திங்கள், 1 நவம்பர், 2010

இது நில மோசடிக்காலம்!

எல்லாப் பெருநகரங்களிலும் நிலமோசடி மிகச் சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் பல பேரைக் கொன்று நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன அல்லது குறைந்த விலைக்குக் கைமாறியுள்ளன. மும்பையிலும் இது நடக்கிறது என்றாலும், கார்கில் போரில் உயிர் நீத்தவர்களை முன்னிலைப்படுத்தி, அரசியல்வாதிகள் நடத்தியுள்ள நாடகம்தான் இப்போது மும்பை அரசுக்குத் தலைவலியாகியுள்ளது.

 மும்பையில் கொலாபா என்ற இடத்தில் எல்லா விதிமுறைகளையும் மீறி "ஆதர்ஷ் ஹவுசிங் சங்க'த்துக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட நிலம் ஒதுக்கப்பட்டது. இத்தனை விதிமுறைகளும் மீறப்பட்டதற்கு ஒரே காரணம், கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்காக இங்கே வீடு கட்டப்படுகிறது என்பதுதான். இத்தனை விதிமுறை மீறல்களும் செய்துவிட்ட பின்னர், இங்கே ராணுவ வீரர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டதா என்றால் அதுதான் இல்லை. இங்கே கட்டப்பட்டுள்ள மிகப் பிரம்மாண்டமான, சகல வசதிகளுடனும் கூடிய 103 குடியிருப்புகளில் 3 பேர் மட்டுமே நாட்டுக்காக உயிர் நீத்தவர்களின் குடும்பங்கள். மற்ற வீடுகள் முதலமைச்சர் சவாண், அமைச்சர்கள், அரசுச் செயலர்கள் போன்ற எல்லோர் பெயரிலும் இருக்கின்றன.

 இந்த ஊழல் அம்பலப்பட்ட பிறகு, இதில் இரண்டு ராணுவ உயர் அதிகாரிகள் இந்த மனை ஒதுக்கீடுகளை "ஆதர்ஷ் ஹவுசிங் சங்க'த்திடமே திருப்பிக் கொடுத்துவிட்டனர். இந்த ஊழலும்கூட, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகளின்போது வெளிப்பட்டதுதான்.

 இந்த உயர் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்படும் இடம் கடலோர ஒழுங்காற்று மண்டலத்தின் வரையறைக்குள் வருவதால், இது எப்படி அனுமதிக்கப்பட்டது என்பதற்காகத்தான் மக்கள் இயக்கத்தின் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு கொடுக்கப்பட்டது. இந்த இடம் கார்கில் போரில் உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்காகக் கட்டப்படுகிறது என்றும், இதில் ஏற்கெனவே சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆட்சேபம் தெரிவித்திருந்தாலும், நாட்டுக்காக உயிர் நீத்தவர்களின் குடும்பத்துக்கான நலத்திட்டம் என்பதால் இதில் அரசு விதிமுறைகளைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டது என்பதும் தெரியவந்தது. ஆனால், இப்படியான வசதிமிக்க குடியிருப்புகள் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்குச் சாத்தியம்தானா என்கிற கேள்வி எழுந்தபோதுதான், இந்த ஊழல் அம்பலத்துக்கு வந்தது.

 கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்துக்காக கார்கில் நிதி திரட்டுகிறோம் என்கிற பெயரில் அரசியல்வாதிகள் அடித்த கொள்ளை இதுவரை யாராலும் வெளிப்படுத்த முடியாததாகவே இருந்துவருகிறது. இப்போது வெட்கமே இல்லாமல், நாட்டுக்காக உயிர் நீத்தவர்களின் பெயரைச் சொல்லி, சுயநலத்துக்குக் கடை விரித்திருக்கிறார்கள் அரசியல்வாதிகளும், உடன்போன அதிகாரிகளும்.

 கார்கில் வீரர்களின் பெயரைச் சொல்லி ஏமாற்றியது ஒருபுறம் இருக்க, கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பிரச்னைக்கு ஆளாகியிருக்கிறார் மகாராஷ்டிர மாநில வருவாய்த் துறை அமைச்சர் நாராயண ராணே. ஸ்ரீஷேத்ர மகாபலீஸ்வர தேவஸ்தான அறக்கட்டளைக்குச் சொந்தமான அரை ஏக்கர் நிலம், ராணே மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிலத்தை பஞ்சால் என்பவரின் பெயருக்கு மாற்றி, பிறகு அமைச்சரின் மனைவி பெயருக்கு மாற்றியிருக்கிறார்கள். அதாவது அமைச்சரின் மனைவி அப்பாவி. அவருக்கு இது கோயில் நிலம் என்பதே தெரியாது என்று உலகத்துக்கும் நீதிமன்றத்துக்கும் சொல்லிக் கொள்ள முடியும்.

 அதைவிட மோசமானது என்னவென்றால், 2008-ல் வருவாய்த் துறை ஆவணங்களிலேயே இந்தக் கோயில் நிலம் இல்லாதபடி அழித்தொழித்துவிட்டதுதான். கோயில் அறக்கட்டளையினர் நீதிமன்றத்தின் படிகளில் ஏறித்தான் ஆவணங்களைக் காட்டினார்கள். ஆனால் அரசு ஆவணங்களில் இது அழித்தொழிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலத்தை பஞ்சால் 15 ஆண்டுகளுக்கு முன்பு 1.4 லட்சத்துக்கு வாங்கியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 இன்னொரு கொடுமையும் புனே அருகே நடந்துகொண்டிருக்கிறது. புனே நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள மலைப்பகுதியில் "லாவசா' கட்டுமான நிறுவனம் சகல வசதிகளுடனும் 2,000 ஏக்கர் பரப்பளவில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டிக் கொண்டிருக்கிறது. கடல்மட்டத்திலிருந்து 1,000 அடி உயரத்தில் மலைமீது கட்டடம் கட்ட வேண்டும் என்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை என்று அனுமதிக் கடிதம் பெற்றிருத்தல் வேண்டும். ஆனால், 1,052 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரியம், எந்தவிதமான அனுமதியும் பெறவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், "லாவசா' கட்டுமான நிறுவனத்தின் பூர்வாசிரமத்தில் 22 விழுக்காடு பங்கு வைத்திருந்தவர்கள் யார் தெரியுமா? மத்திய அமைச்சர் சரத் பவார், அவரது மகள் சுப்ரியா சூலே!

 இந்த நகரியத்துக்குத் தேவையான தண்ணீர் புனே நகரிலிருந்து திசை திருப்பப்படுகிறது. அதாவது புனே நகரின் மொத்தத் தேவையில் 10 விழுக்காட்டை இந்த நகரியமே எடுத்துக்கொள்ளும். இதுதவிர, மின்சாரத்தையும் விழுங்குவார்கள். மனை மற்றும் வீடுகட்டும் தொழில் என்பது இப்போது பொறியாளர்கள், வியாபாரிகள் கையிலிருந்து நழுவிப்போய் பலகாலம் ஆகிவிட்டது. இப்போது இந்த வியாபாரிகளைப் பினாமிகளாக முன்னிறுத்தி அரசியல்வாதிகள் இந்தியப் பெருநகரங்களில் சட்டப்படியான கொள்ளையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இது தமிழகத்தில் சென்னையிலும் நடைபெறுகிறது. ஆனால், இதை வெளிப்படுத்திப் போராட்டம் நடத்த தைரியமான, அரசியல்சாய்வு இல்லாத, மக்கள் நலவிரும்பிகள் தேவை. தமிழ்நாட்டில் அப்படிப்பட்டவர்கள் இருப்பதற்கான அறிகுறிகளே தென்படவில்லை..

கருத்துகள் இல்லை: