செவ்வாய், 26 அக்டோபர், 2010

கத்தர் சிறையில் தமிழக மீனவர்கள்: ஜெயலலிதா மீட்புக்குரல!

சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் கன்னியாகுமரி மீனவர்கள் பலர் பணிபுரிந்து வருகிறார்கள்
அவர்களில் சிலர் கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி விசைப்படகுகளில் கிழக்கு மாகாண கடலோர கிராமமான தரீன் என்ற இடத்தில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கையில் தவறுதலாக கத்தார் நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்து விட்டனர். 
 இதனால் கத்தர் நாட்டு கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து, சிறைகளில் அடைத்துவிட்டனர்.

தமிழக மீனவர்களை  பணிக்கு வைத்த, சவுதி அரேபிய நாட்டவர் அதிக பணம் செலவாகும் என்பதால், தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காமல் தவிர்க்கிறாராம். இதனால், மாதங்கள் பல கடந்தும் தமிழக மீனவர்களை மீட்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்

தவறுதலாக கடல் தாண்டிய குற்றத்திற்காக, தமிழக மீனவர்களுக்கு கத்தார்  நீதிமன்றம் இரண்டாண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. தற்போது 28 மீனவர்கள் சினயா சிறையிலும், நான்கு மீனவர்கள் மர்கஸ் சிறையிலும் அடைபட்டுள்ளனர்.  .சிறையில் கொடுக்கப்படும் உணவுகள் அவர்களின்  உடல் நலத்திற்கு ஏற்றதாக இல்லை. மாற்று உடையின்றி, தாங்கள் அணிந்திருந்த ஆடைகளை சுத்தம் செய்து மீண்டும் அணிய வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்இதன் விளைவாக தமிழக மீனவர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.  தீர்ப்புப்படி இரண்டு ஆண்டுகள் சிறையில் வாடும் நிலை ஏற்பட்டால், மீனவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகுமென, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.தமிழக மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதன் காரணமாக அவர்களது குடும்பங்கள் தற்போது வருமானமின்றி, வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றன.

 கூட்டணியில் பிரசினை என்றால், விமான நிலையத்திற்கு சென்று காங்கிரஸ் தலைவரைச் சந்திக்கிற கருணாநிதி,மூன்று மாதகாலமாக கத்தர் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?  கருணாநிதிக்கு எனது கடும் கண்டனங்கள். இனியாவது காலம் தாழ்த்தாது விரைந்து செயல்பட்டு மத்திய மாநில அரசுகள் 32 தமிழக மீனவர்களையும் மீட்க வேண்டும்
என்று அந்த அறிக்கையில்  ஜெயலலிதா காட்டமாகக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: