சனி, 30 அக்டோபர், 2010

மோடி வித்தையெல்லாம் குஜராத்தில் பலிக்கலாம்!

குஜராத் முஸ்லிம் இன சுத்திகரிப்பு படுகொலையை நடத்திய மோடிக்கு அமெரிக்கா உள்ளிட்ட சில அயல்நாடுகளில் விசிட் விசா மறுக்கப்பட்டது. இதனால் பெருத்த   அவமானம் அடைந்த மோடிக்கு, அடுத்த அவமானமாக பீகாரில் இவர் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கெடுக்கக்  கூடாது என பிகாரில் பாரதீய ஜனதாக் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு கண்டுள்ள நிதிஷ்குமார் கட்சியின் தடை அமைந்தது. அதிலிருந்து மோடி மீண்டுவருவதற்குள் மேலும் ஒரு  அவமானம் அவரது  கட்சி முக்கியத் தலைவர் வாயிலாகவே கிடைத்துள்ளது மோடியை நிச்சயம் 'அப்செட்' ஆக்கியிருக்கும்.

 நடைபெறும் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் பிரசாரத்துக்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் சென்றிருந்தபோது, பிரசாரத்துக்கு மோடி வரவில்லையா என்று நிருபர்கள் கேட்டபோது,
 மோடி வித்தையெல்லாம் எல்லா மாநிலங்களிலும் எடுபடும் என்று கூற முடியாது என்று பதில் அளித்ததாக செய்திகள் கூறுகின்றன.

குஜராத் முஸ்லிம் இன சுத்திகரிப்பு படுகொலையை நடத்திய மோடி, அங்கு மீண்டும் முதல்வரானதும், சமீபத்தில்  நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் கணிசமான வெற்றியை பெற்றுள்ளதையும் வைத்து  மோடியை  மக்கள் செல்வாக்கு மிக்கவராக காட்ட சிலர் முனைகின்றனர்.

ஆனால் மோடியின் தொடர் வெற்றி, பிரதான கட்சியான காங்கிரசின் மிதவாத மதவாதமும், அரசியல் அணுகுமுறையும்தான் காரணம் என்பதுதான் உண்மை. எதிர்கட்சி தெளிவான அரசியல் செய்யாத நிலையில், அதிகாரத்தை  கையில் வைத்துள்ள மோடி, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறுவது பெரிய வித்தையல்ல. ஆனாலும் மோடியின் இந்த மோடி வித்தை எல்லா இடங்களிலும் எடுபடாது என அவரது கட்சியை சேர்ந்த பிரதான தலைவரும், நாடளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளதன் மூலம், மோடியின் மக்கள் செல்வாக்கு என்பது ஒரு வித்தையன்றி உண்மையல்ல என்பது திண்ணம். அதோடு பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று 'சோ' வகையறாக்களால் புகழப்படும் இவருக்கு ஏற்படும் அடுத்தடுத்த அவமானங்கள் அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்திய உதவி : பிட்ரோடா!

மாற்றுக் கல்விகளை வழங்குவதன் மூலம் அமெரிக்காவில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவி செய்ய இந்தியாவால் இயலும் என்று தேசிய அறிவுசார் ஆணையத்தின் தலைவர் சாம் பிட்ரோ கூறியுள்ளார்.

இந்திய நுட்பவியல் கழக முன்னாள் மாணவர் சங்க விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சாம் பிட்ரோடா, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் முக்கியப் பிரச்சனையாக உள்ளது. புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டுமெனில், மாற்றுக் கல்விகளின் மூலம் மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அமெரிக்கர்களுக்கு இந்தியா இத்தகைய பயிற்சிகளை அளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையின் போது, இரு நாடுகளுக்கிடையிலான வணிக உறவே முக்கியமாக அலசப்படும் என்றும் சாம் கூறினார்.

ஒபாமாவின் இந்திய வருகை நல்ல வாய்ப்பு. அவரது வருகையை ஒட்டி இரு தரப்பிலும் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இரு நாட்டு உறவுகளை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன் என்றும் சாம் கூறினார்

ஊழலின் தாய் காங்கிரஸ் : நிதீஷ் குமார்!

பீகாரின் வளர்ச்சித் திட்டங்களில் ஊழலி மலிந்துள்ளதாகக் கூறிய சோனியா காந்திக்குப் பதில் அளிக்கும் விதமாகப் பேசிய பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ஊழலின் தாய் காங்கிரஸ் கட்சிதான் என்று கூறினார்.

பாட்னாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பாரதீய ஜனதா கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் பேசிய நிதீஷ் குமார், ஊழலை உருவாக்கியதே காங்கிரஸ் கட்சிதான். அந்தக் கட்சிதான் ஊழலின் தாய். பீகாரில் ஊழல் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள். ஸ்பெக்ட்ரம் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்ற ஊழல் குறித்து என்ன சொல்வீர்கள் என்று பேசினார்.

நிதீஷ் குமாரின் பேச்சை ஆமோதித்துப் பேசிய சுஷ்மா, காமன் வெல்த் வியைாட்டுப் போட்டி நடத்துவதில் நடைபெற்ற ஊழல் குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி குரல் எழுப்பும் என்று பேசினார்.

நிதீஷ் குமார் திருடன் : ராப்ரி தேவி!

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஒழுக்கம் அற்றவர் என்றும் அவர் ஒரு திருடன் என்றும் பீகார் மாநில முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி கூறியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து பீகார் மாநில அரசியல் மிகவும் கீழ்த்தரமாக ஆகியுள்ளது. அரசியல் கட்சிகள் எதிர் கட்சிகளின் கொள்கைகளையம் திட்டங்களையும் விமர்சனம் செய்வதை விட்டு அவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது அதிகரித்துவிட்டது. ராகுல் காந்தியை கங்கையில் தூக்கி வீச வேண்டும், நிதீஷ்குமார் எதற்குமே பயனற்றவர் என்பன போன்ற வார்த்தைகளே பிரச்சாரம் என்றாகிவிட்டது.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய பீகார் மாநில முன்னாள் முதல்வரும் லாலு பிரசாத் யாதவின் மனைவியுமாகிய ராப்ரி தேவி,  நிதீஷ் குமார் ஒழுக்கம் அற்றவர். அவர் ஒரு திருடர். அவரை ஆட்சியிலிருந்து தூக்கி எறிய வேண்டும் என்று பேசினார்.

அரசு கணக்கு தணிக்கையாளரின் அறிக்கை படி, சுமார் 11,400 கோடி ரூபாய் மதிப்பிலான பீகார் மாநில வளர்ச்சித் திட்டங்களில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் ராப்ரி தேவி குற்றம் சாட்டினார்.

இந்தக் குளறுபடிகள் தொடர்பாக சிபிஐ விசாரணையை அனுமதிப்பதை விட்டுவிட்டு, சிபிஐ விசாரணையைத் தடுத்து நிறுத்துவதற்காக நிதீஷ் குமாரும் அவரது அரசும் பாட்னா உயர் நீதிமன்றத்திற்குச் சென்றதாகவும் அவர் கூறினார்.

மலேசியாவில் காணாமல் போன சினிமா பைனான்ஸியர் - மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: மலேசியா சென்ற சினிமா பைனான்சியர் முத்துராஜா என்ன ஆனார் என்பதை 2 வாரத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த ராமலட்சுமி (வயது 36), மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், "எனது கணவர் முத்துராஜா கடந்த ஜனவரி மாதம் மலேசியா செல்வதாக கூறி விட்டுச் சென்றார். அதன்பின்பு அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை.

இந்த நிலையில் எனது கணவர் மலேசிய வக்கீல் சகோதரர்களால் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது. எனது கணவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா என்பது தெரியவில்லை. எனவே எனது கணவரை கண்டுபிடித்து என்னிடம் ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்..." என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் கே.என்.பாஷா, அருணாஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கின் விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அடுத்த விசாரணையின்போது சினிமா பைனான்சியர் முத்துராஜாவின் நிலை குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்-திருமாவளவன்!

டெல்லி: காங்கிரஸார் குரல் கொடுக்கிறார்களே என்பதற்காக எனது எம்.பி பதவியை நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

திருமாவளவன் டெல்லி வந்துள்ளார். இதையடுத்து அவர் ராஜினாமா செய்யப் போவதாக வதந்திகளை கிளப்பி விட்டுள்ளனர். இதுகுறித்து திருமாவளவன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய டெல்லி வந்திருப்பதாக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது.

டெல்லியில் சுதர்சன் நாச்சியப்பன் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே நான் டெல்லி வந்தேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய அவசியம் எழவில்லை.

சென்னையில் ராஜீவ்காந்தி சிலை அவமதிக்கப்பட்ட பிரச்சினையில் எனக்கும் எனது கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுபோன்ற கீழ்த்தரமான, விஷமத்தனமான செயல்களில் நாங்கள் ஒருபோதும் ஈடுபடமாட்டோம்.

இந்த பிரச்சனை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை நேரில் சந்தித்து ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு பிரச்சினையில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை விளக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டிருந்தேன்.

ஆனால் சோனியாகாந்தி பிகார் மாநில தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாலும், வருகிற நவம்பர் 2ம் தேதி கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாலும் 2ம் தேதிக்கு பிறகு நேரம் கேட்டு சந்திக்க இருக்கிறேன்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் குறித்தும் சிலை அவமதிப்பு பிரச்சினை குறித்து தனது கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை விளக்கவே சோனியா காந்தியை சந்திக்க உள்ளேன் என்றார் அவர்.

அயோத்தி நில வழக்கு-நவ. 30ல் அப்பீல் செய்கிறது நிர்மோகி அகாரா!

Babri Mosque Demolitionஅயோத்தி: அயோத்தி நில வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை எதிர்த்து நவம்பர் 30ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யவுள்ளதாக நிர்மோகி அகாரா தெரிவித்துள்ளது.

அயோத்தி நில வழக்குகளில் முக்கியமான ஒன்று இந்த நிர்மோகி அகாரா. சமீபத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் பிறப்பித்த தீர்ப்பின்படி நிர்மோகி அகாராவுக்கும் மூன்றில் ஒரு பங்கு இடம் தரப்பட வேண்டும்.

இந்த நிலையில், தீர்ப்பில் திருப்தி இல்லை எனத் தெரிவித்துள்ள நிர்மோகி அகாரா நவம்பர் 30ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. அதேசமயம், சுமூகத் தீர்வுக்கும் தாங்கள் தயாராக இருப்பதாக அது அறிவித்துள்ளது.

இதுகுறித்து அகாராவின் தலைவரான துறவி பாஸ்கர தாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், நவம்பர் 30ம் தேதி நாங்கள் அப்பீல் மனுவைத் தாக்கல் செய்யவுள்ளோம். அதேசமயம், சுமூகமான தீர்வு காணும் எங்களது முயற்சிகளும் தொடங்கும்.

அகாரா அமைப்பின் பிரதிநிதிகள், சன்னி மத்திய வக்பு வாரியத் தலைவர் மற்றும் அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியத்தின் பிரதிநிதிகளை சந்தித்து ராமர் ஜென்மபூமி-பாபர் மசூதிப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்வார்கள் என்றார்.

சமரசப் பேச்சில் அப்துல் கலாம்

இதற்கிடையே, சமரசப் பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்குமாறு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை அழைக்கவும் ஒரு முயற்சி தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அப்துல் கலாம், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களை கொண்ட குழுவை அமைத்து சமரசப் பேச்சுவார்த்தைகளை விரிவான அளவில் மேற்கொள்ளத் திட்டமிட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

செய்யாத குற்றத்திற்காக அயல்நாட்டுச் சிறைகளில் வாடும் தமிழர்கள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?

சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வேலைக்கு செல்லும் தமிழர்கள் செய்யாத குற்றங்களுக்காக கைதாகி சிறையில் அடைக்கப்படுகின்றனர். அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து வீட்டு வேலை, ஓட்டுநர் வேலை, தோட்ட வேலை, சமையல் வேலை உள்ளிட்ட பணிகளுக்கு குவைத், துபாய், வளைகுடா நாடுகளுக்குச் செல்கின்றனர். பல லட்சம் கடன் வாங்கி பணம் கட்டியதும் ஏஜென்டுகள் இவர்களில் பலரை டூரிஸ்ட் விசா, போலி விசாக்களில் அனுப்பி விடுகின்றனர்.

இதனால் தமிழர்களை அந்நாட்டில் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். இதையும் தாண்டி செல்லும்போது முதலாளியின் கொடுமை தாங்கமுடியாமல் ஓடிவந்தால் திருடிவிட்டதாக தொழிலாளர் மீது போலீசில் புகார் கொடுக்கின்றனர். இதனால் கைது செய்யப்படும் தொழிலாளர்கள் சிறையில் வாடும் நிலை உள்ளது.

சம்பளம் குறைவாக இருப்பதால் வேறு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படுகின்றனர். இதுபோன்ற பொய் வழக்குகளால் தமிழர்கள் மட்டுமல்லாது பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சிறையில் வாடுகின்றனர்.

இதனால் அவர்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அவர்கள் கதி என்ன என்பது தெரியாமல் குடும்பத்தினர் பரிதவிக்கின்றனர். குவைத்தின் சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் பல ஆண்டுகள் சிறையில் வாடும் தமிழர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு என அமைக்கப்பட்டுள்ள தனி அமைச்சகம் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரளாவில் இருப்பது போன்று தனி நல வாரியம் அமைக்க வேண்டும்.

தஞ்சை, காரைக்கால், புதுச்சேரி, விழுப்புரம், திருச்சி, திருவாரூர், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலானோர் தான் குவைத், துபாய் சிறைகளில் ஆண்டு கணக்கில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க மத்திய அரசு மூலம் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.....