செவ்வாய், 8 மார்ச், 2011

அவசரப்பட வேண்டாமே!

மும்பையில் கடந்த 37 ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கும் அருணா செண்பக்கின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிவருவதால் அவரைக் கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.  கருணைக் கொலையை அனுமதிக்கும் சட்ட விதிமுறைகள் இந்தியாவில் இல்லை என்பதால், நீதிமன்றம் இந்த மனுவைத் தள்ளுபடி செய்வதைத் தவிர வேறு வழியில்லை. என்றாலும் இந்த வழக்கில் இந்தியாவிலேயே முதல்முறையாக அறிவிக்கப்பட்டுள்ள தீர்ப்பு என்னவெனில், இத்தகைய நோயாளிகள் சாத்வீகமான முறையில் இறந்துபோக மருத்துவர்கள் அனுமதிக்கலாம் என்பதுதான்.  சாத்வீகமான முறையில் இறப்பது என்பது, அத்தகைய நோயாளிகள் சார்ந்திருக்க வேண்டிய மருத்துவக் கருவிகள் அல்லது மாத்திரைகளை நிறுத்தி விடுவதுதான். டயாலிசஸ் செய்தாக வேண்டும் என்கிற நோயாளிக்கு அதைச் செய்யாமல் நிறுத்திவிட்டால் அவர் தானாகவே மெல்ல இறந்துபோவார்.  இத்தகைய சாத்வீக கருணைக்கொலைக்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா என்றால் இல்லை. ஆனால், இது சட்டத்துக்கு முரணானதா என்றால் அதுவும் இல்லை. ஆகவே, இத்தகைய அணுகுமுறையைக் கையாளுவதற்கு அனுமதித்துள்ள நீதிமன்றம், இத்தகைய சாத்வீக கருணைக்கொலைக்கு மருத்துவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அத்தகைய நடவடிக்கை உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்றும் ஒரு நிபந்தனையையும் விதித்துள்ளது.  உயிர்வாழ்தல் சுமையாகிப்போன ஒன்று என்பதை ஒரு நோயாளியோ அவரது நெருங்கிய உறவினர்களோ தீர்மானிக்க முடியும் என்கிற நிலைமை மாறி அந்தப் பொறுப்பை மருத்துவர்களிடம் ஒப்படைத்துள்ளது வரவேற்கத்தக்கது. அதேசமயம் இதை நீதிமன்றமும் கண்காணிக்கச் செய்திருப்பது சட்டப்படி இதில் ஏற்படக்கூடிய பல்வேறு சிக்கல்களை மனதில் கருதியே என்பது வெளிப்படை.  1973-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி, மருத்துவமனை ஊழியரால் பலாத்காரம் செய்யப்பட்டு, நாய்ச் சங்கிலியால் கழுத்து நெரிக்கப்பட்டு கோமா நிலையில் கிடந்த செவிலி அருணா செண்பக்கை கடந்த 37 ஆண்டுகளாக பாதுகாத்து, மருத்துவம் அளித்து வரும் கெம் மருத்துவமனையின் மனிதாபிமானமும் அந்த ஊழியர்களின் அக்கறையும் நீதிமன்றத்தால் பாராட்டப்பட்டிருக்கிறது. இது தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாகக் கருதி அந்த மருத்துவமனை ஊழியர்கள் இந்தத் தீர்ப்பை பரஸ்பரம் இனிப்பு கொடுத்துக் கொண்டாடியுள்ளனர்.  இவர்கள் சிறப்பாகவே அருணாவை கவனித்துகொண்டாலும்கூட, இன்று அந்த பெண்மணி, சுயமாக எதையும் செய்துகொள்ள முடியாமலும் உணர்வு இல்லாமலும் கிடக்கும் இன்றைய சூழ்நிலையில், சாத்வீக கருணைக்கொலைக்கான மனுவை மருத்துவர்கள் நீதிமன்றத்திடம் அளித்து, அருணா தனக்கான மருத்துவம், உணவு எதுவும் இல்லாமல் அவராகவே இறந்துபோகச் செய்ய அனுமதிக்க வேண்டும்.  உலக நாடுகளில் கருணைக்கொலை தேவைதானா என்பது விவாதத்துக்குரியதாகத் தொடர்கிறது. கருணைக்கொலை என்பது பல நேரங்களில் சொத்துக்காகவும் அல்லது சுயநலத்துக்காகவும் ஒருவரைக் கொன்றுவிடப் பயன்படும் பயங்கர ஆயுதமாக மாறிவிடக்கூடும் என்பதுதான் இதற்கான எதிர்ப்புக்கு அடிப்படைக் காரணம்.  இதில் உண்மை இல்லாமல் இல்லை. கருணைக்கொலை அனுமதிக்கப்பட்டால், பல குடும்பங்களில் பெற்றோரையே விஷஊசி போட்டு, சட்டப்படி கருணைக்கொலை செய்யும் பிள்ளைகள் நிறைய பேர் உருவாகிவிடுவார்கள். மாறிவிட்ட சமூகச் சூழலில், பெருகிவரும் முதியோர் இல்லங்களும், அசுர வேகத்தில் அதிகரித்துவரும் விவாகரத்துகளும் நம்மை அச்சுறுத்துகின்ற நிலையில் "கருணைக்கொலை' என்பதேகூட சட்டத்தின் போர்வையில் கொலை செய்ய வழிவகுத்துவிடக் கூடும்.  தற்போதைய வழக்கிலும்கூட, அருணா செண்பக் தனக்கான மனுவை சுயநினைவுடன் கருணைக்கொலைக்கான மனுவைச் சமர்பிக்கவில்லை. அவர் வாழ்வதைவிட சாவதே மேல் என்று கருதிய அவருடைய சினேகிதி அளித்த மனுதான் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  இருப்பினும், ஒரு நபர், ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் என்னைக் கொன்றுவிடுங்கள் என்று முன்னதாகவே பதிவு செய்துகொள்ளும் உரிமை தன்விருப்பக் கருணைக்கொலை பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. அதாவது, ஒருநபர் வெறிநாய்க்கடியால் அல்லது எய்ட்ஸôல் பாதிக்கப்பட்டு யாரும் நெருங்கவும் முடியாமல் புறக்கணிக்கப்படும் சூழல் தனக்கு நேரும் என்றால் என்னைக் கொன்றுவிடுங்கள் என்று முன்னதாகவே விருப்பத்தைப் பதிவு செய்வதுதான் தன் விருப்பக் கருணைக் கொலை.  பெல்ஜியம், லக்ஸம்பர்க், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்காவில் ஓரிகான். வாஷிங்டன் மாகாணங்களில் இதற்கான சட்டங்கள் இருக்கின்றன. அத்தகைய நடைமுறையை இந்தியாவிலும் சட்டமாக்க வேண்டுமா என்பதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எழுப்பி இருக்கும் கேள்வி.  கூட்டுக் குடும்பக் காலத்திலிருந்து, இப்போதைய தனிக்குடித்தனக் காலம்வரை, இந்தியாவில் இருந்து வந்திருக்கும் பரஸ்பர சகிப்புத்தன்மையும், சமூக வாழ்வியல் முறைகளும் கடந்த பத்து ஆண்டுகளாகத் தகர்ந்து கொண்டிருக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பக் கலாசாரம் மூலம் உருவாகி இருக்கும் பாலியல் உறவுகள், முக்கியமாகக் குடும்ப அளவிலும், தாம்பத்திய நிலையிலும் சகிப்புத்தன்மையே இல்லாத வாழ்க்கை முறைக்கு வழிகோலியிருக்கிறது. இந்த நிலையில், கருணைக்கொலை சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டால் அதை முறையாகப் பயன்படுத்துவோரைவிட, தவறாகப் பயன்படுத்திக் கொலைப்பழியிலிருந்து தப்ப முனைபவர்கள்தான் அதிகமாக இருக்கக்கூடும்.  முறையான மருத்துவ வசதியே இல்லாமல் மடியும் லட்சக்கணக்கான ஏழைகள் இன்னும் இருக்கும் நாட்டில், மருத்துவ வசதிகளை அதிகரிக்க முயல்வதை விட்டுவிட்டு, கருணையின் பெயரால் கொலையை அனுமதிக்கச் சட்ட அங்கீகாரம் தேடுவது அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது. நடந்திருப்பது கொலையா, கருû ணக் கொலையா என்பதைத் தீர்மானிக்கும் அளவுக்கு முறையான கண்காணிப்பு எப்போது உறுதிப்படுத்தப்படுகிறதோ, அப்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய பிரச்னை இது.  அருணா செண்பக்கின் பிரச்னையில் தீர்ப்பு ஏற்புடையது. "கருணைக்கொலை' சட்டமாக்கப்பட வேண்டுமா என்றால் "அவசரப்பட வேண்டாமே" என்று உள்மனது எச்சரிக்கிறது! 

சட்டசபை தேர்தலில் முதல்வர் போட்டியில்லை?

இதுவரை தொடர்ந்து 11 முறை தேர்தல் களம் கண்டு, அத்தனை முறையும் வென்று, நீண்ட ஜனநாயகப் பயணத்தை தொடர்ந்து வரும் தி.மு.க., தலைவர் கருணாநிதி, 12வது முறையாக மீண்டும் தேர்தல் களம் காண்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

"இது தான் நான் களமிறங்கும் கடைசி தேர்தல்' என்று, 2001 பிப்ரவரியில் நடந்த கட்சிப் பொதுக்குழுவில் உருக்கமுடன் குறிப்பிட்டார் கருணாநிதி. உடனே பொதுக்குழு உறுப்பினர்கள், "அப்படி சொல்லக் கூடாது' என்று குரல் எழுப்பினர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, அந்தத் தேர்தலில் மட்டுமல்லாது, அடுத்து வந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு வென்றார். முதல்வராகவும் அரியணை ஏறினார். ஆனால், தற்போதைய நிலைமை அப்படி இல்லை. "தமிழக முதல்வர் என்று என்னை அழைப்பதை விட, தி.மு.க., தலைவர் என்று அழைப்பதையே பெருமையாக கருதுகிறேன்' என்றெல்லாம், பல முறை தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். கட்சியை வழிநடத்தவும், ஆட்சியை நடத்தவும் அழகிரி, ஸ்டாலின் என இருவரும் தயாராகிவிட்ட நிலையில், முதல்வர் இந்த முடிவை எடுப்பதற்கான சூழல் கனிந்துவிட்டதாகவே பலரும் நினைத்தனர். லோக்சபா தேர்தல் நேரத்திலும் பிரசாரத்திற்கான நாட்களை தி.மு.க., தலைவர் குறைத்துக்கொண்டார். ஐந்தாண்டுகளில் நடந்த எந்த இடைத்தேர்தலிலும் பிரசாரத்துக்குச் செல்லவில்லை - பென்னாகரத்தில் நடந்த ஒரே ஒரு பொதுக்கூட்டத்தைத் தவிர.

அவரது உடல்நிலை முன்னைப்போல் ஒத்துழைக்காததை அவரது குடும்பத்தினரும் கவலையோடு கவனித்து வந்தனர். இந்த சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை, இளைஞர்களுக்கு, மூத்தவர்கள் வழிவிட வேண்டும் என்ற கோஷம் தி.மு.க.,வில் எழுந்துள்ளது. அவர்களுக்கு முன்மாதிரியாக, முதல்வர் கருணாநிதி, இந்தத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று கருத்து வலுப்பட்டுள்ளது. அவரது இந்த ஆலோசனைக்கு, அவரது குடும்ப சூழலும் ஒரு காரணமாக முன்வைக்கப்படுகிறது. காங்கிரசுடனான கூட்டணியில் ஏற்பட்ட கசப்பான சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. "ஓய்வு என்பது வேலை செய்து கொண்டிருப்பது தான் என உணர்பவர்களே, பொதுத் தொண்டில் ஊக்கமுடையவர்களாக இருக்க முடியும்' என்பது தி.மு.க., தலைவரின் வார்த்தைகள். தேர்தல் களம் கண்டு, தொடர்ந்து வேலை செய்துகொண்டிருப்பதா அல்லது அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு கொடுத்து, முதுகெலும்பாய் நிற்பதா என்பது, முதல்வரின் முடிவில் இருக்கிறது.

தயாராகிறது திருவாரூர்: இந்த சட்டசபைத் தேர்தலில் முதல்வர் போட்டியிட மாட்டார் என்றே, அவரை நன்கு அறிந்த வட்டாரங்கள் சொல்கின்றன. மூத்த தலைவர்களின் நெருக்குதல் காரணமாக, ஒருவேளை அவர் போட்டியிட்டால், திருவாரூரைத் தேர்ந்தெடுக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதை வலியுறுத்தி, ஏராளமானோர் விருப்ப மனுவும் தாக்கல் செய்துள்ளனர். தி.மு.க., மேல்மட்டத்தில் சிலரிடம் விசாரித்தபோது, "அடிப்படைப் பணிகள் எப்போதோ துவங்கிவிட்டன. சொந்தத் தொகுதியில் முதல்வர் களமிறங்குவது நிச்சயம்' என்கின்றனர்.

கேள்வி கேட்ட கருணாநிதி பணிந்தார்: காங்கிரசுக்கு 63 சீட்கள் தர முடிவு

"காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 63 சீட் கேட்பது நியாயமா?' என ஆவேசமாக கேள்வி எழுப்பி, மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., விலகுகிறது என்று அறிவித்த முதல்வர் கருணாநிதி, இரண்டே நாளில் தன் முடிவை மாற்றிக் கொண்டார். காங்கிரஸ் கேட்ட 63 சீட்களை தர ஒப்புக்கொண்டார். அமைச்சர்களின் ராஜினாமா நாடகமும் முடிவுக்கு வந்தது.

"தி.மு.க., அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் திங்கள் கிழமை காலையில் அளிப்பர்' என்று தி.மு.க., ஏற்கனவே அறிவித்து இருந்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த ஆறு அமைச்சர்களும் நேற்று காலை டில்லி வந்திறங்கினர். அனைத்து அமைச்சர்களும் நேரடியாக அமைச்சர் அழகிரியின் இல்லத்திற்கு விரைந்தனர். அங்கிருந்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து பிரதமரை சந்திக்கச் செல்வர் என்றும் கூறப்பட்டது. அதற்காக பிரதமரிடம் நேரம் கேட்கப்பட்டிருப்பதாகவும், காலை 11 மணியளவில் பிரதமர் நேரம் ஒதுக்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது. பார்லிமென்ட் நடந்து கொண்டிருப்பதால் அங்கு, பிரதமர் அலுவலகம் எதிரே நிருபர்கள் குவிந்தனர். திடீரென நிலைமை மாறியது.

மத்திய ஊழல் ஆணையத்தின் தலைவராக தாமஸ் நியமிக்கப்பட்ட விவகாரம் குறித்து பார்லிமென்டில் அறிக்கை தாக்கல் செய்வதில் பிரதமர் வட்டாரங்கள் பிசியாக இருந்ததால் இந்த சந்திப்பு நடைபெற வாய்ப்பில்லாமல் போகவே, மறுபடியும் பரபரப்பும், சஸ்பென்சும் தொடர்ந்து கொண்டே இருந்தது. மதியம் 12 மணியளவில் பார்லிமென்டில் பிரணாப் முகர்ஜியை தி.மு.க., தரப்பிலிருந்து அமைச்சர் ஒருவர் மட்டும் வந்து சந்தித்து விட்டு போனார். அவர் சென்ற சில நிமிடங்களில், பிரணாப் முகர்ஜியின் அறைக்கு உள்துறை அமைச்சர் சிதம்பரம் வந்தார். அங்கு, குலாம் நபி ஆசாத், அகமது படேல் ஆகியோரும் உடன் இருக்க மீண்டும் ஆலோசனை தொடர்ந்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்புக்கு பிறகு வெளியில் வந்த சிதம்பரம், எதுவுமே கூறாமல் சென்றார். குலாம் நபி ஆசாத்தோ, "பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை; முட்டுக்கட்டை நீடிக்கிறது' என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.

இப்படி அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் எதுவுமே எந்தவொரு அறிகுறியையும் காட்டாமலேயே நடந்து கொண்டிருந்ததால், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை யூகிக்க கூட முடியாத அளவுக்கு மிகுந்த பரபரப்பும், சஸ்பென்சும் நீடித்தபடி இருந்தது. பின்னர் 4 மணியளவில் முதல்வர் கருணாநிதியை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். சென்னையில் இதை உறுதிப்படுத்திய துணை முதல்வர் ஸ்டாலின், "மேலும் ஒரு நாள் கால அவகாசம் காங்கிரஸ் கேட்டிருப்பதாக அறிவித்தார். இதையடுத்து, பரபரப்பு தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

துணை முதல்வரின் அறிவிப்பையடுத்து, நேற்று நாள் பூராவும் அழகிரி வீட்டில் ராஜினாமா கடிதங்களோடு காத்திருந்த தி.மு.க., அமைச்சர்கள், பிரதமருடனான சந்திப்பு நிகழ்ச்சியை கைவிட்டனர். காங்கிரசுக்கு தி.மு.க., 60 தொகுதிகள் வரை தருவதற்கு ஒப்புக் கொண்டது. பா.ம.க., தரப்பில் இருந்து 3 தொகுதிகள் வரை விட்டுக் கொடுத்து மொத்தம் 63 தொகுதிகளாக அளித்து சுமுகமான ஒரு முடிவை எடுத்து, இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், தி.மு.க., - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டு பிரச்னைக்கு இன்று இறுதி முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இடங்கள் அறிவிக்கப்பட்ட வேறு கட்சிகளிடம் இருந்து, ஒரு சில இடங்களைக் குறைப்பது குறித்து தி.மு.க.,ஆலோசனை நடத்தி வருகிறது.

முதல்வர் கேட்ட கேள்வி: கடந்த 5ம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: காங்கிரசுக்கு 60 இடங்கள் கொடுக்க தி.மு.க., ஒப்புக் கொண்ட நேரத்திலே, பா.ம.க.,விற்கு 31 இடங்கள், வி.சி.,க்கு 10 இடங்கள், கொங்கு முன்னேற்றக் கழகத்திற்கு ஏழு இடங்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு மூன்று இடங்கள், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இடம் என, தி.மு.க.,விற்கு 122 இடங்கள் தான் எஞ்சியிருந்தன. இந்நிலையில், காங்கிரஸ் 60 இடங்கள் போதாதென்று 63 இடங்கள் கேட்பதும், அதுவும் எந்தெந்த இடங்கள் என்று அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதும் முறைதானா என்பதை அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.

இதுவரை ஒதுக்கப்பட்ட தொகுதிகள்: தற்போதைய நிலையில், ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு 52 தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கிவிட்டது. மீதமுள்ள 182 தொகுதிகளில் காங்கிரசுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கினாலும், தி.மு.க., வசம் மீதமிருப்பது 122 தொகுதிகள் தான். எனவே, 63 தொகுதிகளை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்தால், தனிப்பெரும்பான்மை பெற 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவை என்ற நிலையில், தி.மு.க.,வால் 119 தொகுதிகளில் தான் போட்டியிட வேண்டியிருக்கும். இதன் காரணமாகவே, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒரு சிலவற்றை திரும்பப் பெற்று, காங்கிரசை கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ள தி.மு.க., முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

பா.ம.க., .................................................... 31
விடுதலை சிறுத்தைகள் ................................. 10
கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் ................. 7
முஸ்லிம் லீக் ............................................... 3
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ..................... 1