செவ்வாய், 2 நவம்பர், 2010

முக்கிய சூழலில் காங்., கூட்டம் ; காங்., காரிய கமிட்டியில் தமிழகத்தை சேர்ந்தவருக்கு இடம் கிடைக்குமா?


புதுடில்லி: சோனியா மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் நடக்கும் முதல் கூட்டத்தில் காங்., முக்கிய நிர்வாகிகள் ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். டில்லியில் உள்ள தல்கோத்ரா ஸ்டேடியத்தில் இன்று காலையில் கூடிய காங்,. கமிட்டி கூட்டத்தில் காங்., காரிய கமிட்டிக்கு புதிய உறுப்பினர்களை சோனியா இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் தமிழகத்தை சேர்ந்தவருக்கு இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கார்கில் வீடு ஒதுக்கீட்டு முறைகேடு புகாரில் சிக்கியுள்ள மகாராஷட்டிர முதல்வர் அசோக்சவான் , காமன்வெல்த் ஊழலில் சிக்கிய கல்மாடி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். இந்தக்கூட்டத்தில் சோனியா ஊழல் விவகாரம் தொடர்பாக என்ன பேசுவார் என்றும் நிர்வாகிகள் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

வரும் 9ம் தேதி பார்லி., கூட்டம் நடக்கவுள்ள நிலையில் எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பும் பட்சத்தில் எப்படி சமாளிப்பது. இதற்கு முன்னதாக எதிர்கட்சியினர் வாய்க்கு பூட்டு போடுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

காங்., 125 வது ஆண்டு விழா கொண்டாட்டம் தொடர்பாகவும் இன்றை‌ய கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. கார்கில் விவகாரத்தில் சிக்கிய மகாராஷ்ட்டிர முதல்வர் அசோக்சவான் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் சோனியா என்ன முடிவு எடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக காங்கிரஸ் காரியகமிட்டிக்கு பாதிபேர் தேர்வு செய்யப்பட்டாலும் பாதிபேர் சோனியாவிற்கு வேண்டப்பட்டவர்கள் அவரால் நியமனம் செய்யப்படுவர். இதனால் இந்த காரியகமிட்டியில் புதியவர்கள் யார் இடம்பெறுவர் என காங்., நிர்வாகிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். காரியகமிட்டி காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் கொண்டது.

இதில் மாநில வாரியாக சோனியா ஆடகளை தேர்ந்தெடுத்து நியமிப்பார். இந்த கமிட்டி மற்றும் மத்தியஅமைச்சர் நீக்கல் , சேர்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும். ராகுலின் ஆதரவு பெற்றவர்களுக்கும், சோனியா ஆதரவுக்கரம் தெரிவிப்பார் என காங்., வட்டாரம் தெரிவிக்கிறது. இன்றைய கூ‌ட்டத்தில் ஆந்திராவில் மறைந்த  முதல்வர் ராஜசேகரரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி புறக்கணிப்பார் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: