சனி, 6 நவம்பர், 2010

மதுரையில் வரலாறு காணாத மழை: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

மதுரையில் வரலாறு காணாத மழை: 
 
 வீடுகளுக்குள் 
 
 வெள்ளம் புகுந்தது
                                                                           
மதுரை, நவ. 6-
 
மதுரையில் நேற்று மாலை 6 மணிக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இரவு 9.15 மணி வரை இடைவிடாது மழை கொட்டியது. இதனால் நகரின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் போல மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. பெரியார் பஸ் நிலையம் முன்பு முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் 4 சக்கரம் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்றோர் மிகவும் அவதிப்பட்டனர்.

இதேபோல ரெயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரங்களும் தண்ணீரில் மூழ்கியது. ரெயில்வே நிலைய நுழைவு பகுதியை கடக்க முடியாமல் பயணிகள் சிரமப்பட்டனர்.
 
இந்த வரலாறு காணாத பலத்த மழையால் 41-வது வார்டு வசந்த நகரில் உள்ள ராமலிங்க நகரில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு உள்ள 15 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
 
இரவு முழுவதும் விடியவிடிய தூங்காமல் விழித்திருந்தனர். இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் கவுன்சிலர் கலைமணியிடம் மழைநீரை வெளியேற்ற மனு கொடுத்தனர். மேலும் முக்கிய இடங்களில் மின்தடை ஏற்பட்டது. நேற்று தீபாவளி பண்டிகை என் பதால் மழை நின்ற பின்பு வெடி வெடித்து மக்கள் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடினர்.

4 நாள் சுற்றுப்பயணம் ஒபாமா மும்பை வந்தார்; பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

4 நாள் சுற்றுப்பயணம்
 
 ஒபாமா மும்பை வந்தார்;
 
 பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
மும்பை, நவ.6-
 
அமெரிக்க அதிபர் ஒபாமா 4 நாள் பயணமாக இன்று இந்தியா வந்தார்.
 
அமெரிக்காவில் இருந்து அவர் நேற்று சுமார் 3 ஆயிரம் பேருடன் இந்தியாவுக்கு புறப்பட்டார்.
 
அமெரிக்க அதிபர் பயணம் செய்வதற்கு என்றே “ஏர்போர்ஸ்ஒன்” என்ற அதிநவீன விமானம் உள்ளது. அந்த விமானத்தில் அவர் ஜெர்மனி, பாகிஸ்தான் வழியாக பகல் 12.50 மணியளவில் மும்பை வந்தார். அவருடன் அவரது மனைவி மிச்செல், வந்தார்.
 
மும்பை விமான நிலையத்தில் தரை இறங்கியபிறகு ஒபாமா அவரது மனைவியும், அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தெற்கு மும்பையில் உள்ள கொலாபா இந்திய கடற்படை தளத்துக்கு சென்றனர். அங்கிருந்து லிமோசின் காரில் தாஜ் ஓட்டலுக்கு சென்றனர்.
 
ஒபாமா வருகையை முன்னிட்டு மும்பையில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தாஜ் ஓட்டல் முழுவதும் அமெரிக்க கமாண்டோ வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தாஜ் ஓட்டலுக்கு வந்ததும் ஒபாமா தனது அறைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.
 
இன்று பிற்பகல் தாஜ் ஓட்டலில் சிறப்புக் கூட்டம் ஒன்று நடக்கிறது. அதில் ஒபாமா கலந்து கொண்டு தீவிரவாதத்துக்கு எதிராக போராட வேண்டியதின் அவசியம் பற்றி பேசுகிறார். பிறகு தாஜ் ஓட்டலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான சிலரின் குடும்பத்தினரை சந்தித்து பேசுகிறார்.
 
மும்பை மணிபவனில் மகாத்மா காந்தி மியூசியம் உள்ளது. இன்று மாலை ஒபாமா அங்கு சென்று பார்வையிட்டு அஞ்சலி செலுத்துகிறார்.
 
இன்றிரவு மும்பையில் அமெரிக்கா - இந்தியா தொழில் முனைவோர்களின் கூட்டுக்கூட்டம் நடக்கிறது. அதில் ஒபாமா கலந்து கொண்டு பேசுகிறார். அப்போது இந்தியா-அமெரிக்கா இடையே பல்வேறு தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தாஜ் ஓட்டலில் இன்றிரவு தங்கும் ஒபாமா நாளை (7-ந் தேதி) மும்பையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்கு சென்று தீபாவளியை கொண்டாடுகிறார். இதை யடுத்து மும்பை புனித சேவியர் கல்லூரியில் நடக்கும் விழாவிலும் ஒபாமா பங்கேற்கிறார்.
 
நாளை மாலை ஒபாமா மும்பை யில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல்வார். டெல்லி விமான நிலையத்தில் ஒபாமாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்படும். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் டெல்லி மவுரியா ஓட்டலில் ஒபாமா தங்குகிறார்.
 
திங்கட்கிழமை (8-ந்தேதி) காலை ஒபாமா டெல்லியில் உள்ள முகலாய மன்னர் ஹூமாயூன் சமாதிக்கு சென்று பார்வையிடுகிறார். அதன் பிறகு ஒபாமாவும் அவரது மனைவியும் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் தனிப்பட்ட முறையில் விருந்து கொடுக்கிறார்.
 
அதன்பிறகு மகாத்மா காந்தி சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து ஒபாமா அஞ்சலி செலுத்துகிறார். இதையடுத்து ஒபாமா ஜனாதிபதி மாளிகைக்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாக ராணுவ அணிவகுப்பு அளிக்கப்படும்.
 
அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பிறகு ஒபாமாவும் பிரதமர் மன்மோகன்சிங்கும் சந்தித்துப்பேசுவார்கள். பின்னர் இருவரும் அமெரிக்க, இந்திய நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி கொடுப்பார்கள்.
 
திங்கட்கிழமை பிற்பகல் பாராளுமன்றக்கூட்டுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் ஒபாமா கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அந்த கூட்டம் முடிந்ததும் ஒபாமா தன் குடும்பத்தினருடன் மீண்டும் ஜனாதிபதி மாளிகைக்கு செல்கிறார்.
 
ஜனாதிபதி பிரதீபா பட்டீலுடன் ஒபாமா பேச்சு நடத்துவார். அதன் பிறகு ஒபாமாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அரசு சார்பில் விருந்து கொடுக்கப்படுகிறது. விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் மவுரியா ஓட்டலுக்கு திரும்பி வந்து ஒபாமா ஓய்வு எடுப்பார்.
 
8-ந் தேதி ஒபாமாவும், பிரதமர் மன்மோகன்சிங்கும் கூட்டறிக்கை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தங்கள் இரு நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு வேகத்தை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
ஒபாமா தனது இந்திய பயணயத்தின் 4-வது நாள் (9-ந் தேதி) காலை ஏதேனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்பது அறிவிக்கப்படவில்லை. அன்று காலை ஒபாமா 4 நாள் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு இந்தோனேசியா நாட்டுக்கு புறப்பட்டுச்செல்கிறார்.

திமுக எம்.பி.யின் ராமர் கோயில் ஆசை

பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டும் கோரிக்கை மனுவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கையெழுத்திட்ட தகவல் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குள்ளான நிலத்தில் மூன்றில் இரண்டு பகுதியை சங்பரிவாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அலஹாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. முஸ்லிம்களின் உரிமை கோரிக்கையான பாபரி பள்ளிவாசல் நிலத்தில், பாபரி பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்துத்துவா அமைப்பான வி.ஹெச்.பி. இந்தியா முழுவதும் கையெழுத்து இயக்கம் அறிவித்துள்ளது. இந்த பணியினை ஸ்ரீ அனுமன் சக்தி ஜாகரன் சமிதி என்ற அமைப்பு முன்னெடுத்து நடத்தி வருகிறது. அதன் தொடக்கப் பணியாக நாடு முழுவதும் கையெழுத்து வேட்டையை அந்த அமைப்பு தொடங்கியது. அந்த கையெழுத்து  போடும் வைபவத்தில் தமிழ்நாட்டிலேயே முதல் கையெழுத்தை கன்னியாகுமரி திமுக எம்.பி. ஹெலன் டேவிட்சன் கடந்த 22ஆம் தேதி போட்டிருக்கிறார்.

சமிதி நிர்வாகிகள் கன்னியாகுமரி தி.மு.க.வை சேர்ந்த எம்.பி. ஹெலன் டேவிட்சனை அணுகி, ராமர் கோவில் கட்டுவது தொடர்பான விவரங்களை எடுத்துக்கூறி கையெழுத்து இயக்கத்தின் மனுவில் கையெழுத்து போடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அவரும் உடனடியாக முதல் கையெழுத்தாக தனது  கையெழுத்து போட்டுக் கொடுத்ததாகவும் வெளிவந்த செய்தி குறித்து வி.ஹெச்.பி.யின் பொதுச் செயலாளரும் ஸ்ரீ அனுமன் சக்தி ஜாகரன் சமிதி பொறுப்பாளருமான காளியப்பன் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வேலாயுதம் உள்ளிட்ட சங்பரிவார பிரமுகர்கள் உடனிருந்திருக்கிறார்கள்.

இந்த பிரச்சனை கண்டிப்பாக தீர்க்கப்பட வேண்டும், அதனால் ¬யெழுத்திடுகிறேன் என முகம் நிறைந்த சிரிப்புடன் ஹெலன் டேவிட்சன் எம்.பி. புகைப்படத்துக்காக போஸ் கொடுத்திருக்கிறார். ராமர் கோயில் கட்ட சங்பரிவாரின் கொள்கைக்காக மிகுந்த ஈடுபாட்டுடன் திமுக எம்பி கையெழுத்திட்டுள்ள விதம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக சிறுபான்மை மக்களை அதிருப்தியிலும் கோபத்திலும்  ஆழ்த்தியுள்ளது.

திமுக எம்.பி.யின் இந்த செயல் நீதிமன்றத்தை அவமதிக்கக் கூடியது. தீர்ப்புக்குப் பிறகு மேல் முறையீட்டு வாய்ப்பு இருக்கும்போது இப்படிப்பட்ட  செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக&காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் வாய்ப்பு குறைவு. திருச்சியில் பேசிய சோனியாவும் திமுகவைப் பற்றி எதுவும் கூறவில்லை. தனி அடையாளம் கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் போராடி வருகிறது. காங்கிரஸ் தங்களை  கைவிட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றத்தில் பாஜகவோடு கை குலுக்க திட்டமிடுகிறது என்பதை உணர்த்தத்தான் திமுக எம்.பி. கையெழுத்து போட்டாரா என்ற சந்தேகம் தங்களுக்கு உள்ளதாக இந்த சம்பவம் நிகழ்ந்தவுடன் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம்  தமுமுக தலைவர் அறிவித்தார்.

தமுமுக தலைவரின் பரபரப்பான பேட்டியினால் மதச்சார்பின்மை பூமியான தமிழகம் விழிப்படைந்தது. திமுக வாரி சுருட்டி எழுந்தது. சங்பரிவாரின் லட்சியத்துக்கு ஆதரவாக திமுக எம்.பி. முதல் கையெழுத்து போட்ட விவகாரம் அக்கட்சியை பெரும் சிக்கலில் ஆழ்த்தியது. அரசியல் ரீதியிலான நெருக்கடியில் அக்கட்சி சிக்கித் திணருகிறது. விரக்தியின் விளிம்பில் சென்றுள்ள அக்கட்சி தலைமையின் ஆவேசத்தில் மாட்டிக்கொண்ட திமுக எம்.பி. சங்பரிவாரின் முக்கியப் பிரமுகர்களின் தயவினை வேண்டி தஞ்சம் பெறுகிறார். ராமர் கோயிலுக்காக எம்.பி. கையெழுத்திடவில்லை என பாஜகவின் முக்கியப் பிரமுகர் அறிக்கை வெளியிட்டார்.

தங்களின் ஆதரவு எம்.பி. பாதிக்கப்படக்கூடாதே என்ற பதைபதைப்பு காவி முகாமுக்கு வந்தது. சங்பரிவாரம் எப்படி வேண்டுமானாலும் தனது வேடத்தை மாற்றிக்கொள்ளும் என்பதற்கு தற்போதைய எடுத்துக்காட்டு இதுவாகும். தங்களை நல்ல முறையில் உபசரித்து ஆதரவாக செயல்பட்ட ஹெலன் டேவிட்சனுக்கு அரசியல் நெருக்கடி ஏற்படாத வகையில் செயல்பட முடிவெடுத்திருக்கிறோம் என காவி முகாம் முக்கியப் பிரமுகர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், அந்த கையெழுத்து இயக்கம் ராமர் கோயிலுக்காக நடத்தப்பட்டது, அதில் கையெழுத்திட்ட திமுக எம்.பி.யின் செயலை வரவேற்கிறோம் என மாநில பாஜக தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் போட்டு உடைத்திருக்கிறார். ‘‘எல்லாத்துக்கும் தீர்வு வரணும்ல...’’ என்று கூறிக்கொண்டுதான் எம்.பி. கையெழுத்து போட்டுக் கொடுத்தார் என இந்து முன்னணி மாவட்டத் தலைவர் செல்லன் கூறியிருக்கிறார்.

திமுக தனது கட்சி எம்.பி.யிடம் விளக்க நோட்டீஸ் கேட்டிருக்கிறது, விளக்கெண்ணை கேட்டிருக்கிறது என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். தேசிய அளவில் தமிழகத்தின் மதச்சார்ப்பின்மை தத்துவத்துக்கு ஊறு நேரும் வண்ணம் செயல்படும் வண்ணம் தனது கட்சி எம்.பி.க்கு துணிச்சலை திமுக தலைமை கொடுத்துள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.

நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்க முயலும் தீய சக்திகளுக்கு எதிராக குமரி மாவட்ட தமுமுக போராட்டத்தை அறிவித்திருக்கிறது.
பகிரங்கமாக விளக்கம் அளிக்க வேண்டிய கடமை திமுக தலைமைக்கு உண்டு. நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டிய கட்டாயத்தில் திமுக எம்.பி. ஹெலன் டேவிட்சன் இருக்கிறார்.

தங்கபாலுவை மாற்ற முடிவு: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடும் போட்டி கே.எஸ்.அழகிரி-வசந்தகுமார் முயற்சி

தங்கபாலுவை மாற்ற முடிவு:
 
 தமிழக காங்கிரஸ் தலைவர்
 
 பதவிக்கு கடும் போட்டி
 
 கே.எஸ்.அழகிரி-வசந்தகுமார் முயற்சிசென்னை, நவ. 6-
 
தமிழக காங்கிரஸ் தலைவரான தங்கபாலுவை மாற்ற வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பகிரங்கமாக மேடைகளில் பேசி வரும் நிலையில் தங்கபாலு மாற்றப்படுவாரா? இல்லையா? என்ற கேள்வி சில மாதங்களாக நீடித்து வருகிறது. வர இருக்கிற சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
 
மத்திய மந்திரி ஜி.கே.வாசனை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்க மேலிடத்தில் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தலைவர் பதவி தனக்கு இப்போது வேண்டாம் என வாசன் கூறி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
இதனால் தங்கபாலு தலைவர் பதவியை மீண்டும் தக்கவைத்து கொள்ள மேலிடத்தில் முயற்சி எடுத்துள்ளார்.
 
இதையறிந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனக்கு மீண்டும் தலைவர் பதவி வேண்டும் என டெல்லியில் வற்புறுத்தி வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
 
தமிழக காங்கிரசில் பல கோஷ்டிகள் இருப்பதால் யாரை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிப்பது? அல்லது எந்த கோஷ்டியின் ஆதரவாளரை நியமிப்பது என்ற ஆலோசனையும் நடந்து வருகிறது.
 
இதனால் வாசன் அணியில் ஞானதேசிகன் எம்.பி., ப.சிதம்பரத்தின் அணியில் கே.எஸ்.அழகிரி எம்.பி., விசுவநாதன் எம்.பி. ஆகியோரும் தலைவர் பதவிக்கு முயற்சி செய்கின்றனர்.
 
இதையறிந்த வசந்தகுமார் எம்.எல்.ஏ.வும் தமிழக காங்கிரஸ் பதவிக்கு முயற்சி செய்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் முடிந்த பிறகும் வசந்தகுமார் 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு தலைவர்களை சந்தித்து பேசி வந்துள்ளார்.
 
பீகார் தேர்தலுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி மாற்றம் இருக்கும் என்றும் வரும் சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
                                                                            

பலத்த மழை எச்சரிக்கை சென்னை அருகே “ஜல்” புயல் புதுவை அருகே நாளை கரையை கடக்கும்

பலத்த மழை எச்சரிக்கை
 
 சென்னை அருகே “ஜல்” புயல்
 
 புதுவை அருகே நாளை கரையை கடக்கும்சென்னை, நவ. 6-
 
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது.
 
இந்த நிலையில் சென்னைக்கு கிழக்கே வங்கக்கடலில் கடந்த வாரம் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது அந்தமான் அருகே மையம் கொண்டு இருந்தது.
 
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று முன்தினம் தீவிர புயலாக மாறியது. இதற்கு ஜல் புயல் என்று பெயரிடப்பட்டு உள்ளது.
 
இந்த புயலானது நேற்று சென்னைக்கு கிழக்கே வங்க கடலில் 900 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு இருந்தது. அது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் தமிழ் நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி மெதுவாக நகர்ந்து வந்தது. இன்று காலை சென்னையில் இருந்து 700 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு இருந்தது. அது மேலும் நகர்ந்து வருகிறது.
 
நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை அல்லது இரவில் புதுச்சேரிக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூருக் கும் இடையே புயல் கரையை கடக்கும். அப்போது மணிக்கு 50 முதல் 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
கடல் சீற்றத்துடன் இருக்கும் கடல் அலைகள் 1 மீ. முதல் 2 மீ. உயரத்துக்கு எழும்பும். எனவே மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
 
நாகையில் 1-ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டும், பாம்பனில் 2-ம் நம்பர் கூண்டும் ஏற்றப்பட்டு உள்ளது.
 
புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் வடதமிழ் நாட்டின் கடலோர மாவட் டங்களிலும் ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதியிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
புயலின் வேகம் நாளை முதல் அதிகரிக்கும். நாளை யும், நாளை மறுநாளும் புயலின் தாக்கம் இருக்கும். இந்தப் புயல் சென்னையை தாக்கும் அபாயம் உள்ளது.
 
இதற்கிடையே ஆந்திராவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களான கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, பிரகாசம், நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டுகிறது. அங்கு மழைக்கு 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 10 ஆயிரம் வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது.
 
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.
நுங்கம்பாக்கத்தில் 3.8 மி.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 5 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டுக்காக கமிஷன் அமைத்தது நானே: ஜெ!


"சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டுக்கான கமிஷன் அமைக்கப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில்தான் '' என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நான் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக "காலம்தான் பதில் சொல்லும்'' என்ற தலைப்பிலே முதல்-அமைச்சர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருப்பது "பட்டுக்கோட்டைக்கு வழி எங்கே என்றால், கொட்டைப் பாக்கு பத்துப்பணம்'' என்பது போல அமைந்துள்ளது.

கோடநாடு எஸ்டேட் வழக்குகளைப் பொறுத்தவரையில், அதில் ஒன்றும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறுதாவூரை பொறுத்த வரையில், எனக்கும், அந்த இடத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கருணாநிதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையமே தெரிவித்துள்ளது.

கட்டாய மதமாற்ற சட்டத்தைப் பொறுத்தவரையில், அது எனது ஆட்சிக் காலத்திலேயே ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்தச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையினருக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டைப் பொறுத்த வரையில், இதற்காக ஒரு கமிஷன் அமைக்கப்பட்டதே எனது ஆட்சிக் காலத்தில் தான் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இப்போது, தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. ரவுடிகளின் ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நீதி, நேர்மை, நாணயம், ஜனநாயகம் எல்லாம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டன. கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல், பதுக்கல் ஆகியவை கொடிகட்டி பறக்கின்றன.

சென்னை அண்ணா நகரை சேர்ந்த தொழிலதிபர் மகன் கீர்த்திவாசன் இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கடத்தப்பட்டு இருக்கிறான். கடத்தப்பட்ட சிறுவனை மீட்க காவல் துறை மூலம் கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக காவல் துறை ஆணையரே பேட்டி அளித்து இருக்கிறார். எனக்குத் தெரிந்த வரையில் பணம் கொடுத்து கடத்தப்பட்டவரை காவல் துறை மீட்டது இதுவே முதல் முறை. இதைவிட ஒரு வெட்கக்கேடு எதுவும் இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் தேவையில்லை. தமிழகம் இருளில் மூழ்கடிக்கப்பட்டுவிட்டது. அனைத்துத் துறைகளிலும் தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. அனைத்துத் தரப்பினரும் மிரட்டப்படுகிறார்கள். அமைதிப் பூங்காவாக விளங்கிய தமிழ்நாடு அமளிக்காடாக மாறிவிட்டது. இது தான் தி.மு.க. அரசின் நான்கரை ஆண்டு கால சாதனை.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

'அதிமுகவும் இருப்பதை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் ஜெ': திருமா

திட்டக்குடி: சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாக கடந்த 5 வருடங்களாகவே ஜெயலலிதா ''ஸ்ரீராம், ஸ்ரீராம்'' என சொல்வது போல் கூறிக் கொண்டிருக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

நிருபர்களிடம் பேசிய அவர், தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதிமுகவும் இருப்பதை வெளிப்படுத்த, உறுதிப்படுத்த வேண்டிய நெருக்கடி ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் தான் பகுதிவாரி பிரச்சனைகளுக்கு அந்தந்த பகுதி மக்களை திரட்டுவதை விட்டு விட்டு, மாநாட்டுக்கு திரட்டுவது போல் கட்சியினரை திரட்டுவதும், இப்படி ஆர்ப்பாட்டத்தில் திரளும் கூட்டங்களை பார்த்து அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு பெருகிவிட்டதாகக் கூறுவதும் திட்டமிட்ட மாயையை உருவாக்கும் செயல்.

நாடு தழுவிய அளவில் ஒரு கோடிக்கு மேலான உறுப்பினர்களை கொண்டதாக கூறப்படும் அதிமுக சில லட்சம் தொண்டர்களை திரட்டி தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் என்பது வேடிக்கையாக உள்ளது.

கடந்த 5 வருடங்களாகவே சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என்று, ஜெயலலிதா ''ஸ்ரீராம், ஸ்ரீராம்'' என சொல்வது போல் சொல்லிக் கொண்டு இருக்கிறார் என்றார்.

போர் குற்றம்; கைது பயம்: லண்டன் பயணத்தை கைவிட்ட ராஜபக்சே

லண்டன்: இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவி்த்த குற்றத்துக்காக கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தால், தனது லண்டன் பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டார் அதிபர் ராஜபக்சே.

ஆக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்ற லண்டனுக்குச் செல்ல இருந்தார் ராஜபக்சே. ஆனால், அவரது வருகைக்கு எதிராக லண்டனில் இலங்கைத் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போர்க் குற்றவாளியான ராஜபக்சேவைக் கைது செய்யக் கோரி நீதிமன்றத்தை அணுக பல மனித உரிமை அமைப்புகளும் தயாராயின. உலகி்ன் எந்தப் பகுதியில் போர்க் குற்றம் நடந்தாலும், இங்கிலாந்து சட்டப்படி போர்க் குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜபக்சே கைதாக வாய்ப்புள்ளதாக இலங்கை உளவுப் பிரிவினரும் சட்ட நிபுணர்களும் எச்சரித்ததையடுத்து தனது பயணத்தை அவர் கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டார்.

கடந்த 1998ம் ஆண்டில் சிலி நாட்டு முன்னாள் அதிபர் அகஸ்டோ பினோசெட்டை இங்கிலாந்து போலீசார் கைது செய்தது நினைவுகூறத்தக்கது. தனது 17 ஆண்டு ராணுவ ஆட்சியில் ஏராளமான ஸ்பெயின் நாட்டவரை கொன்று குவித்தார் பினோசெட் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பு, வெளியுறவு, உளவுத்துறை அமைச்சர்கள் இங்கிலாந்துக்கள் காலடி எடுத்து வைத்தால் அவர்களை கைது செய்யலாம் என்று இங்கிலாந்து நீதிமன்றங்கள் வாரண்ட் பிறப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையி்ல் தான் ராஜபக்சே தனது இங்கிலாந்து பயணத்தை ரத்து செய்துள்ளார்.

அதே போல லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி பிரசன்ன டி சில்வாவை திரும்பப் பெறுமாறும் இங்கிலாந்து கூறியுள்ளதாகத் தெரிகிறது. தமிழர்களுக்கு எதிரான ராணுவக் கொடுமைகளை நடத்தியதில் இவருக்கும் முக்கிய பங்குண்டு.