ஞாயிறு, 6 மார்ச், 2011

அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.-கம்யூ. கட்சிகள் தொகுதி ஒதுக்கீடு தாமதம்

அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, புதிய தமிழகம், மனித நேயமக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணி கழகம், இந்திய குடியரசு கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கான ஒப்பந்தத்தில் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தும் கையெழுத்திட்டனர். இதே போல் மனித நேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகளும், புதிய தமிழகம் கட்சிக்கு 2 இடங்களும், மூவேந்தர் முன்னணி கழகம், இந்திய குடியரசு கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
ம.தி.மு.க. மற்றும் இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு அ.தி.மு.க. கூட்டணியில் இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இந்த கட்சிகளுடன் அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இப்போதும் அதே தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி விருப்பம் தெரிவித்தது. ஆனால் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வும், இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் கூடுதலாக இடம் பெற்று இருப்பதால் ம.தி.மு.க.விடம் தொகுதிகளை குறைத்துக் கொள்ளும்படி அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தங்களுக்கு 25 தொகுதிகளாவது வேண்டும் என்று ம.தி.மு.க. கூறியது. கடைசியாக 21 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.  இதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 25 தொகுதிகள் கேட்டது. அக் கட்சிக்கு முதல் கட்டமாக 10 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முன்வந்தது. இறுதியாக 13 தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு பிரித்து கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு கடந்த தேர்தலில் தி.மு.க. ஒதுக்கீடு செய்த 10 தொகுதிகளை அப்படியே கொடுக்கப்படலாம்.   ம.தி.மு.க. மற்றும் இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கீட்டை ஜெயலலிதா இறுதி செய்து அறிவிப்பார் என்று கூறப்பட்டது. இதற்காக அ.தி.மு.க.வின் அழைப்பை எதிர்பார்த்து ம.தி.மு.க.வும், இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் காத்து இருக்கின்றன. கடந்த 4-ந் தேதி அழைப்பு வரும் என்று எதிர்பார்த்தனர். அன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஜெயலலிதாவை சந்தித்து பேசிதொகுதிகள் ஒதுக்கீட்டை இறுதி செய்தார்.
இதனால் அன்று ம.தி. மு.க.வுக்கும், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் அழைப்பு இல்லை.   இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் நிலை ஏற்பட்டு உள்ளது. காங்கிரஸ் தனித்து போட்டியிடுமா? அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி சேருமா என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது அக்கட்சி தொண்டர்கள் நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி ம.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, “அ.தி.மு.க. எங்களுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்துள்ளது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். தற்போது ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் எங்கள் பேச்சு வார்த்தையை தாமதம் அடையச் செய்துள்ளது” என்றார்.

என்னதான் செய்யப் போகிறது காங்கிரஸ்?

மத்திய அரசிலிருந்து தனது அமைச்சர்களை விலக்கிக் கொள்வது என்றும், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து நிபந்தனை ஆதரவு வழங்குவது என்றும் தி.மு.க. உயர்மட்டக் குழு முடிவெடுத்திருப்பது யாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறதோ இல்லையோ, பெருவாரியான தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலையில் இடியாக இறங்கி இருக்கிறது. தி.மு.க. அல்லது அ.தி.மு.க. அணியில் மாறி மாறி கூட்டணி அமைத்துத் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் ஒரு டஜனுக்கும் அதிகமான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.  தி.மு.க.வின் உயர்மட்டக் குழு இப்படி ஒரு முடிவை எடுக்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு இரண்டு மூன்று நாள்களாகவே இருந்து வந்தது. முதல்வர் கருணாநிதியின் ஆலோசனையோ, ஒப்புதலோ இல்லாமல் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி "குட்டக் குட்டக் குனிய வேண்டிய அவசியமில்லை' என்று தி.மு.க.வுக்கு வேண்டுகோள் விடுக்க மாட்டார் என்று அரசியல் வட்டாரங்களில் உடனடியாகப் பேசத் தொடங்கி விட்டார்கள். இந்த அறிக்கைதான் தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையை மிகவும் எரிச்சலூட்டி மேலும் அழுத்தமாகத் தி.மு.க. தலைமையிடம் தனது கோரிக்கைகளை வலியுறுத்த வைத்தது என்றும் கூறுகிறார்கள்.  தங்களுடன் தொகுதிப் பங்கீடு பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தாமலே பா.ம.க.வுக்கு 31 தொகுதிகளை ஒதுக்கியதும், குலாம் நபி ஆசாத்திடம் அடுத்த நாள் பேச்சுவார்த்தை தொடரும் என்று சொல்லிவிட்டுக் கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 இடங்களைத் தி.மு.க. தலைமை ஒதுக்கியதும் காங்கிரஸைச் சீண்டிப் பார்க்கத் தி.மு.க. மேற்கொண்ட உத்தி என்கிறது காங்கிரஸ் தரப்பு. தி.மு.க. தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை விடுத்த காங்கிரஸின் நியாயமற்ற கோரிக்கை பற்றிய அறிக்கை உண்மைக்குப் புறம்பானது என்கிறார்கள் அவர்கள்.  ""நாங்கள் 90 தொகுதிகள் கேட்டோம். குறைந்தது ஒரு மக்களவைத் தொகுதிக்கு 2 சட்டப்பேரவைத் தொகுதிகள் என்று 78 இடங்களாவது தரப்பட வேண்டும் என்று கேட்டோம். 48லிருந்து 60 இடங்கள் வரை நாங்கள் உயர்த்தினோம் என்கிறார் முதல்வர் கருணாநிதி. நாங்கள் 90லிருந்து 63 வரை குறைத்து வந்திருக்கிறோம் என்பதை ஏன் மறந்துவிடுகிறார்? கடந்த தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்காத தி.மு.க. 5 ஆண்டு காலம் எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் ஒரு "மைனாரிட்டி' அரசாகத் தொடர முடிந்தது என்றால் அதற்கு நாங்கள் பேசாமல் இருந்ததுதான் காரணம். மத்திய அமைச்சரவையில் பதவி சுகத்தை அனுபவித்தது மட்டுமின்றி, "ஸ்பெக்ட்ரம்' போன்ற "மெகா' ஊழல்களால் எங்களையும் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கி இருப்பதை மறுக்கவோ மறக்கவோ முடியுமா? நாங்கள் இல்லாமல் தனித்துப் போட்டியிட முடியும் என்று தி.மு.க.வுக்கு இருக்கும் அதே துணிவும், தைரியமும் எங்களுக்கும் இருக்கிறது'' என்கிறது காங்கிரஸ் தரப்பு.  காங்கிரஸ் தேசிய அளவில் பல பிரச்னைகளை எதிர்நோக்குகிறது. கேரளாவில் இடதுசாரி ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராகப் பல ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துத் தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கு "ஸ்பெக்ட்ரம்' பழியிலிருந்து தப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை மத்தியில் ஆட்சி கவிழ்ந்தால், எதிர்க்கட்சிகள் காங்கிரஸுக்கு எதிராக எடுக்கப் போகும் மிகப்பெரிய ஆயுதம் ஸ்பெக்ட்ரமாகத்தான் இருக்கும். மேலும், உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் மத்தியப் புலனாய்வுத் துறை செயல்படுவதால், தி.மு.க. மீதும், முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் மீதும் எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் காங்கிரஸால் தடுக்க முடியாத நிலைமை. தி.மு.க. மீதான நடவடிக்கைகள், மத்திய ஆட்சியில் அந்தக் கட்சி அங்கம் வகிப்பதால், காங்கிரஸுக்கு மேலும் மேலும் கெட்ட பெயரையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகித் தனித்துப் போட்டியிடுவதன் மூலம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. தமிழகத்திலும் தனியாகப் போட்டியிட்டால், ஒருவேளை எதிர்பாராத விதமாகக் தி.மு.க., அ.தி.மு.க. அணிகளுக்கு அதிர்ச்சிகளை காங்கிரஸ் ஏற்படுத்தக்கூடும் என்பதும் காங்கிரஸின் எதிர்பார்ப்பு. முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சுமார் 6 மாதம் முன்பு ஒரு வார இதழில் வெளிவந்த தனது பேட்டியைப் படிக்கச் சொல்லித் தந்தார்.  அந்தப் பேட்டியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குறிப்பிட்டிருந்தது இதுதான்- ""தமிழகத்தில் ஏறத்தாழ 15 லட்சம் பேர் இளைஞர்கள் காங்கிரஸின் உறுப்பினர்களாகச் சேர்ந்திருக்கிறார்கள். இவர்களில் 5 லட்சம் பேர் போலி உறுப்பினர்கள் என்றே சொன்னாலும், மீதமுள்ள 10 லட்சம் பேர் நிஜமான உறுப்பினர்கள்தானே? பூத் வாரியாகத் தொகுதி வாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவர்கள். அதனால், காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் தோரணம் கட்டக்கூட ஆளிருக்காது, தொண்டர்களே கிடையாது, பூத் ஏஜெண்டுகள் இருக்க மாட்டார்கள் என்றெல்லாம் யாரும் நினைக்க வேண்டாம். அதிகமான இடங்களில் நாங்கள் வெற்றி பெற முடியாவிட்டாலும் 234 தொகுதிகளிலும் வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பது காங்கிரஸுகத்தான் இருக்கும்.''  ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இந்த தைரியம்தான் காங்கிரஸ் தலைமையையும், அதிக இடங்களைக் கேட்கத் தூண்டியிருக்கும் என்று கருத வாய்ப்பிருக்கிறது. ""கடந்த 40 ஆண்டுகளாக, பெருவாரியான தேர்தல்களில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால் காங்கிரஸ் தனது அமைப்புகளை இழந்து விட்டிருக்கிறது. வெற்றி பெற்ற தொகுதிகளை, மீண்டும் மீண்டும் கேட்டுப் பெற்று வந்ததால், பல தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு அமைப்புகளே இல்லாமல் போய்விட்டது. இப்போது இளைஞர் காங்கிரஸ் தேர்தலுக்குப் பிறகுதான் காங்கிரஸ் புத்துயிர் பெற்றிருக்கிறது'' என்று விளக்கினார் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர். தனித்துப் போட்டியிடுவதில் ஒரு மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது என்கிறார்கள், இப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்களில் பலர். 2001-ல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதுபோல, காங்கிரஸும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாமல் போனால், நாமும் தமிழகத்தில் செல்லாக் காசாகி விடுவோம் என்கிறார்கள். திமுக இப்போது உள்ள காங்கிரஸ் தொகுதிகளை உள்ளடக்கிய 60 தொகுதிகள் தருவதே பெரிது. உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தி.மு.க.விடம் சமரசமாகப் பேசி 50 இடங்களுக்கே கூட ஒப்புதல் அளித்திருக்கலாம் என்று வெளிப்படையாகவே குற்றம்சாட்டுகிறார்கள் இந்த தி.மு.க. கூட்டணி ஆதரவாளர்கள். இளைஞர் காங்கிரஸாரின் கருத்து இதற்கு நேரெதிராக இருக்கிறது.  ""தமிழகத்தில் காங்கிரஸுக்குக் குறைந்தது 12% வாக்கு வங்கி உண்டு என்பதும்,234 தொகுதிகளிலும் அது பரவலாக இருக்கிறது என்பதும் மாற்றுக் கட்சிக்காரர்களே ஏற்றுக்கொள்ளும் உண்மை. அதேபோல, கடந்த தேர்தல்களில் விஜயகாந்தின் தே.மு.தி.க.வுக்கு கிடைத்த 10% வாக்குகள் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ஒரு மாற்று தேவை என்று கருதியவர்களின் வாக்குகள் என்பதும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் உண்மை. காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் கடந்த தேர்தலில் தே.மு.தி.க. பெற்ற 10% வாக்குகளிலிருந்து 4% வாக்குகள் காங்கிரஸுக்கு மாறும். காங்கிரஸ் 15% முதல் 18% வாக்குகள் பெறக்கூடும். சுமார் 20 முதல் 30 இடங்களில் வெற்றியும் பெறக்கூடும்'' என்பது இளைஞர் காங்கிரஸார் மட்டுமல்ல, காங்கிரஸ் மேலிடமும் எதிர்பார்க்கும் முடிவு. சுமார் 15% வாக்கு வங்கி காங்கிரஸுக்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தவும், 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கட்சி அமைப்புகளை உறுதிப்படுத்தவும், தி.மு.க., அ.தி.மு.க. ஆதரவுடன் தொடர்ந்து பதவி சுகத்தை மட்டுமே அனுபவித்து வரும் பழம்பெருச்சாளிகளை ஓரங்கட்டவும், காங்கிரஸ் தனித்து நிற்பது உதவும் என்று ஒரு புதிய விளக்கத்தை அளிக்கிறார் தில்லியிலுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்.  இன்னொரு திடுக்கிடும் தகவல் அக்பர் ரோடு காங்கிரஸ் தலைமையகத்தில் கூறப்படுகிறது. கடலோர மற்றும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் என்னென்ன என்று முதலில் கேட்டதும் ஃபேக்ஸ் மூலம் தி.மு.க. தலைமை தொகுதிகளின் பட்டியலைத் தெரிவித்ததாகவும், அதில் 50 தொகுதிகள் நிச்சயமாகத் தோல்வியை அடையும் தொகுதிகள் என்றும் கூறப்படுகிறது. நகர்ப்புறத் தொகுதிகளைக் காங்கிரஸுக்கு அளித்துவிட்டு கிராமப்புறத் தொகுதிகளை தி.மு.க. தேர்ந்தெடுக்க முடிவு செய்திருந்தது என்கிறார்கள். அடுத்த வாரத்தில், மத்திய புலனாய்வுத் துறை மேலும் சில அதிர்ச்சி சோதனைகளை மேற்கொள்ள இருக்கும் நிலையில், காங்கிரஸ் பழிவாங்க முற்பட்டிருக்கிறது என்று கூறி தி.மு.க. அனுதாபம் தேடக்கூடும் என்பதால் கூட்டணியை முறித்துக் கொள்ளக்கூடாது என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.. துணை முதல்வர் மு.க. ஸ்டாலினை "தளபதி' என்று குறிப்பிடும் தி.மு.க. விசுவாசிகளான காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள்.  என்னதான் செய்யப் போகிறது காங்கிரஸ் மேலிடம்!

திமுக அமைச்சர்கள் நாளை பிரதமரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுக்கின்றனர்: டி.ஆர்.பாலு

திமுக அமைச்சர்கள் நாளை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுக்கின்றனர் என, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கூறினார்.

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் தொகுதி பங்கீடு பிரச்சினையால் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக தி.மு.க. அறிவித்தது. மத்திய அரசுக்கு பிரச்சனை அடிப்படையில் இனி ஆதரவு அளிக்கும் என்றும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக அமைச்சர்கள் நாளை பிரதமரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுக்கின்றனர் என்றார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 18 எம்பிக்களைப் பெற்றுள்ள திமுக சார்பில் 6 பேர் மந்திரி சபையில் இடம் பெற்றுள்ளனர்.

கேபினட் மந்திரிகள்
1. மு.க.அழகிரி - ரசாயனம் மற்றும் உரம்
2. தயாநிதி மாறன் - ஜவுளித்துறை
ராஜாங்க மந்திரிகள்
1. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் - நிதித்துறை
2. டி.நெப்போலியன் - சமூக நீதி, அமலாக்கம்.
3. எஸ்.ஜெகத்ரட்சகன் - தகவல் ஒலிபரப்பு
4. காந்தி செல்வன் - சுகாதாரம், குடும்ப நலன்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமரையும் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க முடியும்; பி.சி.சாக்கோ அறிவிப்பு

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக கேரளா காங்கிரஸ் எம்.பி. பி.சி. சாக்கோ நியமிக்கப்பட்டு உள்ளார்.திருச்சூரில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
 
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விசாரணை 1992-ம் ஆண்டில் இருந்தே நடக்கிறது. இந்த கால கட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்கும்.பிரதமர் உள்பட யாருக்கு வேண்டுமானாலும் சம்மன் அனுப்பி விசாரிக்க முடியும்.
 
பிரதமர் மன்மோகன்சிங் அவராகவே முன் வந்து பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பு ஆஜராக தயார் என அறிவித்து உள்ளார். ஆனால் அவரிடம் விசாரணை நடத்த வேண்டுமா? என்பதை பாராளுமன்ற கூட்டுக்குழு கூடி முடிவு செய்யும்.
 
பாராளுமன்ற கூட்டுக் குழுவில் முதல் கூட்டம் இந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போதே நடத்தப் படும். கூட்டுக்குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களின் வசதிப்படி கூட்டம் நடத் தப்படும். அப்போது யார்-யாரிடம் விசாரிப்பது என்று முடிவு செய்வோம்.
 
ஸ்பெக்ட்ரம் விசாரணை பெரும் சவால் நிறைந்ததாக இருக்கும். விசாரணையை விரைவில் முடித்து மழைக்கால கூட்டத் தொடரில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

கம்யூனிஸ்டு கட்சிகள் தி.மு.க. கூட்டணிக்கு வரவேண்டும்: திருமாவளவன் பேட்டி

கம்யூனிஸ்டு கட்சிகள் தி.மு.க. கூட்டணிக்கு வரவேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.   கடந்த 2006 சட்டசபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு, மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டன. அதன் பிறகு இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டன. தற்போது சட்டசபை தேர்தலை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து சந்திக்கின்றன.
இதற்கிடையே மத்திய மந்திரிசபையில் இருந்து தி.மு.க. விலகுவதாக முடிவு செய்திருப்பதால் இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தி.மு.க. கூட்டணிக்கு திரும்பி வரவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
மத்திய மந்திரிசபையில் இருந்து தி.மு.க. விலகி இருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் தி.மு.க.வின் பலம் பல மடங்கு அதிகரிக்கும். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டாலும், வேறு அணியில் சேர்ந்து போட்டியிட்டாலும் அது தி.மு.க. அணியை எந்த விதத்திலும் பலவீனப்படுத்தாது. காங்கிரஸ் இல்லாததால் தி.மு.க.வுக்கு கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.   தி.மு.க. அணியில் காங்கிரஸ் இடம் பெற்றதால் தான் இடதுசாரி கட்சிகள் அ.தி.மு.க. அணிக்கு சென்றன.
இப்போது காங்கிரஸ் இல்லாததால் தி.மு.க. அணிக்கு இடதுசாரி கட்சிகள் வருவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது. எனவே அவர்கள் தி.மு.க. அணிக்கு திரும்பி வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். காங்கிரஸ் இல்லாததால் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்குமா என்பது பற்றியெல்லாம் நாங்கள் சிந்திக்கவில்லை. அதற்கான நேரமும் இதுவல்ல.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

தேடப்படும் குற்றவாளியாக ஹசன் அலி அறிவிப்பு

ரூ.40 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கியுள்ள புனே தொழிலதிபர் ஹசன் அலியை தேடப்படும் குற்றவாளியாக அமலாக்கப் பிரிவு அறிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேயை சேர்ந்தவர் தொழிலதிபர் ஹசன் அலிகான். இவர் வெளிநாட்டு வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும், ரூ.40 ஆயிரம் கோடி வருமான வரி செலுத்த ஹசன் அலிகானுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டது. ஆனால், அவர் வரி செலுத்தவில்லை.

இது தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், ஹசன் அலி ஆஜராகாமல் வெளிநாடு தப்ப வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, ஹசன் அலியை தேடப்படும் குற்றவாளியாக அமலாக்கப் பிரிவு அறிவித்துள்ளது. இந்த தகவல் நாடு முழுவதும் போலீஸ், குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால், ஹசன் அலி வெளிநாடு தப்ப முடியாது என்று அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்தல் நிலைப்பாடு: நாம் தமிழர் கட்சி நாளை அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு குறித்து நாளை அறிவிக்கப்படவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.இதுதொடர்பான அறிவிப்பு, கட்சி தலைமையகத்தில் நாளை மாலை வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

குடும்ப நெருக்கடியை அரசியலாக்க முயற்சி: பண்ருட்டி ராமச்சந்திரன்

2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தனது குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை மறைக்கவே, மத்திய அரசில் இருந்து விலகுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்து, பிரச்னையை அரசியல் நெருக்கடியாக்க முற்பட்டுள்ளார் என்று தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.  மத்திய அரசில் இருந்து, விலகுவதாக தி.மு.க. அறிவித்தது குறித்து அவர் சனிக்கிழமை  கூறியது:  காங்கிரஸ் கட்சிக்கு 60 இடங்கள் வரை கொடுக்க முன்வந்தும், அவர்கள் 63 இடங்கள் கேட்பதாக தி.மு.க. கூறுகிறது. இதனால்தான் மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை தி.மு.க. திரும்பப் பெருவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளது நம்பத்தகுந்ததாக இல்லை. ஏனென்றால் 60-க்கும் 63-க்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை.  உண்மையில் 2-ஜி அலைக்கற்றை ஊழல் பணம் கலைஞர் டி.வி.க்கு வந்துள்ளது, அதனால் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும், மகள் கனிமொழியும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  உச்ச நீதிமன்றத்தின் நேரடிப் பார்வையில் இந்த வழக்கு உள்ளதால் தில்லியில் உள்ள காங்கிரஸ் அரசாலும் அவர்களைக் காப்பாற்றுவது கடினம். ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட பிறகு மத்திய அரசுக்கு தந்த ஆதரவை தி.மு.க. விலக்கிக் கொண்டால் அது ஊழல் தொடர்பானது என்ற காரணத்தால் தி.மு.க.வினரே கூட கருணாநிதியின் நடவடிக்கையை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.  எனவே அதற்குப் பதிலாக இப்போதே சீட்டு பேரத்தை காரணம் காட்டி மத்திய அரசுடன் மோதல் போக்கை மேற்கொண்டுள்ளது தி.மு.க.; மேலும் தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாளை கைது செய்யப்பட்டால், அது அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டதாக திசை திருப்ப வசதியாக இருக்கும்.  தனது குடும்பத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியை மூடி மறைக்க கருணாநிதி சீட்டு பேரத்தைப் பயன்படுத்துகிறார் என்றே நான் கருதுகிறேன்.  இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களையும் குறிப்பாக தி.மு.க.வினரையும் ஏமாற்றும் சூழ்ச்சியைத் தவிர இது வேறு ஏதும் அல்ல' என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

திமுக சிறுபான்மை சமுதாயத்தின் அரண்:நெப்போலியன் பேச்சு

கல்லிடைக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மீலாது விழா, மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் து. நெப்போலியன் "திமுக அரசு சிறுபான்மை மக்களின் அரணாக விளங்குகிறது" என்று கூறினார்.
கல்லிடைக்குறிச்சியில் சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவை சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பாண்டியன் கிராம வங்கியின் மேலாளர் கே.எம். அஷ்ரப் தலைமை வகித்தார். எம். சாகுல்ஹமீது, பேரவையின் துணை பொதுச்செயலர் எஸ்.எம். சாகுல்ஹமீது, எஸ். அப்துல்மஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ. அப்துல்ஹமீது வரவேற்றார்.

விழாவில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் து. நெப்போலியன், 10 ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எஸ். இர்ஷாத்ஹமீது, நஸ்ரின்பானு, கட்டுரை, பேச்சு, குர்ஆன் மனனப்போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: மனிதன் உழைப்பால் வெற்றி பெற முடியும். தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வருகிறார். சிறுபான்மை மக்களின் அரணாக திமுக அரசு விளங்குகிறது. வாழ்வில் நாம் சம்பாதிக்கும் சொத்துக்கள் நம்மோடு வருவதில்லை. நாம் பயின்ற கல்வி மட்டுமே மனித வாழ்க்கையில் உயர்வை தரும் என்றார் அமைச்சர் நெப்போலியன்.

விழாவில் லால்பேட்டை ஜெ.எம்.ஜெ. அரபிக் கல்லூரி பேராசிரியர் ஜெ. ஜாஹீர்உசேன், வேலூர் அரபிக் கல்லூரி பேராசியர் எஸ். முகம்மதுசதக்கத்துல்லா ஆகியோர் சொற்பொழிவு ஆற்றினர். கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி தலைவர் க. இசக்கிபாண்டியன் வாழ்த்தி பேசினார். விழாவில் துணைத் தலைவர் வே. சுப்பிரமணியன், ஜமாத் தலைவர் என். இபுராஹீம், பேரூராட்சி உறுப்பினர் த. ராமகிருஷ்ணன், முன்னாள் உறுப்பினர் வி.கே. அனிபா, எம். பீர்முகம்மது, ஆசிரியர் மு. சாகுல்ஹமீது, வியாபாரிகள் சங்கத் தலைவர் ஸீனத்சாகுல்ஹமீது, பேஷ்இமாம் பி. ஷேக்மன்சூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேரவையின் தலைவர் டி.எம்.ஏ. முகம்மதுரபீக் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். ஏ. அப்துல்ஹமீது வரவேற்றார். அ. முகம்மதுரபீக் நன்றி கூறினார்.

மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்படுமா?

மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியேறுவதால், மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.

லோக்சபாவில் காங்கிரஸ் கட்சிக்கு 207 எம்.பி.,க்களும், திரிணமுல் காங்கிரசுக்கு 19 எம்.பி.,க்களும், தி.மு.க., 18, தேசியவாத காங்கிரஸ் 9, தேசிய மாநாட்டு கட்சி 3, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, ஜே.வி.எம்., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 1 எம்.பி.,க்களும் உள்ளனர். அதாவது 260 எம்.பி.,க்களின் ஆதரவு உள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த 18 எம்.பி.,க்கள் ஆதரவை விலக்கிக் கொண்டால், காங்கிரஸ் கூட்டணியின் பலம் 242 ஆகக் குறையும்.தற்போது லோக்சபா உறுப்பினர்கள் எண்ணிக்கை 543. இதில், தனிப் பெரும்பான்மைக்கு 272 உறுப்பினர்கள் ஆதரவு அவசியம். தி.மு.க., ஆதரவை வாபஸ் பெற்றால் கூட, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதால், அரசுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது.

லோக்சபாவில் சமாஜ்வாடி கட்சிக்கு 22 எம்.பி.,க்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 21 எம்.பி.,க்களும் உள்ளனர். சமாஜ்வாடி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.பி.,யான ஜெயப்பிரதாவும் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறார். இவர்கள் தவிர, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நான்கு பேர், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த மூன்று பேரும் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கின்றனர்.இந்த ஆதரவுகளை எல்லாம் கணக்கில் கொண்டால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 311 எம்.பி.,க்கள் ஆதரவு உள்ளது. அதனால், அரசுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

தி.மு.க., விலகல் காங்., மழுப்பல் : காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து விலகுவதாக தி.மு.க., அறிவித்தது குறித்து கருத்து தெரிவிக்க, காங்., மறுத்துவிட்டது.

காங்., செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, நிருபர்களிடம் கூறியதாவது:காங்., - தி.மு.க., இடையிலான தொகுதி உடன்பாட்டில் சுமுகமான முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கை இன்னமும் எங்களுக்கு உள்ளது. இது போன்ற ஒரு சூழலில், ஐ.மு., கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, தி.மு.க., விலக்கிக் கொள்வதாக அறிவித்தது குறித்து, எதுவும் கூற முடியாது. அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில், அது குழப்பத்தையே ஏற்படுத்தும்.இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார்.

பா.ஜ., கருத்து :"மத்திய அரசிலிருந்து தி.மு.க., விலகியதால் உருவாகியுள்ள சூழ்நிலைகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தொடர்ச்சியாக பல ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கித் தவிக்கும் மன்மோகன்சிங் அரசுக்கு இது மற்றொரு அடியாகும்' என, பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறினார்.

தாமஸ் விவகாரத்தில் பிரதமரை குறை கூறும் வேகம் தணிகிறது: எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா புதிய விளக்கம்

மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக தாமசை நியமித்ததற்கான பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதால், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் வேகம் தணிகிறது. தாமஸ் நியமனம் தொடர்பாக, பிரதமரை மேலும் கேள்விகள் கேட்பதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொண்டு, இதர விஷயங்களில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டார். கேரள மாநிலத்தை சேர்ந்த இவரை, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மூன்று பேர் கமிட்டி நியமித்தது. ஆனால், "தாமஸ் நியமனம் செல்லாது' என, சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தொடர்பாக நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், "தாமசை நியமித்ததற்கான பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன். தாமஸ் நியமனம் செல்லாது என, சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை ஏற்கிறேன். இந்த தவறுக்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவரை இந்த பதவியில் அமர்த்தியதில் கூட்டணி கட்சிகளின் நிர்பந்தம் ஏதும் இல்லை. இது போன்ற தவறு மீண்டும் நடக்காமல் இருப்பது உறுதி செய்யப்படும்' என்றார்.

இதுபற்றி டிவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், "லஞ்ச ஒழிப்பு ஆணையர் நியமனத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் விடுத்த அறிக்கையை நான் ஏற்கிறேன்.இது போதுமானதென்றும் நினைக்கிறேன். இத்துடன் இந்த பிரச்னையை விட்டு, அடுத்த விஷயத்திற்கு செல்ல வேண்டும்' என, தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பா.ஜ.,வை சேர்ந்த ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி மற்றும் கட்சியின் தகவல் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் "லஞ்ச ஒழிப்பு ஆணையர் நியமனத்திற்கு பிரதமர் பொறுப்பேற்றால் மட்டும் போதாது. பார்லிமென்டில் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர். இதனால், சுஷ்மா சுவராஜுக்கும், பா.ஜ., கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின.

இதுபற்றி நேற்று சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: கட்சிக்கும், எனக்கும் இடையே எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. தாமஸ் நியமன விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என, பிரதமர் மன்மோகன் ஏற்கனவே கூறியுள்ளார். அதை கோரிக்கையை தான் ஜெட்லி விடுத்துள்ளார்.அதனால், இந்தப் பிரச்னை தொடர்பாக டிவிட்டர் இணையதளத்தில் நான் பெரியளவில் தெரிவிக்கவில்லை. மேலும், இணையதளத்தில் 140 வார்த்தைகளில் மட்டுமே விஷயங்களை தெரிவிக்க வேண்டும். அதனாலும், விரிவாக எதையும் கூறவில்லை.எனக்கும், ஜெட்லிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளதை போல காட்ட மீடியாக்கள் முற்பட்டுள்ளன. லஞ்ச ஒழிப்பு ஆணையர் விவகாரம் தொடர்பாக பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அதே விஷயத்தை பிரதமர் ஏற்கனவே கூறி விட்டார்.இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

இருந்தாலும், இந்த லஞ்ச ஒழிப்பு ஆணையர் நியமன விவகாரம் இனி பெரியளவில் பேசப்படாது என தெரிகிறது. ஏனெனில், பிரதமர் மன்மோகன் சிங்கே தவறுக்கு பொறுப்பேற்று விட்டதால், அவரை இனிமேல் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பது குறையும். பிரச்னையின் வேகம் தணிந்து கொண்டிருப்பதால், எதிர்க்கட்சி தலைவர்கள் பிற விஷயங்களில் கவனம் செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலக முடிவு செய்தது ஏன்?-கருணாநிதி அறிக்கை

மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலக முடிவு செய்தது ஏன்? என்பது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் அளித்து உள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-  
இந்தியத் திருநாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு மதச்சார்பற்ற தன்மை இவற்றைக் கட்டிக் காக்கும் வகையில் செயல்பட்டு வருகின்ற தி.மு.க., தான் மேற்கொண்டுள்ள இந்தக் கொள்கைகளின் அடிப்படையில் தான் எந்தவொரு கட்சியுடனும் அணி சேர்ந்து பாடுபட்டு பணியாற்றி வருகிறது.
இந்த நிலைப்பாட்டிலிருந்து இம்மியும் மாறாமல்தான் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடனும், மற்ற தோழமைக் கட்சிகளுடனும் நல்லுறவு கொண்டு நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றில் நற்பணியாற்றி வருவதோடு-ஜனநாயக ரீதியில் நடைபெறும் தேர்தல்களில் அணி சேர்ந்து போட்டியிடும் கட்சிகளில் ஒன்றாக தி.மு.க. இயங்கி வருவது நாடறிந்த உண்மையாகும்.   அந்த வகையில், 2011 ஏப்ரல் 13-ந் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் புதுவிதமான சில பிரச்சினைகள் உருவாக்கப்பட காங்கிரஸ் கட்சி காரணமாகியது என்பது தான் தி.மு.கழகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வழிகாட்டியுமான சோனியா காந்தியை ஒவ்வொரு தேர்தலின் போதும் நான் சந்தித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதைப் போல இந்தச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டும், என் உடல் நிலையைக் கூடப் பொருட்படுத்தாமல் டெல்லிக்கே சென்று இரண்டு நாள் தங்கியிருந்து சந்தித்து உரையாடிய போது அவர் விரும்பியவாறு முதலில் தி.மு.க.-காங்கிரஸ் பேச்சுவார்த்தையை நடத்த தீர்மானித்தது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த வருவதற்கு காலதாமதம் ஆகிய நிலையில் தி.மு.க., பா.ம.க., மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியது. மற்ற கட்சிகளுடன் கலந்து பேசி அதுவரையில் இறுதி முடிவாக எத்தனை தொகுதிகள்-எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி தீர்மானிக்காமல் இருந்து அதன் பிறகே சென்னையிலே 20.2.2011 அன்று காங்கிரஸ் கட்சியின் குழுவினரோடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.   காங்கிரஸ் கட்சியின் குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்தவிதமான முடிவும் எய்த பெறாத நிலையில் இறுதி முடிவெடுக்க காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மத்திய அமைச்சருமான குலாம்நபி ஆசாத் சென்னை வந்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். அவர் முன்னிலையிலே நான் இருந்து நடத்திய பேச்சுவார்த்தையின் போது 57 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்வதென ஒப்புதல் கொடுத்தோம். அதுபற்றி டெல்லி சென்று மேலிடத்தைக் கலந்து கொண்டு உடனடியாக அறிவிப்பதாக குலாம் நபி ஆசாத் கூறிவிட்டுச் சென்றார்.
பின்னர் டெல்லியிலிருந்து பேசிய குலாம்நபி ஆசாத் 60 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு தேவை என்றும், அப்போது தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியுமென்றும் அறிவித்ததைத் தொடர்ந்து - கழகத்தின் சார்பில் 60 தொகுதிகள் அளிக்கவும் ஒப்புக் கொண்டு, சென்னைக்கு வந்து கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை நிறைவு செய்யலாம் என்று நான் கேட்டுக் கொண்டேன். ஒப்பந்தத்தில் கையெழுத்திட வருவார்கள் என்று எண்ணியிருந்த நிலையில், அங்கிருந்து தொலைபேசியில் 60 இடங்கள் போதாது, 63 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டுமென்றும்-அந்தத் தொகுதிகளும் அவர்களால் தான் நிர்ணயம் செய்யப்படும் என்றும், எத்தனை இடங்கள் என்று ஒப்பந்தம் செய்யும்போதே, எந்தெந்த தொகுதிகள் என்பதும் குறிப்பிட வேண்டுமென்றும் நிபந்தனைகள் கூறப்பட்டது.  
சட்டமன்றத் தேர்தல் ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தல் ஆனாலும் இதுவரையில் நடைபெற்ற எந்தவொரு தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இப்படியொரு நிலையை நானோ அல்லது தி.மு.க. தலைமையோ சந்தித்ததில்லை. இதைக் காணும்பொழுது, முதலில் கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட 48-ல் தொடங்கி, 51 என்றாகி, 53 என்றாகி, 55 என்றாகி, 57 என்றாகி, இறுதியில் 60 தொகுதிகளுக்கு தி.மு.க. ஒப்புதல் அளித்து-அதன் பிறகு இதுபோன்று நிபந்தனைகள்- 63 தொகுதிகள் வேண்டும் என்பதும்-அந்தத் தொகுதிகளின் பெயர்களை எல்லாம் பரஸ்பரம் இரண்டு கட்சிகளும் கலந்து பேசி முடிவு செய்யாமல், அவர்கள் நிச்சயிப்பதையே ஒதுக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தது, அதிர்ச்சி தரக்கூடியவைகளாக அமைந்திருப்பதைக் கண்டு தான்-இதை நானோ, பேராசிரியரோ மாத்திரம் முடிவெடுத்து அறிவிப்பதாக இருத்தல் ஆகாதென கருதி, கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழுவில் விவாதித்து முடிவெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.  
இந்த தேர்தல் உடன்பாட்டிற்காக தொடக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட முயற்சிகளையும், உருவாக்கப்பட்ட பிரச்சினைகளையும் எண்ணிப் பார்க்கும்போது; இரு கட்சிகளின் முன்னணி செயல்வீரர்களும், தொண்டர்களும் மன வேறுபாடின்றி நேச மனப்பான்மையோடு பணியாற்றும் நிலைக்கு, குந்தகம் ஏற்படுத்தி, தேர்தல் முடிவைப் பாதிப்பதற்கு இதுபோன்ற பிரச்சினைகள், செயல்பாடுகள், இழுத்தடிப்புகள் காரணமாகி விடக்கூடும் என்பதற்காக மட்டுமல்லாமல்- காங்கிரஸ் கட்சியின் இந்தப் போக்கு தேர்தல் உடன்பாட்டை சுமூகமாகச் செய்து கொள்ள வேண்டுமென்பதற்குப் பதிலாக இதையே சாக்காக வைத்து கழகத்தை அணியில் இருந்தே அகன்றுவிடச் செய்வதற்கான காரியமோ என்று ஐயுற வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். எனவே இந்த உயர்நிலை செயல்திட்டக் குழுவில் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நிலைக்கு நாம் உள்ளாகியிருக்கிறோம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.  
2011-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி நடைபெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க.வும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் நடத்திய தேர்தல் பேச்சுவார்த்தையில் உடன்பாடு காண முடியாமைக்கும்-கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 48 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி இந்த முறை 60 இடங்கள் என்று கேட்டு, கழகமும் அதற்கு ஒப்புக் கொண்ட பிறகு-தற்போது 63 இடங்கள் வேண்டுமென்பதும், அந்த இடங்களையும் அவர்களே நிர்ணயிப்பார்கள் என்பதும் வேண்டுமென்றே இந்த அணியில் தொடர அவர்கள் விரும்பவில்லை அல்லது நம்மை அவர்கள் விரும்பவில்லை என்பதையே தெளிவாகக் காட்டுவதாக தி.மு.க. உணருவதால்- இத்தகைய சூழ்நிலையில் மத்தியிலே ஆட்சியிலே தி.மு.க. தொடர வேண்டுமா என்பதை எண்ணிப்பார்த்து-மத்திய அரசிலே ஆட்சிப் பொறுப்பிலே இடம்பெற விரும்பாமல் கழகம் தன்னை விடுவித்துக் கொண்டு, மத்திய அரசுக்கு பிரச்சினையின் அடிப்படையில் மட்டும் ஆதரவு அளிக்கலாம் என்ற முடிவினை எடுக்கலாமென இந்த உயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மானிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சட்டசபை தேர்தல்: தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுமா?-அரசியல் குழப்பம் நீடிக்கிறது

மத்திய மந்திரி சபையில் இருந்து தி.மு.க. விலகிக் கொண்டதை அடுத்து, தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.   தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்டணி குறித்து முக்கிய கட்சிகள் விரைவாக முடிவெடுத்து வருகின்றன.
அ.தி.மு.க. கூட்டணியில் 2 கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளைத் தவிர வேறு சில கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட தே.மு.தி.க. மற்றும் அ.தி.மு.க. இடையே தேர்தல் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த உடன்பாடாக தே.மு.தி.க.க்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்பாடு செய்யப்பட்டது. அதுபோல் விடுதலை சிறுத்தைகளுக்கு 10, கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது.   மத்தியில் கூட்டணி ஆட்சியில் தி.மு.க. இடம் பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதி கொடுக்க வேண்டும் என்பதிலும், எந்தெந்த தொகுதி ஒதுக்குவது என்பதிலும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
ஒரு கட்டத்தில் காங்கிரசுக்கு 60 தொகுதிகள் என்று ஒப்புக் கொள்ளப்பட்டு உடன்பாடு கையெழுத்தாகும் நிலையில், 63 தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்தியதாக தகவல் வெளியானது. இதனால், தி.மு.க. நிலை பற்றி முடிவு செய்வதற்காக தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.   இந்த கூட்டத்தில், மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசின் மந்திரிசபையில் இருந்து தி.மு.க. விலகிக் கொள்வது என்றும் பிரச்சினை அடிப்படையில் வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு அளிப்பது என்றும் அதிரடியாக முடிவு எடுக்கப்பட்டது. எனவே சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் என்ன நிலை எடுக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
காங்கிரஸ் தனித்து போட்டியிடுமா? அல்லது வேறு சில கட்சிகளுடன் சேர்ந்து 3-வது அணி அமைத்து போட்டியிடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரசின் நிலை உறுதி செய்யப்படாத நிலையில், தமிழக அரசியலில் குழப்பம் நீடிக்கிறது.

திமுக முடிவை வரவேற்கிறோம்: திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: திருமா

திமுகவின் முடிவை வரவேற்பதாகவும், வரும் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

மத்திய அரசில் இருந்து திமுக விலகுகிறது என்றும், மத்திய அரசுக்கு பிரச்சனை அடிப்படையில் இனி ஆதரவு அளிக்கும் என்றும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் முடிவடைந்த பிறகு, திமுக தலைவர் கருணாநிதியை, விடுதலைச்

சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவின் முடிவு கூட்டணியை வலுவிழக்கச் செய்யாது. இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. தனிப் பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.