வெள்ளி, 5 நவம்பர், 2010

பராக் ஒபாமா நாளை மும்பை வருகை-வரலாறு காணாத பாதுகாப்பு

மும்பை: இந்தியாவில் 4 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நாளை மும்பை வருகிறார். அவரது வருகையையொட்டி, வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவருடன் அவரது மனைவி மிஷெல், மகள்கள் ஷாஷா, மலியா, தொழிலதிபர்கள், அதிகாரிகள் என மாபெரும் குழு வருகிறது.

மும்பையில் 2 நாட்கள ஒபாமா தங்குகிறார். இதற்காக தாஜ் ஹோட்டல், கிராண்ட் ஹயாத் ஹோட்டல் ஆகியவற்றில் உள்ள 800 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தனது `ஏர் போர்ஸ்-ஒன்' விமானத்தில் மும்பை வரும் ஒபாமா, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கொலபா கடற்படை தளத்துக்குச் சென்று, அங்கிருந்து காரில் தாஜ் ஹோட்டலுக்கு செல்கிறார்.

இரு ஆண்டுகளுக்கு முன்பு தாஜ் ஹோட்டலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான சிலரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

பிறகு காந்தி மியூசியத்தை பார்வையிடும் அவர், மாலையில் வர்த்தக சபைக் கூட்டத்தில் பேசுகிறார்.

7ம் தேதி ஒரு பள்ளிக்குச் சென்று மாணவ-மாணவிகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் ஒபாமா, பின்னர் புனித சேவியர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் டெல்லி செல்கிறார். அங்கு மெளர்யா ஷெரட்டன் ஹோட்டலில் தங்குகிறார்.

டெல்லியில் மொகலாய மன்னர் ஹூமாயூன் கல்லறையை பார்வையிடும் அவர், பிரதமர் மன்மோகன் சிங் அளிக்கும் விருந்தில் குடும்பத்தினருடன் கலந்து கொள்கிறார்.

8ம் தேதி மகாத்மா காந்தியின் சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து ஒபாமா அஞ்சலி செலுத்துகிறார்.

பின்னர் ஜனாதிபதி மாளிகையில் அரசு சார்பில் அளிக்கப்படும் ராணுவ வரவேற்பை ஒபாமா ஏற்றுக்கொள்கிறார். இதைத் தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங்குடன் அவர் நீண்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களை சந்திக்கின்றனர்.

அதன் பிறகு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ஒபாமா உரையாற்றுகிறார். பின்னர் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி பிரதீபா பட்டீலை சந்தித்து பேசுகிறார்.

9ம் தேதி காலை அவர் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.

இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ்,

இந்தியா வரும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை மேம்படுத்துதல், சர்வதேச பொருளாதார நிலைமை, தீவிரவாத அச்சுறுத்தல், ஆசிய பிராந்தியத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை நடத்துவார்.

அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் செய்தது தொடர்பான பிரச்சனை, ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தருவது, அமெரிக்க விசா கட்டண உயர்வு விவகாரம், அணுக்கழிவு மறு சுழற்சி பயன்பாட்டுக்கான தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு அமெரிக்க வழங்க மறுக்கும் விவகாரம் ஆகிய முக்கிய பிரச்சினைகளும் பேச்சுவார்த்தையில் இடம்பெறும்.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் அடிப்படை கட்டுமானப் பணிகள் பற்றிய பிரச்சனையையும் அமெரிக்காவிடம் மத்திய அரசு எழுப்பும்.

பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தும் வகையில் சுகாதாரம், கல்வி, வேளாண்மை, மாசற்ற எரிசக்தி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றார்.

இந்தியாவில் ஒபாமாவுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது. தேசிய பாதுகாப்பு படை, துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் போலீசாருடன் அமெரிக்க அதிபரின் சிறப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். ஒபாமாவின் பாதுகாப்புக்காக 6 கனரக கவச வாகனங்களும், அதி நவீன தொலைத் தொடர்பு வசதி கொண்ட பிரத்தியேக வாகனமும் மும்பை, டெல்லிக்கு வந்துவிட்டன.

அமெரிக்காவில் இருந்து 30 மோப்ப நாய்களும் வருகின்றன.

மும்பையில் ஒபாமா தங்கி இருக்கும் 2 நாட்களும் அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க் கப்பல் உள்பட 34 போர் கப்பல்கள் கடற்பகுதியில் நிறுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட உள்ளன.

ஒபாமா வருகையையொட்டி, அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான 2 போர் விமானங்களும், 4 ஹெலிகாப்டர்களும் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து விட்டன.

மும்பை, டெல்லியில் ஒபாமாவின் விமானம் தரை இறங்குவதற்கு 6 நிமிடங்கள் முன்பும், தரை இறங்கிய பிறகு 6 நிமிடம் வரையும் வேறு விமானங்கள் தரை இறங்கவோ, அல்லது புறப்பட்டு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை மூலம் கடத்தல்காரர்களுக்கு பணம்-இதைவிட வெட்கக்கேடு இருக்க முடியாது-ஜெ

சென்னை: கடத்தப்பட்ட சென்னை மாணவன்  கீர்த்திவாசனை மீட்க காவல் துறை மூலம் கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக காவல் துறை ஆணையரே பேட்டி அளித்து இருக்கிறார். எனக்குத் தெரிந்த வரை பணம் கொடுத்து கடத்தப்பட்டவரை காவல் துறை மீட்டது இதுவே முதல் முறை. இதைவிட ஒரு வெட்கக்கேடு எதுவும் இருக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நான் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக "காலம்தான் பதில் சொல்லும்'' என்ற தலைப்பிலே முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருப்பது "பட்டுக்கோட்டைக்கு வழி எங்கே என்றால், கொட்டைப் பாக்கு பத்துப்பணம்'' என்பது போல அமைந்துள்ளது.

கொடநாடு எஸ்டேட் வழக்குகளைப் பொறுத்தவரையில், அதில் ஒன்றும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறுதாவூரை பொறுத்த வரையில், எனக்கும், அந்த இடத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கருணாநிதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையமே தெரிவித்துள்ளது.

கட்டாய மதமாற்ற சட்டத்தைப் பொறுத்தவரையில், அது எனது ஆட்சிக் காலத்திலேயே ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்தச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையினருக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டைப் பொறுத்த வரையில், இதற்காக ஒரு கமிஷன் அமைக்கப்பட்டதே எனது ஆட்சிக் காலத்தில் தான் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இப்போது, தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. ரவுடிகளின் ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பணம் கொடுத்து மீட்டது இதுவே முதல்முறை. கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் நீதி, நேர்மை, நாணயம், ஜனநாயகம் எல்லாம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டன. கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல், பதுக்கல் ஆகியவை கொடிகட்டி பறக்கின்றன.

சென்னை அண்ணா நகரை சேர்ந்த தொழிலதிபர் மகன் கீர்த்திவாசன் இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கடத்தப்பட்டு இருக்கிறான். கடத்தப்பட்ட சிறுவனை மீட்க காவல் துறை மூலம் கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக காவல் துறை ஆணையரே பேட்டி அளித்து இருக்கிறார்.

எனக்குத் தெரிந்த வரையில் பணம் கொடுத்து கடத்தப்பட்டவரை காவல் துறை மீட்டது இதுவே முதல் முறை. இதைவிட ஒரு வெட்கக்கேடு எதுவும் இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் தேவையில்லை. தமிழகம் இருளில் மூழ்கடிக்கப்பட்டுவிட்டது. அனைத்துத் துறைகளிலும் தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. அனைத்துத் தரப்பினரும் மிரட்டப்படுகிறார்கள். அமைதிப் பூங்காவாக விளங்கிய தமிழ்நாடு அமளிக்காடாக மாறிவிட்டது. இது தான் திமுக அரசின் நான்கரை ஆண்டு கால சாதனை என்று கூறியுள்ளார்.

தயாநிதி திருமணம்-அழகிரிக்கு 'கைகொடுத்த' ஸ்டாலின்

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்து வரும் மத்திய அமைச்சரும் தனது சகோதரருமான மு.க.அழகிரியின் மகன் தயாநிதியின் திருமண ஏற்பாடுகளை துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந் நிலையில் ஸ்டாலின் தனது சகோதரி செல்வியுடன் நேற்று மதுரை வந்தார்.

மு.க.அழகிரி வீட்டில் திருமண ஏற்பாடுகள் குறித்த ஆலோசனையில் பங்கேற்ற அவர், பின்னர் திருமணம் நடைபெறும் தமுக்கம் மைதானத்திற்கும் சென்று பார்வையிட்டனர். மணமேடை, உணவு அருந்தும் இடம் ஆகியவற்றை பார்வையிட்ட ஸ்டாலின் சில ஆலோசனைகளயும் வழங்கினர்.

பின்னர் வீடு திரும்பிய ஸ்டாலினுக்கும், செல்விக்கும் அழகிரி மதிய விருந்தளித்தார். இதையடுத்து விமானம் மூலம் மாலையே சென்னை திரும்பினர்.

தயாநிதிக்கும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சீத்தாராமனின் மகள் அனுஷாவுக்கும் வரும் 18ம் திருமணம் நடைபெறுகிறது.

மணமேடை, உணவு அருந்தும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினர்.

பிளாக்ஸ் போர்டுகள்-அழகிரி கண்டிப்பு:

இதற்கிடையில் திருமண நிகழ்ச்சிகள் தொடர்பாக திமுக நிர்வாகிகளுக்கு மு.க.அழகிரி கண்டிப்பான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக யாரும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

தலைமை செயலகத்தில் ஆற்காடு வீராசாமியின் அறைக்கு `சீல்' ஏன்?-அரசு விளக்கம்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் அலுவலக அறை சீல் வைக்கப்படுவது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு புனித ஜார்ஜ் கோட்டையில் ஒதுக்கப்பட்டுள்ள அலுவலக அறை சீல் இடப்பட்டது என்று மக்களை குழப்ப வேண்டும் என்பதற்காக உள்நோக்கத்துடன் ஜெயா டி.வியில் செய்தி வெளியிட்டதாக அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அவரது அறை சீல் இடப்படுவது திடீரென்று இன்று மட்டும் நடைபெற்ற நிகழ்வு அல்ல. அவரது அறை முதல்வரின் அறைக்கு மிக அருகிலேயே இருப்பதால், பாதுகாப்பு காரணத்திற்காக முதல்வர் அறை தினமும் அலுவல் நேரம் முடிந்ததும், சீல் இடப்படுவதைப் போல, அவரது அறையும் சீல் இடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தற்போது மின்துறை அமைச்சரின் அலுவலக அறை அப்போது முதல்வரின் செயலாளருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

அப்போதும் இந்த அறைகள் சீல் இடப்படும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் (புதன்கிழமை) அலுவல் நேரம் முடிந்ததும் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் அறை சீல் இடப்பட்டது. நேற்று அவர் வேறு பணியின் காரணமாக அலுவலகத்திற்கு வராததால், அவரது அறை திறக்கப்படவில்லை. இதற்கும் ஒரு காரணம் கற்பித்து, அதைச் செய்தியாக்கி, ஜெயா டி.வி. ஒளிபரப்பியிருப்பது கண்டனத்திற்கு உரியது என்று கூறப்பட்டுள்ளது.

பொய் உரைப்பது ஜெயலலிதாவுக்கு கைவந்த கலை: கருணாநிதி

சென்னை: ஒரு கருத்தைச் சொல்லுவதும்; பின் அந்தக் கருத்துக்கு எதிர்மறையான இன்னொரு கருத்தைச் சொல்லுவதும்; அதற்குப்பின் அந்த மாதிரி கருத்தே சொல்லவில்லை என்று மறுத்துப் பொய் உரைப்பதும்; ஜெயலலிதாவுக்கு கைவந்த கலை. இதை அவரைப் பற்றி அறிந்திருக்கும் அனைவரும் அறிவர் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: காவிரிப் பிரச்சனை பற்றி 2.11.2010 அன்று வெளியிட்ட அறிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா; தாங்கள் ஜெயலலிதாவினுடைய அறிக்கையை முழுமையாகப் படிக்கவில்லை என்றும், காவிரி நதி நீர் ஆணையத்தைப் பொறுத்தவரை ஒரே நிலையைத்தான் அவர் கடைப்பிடித்து வருவதாகவும் சொல்லியிருக்கிறாரே?

பதில்: காவிரி நதி நீர் ஆணையம் குறித்து- பல்லில்லாத ஆணையம்; அது தன் கடமையைச் செய்யவில்லை; கர்நாடகத்துக்கு ஆதரவாகவே அது செயல்படுகிறது; அதன்மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை; இந்தப் பிரச்சனையில் பிரதமரின் செயல்பாடு திருப்தியாக இல்லை- என்று சொன்னவர் ஜெயலலிதா.

அப்படிச் சொன்ன ஜெயலலிதா, உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்தவுடன்; ''காவிரி ஆணையத்தின் மீது நான் தனிப்பட்ட முறையில் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்; ஆணையத் தலைவர் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன்; பிரதமர் மற்றும் காவிரி ஆணையம் பற்றி நான் தெரிவித்த கருத்துகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்'' என்று; பிரதமருக்குக் கடிதம் எழுதியவர் ஜெயலலிதா.

ஆனால், 30.10.2010 நாளிட்ட அறிக்கையில் ஜெயலலிதா, ''கர்நாடகத்தில் உள்ள அணைகளின் மதகுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ளக்கூடிய அதிகாரத்தை, காவிரி மேலாண்மைக் குழுவுக்கோ அல்லது காவிரி நதிநீர் ஆணையத்துக்கோ வழங்க வேண்டும்'' என்று வலியுறுத்தியிருப்பதன் பொருள் என்ன? காவிரி நதி நீர் ஆணையத்தின்மீது ஏதோ தனக்கு நம்பிக்கை ஏற்பட்டு விட்டது என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்குத்தானே?.

இவற்றிலிருந்து காவிரி நதி நீர் ஆணையம் குறித்து மாறுபாடான நிலைப்பாட்டை ஜெயலலிதா கொண்டிருந்தார் என்பதை எளிதில் எவரும் புரிந்து கொள்ளலாம்.

ஒரு கருத்தைச் சொல்லுவதும்; பின் அந்தக் கருத்துக்கு எதிர்மறையான இன்னொரு கருத்தைச் சொல்லுவதும்; அதற்குப்பின் அந்த மாதிரி கருத்தே சொல்லவில்லை என்று மறுத்துப் பொய் உரைப்பதும்; ஜெயலலிதாவுக்கு கைவந்த கலை. இதை அவரைப் பற்றி அறிந்திருக்கும் அனைவரும் அறிவர். இலங்கைத் தமிழர் பிரச்சினையிலும் இப்படித்தானே ''பல பல்டிகள்'' அடித்தார்.

ஜெயலலிதா ''பம்மாத்து'' செய்கிறார்:

கேள்வி: காவிரி நதி நீர் ஆணையத்தை அமைக்குமாறு மத்திய அரசைப் பலமுறை வலியுறுத்தியும், அதனை அவர்கள் கண்டுகொள்ளாததால்தான், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அதிமுக வாபஸ் பெற்றுக் கொண்டது என்று; ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறாரே?.

பதில்: அப்போதைய அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனித்து வந்தவர்களுக்கு, ஜெயலலிதா சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்பது தெளிவாகத் தெரியும். வாஜ்பாய் தலைமையில் மத்திய அரசு அமைந்ததில் இருந்து- இங்கிருந்த கழக ஆட்சியை ''டிஸ்மிஸ்'' செய்ய வேண்டும்- அப்போது மத்திய வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டேவை அமைச்சரவையில் இருந்து விலக்க வேண்டும்- உள்துறை அமைச்சர் அத்வானிக்கு இருந்த முக்கியத்துவத்தை வெகுவாகக் குறைத்திட வேண்டும்- தன் மீதுள்ள ஊழல் வழக்குகளையெல்லாம் திரும்பப் பெறவேண்டும்- போன்ற கோரிக்கைகளை ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்தக் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறாத காரணத்தால், ஜெயலலிதா கோபம் கொண்டு, மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். 12 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த அரசியல் நிகழ்வுகளையெல்லாம் இப்போது அனைவரும் மறந்திருப்பார்கள் என்று ஜெயலலிதா ''பம்மாத்து'' செய்கிறார்.

அதனால்தான், ''அதிமுகவுடன் கூட்டணி இருந்த காலம்தான், எனது அரசியல் வாழ்க்கையிலேயே மிகவும் வேதனையான காலமாகும். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த நாளிலிருந்தே ஜெயலலிதா தொல்லை கொடுக்கத் தொடங்கினார். பாஜக அரசைப் பலவீனப்படுத்தக் கூடிய வகையில், ஒவ்வொரு வாரமும் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்தார்'' என்று; அதிர்ச்சி அளித்திடக்கூடிய வகையில், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் 22.8.1999 அன்று சொன்னதை, இன்னமும் யாரும் மறந்து விடவில்லை.

கேள்வி: கர்நாடக அரசு ஹேமவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்று 6.3.1970 அன்று தமிழக சட்டப்பேரவையில் தாங்கள் பேசியிருப்ப தாக ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?.


பதில்: 1974க்கு முன்பே கர்நாடக மாநில அரசினர், 1924ம் ஆண்டு ஒப்பந்தமே, 1974ம் ஆண்டு முடிந்துவிடுகிற ஒப்பந்தம் என்று வாதிடத் தலைப்பட்டு; அதற்கு முன்னதாகவே, 1924ம் ஆண்டு ஒப்பந்தப் பிரிவுகளுக்கு மாறாக, 1966ம் ஆண்டு ஹேமவதி, ஹேரங்கி அணைகளைக் கட்டத் தொடங்கிவிட்டனர்.

அண்ணா தலைமையில் கழக ஆட்சி அமைந்ததும், இதுகுறித்து தனது எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் கோரியது. 1924ம் ஆண்டு ஒப்பந்தப்படி, புதிய அணைகளைக் கட்ட வேண்டுமென்றால், அதற்குரிய விதிமுறைகளை இரு மாநிலங்களும் ஒத்துக் கொண்ட பின்னர்தான், அணைகளைக் கட்ட வேண்டும். ஆனால், கர்நாடக அரசு தன்னிச்சையாக 1966ல் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் அணைகளைக் கட்டத் தொடங்கியது.

இதுகுறித்து மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு, அதன் தலைமையில் இரு மாநிலங்களுக்கிடையே 1966-68ல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து கடிதப் போக்குவரத்துகளும் நடந்தன. இவை பயனளிக்காததாலும்; கர்நாடக அரசு அணைகளைக் கட்டுவதில் முனைப்பாக இருந்ததாலும்; 17.2.1970ல் நடுவர்மன்றம் அமைக்கக்கோரி மத்திய அரசுக்கு நான் கடிதம் எழுதினேன்.

இவை அனைத்தையும் மனதிலே கொண்டு தான்: ''1924ம் ஆண்டு ஒப்பந்தத்தைத் தூக்கியெறிந்து விட்டு, அதற்குப் பிறகு இரு அரசுகளும் கூடிப் பேசலாம் என்ற அடிப்படையிலேயே பேசி வருகிறார்கள். ஹேமவதி அணைக்கட்டு கட்டுவதில் தமிழக அரசுக்கு எந்தவிதமான மறுப்பும் இல்லை. ஆனால், அந்த அணை கட்டப்படுகிற நேரத்தில், அதனால் தமிழ்நாட்டினுடைய நிலவளம் எந்த அளவுக்குப் பாதிக்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாகத் தான், 1924ம் ஆண்டு ஒப்பந்தத்தின் ஷரத்துகள் மீறப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கண்ணுங்கருத்துமாக இருக்கிறோம்.

சில நிபந்தனைகளை வைத்துக்கொண்டு உத்தரவாதம் அளிக்கிறோம். மைசூர் அரசு முன்வந்தால், மைசூர் அரசும், தமிழக அரசும் - மத்திய அரசின் முன்னிலையில் மீண்டும் கூடிப்பேசி இதுபற்றி நல்ல முடிவு காண்பதில் எனக்கு எந்தவிதமான மறுப்பும் இல்லை'' என்று 6.3.1970 அன்று தமிழக சட்டப் பேரவையிலே நான் பேசியிருக்கிறேன். ஜெயலலிதா கற்பனை செய்வது போல, நான் பேசவில்லை.

காவிரிப் பிரச்சனை பற்றிய வரலாறு அறிந்தவர்களுக்கு, நான் சட்டப்பேரவையில் பேசியதன் பொருளைப் புரிந்துகொள்ள முடியும்.

காவிரிப் பிரச்சனை பற்றி இன்றைக்கு அறிக்கை மேல் அறிக்கை வெளியிடும் ஜெயலலிதா, காவிரிப் பிரச்சனை குறித்து அரசோடு எந்த அளவுக்கு ஒத்துழைத்தார் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

1990ம் ஆண்டு கழக ஆட்சியில், அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங்கை சந்தித்து, நடுவர் மன்றம் தொடர்பாக தமிழகத்தின் எம்.பிக்கள், கோரிக்கை மனு ஒன்றினை அளிப்பதென முடிவு செய்யப்பட்டது. அதிமுக எம்.பிக்களும் அந்த மனுவினை அளிக்க சேர்ந்து வருவதாக முதலில் ஒப்புக்கொண்ட போதிலும், கடைசி நேரத்தில் வரமறுத்து, அவர்கள் தனியாகச் சென்று, ஒரு மனுவினைப் பிரதமரிடம் அளித்தார்கள்.

ஆனால், அவர்கள் பிரதமரிடம் அளித்த மனுவின் முதல் வாக்கியமே, கர்நாடகாவின் வாதத்தை வலுப்படுத்துவதைப் போல, 1924ம் ஆண்டின் காவிரி ஒப்பந்தம், 1974ம் ஆண்டோடு முடிந்துவிட்டது என்பதாகும். அதனை ஏடுகளில் படித்துவிட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரும், பத்திரிகைகளும் அதிமுகவைக் கண்டித்தனர்.

அதிமுக ஆட்சிக் காலத்தில், காவிரிப் பிரச்சனைக்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றபோது, அந்தப் பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி கழகம் கலந்து கொண்டது. ஆனால், கழக ஆட்சியில் 1989 ஜுலையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டபோது, அதிமுக கலந்து கொள்ளவில்லை. கலந்து கொள்ளாதது மாத்திரமல்ல; கழகத்தைக் கடுமையாக விமர்சித்து, ஜெயலலிதா அறிக்கையும் விடுத்தார்.

அதுபோலவே, 1991 ஜுலையில் அதிமுக அரசு தமிழக எம்.பிக்கள் கூட்டத்தைக் கூட்டியபோது, திமுக எம்.பிக்களுக்கு அழைப்பே அனுப்பவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லசிவன் எம்.பிக்கு முதலில் அழைப்பு அனுப்பிவிட்டு, பிறகு அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்ட அநாகரிகமும் ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்றது.

கேள்வி: நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பையாவது நிறைவேற்றுவதற்கு கழக அரசு தீவிரமாக பாடுபட வேண்டும் என்று ஜெயலலிதா யோசனை கூறியுள்ளாரே?.

பதில்: நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை நடைமுறைப்படுத்துவது பற்றி ஜெயலலிதாவின் ஒப்புதல் வேண்டி 9.6.1992ல் மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கடிதம் அனுப்பினார். உடனடியாக பதில் கடிதம் அனுப்புவதைத் தவிர்த்துவிட்டு, மவுனமாக இருந்த ஜெயலலிதா; மத்திய அரசிடமிருந்து வந்த கடிதத்திற்கு 9 மாதங்கள் கழித்துதான் பதில் எழுதினார். அப்படிப்பட்ட ஜெயலலிதா தான் இன்றைக்கு நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு யோசனை கூற முன்வந்திருக்கிறார்.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி, 205 டி.எம்.சி. தண்ணீரைப் பெறுவதற்கு எந்த அளவுக்கு முயற்சி செய்தார் என்பதை; மேட்டூரில் கிடைத்த நீரின் அளவு பற்றிய புள்ளி விவரங்களைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2001-2002ல் 162.74 டி.எம்.சி. தண்ணீரும்; 2002-2003ல் 94.87 டி.எம்.சி.; 2003-2004ல் 65.16 டி.எம்.சி.; 2004-2005ல் 163.96 டி.எம்.சி. தண்ணீரும்தான் கிடைத்தது என்பதை மறந்து விட்டு அல்லது மறைத்துவிட்டு, ஜெயலலிதா இப்போது புதிய புத்தர் வேடம் போடுகிறார்.

ஆனால், திமுக ஆட்சியில், மேட்டூரில் கிடைத்த நீரின் அளவு- 2006-2007ல் 235.93 டி.எம்.சி; 2007-2008ல் 346.73 டி.எம்.சி; 2008-2009ல் 204.48 டி.எம்.சி; 2009-2010ல் 219.48 டி.எம்.சி.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்

"இந்தியாவுக்கு வருவது காரணமாகத்தான்" - ஒபாமா

இன்று அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது "அமெரிக்க  மக்களுக்கான  வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வதே  நவம்பர் 5ல் தொடங்கும் இந்தியா உள்ளிட்ட நான்கு ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தின் நோக்கம் " என்பதை அதிபர் ஒபாமா வெளிப்படுத்தியுள்ளார்.

"அமெரிக்க வர்த்தகம் வலுவடைய வேண்டியிருக்கிறது" என்று குறிப்பிட்ட ஒபாமா மேலும் கூறுகையில் " அப்படி  வளம் பெற்றால், நாம் மேலும் அதிக பொருட்களை விற்கலாம். இதன் மூலம்  வேலைவாய்ப்புகளும் பெருகும். எனது ஆசிய சுற்றுப்பயணத்தில் என்னுடன் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த தலைவர்களும் உடன் வருகின்றனர். அவர்களின் பொருட்களுக்கான சந்தையை உருவாக்கவும் அவற்றின் விற்பனைக்கு உதவுவதன் மூலமும் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும்." என்று கூறினார்.
ஒபாமாவின் இந்தியப் பயணத்தின் மூலம் மட்டும்அமெரிக்காவுக்கு 1200 கோடி டாலர்கள் அளவுக்கான வர்த்தக ஒப்பந்தம்  கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதன் வழி அமெரிக்காவில் சுமார் 60 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இந்திய-அமெரிக்க தொழிலதிபர்களின் ஒரு சந்திப்பிலும் ஒபாமா பேசவுள்ளார். இஃதன்றி, இந்தியாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளையும் அவர் சந்தித்துப் பேசுகிறார்.