வெள்ளி, 29 அக்டோபர், 2010

பிரிவினைவாதம் ஏற்புடையதல்ல!

காஷ்மீர் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் சையத் அலி ஷா ஜிலானி, எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தில்லியில் இம்மாதம் 21-ம் தேதி காஷ்மீர் குறித்த கருத்தரங்கு நடத்த அனுமதி தந்துவிட்டு, அதில் பேசிய பேச்சுகளைப் பிரசுரிக்கவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் அனுமதித்துவிட்டு அதன் பிறகு பேச்சாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது கேலிக்கூத்தாகத்தான் இருக்கும்.

 காஷ்மீரின் பெரும்பாலான மக்கள் சுதந்திரம் கேட்கிறார்கள், இதைப் பல்லாண்டுகளாகக் கேட்கிறார்கள். எனவே அவர்களுடைய கோரிக்கை நியாயமானது, இதற்காக அவர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும், ஆதரவு தர நான் தயார் என்று பேசியிருக்கிறார் அருந்ததி ராய். பொறுப்பான எழுத்தாளர்களும், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களும் விளம்பரத்துக்காக தேசநலனுக்கு எதிராகப் பேசுவதும், செயல்படுவதும் சுதந்திரம் என்கிற பெயரில் ஏற்றுக்கொள்ளப்படத்தான் வேண்டுமா என்கிற கேள்வி நிச்சயம் எழுகிறது.

 பிரிவினைவாதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் ஆதரவுக்குரல் கொடுப்பதுதான் முற்போக்குச் சிந்தனை என்று பெருமிதப்படுவது தடை செய்யப்பட வேண்டியதும் தண்டனைக்குரியதும் இல்லாவிட்டாலும் தேசவிரோதச் செயல்தான் என்பதை "தினமணி' அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் பதிவு செய்ய விரும்புகிறது. "உரிமை' என்கிற பெயரில் தேசியக் கடமையை மறந்துவிட முடியாது. கூடாது.

 காஷ்மீர் பிரச்னையில் இந்திய அரசு ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களின் உரிமைகளைப் பறித்து அவர்களது குரல்வளையை நெரிக்கிறது என்கிறவாதம் பாதிதான் உண்மை. காஷ்மீர் மக்கள் நிஜமாகவே பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளை ஆதரிப்பவர்களாக இருந்திருந்தால் கடந்த ஜனவரி 2009-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும், தடையையும் மீறி வாக்களிக்கவே வந்திருக்கக்கூடாதே? தேர்தலை அவர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கவில்லை என்பதை உலகமே பார்த்து வியந்ததே?

 அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேய அரசின் ஆதரவுடன் செயல்பட்டுவந்த அத்தனை சமஸ்தானங்களும், இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைந்துகொள்ள அனுமதிக்கப்பட்டன. 1947, ஆகஸ்ட் 4-ம் தேதி அன்றைய கவர்னர் ஜெனரல் மௌண்ட் பேட்டன் பிரபு, பாகிஸ்தானிய அதிபர் முகம்மது அலி ஜின்னா, பலுஜிஸ்தான் அரசர் கலாட் கான் ஆகியோர் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தப்படி ஒரே ஒரு விதிவிலக்காக பலுஜிஸ்தான் மட்டும் 1876-ல் இருந்ததுபோல ஒரு சுதந்திர நாடாக இயங்கும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், 1948 ஜனவரியில் கலாட் கான் கராச்சிக்கு வரவழைக்கப்பட்டு வலுக்கட்டாயமாகப் பாகிஸ்தானுடன் பலுஜிஸ்தானை இணைக்க கையொப்பமிடச் செய்தனர். அன்றுமுதல் இன்றுவரை பலுஜிஸ்தானில் பாகிஸ்தானுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதைப்பற்றி எந்தவொரு பாகிஸ்தான் எழுத்தாளரும், அரசியல்வாதியும் பேசுவதில்லை. பாகிஸ்தானின் உரிமை மீறல்கள் மன்னிக்கப்படுகின்றனவே, ஏன்?

 இந்தியாவுக்கு வருவோம். 1947-ல் வேறு எந்த சமஸ்தானத்துக்கும் இந்தியாவிலோ பாகிஸ்தானிலோ தரப்படாத சிறப்பு அந்தஸ்தைக் காஷ்மீருக்கு அளிக்க நாம் வாக்குறுதி அளித்ததன் பேரில், காஷ்மீர் மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் இணையச் சம்மதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பாகிஸ்தான் காஷ்மீரைத் தன் வசப்படுத்த சற்றும் எதிர்பாராதவிதமாக ராணுவத்தினரை ஊடுருவச் செய்தபோது இந்தியப் படைகள் அவர்களைப் புறமுதுகிட்டு ஓட விரட்டியது. லடாக், புஞ்ச் பகுதிகளிலிருந்து அவர்களை விரட்டியடித்து முஜபராபாத்தை நெருங்கும்போது, ஒரு நல்லெண்ண நடவடிக்கையாகப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பிரச்னையை ஐ.நா. சபைக்கு எடுத்துச்சென்று, போர் நிறுத்தத்தை அறிவித்தார்.

 பண்டித நேருவின் பெருந்தன்மை, அந்த மாமனிதரின் நல்லெண்ணம் இப்போது பாஜகவினரால் விமர்சிக்கப்படும்போது வேதனையாக இருக்கிறது. தனது நல்லெண்ணம் ஒரு தீராப்பழியைத் தேடித்தரும் என்று அந்த ஆசிய ஜோதி நிச்சயம் நினைத்திருக்க மாட்டார். அப்போது மட்டும், பண்டித நேரு ராணுவத்தைத் தடுக்காமல் இருந்திருந்தால் இன்று தீவிரவாதிகளுக்குப் பயிற்சி கொடுத்து ஊடுருவச் செய்ய பாகிஸ்தானுக்குக் காஷ்மீர் பகுதியே இருந்திருக்காது. பண்டித நேரு மட்டும், பாகிஸ்தானிலிருந்து அடித்து விரட்டப்பட்ட சிந்திகளையும், பஞ்சாபிகளையும் காஷ்மீரில் குடியேற்றி இருந்தால் இன்று "காஷ்மீரியாட்' பற்றி யாரும் பேசியே இருக்க முடியாது.

 பண்டித நேரு என்ன இலங்கை அதிபர் ராஜபட்சவா, சிறுநரித்தனமாகச் செயல்பட? கடந்த 63 ஆண்டுகளில் காஷ்மீர் இனத்தின் தனித்தன்மையைக் குலைக்க இந்தியா எப்போதாவது, ஏதாவது முயற்சி செய்திருக்கிறதா? இலங்கையில் தமிழர்கள் எல்லா உரிமையும் மறுக்கப்பட்டு, சொந்தமண்ணில் அகதிகளாக வாழ்வதுபோல ஒரு நிலைமையை இந்தியா காஷ்மீரத்தில் உருவாக்கி இருக்கிறதா? காஷ்மீர் மக்களின் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, செய்யத் தொழில், கல்வி இவையெல்லாம் மறுக்கப்பட்டு இலங்கையில் ஈழத்துக்குப் பொருளாதாரத் தடை விதித்ததுபோல நாம் நடந்து கொண்டதுண்டா?

 பிரிவினைவாதம் என்பது பெருவாரியானவர்களின் கோரிக்கை அல்ல. பஞ்சாபில் "காலிஸ்தான்' கேட்டபோது அதை இன்னொரு காஷ்மீர் என்று வர்ணித்தார்களே, இப்போது பஞ்சாபில் பிரிவினைவாதம் எங்கே போயிற்று? ஒருசில கலகக்காரர்கள் தீவிரவாதத்தில் ஈடுபடும்போது, பெருவாரியான பொதுஜனம் தங்களுக்கு ஏன் வம்பு என்று இருப்பது இயல்பு. நான்கு பேர் வன்முறையில் ஈடுபடும்போது நானூறு பேர் அவர்களுடன் இணைவதும் இயல்பு. இதற்குப் பயந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஓடிவிட முடியாது. அடக்கத்தான் வேண்டும்.

 காஷ்மீரில் தனிநாடு கேட்கிறார்கள் என்று காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கேட்கிறார்கள் என்று அந்த மாநிலங்கள் பிரிந்து போகட்டும் என்று நாம் விட்டுவிட்டால், மகாராஷ்டிரத்தில் பால்தாக்கரேயும், தெலங்கானாவில் சந்திரசேகர ராவும், ஏன், வன்னிய நாடு கோரிக்கையுடன் நமது டாக்டர் ராமதாசும்கூடத்தான் தனிநாடு கேட்பார்கள். எல்லா மாநிலங்களையும் தனி நாடுகளாக்கிவிட்டு நாமும் ஓர் ஆப்பிரிக்கா ஆகிவிடப் போகிறோமா?

 இந்தியாவைப் பொறுத்தவரை, நமது பிரச்னைகள் அனைத்தும் மாநிலப் பிரச்னைகள். ஆனால், இதற்கான தீர்வுகள் தேசியத் தீர்வுகள். 2020-ல் உலக வல்லரசு என்று நாம் காணும் கனவு நனவாக வேண்டுமானால் இந்தியா ஒரு யூனியனாக ஒன்றுபட்டு இருந்தாக வேண்டும். இதில் பிரச்னைகள் இருக்கலாம். தவறுகள் இருக்கலாம். அவை சரிசெய்யப்பட வேண்டுமே தவிர, பிரிவினை அல்ல தீர்வு. மனித உரிமை மீறல் காஷ்மீரில் இல்லையா? இருக்கிறது. அதைவிட அதிகமான மனித உரிமை மீறல் இலங்கையில் தமிழர்கள்மீது தொடுக்கப்படுகிறது. பலுஜிஸ்தானில் கொடூரமான அடக்குமுறையும் மனித உரிமை மீறலும் அரங்கேற்றப்பட்டு வருகிறது. அருந்ததி ராய்கள் அங்கே போய் ஏன் பேசுவதில்லை? காரணம், இங்கே சுதந்திரமும் பேச்சுரிமையும் இருக்கிறது. அதற்காக வாய்க்கு வந்ததைப் பேசி விடுவதா?

 காஷ்மீரைப் பிரச்னையாக்கி இந்தியாவிலிருந்து பிரித்து மேற்கு நாடுகளின் ராணுவத் தளமாக்க வேண்டும் என்கிற முயற்சியின் ஒரு பகுதிதான், பாகிஸ்தானைத் தூண்டிவிட்டு, பிரிவினைவாத சக்திகளுக்கு ஊக்கமளிப்பது. ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறத் துடிக்கும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எந்தவித உதவியும் செய்யத் தயாராக இருக்கிறது. இலங்கையைத் தனது நட்பு வளையத்துக்குள் கொண்டுவந்துவிட்ட சீனாவும் பாகிஸ்தானுக்கு உதவி, காஷ்மீரில் குழப்பம் விளைவிக்கத் தூண்டுகிறது.

 முதல்வர் ஒமர் அப்துல்லாவும், எதிர்க்கட்சித் தலைவி மெகபூபா முஃப்தியும் தங்களைப் பிரிவினைவாதிகளாகக் காட்டிக்கொள்ள முனைகிறார்கள். போதாக்குறைக்கு, தீவிரவாதத் தலைவர்களும் அவர்களை ஆதரித்து விளம்பரம் தேடிக்கொள்ள முயலும் அருந்ததி ராய்களும்... இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏகாதிபத்திய சக்திகளுக்குத் துணைபோகத் துடிக்கிறார்களே என்பதுதான் வேதனையாக இருக்கிறது.

 காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத, பிரிக்கப்படக் கூடாத பகுதி. இதில் எந்தவித சமரசமும் ஏற்புடையதல்ல. சுயவிளம்பரத்துக்காக தேசநலனைக் கைகழுவும் போக்கும்தான்!!

ரயிலில் மும்பைக்கு பயணம் செய்த ராகுல்! !

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி கடந்த‌ 18 ம் தேதியன்று கோரக்பூரில் இருந்து மும்பைக்கு ரயிலில் பயணம் செயதுள்ளார். மேலும் ராகுல் பயணம் குறித்து உ.பி., போலீசுக்கு எவ்வித அறிவிப்பும் கொடுக்கப்படவில்‌லை. பீகாரிலிருந்து கோரக்பூருக்கு சிறப்பு விமானம் மூலம் வந்த ராகுல் அங்கிருந்து கோரக்பூர் -லோக்மான்யா திலக் விரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் மும்பைக்கு பயணம் செய்துள்ளார். மேலும் ரயிலில் ராகுல் பொதுப் பெட்டியில் 36 மணி நேரம் பயணம் செய்துள்ளார். இதன்மூலம் இளைஞர்கள், வேலையில்லாமல் தவிப்போரின் கனவு, ஆசைகள் குறித்து அறிய வாய்ப்பு கிடைக்கும் என்பதே ராகுலின் குறிக்கோளாகும். அக்டோபர் 20ம் தேதியன்று ராகுல்மும்பையை சென்றடைந்துள்ளார்.

இந்தியா வர சீன பிரதமர் வென்ஜி விருப்பம் ; வியட்னாமில் இருநாட்டு பிரதமர்கள் முக்கிய சந்திப்பு!

ஹனாய்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த நிலையில் சீன பிரதமர் வரும் டிசம்பர் மாதம் இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவல் செயலர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.

ஜப்பான், மலேசிய பயணம் முடித்து இந்திய பிரதமர் ஆசியான் மாநாடு நடக்கும் வியட்னாம் சென்றடைந்தார். அங்கு சீன பிரதமர் வென்ஜியாபோவை சந்தித்து பேசினார். பிரதமருடன் வர்த்தக அமைச்சர் ஆனந்த்சர்மா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவகங்கரமேனன், செயலர் லதா ரெட்டி ஆகியோரும் உடன் இருந்தனர்.

ஆளுநர் பதவியிலிருந்து பர்னாலாவை நீக்க வலியுறுத்தல்!

தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என சிரோன்மணி அகாலிதளம் கோரியுள்ளது.

அக் கட்சியின் மாநிலச் செயலாளர் தல்ஜித் சிங் சீமா கூறுகையில், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் குறித்து பர்னாலா தனது பதவிக்கு பொருத்தமில்லாத வகையில் கருத்து கூறியுள்ளார்.

தனது ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி தனது குடும்பத்தினர் பஞ்சாப் மாநில அரசியலில் செல்வாக்கு பெறும் வகையில் செயல்பட்டு வருகிறார். எனவே, அவரை ஆளுநர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றார்.

பர்னாலா முன்பு சிரோன்மணி அகாலி தளத்தில் இருந்தவர் என்பதும், இப்போது அவரது மனைவி தனிக் கட்சி நடத்தி வருவதும், அவரது மகன் ககன்ஜித் சிரோன்மணி அகாலி தளம் கட்சியிலிருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சோராபுதீன் மனைவியை கற்பழித்து ஏடிஎஸ் அலுவலகத்தில் வைத்துக் கொன்றனர்-சோரபுதீன் சகோதரர் வக்கீல் தகவல்!

Kausarbi and Sorabudeenசோராபுதீனை போலி என்கவுன்டர் மூலம் கொலை செய்த குஜராத் மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார், அவரது மனைவி கெளசர் பீயை கொடூரமாக கற்பழித்து பின்னர் குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்துக் கொலை செய்ததாக சோராபுதீனின் சகோதரர் ருபாபுதீனின் வக்கீல் முகுல் சின்ஹா குஜராத் உயர்நீதி்மன்றத்தில் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சோராபுதீன், கெளசர் பீ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அமீத் ஷா ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஆர்.எச்.சுக்லா முன்பு ஆஜராகி முகுல் சின்ஹா பல முக்கியத் தகவல்களைத் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், சோராபுதீனின் மனைவி கெளசர் பீ ஒரு பண்ணை வீட்டில் வைத்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்டதில் உண்மை இல்லை. மாறாக அவரை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்துதான் கொன்றுள்ளனர். அதுவும் அமீத் ஷாவுக்கு தெரிவித்த பிறகே கொன்றுள்ளனர்.

கெளசர் பீ குறித்து அனைத்து புலனாய்வு அமைப்புகளும் அவர் காணவில்லை என்றும் மர்மமான சூழ்நிலையில் அவர் மாயமாகி விட்டார் என்றும்தான் கூறியிருந்தன.

ஆனால் உண்மையில் கெளசர் பீயை ஏடிஎஸ் அலுவலகத்தில் வைத்துதான் கொன்றுள்ளனர்.

2005ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி சோராபுதீனும், அவரது மனைவியும் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் ஆந்திராவில் வைத்து பிடிக்கப்பட்டு ஹைதராபாத்-சங்க்லி இடையிலான பஸ்சில் ஏற்றிக் கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் அவர்களை அகமதாபாத் கொண்டு வந்தனர். காந்தி நகர் புறநகர்ப் பகுதியில் உள்ள திஷா பண்ணை இல்லத்தில் அடைத்து வைத்தனர்.

சோராபுதீனை முதலில் கொன்றனர்

பின்னர் நவம்பர் 26ம் தேதி அதிகாலையில், சோராபுதீனை மட்டும் தனியாக அழைத்துச் சென்று பண்ணை இல்லத்திற்கு வெளியே கொண்டு சென்று சுட்டுக் கொன்றனர். நரோல் என்ற இடத்தில் இந்த போலி என்கவுன்டர் நடந்துள்ளது.

அன்றைய தினம் காலை 10 மணிக்கு கெளசர் பீயை அர்ஹாம் என்ற இடத்திற்கு அருகில் உள்ள பண்ணை இடத்தில் அடைத்து வைத்தனர். அதன் உரிமையாளர் ராஜேந்திர ஜிரவாலா என்பவர் ஆவார். அங்கு சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணா செளபே என்பவரின் காவலில் மூன்று நாட்கள் வைத்திருந்தனர்.

சித்திரவதை செய்யப்பட்ட கெளசர் பீ

அங்கு வைத்து அவரை பல்வேறு வகைகளில் சித்திரவதை செய்துள்ளனர். நவம்பர் 29ம் தேதி காலை கெளசர் பீயை செளபே ஏடிஎஸ் தலைமை அலுவலகத்திற்குக் கொண்டு வந்து ஏடிஎஸ் தலைவர் வன்சாரா முன்பு ஆஜர்படுத்தினார்.

அப்போது கெளசர் பீயை தீர்த்துக் கட்டம் எண்ணம் போலீஸாரிடம் இல்லை. அவரை மத்தியப் பிரதேசத்தில் உள்ள அவரது கிராமத்திற்கு அனுப்பி விடவே திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர் போக மறுத்து விட்டார். அப்போதுதான் வன்சாரா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கெளசர் பீயை வெளியே விட்டால் ஆபத்து என்று புரிந்திருக்கிறது. இதையடுத்து அவரையும் கொல்லத் திட்டமிட்டுள்ளனர்.

மயக்க மருந்து செலுத்தி கொல்லப்பட்ட கெளசர் பீ

அதன்படி மாலை 4.30 மணிக்கு டிஎஸ்பி நரேந்திர அமீன் (இவர் ஒரு டாக்டர்) ஏடிஎஸ் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். வன்சாராவின் உத்தரவின் பேரில், கெளசர் பீக்கு, பென்டோதால் என்ற மருந்தை அதிக அளவில் ஊசி மூலம் செலுத்தினார் அமீன். இதனால் மாலை 5 மணியளவில் உயிரிழந்தார் கெளசர் பீ.

இந்த இடைப்பட்ட நேரத்திற்குள் கிட்டத்தட்ட 15 முறை அமீத் ஷாவிடமிருந்து அமீனுக்குப் போன் வந்துள்ளது. ஒரு ஜூனியர் அமைச்சரான ஷா, எதற்காக டிஎஸ்பிக்கு இத்தனை முறை போன் செய்ய வேண்டும்.

அப்போது குறுக்கிட்ட அமீத் ஷாவின் வக்கீல் - இந்த நேரத்தில் காந்தி நகரில் ஒரு நான்கு வயது சிறுவன் மர்மமான காணாமல் போய் விட்டான். அது குறித்து விசாரிக்கவே அமீனைத் தொடர்பு கொண்டார் ஷா என்றார்.

சின்ஹா தொடர்ந்து வாதிடுகையில், கெளசர் பீ இறந்து விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டதும், அவரது உடலை எரிக்க ஏற்பாடுகளைச் செய்யுமாறு இன்ஸ்பெக்டர் வி.ஏ. ரத்தோட் என்பவரை கேட்டுக் கொண்டார் வன்ஸாரா. ரத்தோடும் மோத்திரா கிராமத்திலிருந்து விறகுகளை வாங்கினார். அதை போலீஸ் வேனில் நாத்துபாய் என்ற போலீஸ்காரர் கொண்டு வந்தார்.

அவரும், இன்ஸ்பெக்டரும், சபர்கந்தா மாவட்டம் பிரான்டிஜ் கிராஸ் சாலைக்கு வந்து சேர்ந்தனர். அங்கு அமீன், செளபே ஆகியோர் ஒரு நீல நிற ஜீப்பில் கெளசர் பீயின் உடலைக் கொண்டு வந்தனர். இன்னொரு வாகனத்தில் வன்ஸாராவும், ஐபிஎஸ் அதிகாரியான ராஜ்குமார் பாண்டியன் அங்கு வந்து சேர்ந்தனர்.

வன்ஸாராவின் ஊரில் வைத்து உடல் எரிப்பு

மூன்று போலீஸ் வாகனங்களும் அங்கிருந்து 50 கிலோமீட்டர் தொலைவுக்குச் சென்றுள்ளன. பின்னர் வன்ஸாராவின் சொந்த ஊரான இல்லாலுக்கு வந்து சேர்ந்தனர். அஹ்கு வைத்து ஒரு ஆற்றங்கரையில் கெளசர் பீயின் உடலை எரித்தனர். இந்த நிகழ்ச்சி நவம்பர் 29-30க்கு இடைப்பட்ட நள்ளிரவில் நடந்துள்ளது.

கெளசர் பீயைக் கற்பழித்த சப் இன்ஸ்பெக்டர்

இதற்கிடையே கெளசர் பீயை ஏடிஎஸ் காவலில் வைத்து ஒரு சப் இன்ஸ்பெக்டர் கற்பழித்த சம்பவம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது தீவிரவாதத் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் இதுகுறித்து சிபிஐ விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

சோரபாபுதீன் போலி என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்ட நாளில் ஏடிஎஸ் அலுவலகத்தி்ல் பணியில் இருந்தவரான சப் இன்ஸ்பெக்டர் செளபேதான் இந்த அக்கிரமத்தைச் செய்துள்ளார்.

இதுகுறித்து ரவீந்திர மக்வானா என்ற உதவி சப் இன்ஸ்பெக்டர் (தற்போது ரயில்வே போலீஸில் உள்ளார்) சிபிஐயிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது...

அப்போது செளபே சப் இன்ஸ்பெக்டராக இருந்தார். அவரது பொறுப்பில்தான் 3 நாட்கள் வைக்கப்பட்டிருந்தார் கெளசர் பீ. அதைப் பயன்படுத்தி மூன்று நாட்களும் கெளசர் பீயைக் கற்பழித்து பல்வேறு வகைகளில் கொடுமைப்படுத்தினார் செளபே

சோராபுதீன் பிடிபட்டதற்குப் பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்று போலீஸ் அதிகாரிகளான அஜய் பர்மார், சாந்தாராம் சர்மா ஆகியோரிடம் கேட்டேன்.

அப்போது பர்மார் கூறுகையில், நான், ராஜ்குமார் பாண்டியன், தாபி, செளபே, செளகான் ஆகியோர் ஹைதராபாத் சென்று சோராபுதீனையும், கெளசர் பீயையும் பிடித்து சங்க்லி செல்லும் பஸ்சில் கூட்டி வந்ததாகவும், பின்னர் அகமதாபாத் கொண்டு சென்றதாகவும், அர்ஹாம் பண்ணை இல்லத்திற்குக் கூட்டிச் சென்றதாகவும் கூறினார்.

அங்கு வைத்து சோராபுதீனை வன்ஸாராவும், பாண்டியனும் விசாரித்ததாகவும் கூறினார் பர்மார்.

அப்போது பர்மாரிடம் நான், செளபே, கெளசர் பீயை கற்பழித்த விவரத்தைத் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார் மக்வானா.

தற்போது மக்வானாவின் வாக்குமூலத்தை கூடுதல் குற்றப்பத்திரிக்கையாக சிபிஐ சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.

கெளசர் பீ கொல்லப்படுவதற்கு முன்பு கற்பழிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன் மெட்ரோ ரயில் நிலையங்களை தகர்க்க அல் கொய்தாவுக்கு திட்டம் தீட்டிக் கொடுத்த பாக். அமெரிக்கர்!

வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் மெட்ரோ ரயில் நிலையங்களைத் தகர்க்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதற்காக அல் கொய்தாவுக்கு திட்டம் தீட்டிக் கொடுத்த நபரை எப்.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களை அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்கலாம் என்று உளவுத் துறை அன்மையில் எச்சரித்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் பிறந்து வெர்ஜீனியாவில் வாழும் அமெரிக்கரான பரூக் அகமது (34) என்பவரை மெட்ரோ ரயில் நிலையங்களைத் தகர்க்க திட்டம் தீட்டியதற்காக எப்பிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

அகமது மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவரது நடவடிக்கைகள் வினோதமாக இருந்ததையடுத்து பிடித்து விசாரித்ததில் மெட்ரோ ரயில் நிலையங்களைத் தகர்க்கும் சதி தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு சதி திட்டம் தீட்டியது உள்பட அவர் மீது 3 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அகமதை அலெக்சாண்டிரியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின் நீதிபதி ஒப்புதல் பெற்று அவரை முறைப்படி கைது செய்தனர். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபனமானால், அகமதுவுக்கு அதிகபட்சமாக 50 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்.

பரூக் அகமது கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் 25-ம் தேதி வரை வாஷிங்டனில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களை கண்காணித்து தகவல் சேகரித்து வந்தார். ஆர்லிங்டன், சிமெட்ரி, கோர்ட்ஹவுஸ், கிறிஸ்டல் சிட்டி, பென்டகன் சிட்டி ஆகிய முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தார்.

அவற்றை வைத்து வரைபடம் தயாரித்து, எந்தெந்த இடத்தில் குண்டு வைக்கலாம் என்று தீவிரவாதிகளுக்கு ஆலோசனையும் கூறியுள்ளார். ஏராளமான பயணிகளைக் கொள்ள வேண்டும் என்றால் மாலை 4 மணி முதல் 5 மணிக்கு குண்டு வெடிக்கும்படி செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

நிதானமாகச் செயல்பட்டு அடுத்த ஆண்டு இந்த திட்டத்தை நிறைவேற்றி ஏராளமான பொது மக்களைக் கொள்வது தான் இவர்களின் திட்டம். ஆனால் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் உறுதிப்படுத்தினார்.

சட்டசபை தேர்தலில் எத்தனை சக்திகள் ஒன்று திரண்டு வந்தாலும் தி.மு.க.வை வீழ்த்த முடியாது: கருணாநிதி பேச்சு!

சட்டசபை தேர்தலில் எத்தனை சக்திகள் ஒன்று திரண்டு வந்தாலும் தி.மு.க.வை வீழ்த்த முடியாது: கருணாநிதி பேச்சு
தமிழக சட்டமன்ற தேர்தலையட்டி மாவட்ட வாரியாக தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்று வருகிறது.

தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு முதல்- அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், துணை முதல்- அமைச்சரும், பொருளாளருமான மு.க. ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, எஸ்.பி.சற்குண பாண்டியன் மற்றும் அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், பெ.வீ. கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

கூட்டத்தில் மத்திய மந்திரி தயாநிதிமாறன், கவிஞர் கனிமொழி எம்.பி., வசந்தி ஸ்டான்லி எம்.பி., தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், முன்னாள் அமைச் சர் புலவர் இந்திரகுமாரி, பகுதிக்கழக செயலாளர் கே.கே.நகர் தனசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் முதல்- அமைச்சர் கருணாநிதி பேசினார். அப் போது அவர் கூறியதாவது:-

இங்கே பேசிய சில செயல் வீரர்கள், நிர்வாகிகள்- இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், இலவச எரிவாயு அடுப்பு- இதைப்போன்ற திட்டங்களைப் பற்றிப் பேசி, அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிலே சில குறைகள், அவற்றை எப்படித் தீர்க்க வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள்.

எனக்கு ஒரேயரு வருத்தம் - என்றைக்குத் தலைமைக் கழகத்தின் சார்பில் கூட்டம் போடுவார்களோ என்று எண்ணிக் கொண்டு வந்து, அப்படிக் கூட்டம் நடக்கின்ற நேரத்திலேதான், இதைப்பற்றியெல்லாம் 100 பேருக்கு மத்தியிலே சொல்ல வேண்டும் என்று இல்லாமல்; எந்தெந்த வட்டத்தில் எவ்வப்போதெல்லாம் பிரச்சினை ஏற்படுகிறதோ, அந்தப் பிரச்சினையை அப்படியே உடனடியாக மேலிடத்திலே உள்ளவர்களிடம் சொல்லி, கலந்து பேசி, முறைப்படி அதற்கான நிவாரணத்தைக் கண்டிருக்க வேண்டும்.
ரேஷன் கார்டுகள் சில ரத்து செய்யப்பட்டு விட்டன என்றால், உடனடியாக உணவு அமைச்சரிடமோ அல்லது சட்டப் பேரவை உறுப்பினரிடமோ அல்லது உரிய அதிகாரிகளிடமோ எடுத்துச்சொல்லி, அந்தப் பிரச்சினைக்கு முடிவு கண்டிருக்கலாம்.

இந்தக் கூட்டம் எப்படி வாக்குகளைப் பெறுவது என்பதற்கு மாத்திரம் கூட்டப்பட்ட கூட்ட அல்ல; நம்முடைய கட்சியை கடந்த காலத்திலே எப்படி வளர்த்தோம்; இப்போது எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் கூட்டப்பட்ட கூட்டம் என்பதையும் மறந்து விடக்கூடாது. வாக்குகள் மட்டும் முக்கியமல்ல; தேர்தல்களில் வெற்றிகள் மாத்திரம் நம்முடைய குறிக்கோள்கள் அல்ல. இதை நான் பலமுறை பல நிகழ்ச்சிகளில் எடுத்துக் காட்டியிருக்கின்றேன்.

தேர்தலுக்காக மாத்திரம் இங்கே கூடிப் பேசுகிறோம் என்று எண்ணினால்; நம்முடைய கழகத்தின் கொள்கைகளை, லட்சியங்களை நாம் மறந்து விட்டோம் என்றுதான் பொருள். இதற்கிடையிலே நம்முடைய மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி அன்பழகன் குறிப்பிட்டதைப்போல, இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற எல்லாவிதமான சவால்களையும் சமாளிக்கக்கூடிய திறன் கழகத்திற்கு இருக்கிறது என்று அவர் சொல்வதைப்போல; நானும் சொல்ல விரும்புகின்றேன்.

நிச்சயமாக இந்தத் தேர்தலில் எத்தனை சக்திகள் ஒன்று திரண்டு வந்தாலும், எத்தனை பேர் அணிவகுத்து நின்றாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தை அவர்களால் வீழ்த்த முடியாது என்பதில் நானும் அசைக்க முடியாத நம்பிக்கையோடுதான் இருக்கின்றேன்.

ஆனால், என்னுடைய இந்த வார்த்தைகளை மீறி, பேராசிரியர் சொல்லியிருக்கின்ற அந்த உறுதியையும் மீறி- உங்களுடைய வாய்மொழி உறுதிமொழிகளையும் மீறி- ஏதோ ஒரு காரணத்தால் அத்தகைய ஒரு சறுக்கல் ஏற்படுமானால்; கடந்த காலத்திலே தமிழ் மக்களுக்காக, திராவிட மக்களுக் காக நாம் ஆற்றிய - ஆற்றிக் கொண்டு வருகின்ற- அவர்களுக்காகப் புரிந்த சாதனைகள் இவைகளெல்லாம் வீண்தானா? என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டு, அதற்காக வருந்த நேரிடும்.

அப்படிப்பட்ட வருத்தம் கூட, நம்முடைய எதிர்கால சமுதாயத்திற்கு நல்லதல்ல; நாம் இவ்வளவு செய்தும் மக் கள் அவற்றைப் புரிந்து கொள்ளவில்லையே என்று எண்ணினால்; அந்த மக்களுக்குத் தொடர்ந்து நாம் ஆற்ற வேண்டிய காரியங்களை ஆற்றாமல் இருந்து விடுவோமா? என்னுடைய ஆசையெல்லாம் மக்களுக்குத் தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என்பதுதான்; அவர்களுக்குத் தேவையான காரியங்களை ஆற்ற வேண்டும் என்பதுதான்.

அதற்கிடையிலே என்ன தொய்வு ஏற்பட்டாலும், அந்தத் தொய்வைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்காக நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும். அந்த ஒரு லட்சியத்திற் காக தன்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு திராவிட முன்னேற்றக் கழகத் தோழனும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய உடன்பிறப்பும் என்னுடைய மதிப்பிற்குரியவர்கள், மரியாதைக்குரியவர்கள் என்பதை நான் இங்கே உறுதிபட தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

அந்த வகையிலே நீங்கள் பணியாற்ற வேண்டும் - எப்படிப் பணியாற்றப் போகிறீர் கள்? எப்படிக் குரல் கொடுத்திருக்கிறீர்கள்? எந்த வகையிலே உங்களுடைய பணி நிறைவடையப் போகிறது? என்பதை அறிந்து கொள்ளவும், அதற்கு யோசனைகளைச் சொல்லவும்தான் இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தை நாம் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு, நான் சென்னையிலுள்ள சில முக்கியமானவர்களைக் கலந்தாலோசித்து; யார் யார் கட்சிக்கு அப்பாற்பட்டு தகவல்கள் தருகிறார் களோ, அறிவுரை கூறக்கூடியவர்களோ; யார் யார் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களிடத்திலே கலந்தாலோசித்த போது, எனக்குக் கிடைத்துள்ள சில உண்மைகளை இங்கே சொல்லாமல் இருக்க முடியாது.

என்னதான் நீங்கள் இங்கே உறுதி எடுத்துக் கொண்டாலும், சபதம் மேற்கொண்டாலும்; நாங்கள் வெற்றி பெற்றே தீருவோம்Ó என்று சொன்னாலும்; உங்களிடத்திலே உள்ள ஒற்றுமை கெட்டிப்படவில்லை என்றால், அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற முடியாது என்பதை நான் இங்கே சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.

தி.மு.க. வரலாற்றில் எத்தனையோ மேடு பள்ளங்களையெல்லாம் நாம் சந்தித்திருக் கின்றோம் & எத்தனையோ வீழ்ச்சிகள் தி.மு.கழக வரலாற்றில். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது; நான் ஒருவன்தான் தேர்தலிலே வெற்றி பெற முடிந்தது. மற்ற அனைத்து இடங்களிலும் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் நம்முடைய வேட்பாளர்கள், தி.மு.க. தலைமையிலேயிருந்த கூட்டணி வேட்பாளர்கள் தோற்றுப் போன நிலை இருந்தது.

அதை மறந்து விடக்கூடாது. அந்த வீழ்ச்சிக்குப் பிறகு இந்தக் கழகம் உருப்படுமா? இந்தக் கழகம் மீண்டும் எழுமா? எழுந்து மக்கள் பணி ஆற்றுமா? திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயர் நிலைத்திருக்குமா? என்றெல்லாம் உலக அளவிலே கேள்வி எழுந்த நேரத்தில்; இன்றைக்கு உலகமே வியக்கத்தக்க அளவில் நாம் உயர்ந்து நிற்கிறோம் என்றால், அதற்கு ஒருவர் இருவருடைய உழைப்பு அல்ல; இங்கே வீற்றிருக்கின்ற நீங்களும், உங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கான உடன்பிறப்புக்களும் தந்த அயராத உழைப்புதான் இதற்கெல்லாம் காரணம் என்பதை நான் மறந்து விடவில்லை. அப்படிப்பட்ட உழைப்பை நீங்கள் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறீர்கள்.

ஒரு சில இடங்களிலே ஒற்றுமையின்மை இருப்பதற்கு என்ன காரணம் என்பதை நான் விசாரித்த வரையிலே அறிந்திருப்பது; இந்தக் குழு மனப்பான்மைதான். எந்த வட்டத்திலாவது இரண்டு குழுக்கள் இருக்குமானால்; அந்தக் குழுக்கள் எல்லாம் இந்தக் கழகத்தினுடைய முன்னேற்றத்தை அழிக்கின்ற புழுக்கள் என்பதை நீங்கள் உணர்ந்தாக வேண்டும். அந்தக் குழுக்களை- குழு மனப்பான்மையை நீங்கள் அகற்றினால்தான்; இந்தக் கழகத்தினுடைய ஒற்றுமையை நிலை நாட்டினால்தான்;, எதிர் காலத்திலே- தேர்தல்களிலே மாத்திரமல்ல; கழகம் ஒரு கொள்கைக் கூடாரம்; லட்சியக் கூடாரம் என்பதை எடுத்துக் காட்டுவதற்கும் நம்மால் முடியும் என்பதை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

குழுக்கள் என்பதை மறந்துவிட்டு, குழு மனப்பான்மையை ஒதுக்கி வைத்துவிட்டு, எல்லோரும் ஒன்றுதான், எல்லோரும் தி.மு.க&தான், எல்லோரும் அண்ணாவின் தம்பிகள்தான், எல்லோரும் இந்தக் கூடாரத்திலே உள்ளவர்கள்தான் என்ற அந்த உணர்வோடு நீங்கள் அனைவரும் செயல்பட்டால்தான், ஜெயலலிதா அல்ல; ஜெயலலிதாவோடு 100 பேர் அணி திரண்டு வந்தாலும், தி.மு.கழகத்தை யாராலும் வெற்றி பெறமுடியாது; யாராலும் வீழ்த்த முடியாது ஆகவே, அந்தக் குழுக்கள் என்பதைக் கைவிடுங்கள்; அதை மறந்துவிடுங்கள். இந்த இயக் கத்தில் குழுக்களே இல்லை- கோஷ்டிகளே கிடையாது என்ற நிலைதான் உயர்ந்த நிலை என்பதை உணர வேண்டும்.

அநேகமாக கோஷ்டிகள் இல்லாத கட்சிகள் தமிழ்நாட்டில் கிடையாது. நாம் மாத்திரம் ஏன் அப்படி இருக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். நாம் கோஷ்டிகள் இல்லாத காரணத்தினால்தான், இன்றைக்குக் கூட்டணியினுடைய பிரதான கட்சியாக இருக்க முடிகிறது; இன்றைக்கு ஆளுங்கட்சியாக விளங்க முடிகிறது. ஆகவே, கோஷ்டிகள் இல்லாத நிலையை தொடர்ந்து நிலைநாட்ட வேண்டுமென்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த காலத்தில் அண்ணாவிற்குப் பிறகு நான் அப்போது முதல்&அமைச்சராக இருந்தேன். அப்போது மாநகராட்சி மன்றத்தைப் பற்றிய புகார்கள் எழுந்து, ஒரு பெரிய ஊழல் புகார்- அதற்காக ஒரு கமிட்டியே போடப்பட்டது. சட்டசபையிலே ஹண்டே பேசுகிறார்; அவர் ஊழல்களை அடுக் கடுக்காகச் சொன்னபோது, முதல்- அமைச்சராக உட்கார்ந்திருந்த நான் எழுந்து & ஐயா! நிறுத்துங்கள்; நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான்; நான் மறுக்கவில்லை; சென்னை மாநகராட்சி மன்றத்தில் இத்தகைய ஊழல் நடைபெற்றதாக அடுக்கத் தேவையில்லை. ஊழல் நடைபெற்றதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

ஆகவே, இதற்கெல்லாம் யார் காரணம் என்பதை அறிய இப்போதே விசாரணை செய்வதற்கு உத்தரவிடப் போகிறேன்; அந்த விசாரணைக் கமிஷனுக்கு உத்தரவிடுவதை முன்னிட்டு மாநகராட்சி மன்றத்தை இதே நிமிடத்திலே கலைக்கிறேன் என்று சொல்லி கலைத்த வரலாறு எல்லாம் உங்களுக்குத் தெரியும். அப்படிக் கலைக்கப்பட்ட மாநகராட்சி மன்றத்திலே இருந்தவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்ல; ஜாம்பவான் கள். சென்னை மாநகராட்சி மன்றத்தை ஒருவிரலால் ஆட்டி வைக்கக்கூடிய அளவிற்கு செல்வாக்கு பெற்றவர்கள்.

நிர்வாகத்தில் புலிகளாக, சிங்கங்களாக இருந்தவர்கள்- அவர்களை விட்டால் சென்னை மாநகராட்சி மன்றத்தை நிர்வகிக்க ஆள் இல்லை என்று சொல்கின்ற அளவிற்கு இருந்தவர்கள். இன்னும் சொல்லப்போனால், அவர்கள் எல்லாம் இருந்தாலும்கூட, என்னுடைய ஆருயிர் நண்பராக இருந்த மைனர் மோசஸ் போன்றவர்கள்- அவர்களையெல்லாம் ஒரே நாளில்- மாநகராட்சி மன்றத்தைக் கலைத்ததன் மூலமாக வீட்டிற்கு அனுப்பி- அதன்மூலமாக எனக்கல்ல; கட்சிக்கு நான் சம்பாதித்துக் கொடுத்த அந்த மதிப்பு, மரியாதைதான் அடுத்த தேர்தலிலே தி.மு.க. வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்தது.

இந்தப் பழைய வரலாற்றை- வரலாறு தரும் பாடத்தை உணர்ந்து கொண்டால், கட்சிக்கு, கழகத்திற்கு - வருகிற சட்டமன்றத் தேர்தலிலே வெற்றி நிச்சயம். மாநகராட்சி மன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன்; கழக உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன்; வட்டச் செயலாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்- பகுதிச் செயலாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்; மாவட்டச் செயலாளரைக் கேட்டுக் கொள்கிறேன்- என்னவென்றால், சென்னையிலே நடைபெறுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டங்கள் என்று இல்லாமல், கழகம் சார்ந்த நிகழ்ச்சிகள் எதுவானாலும், அந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத்தினுடைய நிர்வாகிகள் அனைவரும் செல்லவேண்டும்.

எத்தனையோ நிகழ்ச்சிகள் - நானே கலந்து கொள்கின்ற கழக சார்புடைய அல்லது கழகச் சார்பில்லாத- கழகத் தோழர்கள் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சிகள்- அந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் யார் யார் வருகிறார்கள் என்று பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரு மாவட்டச் செயலாளர் என்றால், அடிக்கடி தலைமைக் கழகத்திற்கு வரவும், தலைவரோடு கலந்து பேசவும் தனது வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நீல நாராயணன் உள்ளிட்ட மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர்கள் பணியாற்றியபோதும் சரி, எப்போதும் அவர்கள் தலைமைக் கழகத்திற்கு வருவார்கள்; எங்களோடு பேசுவார்கள்.

எங்களோடு கலந்து செயலாற்றுவார்கள். தலைமைக் கழகத்தோடு நாள்தோறும் தொடர்பு கொண்டு, தலைமைக் கழகத்திலே இருக்கிற எங்களோடு & நான் இல்லாவிட்டால் பேராசிரியர்- பேராசிரியர் இல்லாவிட்டால் மற்றவர்கள் அல்லது துணை முதல்- அமைச்சர் அல்லது துணைப் பொதுச் செயலாளர்- இவர்களோடு எல்லாம் தொடர்பு கொண்டு கழகப் பணிகளை ஆற்றிட வேண்டுமென்று கழக நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தக் கழகத்தைக் கட்டிக் காக்கின்ற பணியிலே- எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்க வேண்டுமென்று மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலே இருக்கின்ற தம்பிமார்கள் அனைவரையும் இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கேட்டுக்கொண்டு; நான் சொன்ன வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப நடந்து கழகத்தைக் காப்பாற்றுங்கள். தேர்தல் வரட்டும்; போகட்டும். கழகத்தை என்றென்றும் காப்போம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்- அமைச்சர் கருணாநிதி பேசினார்.

ஹஜ்: அனுமதிபெறாத 15000 யாத்ரிகர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் !

 
சவூதி அரேபிய ஹஜ் அமைச்சகத்தின் அதிகாரிகள் தாயிஃப்பிலுள்ள 12 சுங்கச் சாவடிகளில் நடத்திய சோதனைகளில் ஹஜ்ஜுக்கான அரசாங்க அனுமதிபத்திரம் இன்றி மக்காவினுள் நுழையமுயன்ற 15,000 யாத்ரிகர்களை திருப்பி அனுப்பியுள்ளனர். இஃதன்றி, யாத்ரிகர்களை இவ்வாறு அழைத்துவந்ததாக 400 நபர்களையும் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, ஹஜ் அமைச்சகக் கூட்டம் இருவாரங்களுக்குமுன் நடந்த போது, 25 பயணிகளுக்கும் குறைவான பயணியர் இருக்கையுடைய வாகனங்கள் மக்கா நகரினுள்  நுழைய தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இத்தடை அக்டோபர் 23 முதல் நவம்பர் 20 வரை நடைமுறையில் இருக்கும் என்று சொல்லப்பட்டது.
உம்ரா விசாவில் வந்து அதிகக் காலம் தங்கிவிட்டவர்களைத் தேடும் பணிக்காகவும் அணிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று சவுதி கடவுத்துறை அதிகாரி கர்னல்.முஹம்மது அல் சாலமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் பெண் பயணிகளைப் பரிசோதிக்க பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னார்.

பிரிட்டனில் அதிக குழந்தைகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் 'முகம்மது' !

யுனைட்டட் கிங்டம் ஆஃப் கிரேட் பிரிட்டன் (சுருக்கமாக யு.கே.) என்று அழைக்கப்பட்டும் பிரித்தானியாவில் புதிதாகப் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு அதிகமாக வைக்கப்படும் பெயர் 'முகம்மது' என்று சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக கார்டியன் நாளிதழ் கூறியுள்ளது.

இது கடந்த 14 வருடங்களாக முன்னணியில் இருந்த 'ஜாக்' (jack) என்ற பெயரை முந்தியுள்ளது. சென்ற வருடம் மூன்றாவது வரிசையில் 'முகம்மது' என்ற பெயர் இருந்தது. இந்த வருடம் அது முன்னிலைக்கு வந்துள்ளது.

இதுபோல 'ஓலிவியா' (Olivia ) என்ற பெண் குழந்தைகளுக்கான பெயர் கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் முன்னிலையில் உள்ளது.

மொத்தம் 7549 ஆண் குழந்தைகளுக்கு 'முகம்மது' என்ற பெயர் பல்வேறு வித எழுத்து வடிவில் வைக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள பிரபல நாளிதழ் டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

ஆனால் முகம்மது என்ற பெயர் ஆங்கிலத்தில் பல்வேறு தவறான எழுத்தில் (அதாவது Muhammad மற்றும் Mohammad) அமையாமல் Mohmmed என்ற சரியான ஆங்கில எழுத்தில் அமைந்து இருந்தால் இந்த கணக்கெடுப்பில் முகம்மது என்ற பெயர் இன்னும் அதிகரித்து இருக்கும் என்ற கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கணக்கெடுப்பில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் 16 வகையான எழுத்தில் அமைந்த முகம்மது என்ற பெயர் சேர்க்கப்படவில்லை.


முகம்மது என்பது முஹம்மத் என்ற சரியான உச்சரிப்பு கொண்ட அரபியில் அமைந்த பெயர். முகம்மது  உலக முழுவதும் வாழும் 1.66 பில்லியன் (166 கோடி) முஸ்லிம்களின் கடைசி இறை தூதர் ஆவார். அவரது பெயரை முஸ்லிம்கள் உச்சரிக்கும் போதெல்லாம் கூடவே 'ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்' என்று சேர்த்து அழைப்பார்கள் .இதன் பொருள் "அல்லாஹ் தன்னுடைய தூதரான முஹம்மது மீது கருணையும் சாந்தியும் பொழிவானாக" என்பதாகும்.

சென்னை விமானத்தில் 2 கோடி ம்திப்புள்ள நவரத்தின கற்களை வயிற்றில் கடத்தியவர் கைது!

சென்னை மீனம்பாக்கம்  விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் ஒரு வாலிபர்  நவரத்தின கற்களை கடத்தி வருவதாக புறநகர் போலீஸ் ஆணையர் ஜாங்கிட்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தன் அடிப்படையில் காவல்துறை அவ்விமானத்தில் வந்தவர்களை கண்காணித்தனர். அப்போது கார் பார்க்கிங் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

சென்னைக்கு சுற்றுலா விசாவில் வந்த இலங்கை காலே பகுதியை சேர்ந்த முகமது சபீக் (வயது 43) என்பவர் மீது சந்தேகப்பட்டு  போலீசார் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். ஆனால் அவரிடம் எப்பொருளும் கிடைக்கவில்லை என்பதால் போலீசார் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று எக்ஸ்ரே எடுத்தனர். அவரது வயிற்றில் பூக்கள் போல் சில கவர்கள் இருப்பது தெரிந்தது. உடனே முகமது சபீக்கிடம் விசாரித்தபோது வயிற்றில் நவரத்தின கற்களை கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டார்.

பின்னர் அவருக்கு வாழைப்பழம் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு  சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரது வயிற்றில் இருந்து  வெளியே வந்த 42 ஆணுறையில் விலை உயர்ந்த நவரத்தின கற்கள் இருந்தன. சுமார் 1 கிலோ எடை கொண்ட 2,065 கற்களின்  மதிப்பு ரூ.2 கோடியாகும்.

இது பற்றி போலீசாரிடம் கூறிய முகமது சபீக் தான் வேலையின்றி இருந்ததால் ஒரு கடத்தல் கும்பலுக்காக குருவி போல் வேலை பார்த்ததாகவும் கொழும்பில் இருந்து சென்னைக்கு இதுபோன்ற பொருட்களை எடுத்து வந்து சென்னை மண்ணடியில் உள்ள லாட்ஜில் தங்கியிருப்பேன் என்று கூறினார்.  மேலும் இவ்வேலைக்காக  கொழும்பில் இருந்து சென்னைக்கு விமான டிக்கெட் மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் தருவார்கள் என்றும் கூறினார்.  இம்முறை அதிகாலை 4 மணிக்கு ஆணுறையில் இருந்த கற்களை மாத்திரை சாப்பிடுவதுபோல சாப்பிட்டு தண்ணீர் குடித்து 1 மணி நேரத்தில் 42 பொட்டலங்களையும் விழுங்கி வந்து சோதனைகளை முடித்துக் கொண்டு கார் பார்க்கிங் பகுதிக்கு வந்தபோது போலீசாரிடம் சிக்கி விட்டதாக கூறினார்.