வியாழன், 21 அக்டோபர், 2010

எங்கள் உணர்வுகளை சட்டம் மதித்தால் நாங்கள் சட்டத்தை மதிப்போம்: பால் தாக்கரே!

மும்பை: சட்டம் எங்கள் உணர்வுகளை மதித்தால் நாங்கள் சட்டத்தை மதிப்போம். எங்களுக்கு யாரும் சட்டம் கற்றுத்தர வேண்டாம் என்று சிவசேனைக் கட்சியின் தலைவர் பால் தாக்கரே அக்கட்சியின் இதழான சாம்னாவின் தலையங்கத்தில் எழுதியுள்ளார்.

தசரா விழாவினையொட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை சிவாஜி பூங்காவில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பேரணிக்கு அனுமதி வழங்குவது குறித்து மும்பை காவல்துறை தொடுத்த வழக்கில், பேரணியின் போது ஒலிப்பெருக்கியின் அளவு 50 டெசிபல் என்ற அளவிற்கு அதிகமாக இருக்கக் கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து சாம்னாவில் தலையங்கம் எழுதியுள்ள பால் தாக்கரே, பள்ளிவாசல்களின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள ஒலிப்பெருக்கிகள் மூலம் சொல்லப்படும் 'அதான்' என்கிற 'பாங்கு' ஓசை, தூக்கத்திற்கும் குழந்தைகளின் கல்விக்கும் இடையூறாக இருக்கின்றது. அதற்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வேற்று மாநிலத்தவர்களின் பிரச்சனைகளால் ஏற்படும் பெரும் சப்தம் 500 டெசிபலையும் தாண்டுகிறது; எங்களுக்கு சட்டம் தெரியும்; எங்களுக்கு யாரும் சட்டத்தை கற்றுத்தர வேண்டாம்; சட்டம் எங்கள் உணர்வுகளை மதித்தால் நாங்கள் சட்டத்தை மதிப்போம் என்றும் அந்த தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

”சிவசேனாவின் சப்தத்தை எவராலும் வீழ்த்த முடியாது” என்றும் பால் தாக்கரே அந்த தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பது, நீதி மன்றத்திற்கு விடப்பட்ட நேரடி சவாலாகவே பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: