செவ்வாய், 9 நவம்பர், 2010

நாடாளுமன்றத்தில் காங்கிரஸை சாடக் கூடாது-எம்.பிக்களுக்கு ஜெ. அட்வைஸ்

Jayalalithaசென்னை: சென்னையில் நேற்று நடந்த அதிமுக எம்.பிக்களுடனான ஆலோசனைக் கூட்டத்தின்போது, நாடாளுமன்றக் கூட்டத்தின் போது, எந்தப் பிரச்சினையிலும் காங்கிரஸை விமர்சித்துப் பேசக் கூடாது என்று கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளாராம்.

நாளை நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதையடுத்து நேற்று தனது கட்சி எம்.பிக்களை அழைத்து ஆலோசனை நடத்தினார் ஜெயலலிதா.

அப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் திமுகவை கடுமையாக சாடிப் பேசுமாறு தனது கட்சியினருக்கு முக்கிய ஆலோசனையைக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா. இந்தப் பிரச்சினைக்கு அதிகமுக்கியத்துவம் தருமாறும் அவர் அதிமுக எம்.பிக்களை கேட்டுக் கொண்டாராம்.

அதேபோல முல்லைப் பெரியாறு அணை விவகாரம், காவிரிப் பிரச்சினை உள்ளிட்டவை குறித்தும் முக்கியமாக பேசுமாறு அதிமுக எம்.பிக்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம், காங்கிரஸ் கட்சி எக்காரணம் கொண்டும் யாரும் விமர்சித்தோ, கண்டித்தோ, கண்டனம் தெரிவித்தோ எந்த வகையிலும் குறை கூறி பேசக் கூடாது என்றும் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளாராம் ஜெயலலிதா.

காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்று இன்னும் நம்பிக்கையுடன் உள்ளார் ஜெயலலிதா. இதற்குப் பங்கம் வந்து விடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸை விமர்சித்துப் பேச வேண்டாம் என தனது கட்சி எம்.பிக்களுக்கு தடா போட்டுள்ளார் ஜெயலலிதா என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: