செவ்வாய், 1 மார்ச், 2011

தமிழக சட்டசபை தேர்தல் தேதி : ஏப்ரல்-13

தமிழகம், புதுச்சேரி,கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின்  தேர்தல் தேதியை  டெல்லியில் இன்று மாலை  தேர்தல் ஆணையர் குரேஷி அறிவித்தார்.



தமிழக சட்டசபையின் ஆயுட்காலம் மே-16ம் தேதியுடன் முடிவடைகிறது.   இந்நிலையில் தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் -13 ம் தேதி ஒரே கட்டமாக  வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்தார்.  

தமிழகத்தில் மார்ச் 19ம் தேதிவேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என்றும்,  மே-13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்தார்.

தமிழகத்தின் மொத்த வாக்குச்சாவடிகள் 54 ஆயிரம்.   தமிழகத்தில்  மொத்த வாக்காளர்கள் 4 கோடியே 59 லட்சம் பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரிசா எமார் மடத்தில் 90 கோடி ரூபாய் புதையல் கண்டெடுப்பு

ஒரிசாவில் பழமையான எமார் மடத்தில் பூமிக்கு அடியில் 90 கோடி ரூபாய் மதிப்புள்ள வெள்ளிக் கட்டி புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரிசா மாநிலம் புரியில் புகழ்பெற்ற ஜகன்நாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகே பழமை வாய்ந்த எமார் மடம் உள்ளது. கடந்த சில மாதங்களாக இங்கு கட்டிடப்பணிகள் நடைபெற்று வந்தன.

இதில் வேலை செய்த இருவர் டெங்கனால் எனும் நகரில் இரண்டு வெள்ளிக் கட்டிகளை விற்க முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வெள்ளிக் கட்டிகளை எமார் மடத்திலிருந்து திருடி வந்ததாக கூறினர்.

இதையடுத்து எமார் மடத்துக்கு போலீசார் விரைந்தனர். அங்கு ஒரு ரகசிய அறையில் 3 மரப்பெட்டிகளில் வெள்ளிக் கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். மொத்தம் 522 வெள்ளிக் கட்டிகள் இருந்தன. இவற்றின் மொத்த எடை 18 டன் எனவும், இதன் மதிப்பு 90 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளிக் கட்டிகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன. வெள்ளிக் கட்டிகளில் ஐக்கிய அரபு எமிரேட், ஜப்பான், சீனா, துபாய் ஆகிய நாடுகளின் முத்திரைகள் பொறிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பெட்ரோல் வரி குறைப்பு - தமிழக மக்களுக்கு எலெக்சன் போனஸ்!

மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய அரசின் வரிகள்  குறையும் என்று எதிர்பார்க்கப் பட்ட  நிலையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளில் மாற்றம் எதுவும் செய்ய வில்லை.

இந்நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மீதான விற்பனை வரியை 30 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 3 சதவீத வரி குறைப்பால் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ 1.38  குறையும்.

சட்டமன்றத் தேர்தலை தேதி இன்று மாலை அறிவிக்கப் படும் என்று எதிர்பார்க்கப் படும் நிலையில் தமிழக மக்களுக்கு தேர்தல் போனசாக பெட்ரோல் விற்பனை வரியை குறைத்துள்ளது தமிழக அரசு.

தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்று மாலை 6 மணிக்கு அறிவிப்பு

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் ஏப்ரல்- மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
 
5 மாநிலங்களிலும் தேர்தலுக்கான எல்லா ஏற்பாடுகளையும் தலைமை தேர்தல் கமிஷன் செய்து முடித்துவிட்டது. தற்போது வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
 
5 மாநிலங்களுக்கும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டு விட்டன. தேர்தல் தேதி மட்டுமே அறிவிக்கப்பட வேண்டியதுள்ளது.  இந்த நிலையில் இன்று (செவ்வாய்) காலை டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
 
தலைமை தேர்தல் அதிகாரி குரேஷி தலைமை தாங்கினார். கூட்டத்தில் 5 மாநில தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 5 மாநிலத்தில் எப்போது தேர்தலை நடத்துவது என்ற ஆய்வும் நடந்தது.
 
ஏப்ரல்- மே மாதங்களில் எந்தெந்த நாட்கள் ஓட்டுப்பதிவுக்கு சாதகமாக இருக்கும் என்று ஆலோசிக்கப்பட்டது. இன்று மாலை 6 மணிக்க தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.

கோத்ரா வழக்கு - 11 பேருக்குத் தூக்கு


அகமதாபாத் : கோத்ரா வழக்கின் மீதான விசாரணையில் குற்றவாளிகள் என தீர்ப்புக் கூறப்பட்டவர்களில் 11 பேருக்குத் தூக்குத்தண்டனை விதித்து குஜராத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
2002 - ஆம் ஆண்டு, உ.பி. மாநிலம் அயோத்தியிலிருந்து சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கரசேவர்கள் குஜராத்துக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த ரயில் கோத்ரா ரயில் நிலையத்தில் வந்து நின்றபோது திடீரென அதில் இருந்த S-6 பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இதில் அப்பெட்டியிலிருந்த 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் 94 பேர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கில், 31 பேர் குற்றவாளிகள் என கடந்த 22 - ஆம் தேதி குஜராத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் 31 பேர் மீதான தண்டனை விவரத்தை நீதிபதி ஆர்.ஆர்.படேல் இன்று அறிவித்தார். அதன்படி 31 பேரில் 11 பேருக்குத் தூக்குத் தண்டனையும், மற்ற 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சதித் திட்டம் தீட்டியது, அதை நிறைவேற்றியது, ரயிலை எரித்தது ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

வடகொரியாவை மிரட்ட அமெரிக்கா- தென்கொரியா கூட்டு போர் ஒத்திகை

தென்கொரியா எல்லையில் உள்ள பியாங்யாஸ் தீவு மீது வடகொரியா ராணுவம் கடந்த நவம்பர் மாதம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு தென்கொரியாவும், பதில் தாக்குதல் நடத்தியது.
 
இதை தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் பதட்டம் நிலவியது. இந்த நிலையில் தென்கொரியாவுக்கு அதன் நட்பு நாடான அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. அமெரிக்க போர்க்கப்பல் தென் கொரியாவில் நிலை நிறுத்தப்பட்டது.   மேலும் அமெரிக்க ராணுவவீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டனர். இதை தொடர்ந்து தென்கொரியா எல்லைப் பகுதியில் அமெரிக்கா, தென்கொரியா, நாட்டு படையினரின் கூட்டு போர் ஒத்திகை நடத்தப்பட்டது.
 
இதற்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து போர் ஒத்திகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இருந்தாலும் வடகொரியா மற்றும் தென் கொரியாவுக்கு இடையேயான பிரச்சினை நீறுபூத்த நெருப்பு போன்று இருந்து வருகிறது.
 
இந்த நிலையில் அமெரிக்காவும், தென்கொரியாவும் மீண்டும் போர் ஒத்திகையை வடகொரியா எல்லையில் உள்ள ஜிம்போ என்ற இடத்தில் நடத்தி வருகிறது. இது சியோலில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. போர் ஒத்திகையில் ராணுவம், கப்பற்படை, விமானப்படையினர் என அனைத்து தரப்பினரும் ஈடுபட்டனர். இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  
 
இந்த நடவடிக்கைக்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் தங்களின் பாதுகாப்புக் காகவும், ராணுவ வீரர் களின் பயிற்சிக்காகவும் அமெரிக் காவுடன் போர் ஒத்திகை நடப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. ஆனால் இதை வடகொரியா மறுத்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
அவ்வாறு போர் நடந்தால் அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தபடலாம் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

துணிவுமில்லை, மனமுமில்லை

எந்தவொரு நாடும் உலக அரங்கில் மதிக்கப்படுவது அதன் ராணுவ பலத்தாலோ, பொருளாதார பலத்தாலோ, மக்கள்தொகை அல்லது நிலப்பரப்பின் அடிப்படையிலோ மட்டுமல்ல. அந்த நாடு தனது குடிமக்களை எந்த அளவுக்குப் பாதுகாக்கிறது, அவர்களது உரிமைகளை மதிக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் ஒரு நாடும் அதன் தலைமையும் மதிக்கப்படுகிறது, மரியாதை பெறுகிறது. சமீபகாலமாக நிகழும் சில சம்பவங்கள் இந்தியாவை ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டுகிறது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு சீன சரக்குப் படகு ஜப்பானியக் கடலோரக் காவல்படையின் ரோந்துப் படகின்மீது மோதிவிட்டது. ஜப்பானியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் அந்தச் சீனப் படகின் கேப்டனைக் கைது செய்துவிட்டனர்.சீனா கொதித்தெழுந்துவிட்டது. இது நமது நாட்டின் தன்மானத்துக்கே இழுக்கு என்று கருதி, அதை ஒரு தேசியப் பிரச்னையாக்கிவிட்டது. எல்லா விதத்திலும் ஜப்பானுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது சீனா.முதலில், அனைத்து மட்டங்களிலுமான ஜப்பானியத் தொடர்புகளை நிறுத்தி வைத்தது. நிலக்கரி மற்றும் எரிவாயு கண்டுபிடிப்புக்கான கூட்டுமுயற்சிக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஜப்பானிய எலெக்ட்ரானிக் தொழிலுக்குத் தேவைப்படும் முக்கியமான சில தாதுப்பொருள்களின் ஏற்றுமதியை நிறுத்திவிட்டது.பயந்துபோய், நமக்கேன் வம்பு என்று ஜப்பான் அந்தப் படகின் கேப்டனை நிபந்தனையின்றி விடுவித்து, சீனாவுடன் சமாதானம் செய்துகொண்டது. ஏதோ ஒரு தனியார் படகின் கேப்டன் என்று பாராமல், ஒரு சீனக் குடிமகன் என்கிற கண்ணோட்டத்துடன்தான் பிரச்னையை அணுகியது அந்த அரசு.ரெய்மண்ட் டேவிஸ் ஓர் அமெரிக்கப் பிரஜை. இவர் ஓர் அமெரிக்க ஒற்றர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அதற்கான தெளிவான ஆதாரம் எதுவும் கிடையாது. பாகிஸ்தான் சென்றிருந்த இவரை இரண்டு பாகிஸ்தானியர்கள் பின்தொடர்ந்ததாகவும், அவர்கள் பாகிஸ்தானிய உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யைச் சேர்ந்தவர்கள் என்றும், வரம்புமீறி ரெய்மண்ட் டேவிஸ் துப்பறிந்துவிடக் கூடாது என்பதற்காக அவரை அந்த இருவரும் பின்தொடர்ந்தனர் என்றும் கூறப்படுகிறது. சிலர், அந்த இரண்டு பாகிஸ்தானியர்களும் சமூகவிரோதிகள் என்றும், ரெய்மண்ட் டேவிஸின் பர்சையும், கைப்பேசியையும் பறிப்பதற்குத்தான் பின்தொடர்ந்தார்கள் என்றும் கூறுகின்றனர்.ரெய்மண்ட் டேவிஸ் தன்னைப் பின்தொடர்ந்த அந்த இருவரையும் குருவியைச் சுட்டுத் தள்ளுவதுபோல சுட்டுக் கொன்றுவிட்டார். ரெய்மண்ட் டேவிஸ் கைது செய்யப்பட்டு, அவர்மீது கொலைக் குற்றமும் சாட்டப்பட்டிருக்கிறது. கொலைக் குற்றத்துக்கான எல்லா ஆதாரங்களும் பாகிஸ்தானிடம் இருக்கிறது. ஆனால், அமெரிக்கா தனது நாட்டுக் குடிமகன் ஒருவரை பாகிஸ்தான் கைது செய்திருப்பதை ஏற்றுக்கொள்கிறதா என்றால், இல்லை.கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் பல்வேறு விதமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துவரும் நிதி உதவி முற்றிலுமாக முடக்கப்படும் என்று அச்சுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு விட்டன. ரெய்மண்ட் டேவிஸ் விஷயத்தில் பாகிஸ்தான் நடந்து கொள்வதைப் பொறுத்துத்தான் அமெரிக்க - பாகிஸ்தானிய உறவு இருக்கும் என்று அழுத்தம்திருத்தமாகப் பாகிஸ்தானிடம் தெளிவுபடுத்தி விட்டிருக்கிறது அமெரிக்க அரசு.தனது நாட்டு ஒற்றருக்காக, தனது நாட்டுக் குடிமகனுக்காக எதுவும் செய்யத் தயாராக இருக்கிறது அமெரிக்கா. இது அந்த நாட்டின் சுயமரியாதைப் பிரச்னை. அமெரிக்க உதவியால் மட்டுமே உயிர் வாழும் நாடாக இருந்தாலும், கொலையுண்ட தனது நாட்டுக் குடிமக்கள் இருவருக்காகப் போராடுகிறது பாகிஸ்தான். இது பாகிஸ்தானின் தன்மானப் பிரச்னை என்றும், வெளிநாட்டவர் ஒருவர் தங்களது நாட்டில், தங்கள் நாட்டுப் பிரஜைகளை சுட்டுக்கொல்வதைச் சகித்துக்கொள்ள முடியாது என்றும் கூறுகிறது பாகிஸ்தான்.முடிவில், அமெரிக்காவிடம் சரணாகதி அடையும் என்றாலும் முடிந்தவரை தனது நாட்டுப் பிரஜைகளுக்காகப் போராடுகிறது பாகிஸ்தான்.இனி நமது இந்திய அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள்மீது காரணமே இல்லாமல் நிறவெறித் தாக்குதல்கள் நடைபெற்றன, நடைபெறுகின்றன. இதுவரை நமது இந்திய மாணவர்களைத் தாக்கிய ஒருவரைக்கூட ஆஸ்திரேலிய நீதிமன்றம் தண்டித்ததாகத் தெரியவில்லை. இந்திய அரசும் அதைப்பற்றிக் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. இதுதான் ஓர் இந்தியக் குடிமகனுக்கு நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு தரும் மரியாதை!அமெரிக்காவில், வனவிலங்குகளின் புள்ளிவிவரக் கணக்கு எடுக்கக் கட்டிவிடப்படும் கழுத்துப் பட்டைகளைப்போல, பல லட்சம் ரூபாய் செலவழித்துப் படிக்கப்போன இந்திய மாணவர்களுக்கு "ரேடியோ டாக்' அணிவித்து மகிழ்கிறது அமெரிக்க அரசு. நமது அரசு அதற்கு உரத்த குரலில் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடத் தயங்குகிறது. கேட்டால், அந்நிய முதலீடு பாதிக்கப்படும், அமெரிக்க உறவு சிதைந்துவிடும் என்று வியாக்கியானம் கூறுகிறார்கள். ஓர் இந்தியக் குடிமகனின் தன்மானத்தையும், சுயமரியாதையையும் விடவா, அந்நிய முதலீடு பெரியது? இதற்காகவா சுதந்திரம் பெற்றோம்?பக்கத்தில் இருக்கும் "கண்ணீர்த் துளி' அளவிலான நாடு இலங்கை. இந்தியாவையே கேலிசெய்வதுபோல சர்வசாதாரணமாக நமது மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொல்கிறது அந்நாட்டு ராணுவம். நாம் பேச்சுவார்த்தை நடத்தத் துடிக்கிறோமே தவிர, நமது தன்மான ரத்தம் துடிக்கவில்லை. இதுவே, ஒரு சீன அல்லது அமெரிக்க மீனவருக்கு இலங்கை ராணுவத்தால் அப்படி ஏற்பட்டிருக்குமேயானால், இப்போது இலங்கை என்கிற ஒரு தீவே இருந்திருக்காது.அதெல்லாம் போகட்டும். ஈழப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் புனர்வாழ்வுக்காக, இந்தியாவிலிருந்து நமது வரிப்பணத்திலிருந்து, நம்மால் அனுப்பப்பட்ட 500 டிராக்டர்கள், இலங்கை அரசால் தென்னைமர வளர்ச்சிக் கழகத்துக்கும், முந்திரி கார்ப்பரேஷனுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 50,000 வீடுகள் கட்ட நமது வரிப்பணத்திலிருந்து இந்திய அரசு அளித்த நிதியுதவி வெறும் 1,000 பேருக்குத்தான் சென்றடைந்திருக்கிறது. இதை மேற்பார்வை இடவோ, கேள்வி கேட்கவோ நமது இந்திய அரசுக்குத் துணிவும் இல்லை, மனமும் இல்லை."அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்உச்சத்திற் கொண்டாரடீ-கிளியே ஊமைச் சனங்களடீ'.

புத்திசாலியின் பட்ஜெட்!

பத்திரிகைகளும் ஊடகங்களும் ஒருநாள் முன்னதாகவே நடத்தி முடித்துவிட்ட ஊக-பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளிப்படையான புள்ளிவிவரங்களுடன் தாக்கல் செய்தார் என்று சொல்லும் அளவுக்குத்தான் இருக்கிறது அவருடைய 2011-12-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்.  எல்லாரும் கணித்தபடியே விவசாயச் சலுகைகளும், வருமான வரி வரம்பு உயர்வும் அறிவிக்கப்பட்டாலும்கூட, அதனால் பயனடைவோர் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். ஏதாவது செய்ய வேண்டுமே என்ற கட்டாயத்துக்காகச் செய்திருப்பதாகவே தோன்றுகிறது.  வருமான வரிக்கான வரம்பை ரூ.1.6 லட்சத்திலிருந்து ரூ.1.8 லட்சத்துக்கு உயர்த்தி இருக்கிறார்கள். இந்த ரூ. 20,000-ஐ உயர்த்தியதால், ஒவ்வொருவருக்கும் ரூ. 2,000 மிச்சப்படும் என்கிறார் பிரணாப்ஜி. ஆனால், இந்த வரம்புக்குள் வருவோர் அனைவருமே சம்பளக்காரர்கள் என்பதும், ஆறாவது ஊதியக் குழு அமலுக்கு வந்தபிறகு ஒவ்வோர் அரசு ஊழியரும் குறைந்தபட்சம் ரூ. 3,000-க்கு சம்பள உயர்வு பெற்றிருக்கிறார்கள் என்பதையும் நினைத்துப் பார்க்கும்போது, இந்த ரூ. 20,000 கணக்கு நமக்குப் புரியாமல் இல்லை.  இந்த பட்ஜெட் அறிவிப்பில் ஒரு நல்ல செய்தி உண்டு. வருமான வரித்துறையின் மூத்த குடிமகன் வயது 65 என்றிருந்ததை 60 ஆகக் குறைத்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.5 விழுக்காடு வட்டி அதிகம் என்று சொல்லிவிட்டு, வருமான வரித் துறையைப் பொறுத்தவரை 65 வயதுவரை வரி செலுத்த வேண்டும் என்று சொல்லி, அவர்களது வைப்புத் தொகைக்குக் கிடைத்த சிறுவட்டியிலும் வங்கிகள் வருமானவரி பிடித்தம் செய்த வேதனையான நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.  பயறு உற்பத்திக்காக ரூ.300 கோடி செலவிட்டு, 60,000 ஹெக்டேரில் பயறு சாகுபடியை ஊக்கப்படுத்துதல், சமையல் எண்ணெய் பற்றாக்குறையைத் தவிர்க்க ரூ.300 கோடியில் 60,000 ஹெக்டேரில் எண்ணெய்ப் பனை சாகுபடி, கம்பு சோளம் உற்பத்திக்காக ரூ.300 கோடி, 15 இடங்களில் மாபெரும் உணவுப் பூங்கா ஏற்படுத்துதல் என்கிற நிறைய அறிவிப்புகள் இருந்தாலும், ஏழை விவசாயிக்கு நேரடியாகப் போய்ச் சேரும் பலன் என்ன என்பது தெளிவாக இல்லை.  விவசாயத்துக்கான வங்கிக் கடனுதவி அளவு ரூ. 3,75,000 கோடியிலிருந்து ரூ. 4,75,000 கோடியாக உயர்த்தியிருக்கிறார்கள். இதில் விவசாயிக்கு 4 விழுக்காடு வட்டியில் கடன் என்று சொல்லப்படுகிறது. இதனை நுட்பமாகப் பார்த்தால், இந்தப் பலனை மிகச் சில விவசாயிகள் மட்டுமே பெற்றிருப்பார்கள், இனி பெறுவார்கள்.  ஏனென்றால், நிதியமைச்சர் பிரணாப்ஜி கூற்றுப்படி விவசாயக் கடன் 7 விழுக்காடு வட்டி 2011-12-ம் ஆண்டுக்கும் தொடரும். இதில் ஒழுங்காக, தவணை தவறாமல் கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிக்கு 2 விழுக்காடு வட்டி தள்ளுபடி சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்டது. அது நிகழாண்டில் 3 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது, அவ்வளவே!  அதாவது, ஒரு விவசாயி கடன் தவணைகளைத் தவறாமல் செலுத்தினால் மட்டுமே அவருக்கு 3 விழுக்காடு வட்டி தள்ளுபடியாகும். அதாவது அவர் 4 விழுக்காடு வட்டியில் கடன் பெற்ற விவசாயியாக முகம் மலர்வார். இதெல்லாம் நடக்கிற காரியமா? எத்தனை விவசாயிகளால் இவ்வாறு மாதம்தோறும் தவணையைச் செலுத்த முடியும்?  இந்தத் திட்டம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது என்கிறார் பிரணாப்ஜி. விவசாயிகளின் நகைக்கடனுக்குக் குறைந்த வட்டி என்பதால், அந்தத் திட்டத்தின் கீழ் நகைகளை அடமானம் வைப்போர் நிறையப்பேர் இருப்பதைப்போலவே, வேறு காரியங்களுக்காக விவசாயக் கடன்வாங்கிக்கொண்டு, தவணை தவறாமல் செலுத்தி பலன் பெறப்போவதிலும் விவசாயிகள் சிலராகவும், விவசாயிகள் அல்லாதோர் பலராகவும் இருக்கப்போகிறார்கள் என்பதை பிரணாப்ஜி அறிவாரா? வட்டிச் சலுகை, சாகுபடி செய்யும் விவசாயிக்கு மட்டுமே கிடைக்க வழிவகை செய்தால் என்ன?  சேவை வரி மூலம் வரும் நிதியாண்டில் ரூ. 4,000 கோடி வருவாய் ஈட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது. விமானப்பயணிகள் உள்நாடு என்றால் ரூ. 50-ம் வெளிநாட்டுக்குச் செல்வதாக இருந்தால் ரூ. 250-ம் சேவை வரி செலுத்த வேண்டும். மது விநியோகிக்க உரிமம் பெற்ற ஓட்டல்கள் 10 விழுக்காடு சேவை வரி செலுத்த வேண்டும்.  வர்த்தக இலச்சினை பெற்ற ஆயத்த ஆடை நிறுவனங்கள் 10 விழுக்காடு சேவை வரி செலுத்த வேண்டும், இதெல்லாம்கூடப் பரவாயில்லை, 25 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் 5 விழுக்காடு சேவை வரி செலுத்த வேண்டும் என்கிறது பட்ஜெட். தனியார் மருத்துவமனைகளில் ஏற்கெனவே கிண்டியெடுக்கிற "சேவை' போதென்று, பிரணாப்ஜியும் சேர்ந்து கொண்டிருக்கிறார். இனி நோயாளிகள் பாடு பரிதாபம்தான்.  "செபி'யில் பதிவுபெற்ற பரஸ்பர நிதித் திட்டங்களில் 40 மில்லியன் டாலர் வரை (ஏறக்குறைய ரூ. 2 லட்சம் கோடி) நேரடி அந்நிய முதலீட்டாளர் முதலீடு (ஃபாரின் இன்வெஸ்டார்ஸ் இன்வெஸ்ட்மென்ட்) அனுமதிக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. 2010 அக்டோபர் மாதத்தில் மட்டுமே 6.11 பில்லியன் டாலர் முதலீடு வந்துள்ளது என்றும், நிகழாண்டில் அக்டோபர் வரை 24.8 பில்லியன் டாலர் முதலீடு எப்.ஐ.ஐ. மூலமாக வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இப்போது இதன் அளவை உயர்த்தி இருக்கிறார்கள்.  அந்நிய நேரடி முதலீட்டை (எப்.டி.ஐ.) ஊக்குவிப்பதைப்போல, அந்நிய முதலீட்டாளர் முதலீட்டை (எப்.ஐ.ஐ.) ஊக்குவிப்பது ஆபத்து. அந்நிய நேரடி முதலீட்டைப்போல அல்லாமல், அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு என்பது பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீடு என்பதால், எந்தநேரமும் அந்த முதலீடு திரும்பப் பெறப்பட்டு நிதி நெருக்கடியும், பங்குச்சந்தை வீழ்ச்சியும் ஏற்படக்கூடும் என்பதுதான் இதனால் ஏற்பட இருக்கும் பேராபத்து.  உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க, ரூ. 30,000 கோடிக்கான (இந்திய ரயில்வே நிறுவனம் ரூ. 10,000 கோடி, நெடுஞ்சாலை ஆணையம் ரூ.10,000 கோடி, ஹட்கோ ரூ.5,000 கோடி, துறைமுகங்கள் ரூ. 5,000 கோடி) தரும் கடன்பத்திரங்களை அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்த பிரணாப்ஜி, இதற்காக அந்நிய முதலீட்டைக் கொண்டு வருவதற்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.  இதன்மூலம், வெளியே போன கறுப்புப் பணம் உள்ளே வருவதற்கான வாசல்கள் இந்த பட்ஜெட் மூலம் அகலமாக்கப்பட்டுள்ளதோ என்றும் சந்தேகம் எழுகிறது.  நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒரு பொருளாதார நிபுணரின் சாதுர்யத்தைவிட ஒரு தேர்ந்த அரசியல்வாதியின் சாமர்த்தியம்தான் அதிகம் தெரிகிறது. உணவுப்பற்றாக்குறை, விலைவாசி போன்ற மக்கள் பிரச்னைகளை உரக்க எழுப்பி, அவர்களது உணர்வுகளைப் பிரதிபலித்துவிட்டு, அதற்கு விடை தேடாமலே ஒரு பட்ஜெட்டை சாமர்த்தியமாகச் சமர்ப்பித்துத் தப்பித்துக் கொண்டிருக்கும் பிரணாப் முகர்ஜியின் அரசியல் சாதுர்யத்துக்கும் புத்திசாலித்தனத்துக்கும் ஒரு சபாஷ்!

மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்டோர் தெரிவிக்க அழைப்பு

தஞ்சாவூர்: தஞ்சையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவங்கள் திரும்ப பெறுதல் தொடர்பான பயிற்சி வகுப்பு நடந்தது. கலெக்டர் சண்முகம் பேசியதாவது: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஃபிப்ரவரி ஒன்பதாம் தேதி முதல் நடந்து வருகிறது. இதுவரை தங்கள் பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான கணக்கெடுப்பாளர் வராமல் இருந்தால், எங்களிடம் தெரிவிக்கலாம். கலெக்டர் அலுவலகம் 04362 230121, டி.ஆர்.ஓ., 9445000923, மக்கள் தொகை கணக்கெடுப்பு மண்டல ஒருங்கிணைப்பாளர் 9444706443, தஞ்சை ஆர்.டி.ஓ., 9445000465, கும்பகோணம் ஆர்.டி.ஓ., 9445000466, பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ., 9445000467 என்ற எண்ணில் விடுபட்டவர்கள் புகார் தெரிவிக்க அழைக்கலாம். உடனடியாக அப்பகுதியில் வந்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும். இதுவரை மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணிக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்ட பணியாளர்கள் கணக்கெடுப்பு துவங்காமல் இருந்தால் அவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கணக்கெடுப்புப்பணி இதுவரை நடந்த விபரங்களை மேற்பார்வையாளர்கள், பொறுப்பு அலுவலர்கள் சரியாக மேற்பார்வை செய்து ஆய்வு செய்ய வேண்டும். விடுதல் இன்றி கணக்கெடுப்பு பணி முடிக்கப்பட வேண்டும். குறிப்பாக, கணக்கெடுப்பு பணி முடிந்த பின் படிவங்களை திரும்ப பெறும்போது ஒவ்வொரு படிவங்களும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்த பின்பே வாங்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பில் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதால், கடைசி நேர தவறுகளை தவிர்த்திட அனைத்து அலுவலர்களும் மிகுந்த பொறுப்புடன் திட்டமிட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார், மக்கள் தொகை கணக்கெடுப்பு மண்டல ஒருங்கிணைப்பாளர் நடராஜன் ஆகியோர் இறுதிக்கட்ட பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர்.

தமிழகத்தில் தேர்தல் நடத்துவது மிகவும் சிரமம்! சொல்வது, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்

கோவை : ""கடந்த 2006க்கு முன் வரை தேர்தல் நடத்த சிரமமான மாநிலங்களின் பட்டியலில் பீகார், உத்திரபிரதேச மாநிலங்கள் முதல் இரண்டு இடங்களில் இருந்தன. 2006க்கு பின் இந்த பட்டியலில் பீகார், உத்தரபிரதேச மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழகம் முதல் இடம் பெற்றுள்ளது,'' என, இந்திய முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி தெரிவித்தார்.

பாரதியார் பல்கலை சமூகபணித்துறை சார்பில் "கண்ணியமான தேர்தல்' என்ற தலைப்பில், கலந்துரையாடலும், "தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயகத்தில் இளைஞர்கள் பங்கு' என்பது குறித்த நிகழ்ச்சியும், இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சரஸ்வதி தலைமை வகித்தார்.

இந்திய முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி பேசியதாவது: சிறந்த ஆட்சியாளர்களை தேர்வு செய்ய மக்கள் அனைவரும் சிந்தித்து ஓட்டு போட வேண்டும். 2006க்கு முன் வரை நாட்டில் தேர்தல் நடத்த மிகவும் சிரமமான பகுதிகளின் பட்டியலில் பீகார், உத்திரபிரதேச மாநிலங்கள் முதல் இரண்டு இடங்களில் இருந்தன. 2006க்கு பின் இந்த பட்டியலில் பீகார், உத்தரபிரதேச மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழகம் முதல் இடம் பெற்று விட்டது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுகளை வாங்கும் மாநிலமாக தமிழகம் மாறி விட்டது. ஜனநாயக நாட்டில் ஓட்டுரிமையை பணத்துக்காக விற்றால், அடுத்த ஐந்து ஆண்டுகள் பணம் கொடுத்தவன் ஆளுவான். வாக்காளர்களிடம் கொடுத்த பணத்தை விட, பல மடங்கு அதிகமாக சம்பாதிப்பதே குறிக்கோளாக கொண்டு செயல்படுவான்.

தேர்தலில் நல்ல பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்காவிட்டால் எதிர்வரும் ஐந்து ஆண்டுகள் மிகவும் கஷ்டப்படவேண்டும். தேர்தலின் போது அனைத்து ஓட்டுசாவடிகளிலும் கேமரா பொருத்தி கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனி கணக்கு துவக்கப்பட்டு 3 நாட்களுக்கு ஒரு முறை செலவு கணக்குகளை தேர்தல் அதகாரியிடம் தெரிவிக்க வேண்டும். ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 16லட்சம் ரூபாய் செலவு செய்யலாம்.

தமிழகத்தில் விரைவில் நடக்கவுள்ள சட்டŒபை தேர்தலில் தணிக்கை அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டு,ஒவ்வொரு தொகுதிகளிலும் பார்வையிடுவார்கள். நல்ல பிரதிநிதியை தேர்வு செய்தல், பணத்துக்காக ஓட்டு உரிமையை விற்காமல் இருத்தல், தேர்தலின் போது நடக்கும் விதிமுறை மீறல்கள் குறித்து உடனடியாக தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவித்தல் உள்ளிட்ட மூன்றும் ஒவ்வொரு குடிமகன்களின் தலையாய கடமையாகும்.

தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்திரத்தை பயன்படுத்துவதால் எந்த முறைகேடும் நடக்க வாய்ப்பு இல்லை. போலீஸ் வாக்கி டாக்கி என்பது ஒருபுற தொலைதொடர்பு கருவி, ஒரு தகவல் மற்றவருக்கு கொடுத்தால் மறுமுனையில் உள்ளவர் "ஓவர்' என்ற சொன்ன பின்பே அவரின் பதிலை தெரிவிக்க முடியும். மொபைல்போன்கள் இருபுற தொலைதொடர்பு சாதனம்.

இதில் இருவரும் தங்களின் கருத்துக்களை ஒரே சமயத்தில் தெரிவிக்க முடியும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் ஒருபுற தொலைதொடர்பு சாதனம். ஆகவே இது பாதுகாப்பானது. எவ்வித முறைகேடும் செய்ய முடியாது. எந்த புதிய கண்டுபிடிப்பு நடைமுறைக்கு வந்தாலும் அதுகுறித்து சந்தேகப்படுவது மனிதர்களின் இயல்பு. ஆகவே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் தவறு நடக்க வாய்ப்பு உள்ளதாக பிறர் கூறும் வதந்திகளை நம்பக்கூடாது. இவ்வாறு, கோபால்சாமி பேசினார்.

தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா பேசுகையில் ""சட்டŒபை தேர்தலையொட்டி கடந்த மாதம் 10தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து விட்டால் படிவம் 001சி தாக்கல் செய்து, 15 ரூபாய் கட்டணம் செலுத்தி புதிய அடையாள அட்டையை பெறலாம். நல்ல மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது. இதை உணர்ந்து செயல்பட வேண்டும்,'' என்றார். தொடர்ந்து மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். முன்னாள் ஐ.ஏ.ஏஸ்., அதிகாரி தேவசகாயம் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பத்தாயிரம் குடும்பங்களுக்கு கிடைத்தது பட்டா; தேர்தலில் மாறுமா ஓட்டு?

கோவை மாவட்டத்தில் வருவாய்த்துறையின் முயற்சியால், கடந்த நான்கரை ஆண்டுகளில், 9,857 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன; இவை ஆளும்கட்சிக்கு சாதகமாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடக்கும் மக்கள் குறை கேட்பு முகாம்களில் வரும் மனுக்களில் 25 சதவீத மனுக்கள், இலவச வீட்டு மனைப்பட்டா கோருவதாகவே இருக்கும். கடந்த நான்கரை ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையைக் கணக்கிட்டால், 20 ஆயிரத்தைத் தாண்டும். எந்த நம்பிக்கையில், இவர்கள் மனுக் கொடுக்க வருகிறார்கள் என்று எல்லோருக்குமே சந்தேகம் கிளம்பும்.

ஆனால், இந்த சந்தேகத்துக்கு விடை சொல்கிறது வருவாய்த்துறை தரும் புள்ளி விபரம். ஏனெனில், கடந்த நான்கரை ஆண்டுகளில் 9,857 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கி சாதனை படைத்துள்ளது கோவை மாவட்ட வருவாய்த்துறை. திருப்பூர் மாவட்டத்தில் தற்போதுள்ள பழைய கோவை மாவட்டப் பகுதிகளில் தரப்பட்ட வீட்டு மனைப்பட்டாக்கள் இதில் கணக்கில் கொள்ளப்படவில்லை.

தொகுதி வாரியாகக் கணக்கிடுகையில், பொள்ளாச்சி தொகுதியில்தான் அதிகபட்சமாக 2,670 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் தரப்பட்டுள்ளன. அந்த நிலத்தின் மதிப்பு, 98 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய். புதிதாக உருவாகியுள்ள சூலூர் தொகுதியில் 1,484 பேருக்கு 55 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டு, பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேட்டுப்பாளையத்தில் 1,338, கவுண்டம்பாளையத்தில் 1,059, கிணத்துக்கடவில் 825, வால்பாறையில் 767, கோவை வடக்கில் 694, தொண்டாமுத்தூரில் 467, சிங்காநல்லூரில் 288, கோவை தெற்கு தொகுதியில் 265 பேர் என 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து 9,857 பேருக்கு 3 கோடியே 48 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிலம் வழங்கப்பட்டு, வீட்டு மனைப்பட்டாவும் தரப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம், பட்டா பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே ஓரிடத்தில் குடியிருந்து, அந்த இடத்துக்கு பட்டா கிடைக்காமலிருந்தவர்கள் என்பதுதான். உதாரணமாக, வடவள்ளி பகுதியில் 1943லிருந்து புறம்போக்கு இடத்தில் குடியிருந்த 50 குடும்பங்களுக்கு கடந்த ஆண்டில்தான் பட்டா வழங்கப்பட்டுள்ளது. சூலூர் விரளிக்காடு என்ற பகுதியில் 1965லிருந்து குடியிருந்தவர்களுக்கு இப்போதுதான் பட்டா கிடைத்துள்ளது.

கோவையில் கடந்த 1998ல் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது, 220 குடும்பங்களுக்கு செட்டிபாளையத்தில் இடம் ஒதுக்கப்பட்டது; பட்டா கொடுத்தும் அவர்கள் அங்கே போகவில்லை. அங்கே குடியிருந்தவர்களுக்கோ பட்டா இல்லை. பழைய பட்டாவை 2008ல் ரத்து செய்து, தற்போது குடியிருப்பவர்களுக்கு பட்டா கொடுத்து, நீண்ட கால பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

நீர் நிலை புறம்போக்குகளை ஆக்கிரமித்திருப்பவர்களுக்கு மாற்று இடம் தருவதற்காகவும் இந்த அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. கோவை மாநகராட்சிப் பகுதிக்குள், பல்வேறு குளங்களில் குடியிருக்கும் 3,840 குடும்பங்களுக்கு உக்கடம் மற்றும் அம்மன் குளத்தில் குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் கட்டி முடியும் தறுவாயில் உள்ளன; சூலூரில் 1,403 வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டால், வாலாங்குளம், முத்தண்ணன் குளம், சூலூர் சின்ன ஏரி, பெரிய ஏரி, ராஜ வாய்க்கால், எம்.ஜி.ஆர்., நகர் (ஓடைப்பகுதி) என பல்வேறு நீர் நிலை புறம்போக்குகளில் உள்ளவர்களையும் அங்கிருந்து வெளியேற்றி, அவற்றை முழுமையாக மீட்க முடியும். இந்த அரசின் சாதனைகளில் ஒன்றாக இதை நிச்சயம் பதிவு செய்யலாம்.

இவை மட்டுமின்றி, நீலம்பூர், பச்சினாம்பதி, மத்வராயபுரம் பகுதியிலுள்ள பல குடும்பங்களுக்காகவும், சூலூர் விமானப்படை விமான நிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்பட்ட 125 குடும்பங்களுக்காகவும் புதிதாக நிலங்களை கையகப்படுத்தும் பணியையும் மாவட்ட நிர்வாகம் வெற்றிகரமாக முடித்துள்ளது. தென்கரை, மாச்சநாயக்கன் பாளையத்தில் 3 ஏக்கர் 20 சென்ட் இடங்களை கையகப்படுத்தியது, ஓர் உதாரணம்.

ஒட்டுமொத்தமாக, கோவை மாவட்டத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா, குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், சமத்துவபுரம் என பல்வேறு திட்டங்களில், 16 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு நிலம் மற்றும் வீடுகள் கிடைத்துள்ளன. இவை அனைத்துமே ஓட்டுக்களாக மாறும் என்பது ஆளும்கட்சியினர் நம்பிக்கை. அது உண்மையானால், ஆளும்கட்சியினர் முதலில் நன்றி சொல்ல வேண்டியது வருவாய்த்துறைக்குதான்.

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் கைது

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்றிரவு சோதனை செய்தனர். சொத்து வரி விதிப்புக்காக 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, பில் கலெக்டரை கைது செய்தனர்.

திருப்பூர், ரங்கநாதபுரம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம்; பனியன் கம்பெனி உரிமையாளர். இவருக்கு சொந்தமான வீட்டை இடித்து, விஸ்தரிப்பு செய்துள்ளார். சொத்து வரி விதிப்பில் மாற்றம் செய்வதற்காக, குமரன் வணிக வளாகத்தில் செயல்படும் மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் வருவாய் பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். வரியை நிர்ணயம் செய்ய, 10 ஆயிரம் ரூபாய் வேண்டுமென, பில் கலெக்டர் ராஜூ, லஞ்சம் கேட்டு கட்டாயப்படுத்தி உள்ளார்.

கடந்த 25ம் தேதி, 6,000 ரூபாயை எடுத்துச் சென்றபோது, "10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே வரி விதிக்கப்படும்' என மறுத்துள்ளார். இதையடுத்து, கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் வெங்கடாசலம் புகார் அளித்தார். அதன்படி, ரசாயனம் தடவிய இருபது 500 ரூபாய் நோட்டுகளுடன், நேற்று மாலை 4.30 மணிக்கு அலுவலகம் சென்றுள்ளார். அப்போது, ராஜூ வெளியே சென்றிருந்ததால், ஊத்துக்குளி ரோட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். மாலை 6.15 மணிக்கு, ஊத்துக்குளி ரோடு ஸ்டேட் பாங்க் முன் நின்று, 10 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். மறைந்திருந்த லஞ்சு ஒழிப்பு போலீசார் உடனடியாக வந்து, ராஜூவை கையும் களவுமாக பிடித்தனர். அவரை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணை நடத்தி, கைது செய்தனர்.

கிரிக்கெட் சூதாட்டம் : கோடிகள் புழக்கத்தால் தெருக்கோடியில் குடும்பங்கள்

உலக கோப்பை கிரிக்கெட், "சூதாட்டம்' ஊட்டியில் மறைமுகமாக நடந்து வருகிறது; இந்தியா - இங்கிலாந்து போட்டி, "டையில்' முடிந்ததால், பணம் கட்டியவர்கள் மத்தியில், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன.

ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே, பல்வேறு போட்டிகளுக்கும், "சூதாட்டம்' நடத்தப்படும் முக்கிய இடமாக, நீலகிரி மாவட்டம் உள்ளது. இங்கு கோத்தகிரி, குன்னூர், ஊட்டி, கூடலூர் பகுதிகளில், தெரிந்தும், தெரியாமலும், பல இடங்களில், பல விதமாக சூதாட்டங்கள் நடந்து வருகின்றன. இவை இன்றளவும் தொடர்கின்றன.ஊட்டியில் அரசின் அனுமதி பெறப்பட்டு குதிரை பந்தயம் உட்பட பல்வேறு பொழுதுபோக்கு, "கிளப்'கள், நூற்றாண்டுகளை கடந்தும், இன்றும் தொடர்கின்றன. அதே வேளையில், எவ்வித அனுமதியும் இல்லாமல், விளையாட்டு, தேர்தல், அரசியல் கட்சி கூட்டணி தொடர்பாக, "தற்காலிக' சூதாட்டங்கள், மாவட்டத்தின் பல இடங்களில் நடக்கின்றன.இதில், "பணம் படைத்தவர்கள்' அதிகம் ஈடுபட்டாலும், சில நடுத்தர வர்க்கத்தினரும் அடிக்கடி சிக்கி, தங்கள் குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருகின்றனர்.

தற்போது, உலக கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்கியதில் இருந்து, ஊட்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், அணிக்கு தகுந்தாற் போல், "விலை' நிர்ணயம் செய்து, "சங்கேத எஸ்.எம்.எஸ்.,' அடிப்படையில், இந்த சூதாட்டம். "சூடாக' நடந்து வருகிறது.இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் விளையாடும் போது, அதிகளவில் பணம் புழங்குகிறது. நேற்று முன்தினம், இந்தியா - இங்கிலாந்து விளையாடிய போட்டிகளில், இந்தியாவுக்கு ஆதரவாக, பல போட்டியாளர்கள் விளையாடியுள்ளனர். சிலர் இங்கிலாந்துக்கு ஆதரவாக விளையாடி உள்ளனர். அதனால், இங்கிலாந்துக்கு விளையாடியவர்கள் வென்றால் பெரிய தொகை கிடைக்க வாய்ப்பிருந்தது.கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் பரபரப்பாக்கிய அந்த போட்டி, சூதாட்டக்காரர்களுக்கும் ரத்தக் கொதிப்பை அதிகரிக்க செய்தது. ஒருவர் கூட, "டை' ஆகும் என எதிர்பார்க்கவில்லை.

ஆனால், "டையில்' ஆட்டம் முடிந்ததால் அனைவரும், "அப்செட்' ஆகினர். இந்தியாவுக்கு ஆதரவாக பணம் கட்டியவர்கள் ஆறுதல் அடைந்தனர். ஒரு பெரிய தொகை, கைக்கு வரும் என எதிர்பார்த்த இங்கிலாந்து ஆதரவாளர்கள் மிகவும் கவலை அடைந்தனர். இந்த ஆடுகளத்தை நடத்தும் முக்கிய நபர்கள் எவ்வாறு இந்த தொகையை பிரித்து கொடுப்பது என்பது தெரியாமல் குழப்பமடைந்தனர். பலர் தாங்கள் கட்டிய தொகை கிடைத்தால் போதுமென வாபஸ் வாங்கி சென்றனர். பலர் அடுத்த முறை இந்தியா விளையாடும் ஆட்டத்துக்கு, அதே தொகையை வைத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளனர். இதனால், இனி வரும் போட்டிகளில், சூதாட்ட தொகையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், பல வீரர்கள் கோடிகளை அள்ள உள்ள நிலையில், நீலகிரியில் பல குடும்பங்கள், "தெருக்கோடிக்கு' போகும் நிலை உள்ளது. .

தொல்லை தரும் போன் அழைப்பு விடிவுக்கு வர இன்னும் 20 நாள்

புதுடில்லி: மொபைல் போன்களுக்கு வரும், தொல்லை தரும் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்., களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை, மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இம்மாதம் 21ம்தேதி வரை தள்ளி வைத்துள்ளது.

மொபைல் போன்களில் தினமும் தேவையற்ற அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. வங்கியில் கடன் வேண்டுமா? உங்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டுமா? உங்களுக்கு பல லட்சம் ரூபாயில் பரிசு காத்திருக்கிறது என்பது போன்ற, பல்வேறு விதமான விளம்பரங்கள், மொபைல் போன் வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்கின்றன. இப்பிரச்னைக்கு முடிவு கட்ட மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி நடவடிக்கையை எடுத்தது. தேவையில்லாத அழைப்புகளை விரும்பாதவர்கள் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. டெலிமார்க்கெட்டிங்கில் ஈடுபடுபவர்களிடமிருந்து, வெறுப்படைச் செய்யும் அழைப்புகளும், குறுந்தகவல்களும் (எஸ்.எம்.எஸ்.,) வந்து கொண்டு தான் இருக்கின்றன. "அழைக்காதீர்' பட்டியலில் தங்கள் மொபைல் எண்ணை வாடிக்கையாளர்கள் பதிவு செய்த பிறகும், டெலிமார்க்கெட்டிங் சேவை நிறுவனங்களிடமிருந்து வரும் அழைப்புகளுக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, கூறப்பட்டது. இதை டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களோ, தொலைபேசி சேவை நிறுவனங்களோ கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனவே, அபராத தொகையை கணிசமாக உயர்த்த "டிராய்' முடிவு செய்தது.

டிராய் விதித்த விதிமுறைகளின் விவரம் வருமாறு: டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களிடமிருந்து வரும் அழைப்புகளை விரும்பாதவர்கள், 1909 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அல்லது இதே எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி, "என்னை அழைக்காதீர்' என்று குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ளலாம். டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் "700' என்ற இலக்கத்தில் துவங்கும் எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிலிருந்து தான் விளம்பர எஸ்.எம்.எஸ்.,க்களை அனுப்ப வேண்டும். இதற்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, என்றால் சேவையை தொடரலாம். அவர்கள் இதை தொல்லை தரும் அழைப்பாகக் கருதி புகார் செய்தால், சம்பந்தப்பட்ட டெலிமார்க்கெட்டிங் நிறுவனத்துக்கு முதலில் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை தேவையற்ற அழைப்பை அனுப்பினால் 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது அழைப்புக்கு 80 ஆயிரமும், நான்காவது அழைப்புக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரமும், ஐந்தாவது அழைப்புக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், ஆறாவது அழைப்புக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த சேவையை நடத்துவதற்க டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள், தொலைபேசி சேவை நிறுவனத்திடம் கணிசமான உத்தரவாத தொகையை முன்கூட்டியே செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தேவையற்ற அழைப்புகள் குறித்து பதிவு செய்யாத சந்தாதாரர் ஒருவரது மொபைல் போனில் இருந்து, வர்த்தக தொடர்பான விளம்பரங்களை அனுப்பினால், அவருக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும். அடுத்த முறையும் தவறை செய்தால், அவரது தொடர்பு துண்டிக்கப்படும். டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் விளம்பரங்களை இரவு 9 மணி முதல் காலை 9 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி தொந்தரவு செய்யக்கூடாது. டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் அனுப்பும் தகவல்கள், சேவை வழங்கும் மொபைல் நிறுவனம் வழியாக வர வேண்டும். அந்த தகவல்களை, அந்நிறுவனம் பரிசோதித்து தேவையற்றதை நீக்கவும் உரிமை உள்ளது. இவ்வாறு டிராய் விதிமுறைகளை வகுத்தது.

வேண்டாத அழைப்புகளை தவிர்க்க ஒதுக்கப்படும் எண் குறித்து, பல்வேறு குழப்பங்கள் நிலவுவதால் டிராய், டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு விதித்த கெடுவை மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது. தேவையற்ற அழைப்புகளை தடுக்க ஒதுக்கப்பட்ட எண்ணுக்கும், எஸ்.டி.டி.,எண்ணுக்கும் இடையே சில இடங்களில் குழப்பம் காணப்படுகிறது. தொலை தொடர்புத் துறை இதற்கென இன்னும் உரிய எண்களை ஒதுக்கீடு செய்யாததால், நேற்றுடன் முடிவடைந்த கெடுவை வரும் 20ம் தேதி வரை டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு நீட்டித்துள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் வரும் 21ம்தேதி வரை தொல்லை தரும் அழைப்புகளையும், குறுந்தகவல்களையும் பொறுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும்.

லட்சியத்தை நிறைவேற்ற ராமதாசும், நானும் ஒன்றுபட்டு நிற்போம்: முதல்வர் கருணாநிதி

ஒரு லட்சியத்தை நிறைவேற்ற நானும், ராமதாசும் ஒன்றுபட்டு நிற்போம்,'' என முதல்வர் கருணாநிதி பேசினார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேரன் சுகந்தன் - டீனாவின் திருமணம் சென்னையில் நேற்று நடந்தது.

விழாவில் முதல்வர் கருணாநிதி வாழ்த்தி பேசியதாவது:மணமக்களை ஸ்டாலின் வாழ்த்தும் போது, "தேர்தல் திருமணம்' என்றார். இது மண மகனை, மண மகள் வீட்டாரும், மண மகளை மணமகன் வீட்டாரும் தேர்வு செய்த பின் நடக்கின்ற திருமணம். ஏற்கனவே இல்லத்தார் தேர்ந்தெடுத்து நடத்துகின்ற திருமணம். எனவே, ஒரு நல்ல கூட்டணி. இரு குடும்பத்திற்கிடையே அமைந்து அந்தக் கூட்டணி இந்தக் குடும்பத்தின் குலவிளக்குகளை ஏற்றி வைக்கக் கூடிய கூட்டணியாக விளங்கும். மணி பேசும் போது என்னைச் சிறப்பிக்கும் போது எதிர்கட்சித் தலைவராக, எதிர்கட்சித் துணை தலைவராக, எதிர்க் கட்சி கொறடாவாக, அமைச்சராக, பின் முதல்வராக என்று இப்படி 56, 60 ஆண்டுகளில் நான் வகித்த பதவிகளையெல்லாம் சொன்னார்.அந்த பதவிகளை விட இன்றைக்கு இந்தத் திருமண விழாவிலே புரோகிதராக அமர்ந்திருக்கின்ற, இந்தத் திருமணத்தை நடத்தி வைக்கின்ற இந்தப் பணியைத் தான் பெரும் பதவியாக கருதுகிறேன்.

புரோகிதர் பதவியை பெரிய பதவியாகக் கருதுகிறாய் என, யாராவது கேட்டால் இன்றைக்கு அந்தப் பதவிக்குத் தான் நாட்டிலே பெருமை. எனவே அந்தப் புரோகிதராக இந்தத் திருமண விழாவிலே கலந்து கொண்டு மண மக்களை நான் வாழ்த்துகிறேன். குடும்பம் என்றால் இடையிலே சில பிணக்குகள் வரக்கூடும். என்ன தான் நான் மண மகனாக, ராமதாஸ் மணமகளாக இருந்தாலும் எங்கள் குடும்பத்திற்குள்ளே பிணக்குகள் வரும் போகும். ஆனாலும் ஒரு லட்சியத்தை நிறைவேற்ற, ஈடேற்ற முனையும் போது நாங்கள் ஒன்றுபட்டு நிற்போம்.எங்களுடைய குடும்பங்களிலும் தமிழ் வழியிலே திருமணங்களை நடத்த முடியும்; நடத்துவோம். சட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நடத்துவோம் என்ற உறுதியோடு ராமதாஸ் இங்கே நடத்திக் காட்டிய திருமணம், பழந்தமிழர் காலத்திலே பசும்புல் தரையில் பால் வண்ண உடை உடுத்தி, காதலுக்கும் கடவுளுக்கும் வேறுபாடில்லை; அது காலத்தால் அழிவதுமில்லை' என, வாழ்த்த தமிழர்கள் காலத்துத் திருமண முறையாக இங்கே இருந்ததை நான் கண்டேன்; வியந்தேன்.

ராமதாசையும், அவரது குடும்பத்தாரையும் அவருடைய கட்சித் தொண்டர்களையும் நான் வாழ்த்துகிறேன். நாம் அடையப் போகும் வெற்றிக்கு இது முதல் அடையாளமாக இருக்கட்டும் என்று கூறி, இதுவும் ஒரு மங்கலமான விழா தான் என்று எல்லோராலும் பாராட்டப்படக் கூடிய, போற்றக் கூடிய, விரும்பக் கூடிய விழாவாக அமையும்.இந்தக் குடும்ப விழா, எல்லாராலும் பாராட்டக் கூடிய ஒரு விழாவாக வெற்றிக்கு அடையாள விழாவாக அமைந்திருக்கிறது. மணமக்கள் பல்லாண்டு வாழ்க. ராமதாசின் கொள்ளுப் பேரனுக்கு நடைபெறுகின்ற திருமண விழாவிலும் கலந்து கொள்கிற வாய்ப்பு நமக்கெல்லாம் கிடைக்கும் என்று சொல்வதற்குக் காரணம் அந்த அளவிற்கு எங்களுடைய நட்பு நீடிக்க வேண்டும் என்ற ஆசையோடு இதைச் சொல்கிறேன். அப்படி நீடிப்பதற்கு அன்புமணியும் அருள் பாலிக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

தரமான கல்வி கிடைத்தால் இட ஒதுக்கீடு தேவையில்லை : திருமண விழாவில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:நேரம் தவறாது காரியம் செய்து முடிப்பவர் கருணாநிதி. அவரைப் பார்த்து நான் நேரம் தவறாமையை கடைபிடிக்கிறேன். நான் எந்த காரியத்தை துவக்கினாலும், என் உள்ளம் அவரைத் தான் நினைக்கும். நான் துவக்கிய, "டிவி', பத்திரிகை, கல்வி அறக்கட்டளை, பண்ணிசை மன்றம் என அனைத்திற்கும் அவரைத் தான் அழைத்தேன். அவர் தான் துவக்கி வைத்தார். எங்கள் நட்பும் பாசமும் என்றும் இருக்கும். 31 தொகுதிகளை அள்ளி வந்ததில் பாட்டாளிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆறாவது முறையாக கருணாநிதியை முதல்வராக்க அனைவரும் துடிக்கிறார்கள். யார் சதிவலை பின்னினாலும் அதை தூள் தூளாக்க நாங்கள் இருக்கிறோம். கருணாநிதி குடும்ப பாசத்தோடு, பேரன், பேத்திகளோடு குதுகலித்து வாழ்வாங்கு வாழ்கிறார். சில பேருக்கு அது பொறாமையாக உள்ளது.

கொள்ளு பேரன் திருமணத்தையும் நான் நடத்த வேண்டும் என, கருணாநிதி குறிப்பிட்டார். நான் இருக்கிறேனோ இல்லையோ 100 ஆண்டுகளையும் கடந்து கருணாநிதி வாழ்ந்து, தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கி தமிழகத்தில் பசி - பட்டினி இல்லாத நிலையை உருவாக்கி இருக்கிறார். அடுத்த முறை ஆட்சிக்கு வரும் போது, வேளாண்மை முதன்மையாக இருக்க வேண்டும். எல்லோருக்கும் தரமான கல்வி கிடைத்துவிட்டால், இட ஒதுக்கீடு தேவை இல்லை. அதை நோக்கி நாம் செல்ல வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

தாய் கழகத்தின் மூலம் காங்கிரசுக்கு தி.மு.க., மிரட்டல்: கூட்டணியில் அதிகரிக்கும் நெருக்கடி

சட்டசபை தேர்தல் தொகுதிப் பங்கீட்டில், காங்கிரஸ் காட்டும் கெடுபிடியால் தி.மு.க., எரிச்சலடைந்துள்ளது. "கூட்டணியை தொடர வேண்டுமா' என்று, தங்களது தாய் கழகத்தின் மூலம் மிரட்டல் அறிக்கை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து, டில்லியில் சோனியாவுடன் நடத்திய பேச்சு சாதகமாக அமையாத நிலையில், தி.மு.க., தலைமை அதிர்ச்சியானது. தொடர்ந்து, தி.மு.க.,வுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக அமைக்கப்பட்ட ஐவர் குழுவில் தங்கபாலு, சிதம்பரம், வாசன், ஜெயந்திநடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் இடம்பெற்ற போது, தி.மு.க., தரப்பு நிம்மதியடைந்தது. கடந்த நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க.,விற்கு ஆதரவாகவே தொடர்ந்து பேசியும், செயல்பட்டும் வருகின்றனர். இளங்கோவன், கார்த்திசிதம்பரம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா தவிர தங்கபாலு, சிதம்பரம், வாசன் உள்ளிட்ட தலைவர்கள் தி.மு.க., ஆதரவு போக்கையே கடைபிடித்து வந்துள்ளனர்.அதனால், தி.மு.க.,வின் தரப்பை டில்லி தலைமைக்கு ஐவர் குழு உணர்த்தி, சுமுகமான முடிவுக்கு அழைத்துச் செல்லும் என்று, தி.மு.க., நம்பியது. ஆனால், ஐவர் குழுவினருடனான பேச்சுவார்த்தை இதற்கு எதிர்மறையாக சென்றது, தி.மு.க.,விற்கு கசப்பை ஏற்படுத்தியது. தி.மு.க.,விற்கு ஆதரவாக குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்த தலைவர்கள், குரலை உயர்த்தி கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை வைத்ததால், தி.மு.க., எரிச்சலடைந்துள்ளது.

இதுவரை இரு கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில், காங்கிரஸ் தனது நிலையில் இருந்து இறங்கி வருவதாய்த் தெரியவில்லை. பேச்சுவார்த்தையின் போது மட்டுமல்லாமல், வெளியிடங்களில் நிகழ்ச்சிகளில் பேசும்போது, தி.மு.க., எதிர்ப்பு கருத்துக்களை காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படுத்தி வருவது, கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசும்போது, " காங்கிரஸ் பட்ட மரம் அல்ல; பசுமையான மரம். இதிலிருந்து ஒரு இலை விழுந்தால், இரு இலை துளிர்க்கும்' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதே போல், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, காஞ்சிபுரத்தில் மற்றொரு நிகழ்ச்சியில் பேசும்போது, " ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அரசாக, காங்கிரஸ் அரசு திகழ்கிறது. காங்கிரஸ் யாருக்கும் தலை வணங்காது; அன்புக்கு அடிபணிவோம்; அதிகாரத்திற்கு தலைவணங்க மாட்டோம்; சோனியா, ராகுலை மதிப்பவர்களை மதிப்போம்; எதிர்ப்பவர்களை எதிர்ப்போம்' என்று ஆவேசமாக பேசினார். தி.மு.க., ஆதரவு தலைவராக அறியப்பட்ட தங்கபாலு போன்றவர்கள் இது போன்று எச்சரிக்கை வார்த்தைகளை விடுத்து பேசுவதை தி.மு.க., தலைமை ரசிக்கவில்லை. இருப்பினும், உடனடி பதிலடி கொடுத்தால், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு நிரந்தரமாக சிக்கல் வந்துவிடும் என்ற அச்சம் தி.மு.க.,விடம் ஏற்பட்டுள்ளது.இதனால், தனது தாய் கழகமான திராவிடர் கழகம் மூலமாக காங்கிரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் முயற்சியில், தி.மு.க., இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

திராவிடர் கழக தலைவர் வீரமணி நேற்று விடுத்துள்ள அறிக்கையில், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க., வெளியேற வேண்டும் என்ற ரீதியில் கருத்து தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.வீரமணி விடுத்துள்ள அறிக்கை: கூட்டணி என்ற ஒன்றைக் காட்டி, தசரதனிடம் கைகேயி வரம் பெற்றதாக, ராமாயணக் காதையில் வரும் நிகழ்வைப் போல, தோழமை உணர்வு காட்ட வேண்டிய சில கட்சிகள், தோள் மீது சவாரி செய்ய, மிரட்டல் பாணி ஆயுதங்கள் கையில் கிடைத்து விட்டது போல், கற்பனைக் குதிரையில் சவாரி செய்வது போன்ற நிபந்தனைகளை ஏற்படுத்தினால், அதற்கு தி.மு.க., இணங்க வேண்டிய, இறங்க வேண்டிய அவசியம் இல்லை.

தி.மு.க., தேர்தல் கால நெருக்கடிகளைச் சந்திக்கும் கட்சி மட்டும் அல்ல; அரசியல் நெருக்கடி கால நெருப்பாற்றில் நீந்தி வந்த, ஒரு ஜனநாயக பீனிக்ஸ் பறவை. குட்டக் குட்ட குனியும் போக்குக்கு தி.மு.க., ஆட்பட்டு விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், தேவையற்ற கூடுதல் பாரத்தை இறக்கிவிட்டு, நிரந்தர சுமை தாங்கியாக ஆகாமல், சுயமரியாதையுடன் முடிவு எடுக்க வேண்டும். நட்பு பேசிக்கொண்டே, கசப்பும், வெறுப்பும் மேலோங்கும் இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு, களத்தில் இறங்குவது யாருக்கும் நல்லதல்ல."நான் உமி கொண்டு வருவேன்; நீ நெல் கொண்டு வா; குத்திய பின் ஊதி, ஊதி தின்போம்' என்ற போக்கு நியாயமாகுமா? 1980ல் இப்படி விட்டுக் கொடுத்து கெட்டுப் போன பழைய வரலாறு திரும்ப வேண்டாம். எனவே, தி.மு.க., சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார். வீரமணியின் இந்த அறிக்கை தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதால், காங்கிரஸ் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.

வாக்காளர்களுக்கு பணமழை; கட்சிகளுக்கு கவலை!

தமிழகத்தில் உள்ள 10 பெரிய தொகுதிகளில் அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்பதால், அதில் போட்டியிடப்போகும் அரசியல் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர். பத்து சிறிய தொகுதிகளில் திருப்தியளிக்கும் அளவிற்கு பணமழை பொழியும் என்பதால், வாக்காளர்கள் குஷி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி, அதிகாரத்தை நிர்ணயிக்கும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கு, அனைத்து அரசியல் கட்சிகளும் தயார் நிலையில் உள்ளன. தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணிகளில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் தேதி, அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, கட்சியின் மேல் மட்டம் முதல் அடிமட்டம் வரையுள்ள நிர்வாகிகள், தொண்டர்களை, "கவனிக்கும்' பணிகள் துவங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் நலத்திட்டம் என்ற பெயரில் இலவசங்கள், தடபுடல் பிரியாணி, மது விருந்துகள் இப்போதே களைகட்ட துவங்கியுள்ளது. கட்சியினருக்கு கிடைக்கும், "கவனிப்பு' அடுத்த சில நாட்களில் பொதுமக்களுக்கு கிடைக்கப் போகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளிடம் இருந்து பணமழை பொழியும் என்பதால், மக்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் வாக்காளர்கள் அதிகம் இருக்கும் 10 சட்டசபை தொகுதிகளில், அதிக பணத்தை செலவழிக்க வேண்டிய நிர்பந்தம் அரசியல் கட்சிகளுக்கும், அதில் போட்டியிடப் போகும் வேட்பாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அந்த 10 பெரிய தொகுதிகளில், சோழிங்கநல்லூர் (3,40,615 ஓட்டு - காஞ்சிபுரம் மாவட்டம்), கவுண்டம்பாளையம் (2,89,912 - கோவை), ஆவடி (2,65,914 - திருவள்ளூர்), பல்லாவரம் (2,65,703 - காஞ்சிபுரம்), மதுரவாயல் (2,57,528 - திருவள்ளூர்), மாதவரம் (2,54,654 - திருவள்ளூர்), முதுகுளத்தூர் (2,54,552 - ராமநாதபுரம்), அம்பத்தூர் (2,51,002 - திருவள்ளூர்), செங்கல்பட்டு (2,40,496 - காஞ்சிபுரம்), தாம்பரம் (2,38,295 - காஞ்சிபுரம்) ஆகியவை அடக்கம்.

இத்தொகுதிகளில் வாக்காளர்களை கவர அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்பதால், அரசியல் கட்சியினர் கலக்கம் அடைந்தனர். அதிக வாக்காளர்கள் உள்ள நிலையில், குறைந்த அளவே கவனிப்பு இருக்கும் என்பதால், வாக்காளர்களும் சோகமடைந்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் வாக்காளர்கள் குறைவாக உள்ள 10 சிறிய தொகுதிகளில் திருப்தியளிக்கும் அளவிற்கு, "கவனிப்பு' இருக்கும் என்பதால் வாக்காளர்கள் குஷியடைந்துள்ளனர். அந்த 10 சிறிய தொகுதிகளில் கீழ்வேளூர் (1,40,127 - நாகை மாவட்டம்), துறைமுகம் (1,45,183 - சென்னை), கந்தர்வகோட்டை (1,48,625 - புதுக்கோட்டை), நாகப்பட்டினம் (1,49,560 - நாகை), ராயபுரம் (1,51,333 - சென்னை), வேதாரண்யம் (1,54,281 - நாகை), கூடலூர் (1,55,357 - நீலகிரி), விராலிமலை (1,57,653 - புதுக்கோட்டை), எழும்பூர் (1,58,945 - சென்னை), திருப்பூர் (1,59,886 - திருப்பூர்) ஆகியவை அடக்கம்.

மற்ற தொகுதிகளைக் காட்டிலும், குறைந்த அளவே பணம் செலவாகும் என்பதால், இத்தொகுதிகளில் போட்டியிட, பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுமட்டுமின்றி கட்சி தலைவர்கள் போட்டியிடும் வி.வி.ஐ.பி., தொகுதிகளிலும், இம்முறை வரலாறு படைக்கும் அளவிற்கு, பணம் வாரியிறைக்கப்படும் வாய்ப்புள்ளது. அந்த தொகுதிகள் பெரியது, சிறியதாக இருந்தாலும் திருமங்கலம், "பார்முலா' அரங்கேறுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால், தலைவர்கள் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினருக்கும், வாக்காளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள் பரிதாப சாவு : மாஜி முதல்வர் கோரிக்கை

ஜெய்ப்பூர் : "கெட்டுப் போன மருந்தை கொடுத்ததால், கர்ப்பிணிகள் 13 பேர் இறந்த சம்பவம் குறித்து, நடுநிலையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'என, ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான வசுந்தரா ராஜே சிந்தியா கூறியதாவது: கெட்டுப் போன குளுக்கோஸ் மருந்தை ஏற்றியதால், ஜோத்பூரில் 13 கர்ப்பிணிகள் பலியாகி விட்டனர். இது அதிர்ச்சிகரமான சம்பவம். 13 பேர் இறந்ததற்கு பின் தான், இந்த விஷயத்தில் நடவடிக்கைகளை, மாநில அரசு துவங்கியுள்ளது. அதுவும், சுகாதாரத் துறை மீது எந்த தவறும் இல்லை என, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து நடுநிலையான விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் கண்டறியப்பட்டு, சட்டத்துக்கு முன் நிறுத்த வேண்டும். இவ்வாறு வசுந்தரா கூறியுள்ளார்.

ஏமாற்றியது பிரணாப் பட்ஜெட்: விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட சலுகை அமலாவது எப்போது?

மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், பெரிதாக ஒன்றும் இல்லை. பெரிய அளவில் சலுகைகளை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வருமான வரி விலக்கு உச்சவரம்பு, சொற்பமாக, 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக, பிரத்தியேக சலுகைகள் எதுவும் இல்லை. விவசாய இயந்திரங்கள் மீதான சுங்கவரியும், மிகக் குறைந்த அளவே குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த தேவையான அறிவிப்புகளும் இடம்பெறவில்லை.
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, லோக்சபாவில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். தமிழகம் உட்பட, ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் உள்ளதால், பட்ஜெட்டில் பல சலுகைகள் அறிவிக்கப்படலாம்.குறிப்பாக, விவசாயிகளைக் கவரும் வகையிலான அறிவிப்புகள் இடம் பெறலாம். அதேபோல், மாதச் சம்பளம் பெறுவோரை திருப்திபடுத்தும் வகையில், வருமான வரி விலக்கு வரம்பு கணிசமாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று சமர்ப்பிக்கப்பட்ட மத்திய பட்ஜெட், அதற்கு மாறாகவே இருந்தது. பெரிதாக, எந்த விதமான அறிவிப்புகளும், சலுகைகளும் இடம் பெறவில்லை. தனி நபர்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பு, 1.60 லட்சத்தில் இருந்து, 20 ஆயிரம் மட்டும் உயர்த்தப்பட்டு, 1.80 லட்சம் ரூபாயாகியுள்ளது. அதேபோல், மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பும், 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மட்டுமே சலுகை தரப்பட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறையை குறைத்து, வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகள் அதிகளவில் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், "3ஜி' ஸ்பெக்ட்ரம் விற்றதில், அரசுக்கு அதிகளவு நிதி சேர உதவியது.புதிதாக, 130 அயிட்டங்கள், கலால்வரி வரி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அத்துடன் உள்நாட்டு, வெளிநாட்டு விமான கட்டணங்கள் உயரும் வகையில், சேவை வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறையினர் வளர்ச்சி அடையும் வகையில், குறைந்த வருமானம் உள்ளவர்கள், எளிதாக வீடு வாங்கும் வகையிலும், 15 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு, 1 சதவீத வட்டி மானியம் தரப்பட்டுள்ளது.பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த தேவையான அறிவிப்புகள் இல்லை. தற்போது, மத்திய கிழக்கில் உள்ள நிலவரத்தில், கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்காது என, உலக நாடுகள் அஞ்சுகின்றன. அதை. எப்படி சமாளிப்பது என்ற வழிவகை பட்ஜெட்டில் கோடிட்டு காட்டப்படவில்லை. வேலைவாய்ப்பு தரும் திட்டங்கள் பற்றி அதிக குறிப்புகள் இல்லை.

மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் உரங்களுக்காக வழங்கப்படும் மானியம், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களை நேரடியாக சென்று சேரும் வகையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. அதற்கான தனி அடையாள அட்டை, அதை நிறைவேற்ற உரிய நிர்வாக நடவடிக்கை, அதற்குப் பின் சில மாவட்டங்களில் அமல் செய்து குறைநிறைகளை அறிதல் அதற்குப் பின் அமலாக்கம் என, பல தடைகள் உள்ளன. இதன்மூலம், இவற்றுக்கு வழங்கப்படும் மானியத்தை குறைக்க மத்திய அரசு மறைமுகமாக முற்பட்டுள்ளது.விவசாயிகளுக்காக புதிய சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. விவசாயக் கடன்களை அதிகளவில் வழங்குவதற்காக, கூடுதலாக, 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு பயன்படும் இயந்திரங்கள் மீதான சுங்கவரி, 5 சதவீதத்தில் இருந்து, மிகக் குறைந்த அளவாக, 0.5 சதவீதம் குறைக்கப்பட்டு, 4.5 சதவீதமாகியுள்ளது.மொத்தத்தில், இந்த பட்ஜெட், யாரையும் திருப்திபடுத்தாத ஏமாற்றம் தரும் பட்ஜெட்.

பரபரப்பு முடியாது: ""சர்வதேச அளவில் இன்னும் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், முக்கிய அறிவிப்புகள் இல்லாமல், பொருளாதார சீர்திருத்தத்தை மையமாக கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,'' என, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். பட்ஜெட்டை தாக்கல் செய்த பின், அவர் கூறியதாவது:உணவுப் பணவீக்கம், 20.2 சதவீதத்தில் இருந்து, 9.3 சதவீதமாக குறைந்தாலும் கூட, நமக்கு அது சவாலாகத்தான் இருக்கிறது. இதை சமாளித்து, பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க முடியுமே தவிர, பரபரப்பான அறிவிப்புகளை வெளியிடுவது இயலாத காரியம்.விலைவாசி உயர்வு பிரச்னையை சமாளிக்க, குறிப்பாக, உணவுப் பொருட்கள் சப்ளையில் உள்ள தடைகளை களைய, முன்னுரிமை கொடுத்துள்ளோம். விவசாய விளை பொருட்கள் சரியான முறையில் சப்ளையாவதற்குரிய வழிவகைகளை மேம்படுத்த வேண்டும்.தகவல் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, வருமான வரி வசூலில் பல புரட்சிகர மாறுதல்களை கொண்டு வர முடியும். நிதி பற்றாக்குறை, நடப்பாண்டில், 5.1 சதவீதமாக உள்ளது. அடுத்தாண்டு, 4.6 சதவீதமாக குறையும்.மாநிலங்களின் ஒத்துழைப்புடன், சரக்கு மற்றும் சேவை வரி திருத்த சட்டத்தை அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்.இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:* தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பு தற்போதுள்ள 1.60 லட்சத்தில் ரூபாய் இருந்து, 1.80 லட்சமாக ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
* மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு 65லிருந்து 60 ஆக குறைக்கப்பட்டதோடு 80 வயதிற்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது.
* கம்பெனிகளுக்கான கூடுதல் வரி 7.5 சதவீதத்தில் இருந்து, ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* சேவை வரி 10 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும்.
* நேரடி வரிகளில் அளிக்கப்பட்ட சலுகைகள் மூலம், அரசுக்கு ஒரு ஆண்டுக்கு 11,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
* கலால்வரி மற்றும் சுங்க வரிகள் மூலம், அரசுக்கு 7,300 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.
* மத்திய கலால் வரி வீதம் 10 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும். சென்வாட் வரி வீதத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லை.
* வழக்கமான ஒரு சதவீத கலால் வரி வரம்பில், 130 அயிட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உணவு, எரிபொருட்கள், விலை மதிப்புமிக்க கற்கள், தங்கம், வெள்ளி நகைகள் போன்றவற்றுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
* விவசாயத்திற்கு பயன்படும் இயந்திரங்கள் மீதான சுங்கவரி. ஐந்து சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
* நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்தப்படும் ஓட்டல் வாடகைகள், ஏசி ரெஸ்டாரன்ட்களில் வழங்கப்படும் மதுபானம், சில வகை மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள் போன்றவற்றுக்கும் சேவை வரி நீட்டிக்கப்பட்டுள்ளது.
* உள்நாட்டு விமான பயணத்திற்கான சேவை வரி 50 ரூபாய் ஆகவும், சர்வதேச பயணத்திற்கான சேவை வரி 250 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. உயர் வகுப்புகளுக்கு, விமான கட்டணத்தில் 10 சதவீதம் என்ற அளவில் சேவை வரி இருக்கும்.
* வரும் 2011 - 12ம் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை இலக்கு 4.6 சதவீதம். நடப்பு நிதியாண்டின் மதிப்பீடான 5.1 சதவீதத்தை விட குறைவாகும்.
* நடப்பு நிதியாண்டில் மொத்த செலவு மதிப்பீடு 12 லட்சத்து 57 ஆயிரத்து 729 கோடி ரூபாய். வரிகள் மூலம் மொத்த வருவாய் 9.3 லட்சம் கோடி ரூபாய்.
* முன்னுரிமை துறைக்கான வீட்டு வசதி கடன் வரம்பு 20 லட்சத்தில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மேலும், 15 லட்சம் வரை பெறப்படும் வீட்டு வசதி கடன்களுக்கு ஒரு சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.
* உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி இல்லாத கடன் பத்திரங்கள் வெளியிடப்படும்.
* விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனின் அளவு 3.75 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 4.75 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
* விவசாயிகளுக்கு ஏழு சதவீத வட்டியில் வழங்கப்படும், குறுகிய கால பண்ணை கடன்களுக்கான, வட்டி மானியம் தொடரும்.
* ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனாவிற்கான ஒதுக்கீடு 6,755 கோடி ரூபாயில் இருந்து 7,860 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
* மழை வளம் நிறைந்த பகுதிகளில், பருப்பு வகைகள் உற்பத்தியை அதிகரிக்க 300 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. பண்ணை உற்பத்தி சாகுபடியை மேம்படுத்தவும் மற்றொரு 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* நபார்டின் மூலதன ஆதாரம் மேம்படுத்தப்படும். குறுகிய கால கடன் நிதிக்காக அந்த அமைப்புக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும்.
* ஊரக வீட்டு வசதி நிதியத்திற்கான ஒதுக்கீடு 3 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
* பெண்கள் சுய உதவிக் குழு மேம்பாட்டு நிதியத்தை உருவாக்க தொகுப்பு நிதியாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும்.
* அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஊதியம் மாதம் .1,500 ரூபாய் லிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
* 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முதியோர் ஓய்வூதியம் 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
* நிரந்தர ஊனம் அடைந்து பணியில் இருந்து விடுவிக்கப்படும் ராணுவத்தினர் மற்றும் மத்திய துணை ராணுவப்படையினருக்கு இழப்பீட்டுத் தொகையாக 9 லட்சம் ரூபாய் தரப்படும்.



* தனிநபர் வரி வரம்பு இனி ரூ. 1.80 லட்சம்
* அங்கன்வாடி ஊழியர் சம்பளம் ரூ. 3,000
* குறைகிறது நிதிப்பற்றாக்குறை
* விவசாயிகளுக்கு சலுகையில் கடன் வசதி

* 130 பொருட்களின் மீது, "சென்வாட்' வரி
* கறுப்புப் பணம், பணவீக்கத்தால் கவலை
* விளையாட்டுத் துறைக்கு நிதி குறைப்பு
* சட்ட ஆலோசனைகளுக்கும் சேவை வரி

மொபைல் போன் விலை குறையும்

* சலவை சோப், சோலார் விளக்கு, இறக்குமதி நூல், மொபைல்போன், இங்க்ஜெட் பிரின்டர், மின்உற்பத்தி நிலைய உதிரிபாகங்கள், பிரின்ட்டிங் பிரஸ் சாதனங்கள், சினிமா பிலிம், ஆம்புலன்ஸ், அகர்பத்தி, ஓமியோபதி, சானிடரி நாப்கின் போன்றவற்றின் விலை குறையும்.
* ஸ்டெயின்லஸ் ஸ்டீல், பட்டு, இரும்புத்தாது, ஜிப்சம் ஆகியவற்றிற்கான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளதால், இவற்றின் விலைகளும் குறையும்.

கட்டணம் அதிகரிப்பு

* நாளொன்றுக்கு, 1,000 ரூபாய் வரை வியாபாரமாகும் ஓட்டல்கள், மது அருந்தும் வசதியுடன் கூடிய, "ஏசி' ரெஸ்டாரன்டுக்கு சேவை வரி விதிக்கப்படும். உள்நாட்டு விமான பயணத்திற்கு, 50 ரூபாயும், வெளிநாட்டு பயணத்திற்கு, 250 ரூபாயும் சேவை வரி விதிக்கப்படும். இதனால், 4,000 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
* சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்திற்கு, 20 கோடி ரூபாயும், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் காமர்ஸ் நிறுவனத்திற்கு, 10 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.

தமிழகத்தில் இரண்டு கட்டதேர்தல்? பண வினியோகத்தை தடுக்க அதிரடி

தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசித்து வந்த தேர்தல் கமிஷன், தற்போது தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளது. தேர்தலில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, பண வினியோகத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில், இரு கட்டமாக தேர்தலை நடத்த முடிவெடுத்துள்ளது. ஏப்ரல் 28ம் தேதி ஒரு கட்டமாகவும், மே 6ம் தேதி மற்றொரு கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது.

தமிழக சட்டசபைக்கு தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் தி.மு.க., கூட்டணியிலும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., கூட்டணியிலும் தற்போது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது.இன்னும், 10 நாட்களுக்குள் இரு அணிகளிலும், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிந்து, ஒவ்வொரு கட்சியும், போட்டியிடக்கூடிய தொகுதி எண்ணிக்கை விவரங்கள் தெளிவாக தெரிய வரும்.அதைத் தொடர்ந்து, எந்தெந்த தொகுதிகள் என்ற விவரங்களும் படிப்படியாக வெளிவர ஆரம்பிக்கும். இதற்கிடையே, தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு, நாளையோ (2ம் தேதி) அல்லது 3ம் தேதியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தல் குறித்து, ஏற்கனவே பல கட்டங்களாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷி ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரும், ஆலோசனை நடத்தியுள்ளார்.அதில் பங்கேற்ற அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், "ஒரு தொகுதியில் இருப்பவர்கள், மற்றொரு தொகுதிக்குச் செல்வதை தடுக்கும் வகையிலும், பண வினியோகத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும்' என வலியுறுத்தின. தி.மு.க., பிரதிநிதிகள், "எதற்கும் நாங்கள் தயார்' என தெரிவித்தனர்.ஒரே கட்டமாக தேர்தலை நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக, குரேஷியும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுப்பதற்கு, அரசியல் கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக, தேர்தல் கமிஷனுக்கு அதிகளவில் புகார்கள் சென்றன.

இதையடுத்து, தேர்தல் கமிஷன் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டதாக, தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரே நாளில் தேர்தல் நடத்தினால், 234 தொகுதிகளிலும் முழுமையான அளவில் கண்காணிப்பை மேற்கொள்வது சிரமம் என்றும், அதனால் பண வினியோகத்தை முழுமையான அளவில் தடுத்து நிறுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும், தேர்தல் கமிஷன் கருதுகிறது.இதனால், இரு கட்டங்களாக தேர்தல் நடத்தினால் கண்காணிப்பு பணிகளையும், பாதுகாப்பு பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்றும், பண வினியோகத்தை எளிதாக தடுத்து நிறுத்த முடியும் என்றும் தேர்தல் கமிஷன் நம்புவதாக கூறப்படுகிறது.எனவே, ஏப்ரல் 28ம் தேதி ஒரு கட்டமாகவும், மே 6ம் தேதி மற்றொரு கட்டமாகவும் தேர்தல் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.