வெள்ளி, 12 நவம்பர், 2010

ஸ்பெக்ட்ராம் பிரச்சினை: ஜெயலலிதா கருத்துக்கு இளங்கோவன் ஆதரவு

ஸ்பெக்ட்ராம் பிரச்சினை: 
 ஜெயலலிதா கருத்துக்கு இளங்கோவன் ஆதரவுஅ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஸ்பெக்ட்ராம் பிரச்சினையில் மத்திய மந்திரி ஆ. ராசா பதவி விலக வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை தி.மு.க. வாபஸ் பெற்றாலும் அ.தி.மு.க. ஆதரவு அளிக்க தயாராக உள்ளது என்று கூறினார். இதுபற்றி முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:-
 
ஜெயலலிதா அவருடைய கருத்தை சொல்லி இருக்கிறார். ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை சுதந்திரம் பெற்று ஆட்சிக்கு வந்ததில் இருந்து சில குற்றச்சாட்டுகள் மத்திய அரசு மீது வரும்போது உண்மை இல்லை என்றாலும் கூட சம்பந்தபட்ட மந்திரிகள் தார்மீக பொறுப்பேற்று பதவி விலகி இருக்கிறார்கள்.
 
அரியலூரில் ரெயில் விபத்து நடந்தபோது சம்பந்தமே இல்லாத டெல்லி மந்திரி லால்பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
இதேபோன்று பல சம்பவங்களை சொல்லலாம்.இப்போது கூட குற்றம் உண்மையா பொய்யா என விசாரணை முடியும் முன்பே சவான், கல்மாடி, சசிதரூர் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
 
எனவே தமிழகத்தில் காங்கிரஸ் தயவில் இருக்கும் தி.மு.க.வை சேர்ந்த டெல்லி அமைச்சர் கொஞ்சமாவது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அவர் உடனே ராஜினாமா செய்வது தான் சரியாக இருக்கும். காங்கிரசை பார்த்தாவது உடன் இருக்கிறோம் என்று சொல்லக்கூடியவர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். இது என் தனிப்பட்ட கருத்து.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
அ.தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் வரவேற்பீர்களா? என்ற கேள்விக்கு, கூட்டணி எப்படி இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்துக்கு சொல்லி விட்டோம். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றார்.

                                                                           

டோல்கேட்டில் கட்டணம் செலுத்துவதில் தகராறு-அதிமுக மாஜி எம்.பி. கார் மீது தாக்குதல்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் உள்ள டோல்கேட்டில் கட்டணம் செலுத்த மறுத்தது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் டோல்கேட் ஊழியர்கள், முன்னாள் அதிமுக எம்.பி. கோகுல இந்திராவின் கார் மீது கல்வீசித் தாக்கினர். இதையடுத்து 3 பேரை போலீஸார் பிடித்துச் சென்றனர்.

செஞ்சியில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோகுல இந்திரா நேற்று சென்னையில் இருந்து காரில் சென்றார்.

காஞ்சீபுரம் மாவட்ட எல்லையான அச்சரப்பாக்கம் தொழுப்பேடு டோல்கேட்டில் அவர்களது கார் சென்றதும் அங்குள்ள டோல்கேட் ஊழியர்கள் கட்டணம் கேட்டனர். அதற்கு அவர்கள் முன்னாள் எம்.பி. என்று கூறி, பணம் கட்டமறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் மாஜி எம்.பி. என்றால் அதற்கான அடையாள அட்டையை கேட்டனர். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் திடீரென கோகுல இந்திராவின் கார் மீது சரமாரியாக கல்வீசித் தாக்கினர் டோல்கேட் ஊழியர்கள். இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் விரைந்து வந்தனர். டோல்கேட் ஊழியர்களுக்கும், அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.

பெருமளவில் அதிமுகவினர் திரண்டதாலும், சாலை மறியலில் ஈடுபட்டதாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி அதிமுகவினரை சமரசப்படுத்தினர்.

பின்னர் கோகுல இந்திரா சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டது. அதன் பேரில் ஊழியர்களை போலீஸார் பிடித்துச் சென்றனர்.

நான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை-ராஜா உறுதி

Rajaடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் டிராய் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே நடைபெற்றது. எனவே இதுதொடர்பாக நான் பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா கூறியுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நாட்டுக்கு 1 லட்சத்து 73 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அமைச்சர் ராஜாவே காரணம் என மத்திய கணக்குதணிக்கை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சர்ச்சை பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் ராஜா இதுகுறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், தற்போது இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. எனவே நான் கருத்து கூற முடியாது. அனைத்தையும் நாங்கள் கோர்ட்டில் நிரூபிப்போம்.

1999ம் ஆண்டு வகுக்கப்பட்ட புதிய தொலைத் தொடர்பு கொள்கையைத்தான் நாங்கள் கடைப்பிடித்தோம். மேலும் டிராய் வகுத்துக் கொடுத்த பரிந்துரைகளைத்தான் நாங்கள் பின்பற்றினோம். எனவே நான் பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை என்றார் ராஜா.

சோராபுதீன் கொலையாளிகளுடன் 50க்கும் மேற்பட்ட முறை பேசினார் அமீத் ஷா-சிபிஐ

Amit Shahடெல்லி: சோராபுதீனை போலி என்கெளன்டர் மூலம் கொன்றவர்களுடன் 50க்கும் மேற்பட்ட முறை போனில் பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் அமீத் ஷா என்று சிபிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சோராபுதீன் ஷேக்கை போலியான என்கெளன்டர் மூலமும், அவரது மனைவி கெளசர் பீயை, கற்பழித்து சித்திரவதை செய்து பின்னர் விஷ ஊசி போட்டுக்கொலை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சில முக்கிய போலீஸ் அதிகாரிகள் கைதாகியுள்ளனர். உச்சகட்டமாக முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் அமீத்ஷா கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சோராபுதீன் வழக்கின் நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் நேற்று சிபிஐ தாக்கல் செய்தது.

மூடி சீல் வைக்கப்பட்ட கவரில் அறிக்கையை நீதிபதிகள் அப்தாப் ஆலம், லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச்சிடம் சிபிஐ ஒப்படைத்தது.

இதுகுறித்து சிபிஐ மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துள்சி கூறுகையில், நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் ஒப்படைத்துள்ளோம் என்றார்.

அந்த அறிக்கையில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இருப்பினும் கொலையை நடத்திய குற்றவாளிகளுடன் 50க்கும் மேற்பட்ட தடவை அமீத் ஷே பேசிய விவரத்தை சிபிஐ தனது அறிக்கையில் இணைத்துள்ளதாக கூறப்புகிறது.

அமீத் ஷா தற்போது ஜாமீனில் விடுதலையாகி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி குஜராத்தை விட்டு வெளியேறி மும்பையில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜாவுக்குப் பதில் கனிமொழியை அமைச்சராக்கத் திட்டம்?-கருணாநிதியுடன் நாளை பிரதமர் ஆலோசனை

Kanimozhi and Rajaடெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜாவை நீக்கி விட்டு அவரது இடத்தில் கனிமொழியை அமர வைக்கத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி  , நேற்று கனிமொழியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ராஜாவை நீக்கியாக வேண்டும் என்று வலியுறுத்தி, நாடாளுமன்றத்தை நேற்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடக்கி விட்டன. ராஜா விலகும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்றும் அறிவித்துள்ளன.

இன்னொரு பக்கம், ராஜாவை நீக்குங்கள். திமுக ஆதரவை வாபஸ் பெற்றால் நான் 18 எம்.பிக்களின் ஆதரவைத் திரட்டித் தருகிறேன் என்று அதிரடியாக கூறியுள்ளார் ஜெயலலிதா.

இப்படி பல முனைகளிலும் ராஜாவுக்கும், கட்சிக்கும் நெருக்கடி அதிகரித்திருப்பதால், திமுகவும், தற்போது ராஜா விவகாரத்தில் தனது கடும் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ள முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

ராஜாவை நீக்கி விட்டு அவருக்குப் பதில் கனிமொழியை தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக்க திமுக இறங்கி வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

நேற்று பிரணாப் முகர்ஜியை, கனிமொழி சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இந்த எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. ஆனால் கனிமொழி சந்திப்பு குறித்து திமுக தரப்பில் கூறுகையில், டிராய் வகுத்துள்ள விதிமுறைகளின்படிதான் ராஜா செயல்பட்டார். எனவே அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கூடாது என்று கனிமொழி பிரணாபிடம் விளக்கியதாக கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், கனிமொழி அமைச்சராக வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் 18ம் தேதி மு.க.அழகிரியின் மகன் திருமணம் நடைபெறவுள்ளது. எனவே திருமணத்திற்குப் பிறகு ராஜா விவகாரம் குறித்து முடிவெடுக்க முதல்வர் கருணாநிதி  திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதேசமயம், தென்கொரியா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி திரும்புகிறார். அவர் வந்தவுடன் நாளை இந்த விவகாரம் குறித்து முதல்வர் கருணாநிதியுடன் தொலைபேசியில் ஆலோசனை செய்யவுள்ளார்.

இதற்கிடையே, ராஜாவை நீக்குவது தொடர்பாக திமுக தரப்பில் இரண்டு கோரிக்கைகள் காங்கிரஸ் வசம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ராஜாவை இப்போதைக்கு நீக்கக் கூடாது. அப்படியே நீக்குவதாக இருந்தாலும் தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவடைந்த பின்னரே நீக்க வேண்டும் என்று கூறியிருப்பதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.