செவ்வாய், 30 நவம்பர், 2010

இன்று முதல் அமலுக்கு வந்தது டெலிபோனில் பேசி விளம்பரம் செய்ய தடை மீறினால் ரூ.2 லட்சம் அபராதம்

செல்போன்களில் விளம்பரதாரர்கள் தரும் தொல்லை தாங்க முடியாத அளவுக்கு உள்ளது. முக்கியமான அலுவல் பணியில் இருக்கும்போது கூட போன் செய்து அது வேண்டுமா? இது வேண்டுமா? என்று எதையாவது கேட்கின்றனர்.
மத்திய நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி மந்திரிசபை கூட்டத்தில் இருந்தபோது கூட அவருக்கு நிதி நிறு வனம் ஒன்று போன் செய்து உங்களுக்கு லோன் வேண்டுமா? என்று கேட்ட சம்பவமும் நடந்துள்ளது.
எனவே இந்த தொல்லைகளை தடுக்க வேண்டும் என டெலிபோன் ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறையிடப்பட்டது. அதையடுத்து ஒழுங்குமுறை ஆணையம் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.
இதன்படி இனி டெலிபோன்களில் பேசி விளம்பரம் செய்யக்கூடாது. அதை மீறி செய்யப்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
விளம்பர நிறுவனங்களுக்கு தனியாகவும், டெலிபோன் நிலையத்துக்கு தனியாகவும் அபராதம் விதிக்கப்படும். விளம்பர நிறுவனம் முதல் தடவை தவறு செய்தால் ரூ.25 ஆயிரம் அபராதமும், 2-வது தடவை செய்தால் ரூ.72 ஆயிரமும் விதிக்கப்படும். 6 தடவை மீறினால் அபராதம் ரூ.2 லட்சமாக உயரும். டெலிபோன் நிறுவனங் களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
அதே நேரத்தில் நிறுவனங்கள் டெலிபோனில் விளம்பரம் செய்யும்போது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். விளம்பர நிறுவனங்களுக்கு “700”-ல் தொடங்கும் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் இருந்து எந்த எண்ணுக்கும் அவர்கள்டயல் செய்து பேசி விளம்பரம் செய்யலாம்.
“700” எண்ணில் தொடங்கும் போன் வந்தாலே இது விளம்பர போன் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். எனவே அந்த அழைப்பை ஏற்று பேசுவதாக இருந்தால் பேசலாம். தேவை இல்லை என்றால் துண்டித்து விடலாம்.
புதிய விதியமுறைகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாக டெலி போன் ஒழுங்குமுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: