புதன், 3 நவம்பர், 2010

இந்தோனேசியாவில் மீண்டும் குமுறியது எரிமலை-விமானங்கள் ரத்து

Volcanoஜகார்த்தா: இந்தோனேசியாவில் மீண்டும் எரிமலை குமுறத் தொடங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு விமானங்கள் ரத்து  செய்யப்பட்டுள்ளன.

மெளன்ட் மெராபி எரிமலை கடந்த சில வாரங்களாக வெடித்து குமுறி வருகிறது. ஆனால் இந்த முறை எரிமலை குமுறலால் ஏற்பட்ட புகை அதிக அளவில் வெளியாகி வருவதால் பல்வேறு விமானங்களை ரத்து செய்துள்ளன இந்தோனேசிய விமான நிறுவனங்கள்.

மலேசியாவின் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் ஏசியா மற்றும் சிங்கப்பூரின் சில்க்ஏர் ஆகியவை தங்களது சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளன. இருப்பினும் விரைவில் தங்களது சேவை தொடங்கும் என அவை தெரிவித்துள்ளன.

இந்தோனேசியாவைச் சற்றிலும் தற்சமயம் சர்வதேச விமானப் போக்குவரத்து லேசான பாதிப்பை சந்தித்துள்ளதாக அமெரிக்காவும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட கடும் புகை காரணமாக ஐரோப்பாவின் பெரும் பகுதிக்கு விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை: