புதன், 10 நவம்பர், 2010

தேர்தலை மனதில் வைத்து கடிதம் எழுதுகிறார்; சோனியா மீது வைகோ குற்றச்சாட்டு

தேர்தலை மனதில் வைத்து கடிதம் எழுதுகிறார்;
 
 சோனியா மீது
 
 வைகோ குற்றச்சாட்டுதேர்தலை மனதில் வைத்து கருணாநிதிக்கு சோனியா கடிதம் எழுதி உள்ளார் என்று வைகோ குற்றம் சாட்டினார்.
 
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
சோனியாகாந்தி, கருணாநிதிக்கு ஒரு பதில் கடிதம் எழுதி இருப்பதாகவும், அதில், இலங்கையில் முகாம்களில் உள்ள 30,000 ஈழத் தமிழ் மக்கள் மறு குடி அமர்வுக்குத் தேவையான உதவிகளையும், மனிதாபிமான அடிப்படையிலான உதவி களையும், மத்திய அரசு அளித்து வருவதாகவும், தமிழ் மக்களுக்கு மறு கட்டமைப்புப்பணிகள் தொடர்பாக, இலங்கை அரசோடு இந்திய அரசு பேசி வருவதாகவும், சோனியாகாந்தி குறிப்பிட்டு உள்ளதாக, செய்தி வெளியாகி உள்ளது.
 
2008 ஆம் ஆண்டிலும், 2009 ஆம் ஆண்டுத் தொடக்கத்திலும், லட்சக்கணக்கான தமிழ் மக்கள், கொலை பாதக ராஜபக்சே அரசால், இலங்கையில் படுகொலை செய்யப்பட்டபோது, இந்தியாவில் எங்காவது ஒரு இடத்தில், ஈழத்தமிழர்களைப் பற்றி, ஒரு வார்த்தை சோனியாகாந்தி பேசியது உண்டா?
 
டெல்லிக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை, போரைத் தீவிரப்படுத்தி புலிகளை முற்றாக அழிப்பேன் என்று கொக்கரித்தபோது, அதைக் கண்டித்து மன்மோகன் அரசு ஒரு வார்த்தை கூறியது உண்டா?
 
விடுதலைப்புலிகளைத் தடை செய்து உள்ள அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள், இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று, திரும்பத்திரும்ப வலியுறுத்திய போதும், இந்திய அரசு, போர் நிறுத்தத்தை ஏன் வலியுறுத்த வில்லை?
 
2009 பிப்ரவரி 18 ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி, சிங்கள அரசுக்கு ஆதரவாகப் பேசினாரே? டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசை இயக்குவதே சோனியாகாந்தி அம்மையார் என்பது, உலகு அறிந்த உண்மை ஆகும்.
 
இந்திய அரசின் உதவியால் தான், யுத்தத்தை வெற்றிகரமாக நாங்கள் நடத்த முடிந்தது என்று, சிங்கள அதிபர் ராஜபக்சே, இலங்கை நாடாளுமன்றத்திலேயே அறிவித்தாரே? இந்தியா செய்த ராணுவ உதவியால்தான், புலிகளைத் தோற்கடிக்க முடிந்தது என்று, இலங்கை அமைச்சர்கள் வெளிப்படையாக அறிவித்தார்களே?
 
இலங்கையில் தமிழ் இனப்படுகொலை சிங்கள அரசால் நடத்தப்பட்டதற்கு, முழுக்க முழுக்க உதவியது இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான்.
 
தமிழர்களை முட்டாள்களாக ஆக்கி விடலாம் என்று கருதிக்கொண்டு, மறு குடியமர்வுக்கு இந்திய அரசு முயற்சிப்பதாக, சோனியா காந்தி கருணாநிதிக்கு, வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு கடிதம் எழுதி இருக்கிறார்.
 
உணவும் இன்றி, மருந்தும் இன்றி, சிங்கள விமானக் குண்டுவீச்சுக்கும், பீரங்கித் தாக்குதலுக்கும், லட்சக்கணக்கான தமிழ் மக்கள் பலியான போது வாய்மூடிக் கிடந்த சோனியாகாந்திக்கு, இப்போதுதான் ஈழத்தமிழர் களைப் பற்றி ஞாபகம் வந்தது போலும்.
இவ்வாறு வைகோ அறிக்கையில் கூறி உள்ளார்.

என்னையும், குழந்தையையும் சமுதாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும்: “என் கணவர் இரக்கமற்ற குற்றவாளி” மோகன்ராஜின் மனைவி கண்ணீர் பேட்டி

என்னையும், குழந்தையையும் சமுதாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும்:
 
 “என் கணவர் இரக்கமற்ற குற்றவாளி”
 
 மோகன்ராஜின் மனைவி கண்ணீர் பேட்டி
கோவை, நவ. 10-
 
கோவையில் சிறுவன்- சிறுமியை கடத்தி கொலை செய்த கொலையாளி மோகன்ராஜ் நேற்று அதி காலை நடந்த என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். மோகன்ராஜிக்கு பிரியா ஆரோக்கிய மேரி என்ற மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். மோகன்ராஜின் நடத்தை சரியில்லாததால் ஏற்கனவே பிரியா ஆரோக்கியமேரி கணவரை பிரிந்து குழந்தையுடன் சொந்த ஊரான திருச்சிக்கு சென்று விட்டார். தற்போது கர்ப்பிணியாக இருக்கும் அவர் தாயுடன் வசித்து வந்தார்.
 
மோகன்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதும் போலீசார் ஆரோக்கியமேரியை அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் விசாரணைக்கு தேவைப்படும் போது அழைத்தால் வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
 
ஒரு கொலை குற்றவாளியின் மனைவி என்பதால் ஆரோக்கியமேரி கோவை மக்களின் கண்ணில் படாமல் ரகசிய இடத்தில் குழந்தையுடன் தங்கி இருந்தார்.
 
நேற்று கணவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதை ஆரோக்கியமேரி டெலிவிஷனில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ஆரோக்கியமேரி தனது தாயுடன் கோவை திரும்பினார்.
 
ஆரோக்கியமேரி கண்ணீர் மல்க கூறியதாவது:-
 
என் கணவர் மிகப்பெரிய குற்றம் செய்து விட்டார். அவர் மன்னிக்க முடியாத குற்றவாளி. கொலை செய்யப்பட்ட 2 குழந்தைகளும் என் கண் முன்னே நிற்கின்றன. அந்த பிஞ்சு குழந்தைகள் ஒரு பாவமும் அறியாதவர்கள்.
 
என் கணவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது தெரியும். அவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படாவிட்டால் கோர்ட்டு மூலம் தண்டனை கிடைத்து இருக்கும்.
 
இப்போது நானும், என் குழந்தையும் அனாதையாக தவிக்கிறோம். என்னையும் என் குழந்தையையும் இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த சமுதாயம் நாங்கள் வாழ உதவ வேண்டும்.
 
இவ்வாறு கண்ணீர் மல்க ஆரோக்கிய மேரி கூறினார்.
 
ஆரோக்கியமேரியின் தாய் அந்தோணியம்மாள் கூறியதாவது:-
 
மோகன்ராஜ் என் கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதை ஆரோக்கிய மேரி டெலிவிஷனில் பார்த்ததும் மூர்ச்சையாகி விட்டாள். உடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
மோகன்ராஜின் தாய் சாவித்திரியும் கோவை வந்துள்ளார். அவர் மகன் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
 
கொலை செய்யப்பட்ட சிறுமி முஸ்கின், சிறுவன் ரித்திக்கின் பெற்றோர் தொடர்ந்து அதிர்ச்சியில் இருந்து மீளாதவர்களாக உள்ளனர். பிள்ளைகள் இறந்த துக்கத்தில் அவர்களால் சரியாக சாப்பிட கூட முடியவில்லை.
                                                                           

ஹஜ் நிறுவனங்களின் குளறுபடிகளால் தமிழகத்தில் கொந்தளிப்பு அதிர்ச்சி தகவல்கள்...

ஹஜ் நிறுவனங்களின் குளறுபடிகளால் தமிழகத்தில் கொந்தளிப்பு அதிர்ச்சி தகவல்கள்...

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்ற வருடந்தோறும் சுமார் 25 லட்சம் பேர் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் உலகின் முதல்  ஆலயம் அமைந்திருக்கும் மக்கா நோக்கி புறப்படுகின்றனர்.

இந்தியாவிலிருந்து மத்திய அரசின் மானியத்துடன் ஹஜ் கமிட்டி சார்பில் இவ்வருடம் 1,25,000 பேர் மக்கா சென்றுள்ளனர். தனியார் ஹஜ் ஏஜென்ஸிகளின் மூலம் 48,487 பேர் வரை சென்றுள்ளனர்.

இவ்வருடம் தமிழகத்தில் தனியார் ஹஜ் ஏஜென்ஸிகள் சார்பில் விண்ணப்பித்த சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடந்த வாரம் மக்கா செல்ல முடியாமல் அவர்களின் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

உறவினர்களிடமும், நண்பர்களி டமும் பயணம் சொல்லி, பெட்டி, படுக்கைகளுடன் சென்னைக்கு புறப்படத் தயாரான நிலையில் விசா கிடைக்கவில்லை என்ற செய்தி அவர்களை அதிர்ச்சிக்குள் ளாக்கி விட்டது! பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

இதற்கு என்ன காரணம்? யார் காரணம்? என விசாரணையில் இறங்கினோம். எல்லோரும் ஒரு மித்த நிலையில் குற்றம்சாட்டுவது தனியார் ஏஜென்ஸிகளைத்தான்! தமிழகத்தில் சமீபகாலமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஹஜ் ஏஜென்ஸிகள் ஆங்காங்கே உருவாகியிருக்கின்றன. இதில் 40 நிறுவனங்கள் மட்டுமே கோட்டா பெற்றவை என நஸீர் என்பவர் நம்மிடம் கூறினார். இவரும் ஒரு ஹஜ் ஏஜென்ஸி நடத்துகிறார்.

மற்ற நிறுவனங்கள் வெளி மாநில ஹாஜிகளின் இடஒதுக்கீடு களிலிருந்து உள்ஒதுக்கீடு பெற்று, அந்த விசாக்களை கூடுதல் விலைக்கு விற்று வருகிறார்கள் என்றும் பாதிக்கப்பட்ட ஹஜ் பயணிகள் நம்மிடம் குற்றம் சாட்டு கிறார்கள்.

“மும்பையில் தான் இது தொடர்பான பேரங்கள் நடக்கின்றன. ஹஜ் விசாக்களை வியாபாரமாக்கும் கள்ளச் சந்தை யாக மும்பை விளங்குகிறது” என்கிறார்கள்.

தனியார் ஹஜ் சர்வீஸ் நிறுவனங்களுக்கு மொத்த இடங்கள் 48,487 ஆகும். இதில் மொத்த இந்தியாவிலும் ஹஜ் கோட்டாக்கள் பெறும் முறையான நிறுவனங்களின் எண்ணிக்கை 599 ஆகும்.

இதில் தமிழகத்தில் 40 நிறு வனங்களுக்கு 4050 கோட்டா. கேரளாவில் 58 நிறுவனங்களுக்கு 7399 கோட்டா. மஹாராஷ்டிராவில் 236 நிறுவனங்களுக்கு 18419 கோட்டா என ஒதுக்கப்படுகிறது.

அதாவது மூன்றில் ஒரு பங்கு இடங்கள் மஹாராஷ்டிராவுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. இதுதான் மும்பையை மையமாக வைத்து குதிரை பேரம் நடப்பதற்கு காரணம்.

இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. புனிதமான ஹஜ் பயணத்தை மையமாக வைத்து கோடிக்கணக்கில் வியா பாரம் நடைபெறுகிறது என்ற உண்மை இப்போது தான் வெளிஉலகிற்கு தெரிய வந்திருக் கிறது என நம்மிடம் பொருமினார் சென்னையைச் சேர்ந்த சம்சுதீன். இவரும் இந்த வருடம் ஹஜ் பயண வாய்ப்பை கடைசி நேரத்தில் இழந்தவர்.

அரசின் ஹஜ் கமிட்டி மூலமாக செல்லும்போது மொத்த செலவு 1,25,000 ரூபாய் மட்டுமே. அதில் விமான நிலையத்திலேயே 2500 சவூதி ரியால் (சுமார் 30 ஆயிரம் இந்திய ரூபாய்) ஹாஜிகளுக்கு உணவு, குர்பானி, வகைகளுக்காக கொடுக்கப்படுகிறதாம்.

ஆனால், தமிழகத்தில் தனியார் ஏஜென்ஸிகள் குறைந்தது 1,75,000 தொடங்கி 3,00,000 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். அவரவர் நிறுவ னத்தின் புகழுக்கேற்ப தொகை மாறுபடுகிறது.

இது அநியாயம் என பலரும் குறை கூறுகிறார்கள். காரணம், சவூதி அரசு ஹஜ் விசாவை இலவசமாக தருகிறது. மும்பை வழியாகத் தொடங்கும் பேரங்கள் மூலம் ‘விசா’ கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது என்பது தான் உண்மை. இதை நம்மிடம் சமுதாய சேவகர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த விபரங்கள் எதுவும் தெரியாத ஹஜ் பயணிகள் “ட்ராவல்ஸ் நிறுவனங்கள் எல்லாம் சேவைக் கட்டணத்துடன் பணிபுரிவதாக நம்புகின்றனர்” என்று வேதனைப்படுகிறார் பாதிக்கப் பட்ட ஒரு ஹஜ் பயணி!
தனியார் ட்ராவல்ஸ்கள் அனைத்தும் சேவை ஒரு பங்கு என்றால், வணிகம் இரண்டு பங்காக கருதி செயல்படுவதாக பாதிக்கப் பட்டவர்கள் கூறுகிறார்கள். எல்லா நிறுவனங்களையும் அப்படிக் கூறிவிட முடியாது, என எதிர் குரல்களும் கேட்கின்றன. சுவையான உணவு, கட்டணம் அதிகமுள்ள ஹோட்டல் இவற்றையெல்லாம் பொறுத்து கட்டணங்கள் மாறுபடுகின்றன என்று சில தனியார் ட்ராவல் ஏஜென்ஸிகள் கூறுகின்றன.  இந்த வருடம் தமிழகத்திலிருந்து ஹஜ் கமிட்டி மூலம் 4027 பேர் மக்கா சென்றுள்ளனர். ஆனால், விண் ணப்பித்தவர்கள் 12 ஆயிரம் பேர்களுக்கு அதிகமாம்!

இதுதான் பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப் படுகிறது. ஹஜ் கமிட்டியின் மூலம் மக்கா செல்ல வாய்ப்பில்லாத மீதி இரண்டு பங்கு எண்ணிக்கையிலானவர்கள் தனியார் ட்ராவல்ஸ்களை நாடுகின்றனர்.

அது பதிவு பெற்ற நிறுவனமா? இல்லையா? என்பது குறித்தெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. எப்படி யாவது ஹஜ் பயணத்தை நிறை வேற்ற வேண்டும் என்ற ஆர்வம் அவர்களது கண்ணை மறைத்து விடுகிறது.
அதன் விளைவுதான் இது போன்றச் சிக்கல்கள். இனியாவது இதுகுறித்து கவனமுடன் இருப் பது மக்களின் கடமை என்று தமுமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஜெ.எஸ்.ரிபாயி நம் மிடம் கூறினார்.

இதற்கு ஒரே தீர்வு மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் 20 கோடி முஸ்லிம்களின் உண்மையான எண்ணிக்கையை சவூதி அரசுக்கு தெரிவித்து அதற்கேற்ப குறைந்தது 2 லட்சம் இடங்களையாவது கேட்டுப் பெற வேண்டும். இதன் மூலம் இந்திய ஹாஜிகளின் இடப்பற்றாக்குறை பிரச்சனை ஓரளவாவது தீரும் என்று சமுதாயத் தலைவர்கள் கருத்து கூறுகின்றனர்.

அதுவரை தற்காலிகமாக தனி யார் ஹஜ் ட்ராவல்ஸ்களை அந்தந்த மாநில வக்பு வாரியம் அல்லது ஹஜ் கமிட்டி மூலமாக ஒழுங்குபடுத்தும் பணிகளையாவது செய்ய வேண்டும் என்பது தான் பலரின் வேண்டுகோளாகும். இவ்விஷயத்தில் நல்ல பெயர் எடுத்த பல ட்ராவல் ஏஜென்ஸிகளும், பல பிரபலங்களும்  சங்கடங்களுக்கு உள்ளாகியுள்ளனர். எங்கள் நோக்கம் யாரையும் ஏமாற்றுவது அல்ல என்று விளக்கமளித் துள்ளனர். அது உண்மைதான்.

ஆனால், ஹஜ் பயணத்தை வைத்து மும்பையில் நடக்கும் குதிரை பேரங்களிலிருந்து அவர்கள் இனி தங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். காரணம் புனிதப் பயணத்தை வணிகமயமாக்கும் கும்பலுக்கு துணைபோவது நியாயமில்லையே!


வி.ஐ.பிகள் மீது குற்றச்சாட்டு


ஹஜ் பயணிகளுக்கான விசாக்கள் கள்ளச்சந்தையில் விற்பது குறித்து நீண்டகாலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. கேரளாவில் தனது உறவினர் ஒருவரின் ஹஜ் ஏஜென்ஸிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கி, அதன் மூலம் சம்பாதிக்கிறார் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவரும், ரயில்வே இணை அமைச்சருமான ஈ.அஹ்மது மீது எழும்பிய குற்றச்சாட்டுகள் பலருக்கும் நினைவிருக்கும்.

அரசியல் செல்வாக்கும், அதிகாரப் பின்புலமும் கொண்ட பல முஸ்லிம் வி.ஜ.பி.களின் மீது இவ்வாறு தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் இது குறித்து மத்திய&மாநில அரசுகள் ஏனோ தொடர்ந்து மவுனம் காக்கின்றன.

இதுகுறித்து விபரம் கேட்க, தமிழக ஹஜ் கமிட்டியின் தலைவரும், அகில இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவருமான அபூபக்கர் அவர்களைத் தொடர்பு கொண்டோம். அவர் ஹஜ்ஜுக்குப் புறப்படும் பரபரப்பில் இருந்ததால், ஹஜ் பயணம் போய் வந்த பிறகு மக்கள் உரிமைக்குப் பேட்டி தருகிறேன் என்றார்.

சொந்த மாநிலமான கேரளாவுக்கு தப்ப முயன்றதால் மோகனகிருஷ்ணனை சுட்டு வீழ்த்தினோம்-சைலேந்திர பாபு

Sailendra Babuகோவை: கோவையில் அக்கா, தம்பியான பள்ளிச் சிறார்களைக் கடத்திச் சென்று, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் இருவரையும் தண்ணீரில் தள்ளி விட்டுக் கொலை செய்த மோகன் என்கிற மோகனகிருஷ்ணன், தனது சொந்த மாநிலமான கேரளாவுக்கு தப்ப முயன்றதால் அவனை போலீஸார் சுட்டுக் கொன்றனர் என்று கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போலீஸ் என்கவுன்டர் குறித்து சைலேந்திரபாபு இன்று கூறுகையில்,

விசாரணைக்காக மோகன் என்கிற மோகனகிருஷ்ணனை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அதிகாலை ஐந்தரை மணியளவில் போத்தனூர் அருகே வேன் போய்க் கொண்டிருந்தபோது திடீரென போலீஸ் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு துப்பாக்கி முனையில் போலீஸாரை மிரட்டத் தொடங்கியுள்ளான் மோகன கிருஷ்ணன்.

கேரளாவுக்குப் போகுமாறு அவன் கூறியுள்ளான். மேலும் துப்பாக்கி முனையில் போலீஸ் அதிகாரிகளையும் கடத்த முயன்றான். மேலும் துப்பாக்கியாலும் சுட்டுள்ளான். இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துமாலை, ஜோதி ஆகியோர் காயமடைந்தனர்.

இதையடுத்து போலீஸார் தற்காப்புக்காக சுட்டுள்ளனர். இதில் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை சுட்டதில் அவன் மீது 3 குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தான் என்றார் சைலேந்திர பாபு.

சப் இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம்:

இந்த நிலையில் மோகனகிருஷ்ணனால் சுடப்பட்டதாக கூறப்படும் சப் இன்ஸ்பெக்டர் முத்துமாலையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஆறே கால் மணியளவில் இவர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் முத்துமாலையின் வயிற்றில் குண்டு பாய்ந்துள்ளது. இதனால் அவரது நிலை மட்டும் கவலைக்கிடமாக உள்ளது.

இன்னொருவரான ஜோதியின் கையில் குண்டு பாய்ந்துள்ளது. அவர் நிலைமை பரவாயில்லை.இருவருக்கும் சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.

போத்தனூர் காவல் நிலையத்தில் இன்னொரு குற்றவாளி

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இன்னொரு குற்றவாளியான மனோகரன் கதி என்ன என்பது தெரியாமல் இருந்தது. இதனால் மர்மம் நிலவியது. ஆனால் தற்போது மனோகரன் போத்தனூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. பாதுகாப்பு கருதி அவனை போலீஸார் அங்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.