக்க வெள்ளை மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.

கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏதோ கறைபடிந்துள்ளது என்று வெள்ளிக் கிழமையன்று மிகவும் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ள உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நேர்மை குறித்துக் கேள்வி எழுப்பி கவலை தெரிவித்துள்ளது.
"டென்மார்க நாட்டில் ஏதோ அரசியல் கறைபடிந்துள்ளது" என்று ஷேக்ஸ்பியர் தம்முடைய நாவலான ஹேம்லெட்டில் கூறியுள்ளார். அதுபோல, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏதோ கறை படிந்துள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு மற்றும் கியான் சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றம் கூறியுள்ளது. "அலகாபாத் உயர் நீதிமன்றத்தை சுத்தப்படுத்த வேண்டும்" என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உயர் நீதிமன்றத்தை சுத்தப்படுத்துவதற்காக நீதிபதிகளை இடம் மாற்றப் பரிந்துரை செய்தல் உள்பட கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அலகாபத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்குத் தெரிந்த வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக மாமா நீதிபதிகள் (uncle judge) போன்று செயலப்படுவதாகவும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் 12 பக்க உத்தரவில் கூறியுள்ளனர்.

உத்திரப் பிரதேச மாநிலம் பரைச் என்ற ஊரில் வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமான நிலத்தை, ஒவ்வோர் ஆண்டும் மே மற்றும் ஜூன் மாதத்தில் நடைபெறும் சர்கஸ் காட்சி நடத்துவதற்கு ஒதுக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் மேற்கண்டவாறு கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளனர்.

இத்தகைய அதிர்ச்சியூட்டும் ஏற்றுக்கொள்ளத் தகாத தீர்ப்புகளால் நாட்டு மக்களின் நம்பிக்கை ஆட்டப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கட்ஜு மற்றும் மிஷ்ரா ஆகியோர் கூறியுள்ளனர்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் சில நீதிபதிகள் குறித்து ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன என்பதை நாங்கள் வருத்தத்துடன் கூறிக் கொள்கிறோம் என்றும் அவர்கள் கூறினர்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் சில நீதிபதிகளின் உறவினர்கள் வழக்கறிஞர்களாக அதே நீதிமன்றத்தில் வழக்காடுகின்றனர். தங்கள் பணியைத் தொடங்கிய சில காலங்களுக்குள்ளே நீதிபதிகளின் உறவினர்கள் கோடீசுவரர்களாக மாறிவிடுகின்றனர். மிகப்பெரும் வங்கி இருப்புகள், சொகுசு கார்கள், மிகப்பெரும் வீடுகள் என சொசுகு வாழ்க்கையை வாழ்கின்றனர் என்றும் நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.

நீதிபதிகளை உறவினர்களாகக் கொண்ட அனைத்து வழக்கறிஞர்களுமே தங்கள் உறவை தவறானவற்றிற்காகப் பயன்படுத்துகிறார்கள் என நாங்கள் கூறவில்லை எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக மிகக்கடுமையான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. எனவே, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் அலகாபாத் மற்றும் லக்னோ கிளைகள் சுத்தப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அமர்வு நீதிபதிகள் தங்கள் கூட்டு உத்தரவில் கூறியுள்ளனர்.

62 ஆண்டு கால பாபர் மசூதி - இராம ஜென்ம பூமி  வழக்கிலும் இதே அலஹாபாத் நீதிமன்றம் தான்  அண்மையில் தீர்ப்பளித்திருந்தது என்பது  குறிப்பிடத்தக்கது.

தங்கம் ஏற்றுமதியில் ரூ.480 கோடி ஊழல்!

மும்பை: தங்கம் ஏற்றுமதியில் நடந்துள்ள, 480 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக, மகாராஷ்டிரா, பென் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சிசிர் தர்கார் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட ஆறு பேர், சி.பி.ஐ., காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த தங்கம் ஏற்றுமதியாளர்கள் சிலர், இந்திய அரசு நிறுவனமான எம்.எஸ்.டி.சி., மூலம், ஐக்கிய அரபு நாடுகளுக்கு தங்க நகைகளை ஏற்றுமதி செய்வதற்காக, பென் நகர கூட்டுறவு வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தனர். அவர்களின் இந்த பணத்தைக் கொண்டு, முறைகேடாக சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதன் மூலம்  480 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வங்கியின் தலைவர் சிசிர் தர்கார், அவரது மனைவி, வங்கியின் இயக்குனர் பிரேம் குமார் உள்ளிட்ட ஆறு பேரை, சி.பி.ஐ.,யின் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து, சிறப்பு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். வரும் 6ம் தேதி வரை, அவர்களை சி.பி.ஐ., காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி அனுமதியளித்து உத்தரவிட்டார்.

ஒபாமா இஸ்லாத்தை தழுவ ஒபாமாவின் பாட்டி பிராத்தனை

ரியாத் : அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஸ்லாத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்று தான் பிராத்தித்ததாக  ஹஜ் செய்வதற்காக சவூதி அரேபியா வந்திருக்கும் கென்யாவை சார்ந்த அவரின் பாட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தன்னுடைய ஹஜ் கடமையை முடித்து விட்டு ஜெத்தாவில் அல்-வதான் பத்திரிகைக்கு பேட்டி அளித்த பராக் ஒபாமாவின் 80 வயதான பாட்டி ஹாஜா சாரா ஒமர் “ என் பேரன் பராக் ஒபாமா இஸ்லாத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்று பிராத்தனை செய்தேன்” என்று கூறினார்.
ஹாஜா சாரா ஒமர் தன் மகனும் ஒபாமாவின் மாமாவுமான சயீத் ஹுசைன் ஒபாமா மற்றும் தன் நான்கு பேரக்குழந்தைகளுடனும் சவூதி அரசரின் சிறப்பு விருந்தினர்களாக ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒபாமாவின் அரசியல் குறித்து தான் புனித யாத்திரையின் போது எக்கருத்தையும் சொல்ல விரும்பவில்லை என்றும் கூறினார்.
மீண்டும் வெள்ளை மாளிகைக்கு ஒபாமா தேர்ந்தெடுக்கப்படுவாரா என கேட்டதற்கு எதிர்காலத்தை அறியும் ஆற்றல் தனக்கு இல்லை என்றும் அல்லாஹ் ஒருவனே அதை அறிவான் என்றும் கூறினார். மேலும் நோய் வாய்ப்பட்டுள்ள சவூதி அரசர் விரைவில் குணம் பெற வேண்டும் என்றும் பிராத்தித்ததாகவும் கூறினார்.

சவூதியில் அல்காய்தாவுடன் தொடர்பு! 149 பேர் கைது.

ரியாத்: தீவிரவாத அமைப்பான அல்காய்தாவுடன் தொடர்புடைய நபர்கள் சவுதி அரேபியாவில் இருந்துக்கொண்டு செயல்படுவது குறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வந்தது.
பல நாடுகளில் இருந்து சவுதிக்கு வரும் ஹஜ் பயணிகளிடம் தீவிரவாத செயல்களுக்காக மறைமுகமாக பணம் வசூலிக்கும் வேலையில் சில நபர்கள் ஈடுபட்டு வந்த்தாக தெரியவந்தது. மேலும் அவர்கள் சவுதி எண்ணெய் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும்  கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அல்காய்தா அமைப்புடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து  அதிரடி நடவடிக்கையில் இறங்கிய சவூதி காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு 149 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 124 பேர் சவுதியை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டினர். இவர்களிடமிருந்து  2.24 மில்லியன் சவூதி ரியால் கைப்பற்றப்பட்டது.