வியாழன், 4 நவம்பர், 2010

சோனியா, மன்மோகன், பின் லேடன், தாவூத் இப்ராகிம்: 'உலகில் சக்தி வாய்ந்த மனிதர்கள்'!

Sonia Gandhi and Manmohan Singhபாஸ்டன்: உலகில் அரசியல்ரீதியில் மிக சக்தி வாய்ந்த மனிதராக சீன அதிபர் ஹூ ஜின்டாவோவை போர்ப்ஸ் இதழ் தேர்வு  செய்துள்ளது. இந்த வரிசையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 9வது இடம் கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் போபர்ஸ் இதழ் உலகின் மிகுந்த அதிகாரம் மிக்க சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அரசியல், பொருளாதாரம்  , வர்த்தகம், மதம், தீவிரவாத-போதை மருந்து கடத்தல் புள்ளிகள் என பல்வேறு துறைகளில் அதி முக்கிய நபர்களை இந்த இதழ் பட்டியலிட்டுள்ளது.

இதில் சீன அதிபர் ஹூ ஜின்டாவோ உலகின் மிக சக்தி வாய்ந்த நபர் என்ற முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த இடத்திலிருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

செளதி அரேபியா மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் 3வது இடத்திலும், ரஷ்ய பிரதமர் விளாடிமீர் புடின் 4வது இடத்திலும், போப் ஆண்டவர் பெனடிக்ட் 5வது இடத்திலும், ஜெர்மனி  அதிபர் ஏஞ்சலா மெர்கல் 6வது இடத்திலும், இங்கிலாந்து பிரதமர் கேமரூன் 7வது இடத்திலும் உள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 9 இடத்தைப் பிடித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் 18வது இடத்தில் உள்ளார். மன்மோகன் சிங் கடந்த முறை 36வது இடத்தில் இருந்தார். இப்போது 18 இடங்கள் முன்னேறி உள்ளார் 18வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி கயானி 29வது இடத்தையும், தலாய் லாமா 39வது இடத்தையும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் 31வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 34வது இடத்திலும், லட்சுமி மித்தல் 44வது இடத்திலும், ரத்தன் டாடா 61வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பின் லேடன்-தாவூத் இப்ராகிம்:

இந்தப் பட்டியலில் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் பின் லேடன் 57வது இடத்தையும், மெக்சிகோவின் மாபெரும் போதை மருந்து கடத்தல் புள்ளியான ஜோவாகின் கஸ்மேன் 60வது இடத்தையும், மும்பை தாதா தாவூத் இப்ராகிம் 63 இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்த மூவரும் உலக அமைதி, நன்மைக்கு எதிரானவர்கள் என்றாலும், இவர்களது பலமும், சக்தியும் இவர்களை இந்தப் பட்டியலில் இடம் பெற வைத்துள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: