திங்கள், 3 ஜனவரி, 2011

பெண் கல்வி.........

சுவாமிமலை J . உமர்கனி M .Tech, Ph.d
எந்த ஒரு சமுதாயமும், தேசமும் வளர்ச்சியில் பூர்த்தி அடைந்ததாக எப்போதுக் கருதப்படும் என்றால் அந்த சமுதாயத்தில் இருக்கின்ற அனைத்து மக்களும் கல்வி அறிவு பெற்று இருக்க வேண்டும்.
அதாவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைத்து ஆண், பெண் இரு பாலரும் கல்வி அறிவினைப் பெற்று இருக்க வேண்டும். ஆனால் நம் இஸ்லாமிய சமுதாயத்திலோ கல்வி என்பது எட்டக் கனியாக அல்ல, வேண்டாக் கனியாகவே உள்ளது. குறிப்பாக இஸ்லாமியப் பெண்களுக்கு கல்வி பற்றிய அறிவே போதுமானதாக இல்லாமல் இருக்கிறது . இது கல்வி அறிவிற்கு முந்திய நிலையாகும்.
அதற்க்கு காரணம் தொலைநோக்கு பார்வை நம்மிடம் இல்லாததே. ஏனெனில் பெண் என்றால் அவள் மனித இனத்தை விருத்தி செய்வதற்காக செயல்ப்படும் கருவி என்று நாம் அவளுக்கு சிறு வயதிலிருந்தே கற்பித்து வருகிறோம்.
இன்றைய சூழலில் உலக அளவில் வளர்ந்த நாட்டின் முன்னேற்றப் பாதையாகப் பார்த்தல், அப்பாதையை கடந்து சென்றவர்களில் பாதி விழுக்காடு பெண்களே! ஆகா நம் சமுதாயத்தின் எழுச்சி என்பது வார்த்தை அளவில் இல்லாமல், அதை இனிவரும் இளம் தோழர்கள் செறிவூட்டி எழுச்சி கூட்டி பெண்கல்வியின் விளக்கிற்கு ஒளிக் கூட்டவேண்டும்.
இஸ்லாமியப் பெண்களைப் பொறுத்தவரை கல்வி என்பது பெறுவது அல்ல: அடைவது: எத்தனை காலம் ஒரு ஆண்மகனின் வெற்றிக்கு பின்னால் பெண் இருக்கிறாள் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி பின்தங்கி இருப்போம்.
கவிஞர்களின் கற்பனையில் கைப்பாவையாக இல்லாமல் இறைவனின் வழியில் நிமிர்ந்த நன்னடை, நேர்க்கொண்டப் பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத தீர்மை கொண்ட மாதராய் திகழ கல்வி என்னும் ஆயுதத்தை ஏந்துவோம்.
மௌனமாகிய அகிம்சை நம்மை ஆட்க்கொண்டு ஆட்டுவித்தது போதும், பொங்கி எழுவோம் கல்வி எனும் போர்க்கொடியோடு!!
நாம் டார்வின் தியரியாக வாழக் கற்றுக் கொண்டால்
சாவோஸ் தியரியும் தவிடுப் பொடிதான்