புதன், 15 டிசம்பர், 2010

சிபிஐ ரெய்ட்: நக்கீரனை களங்கப்படுத்தும் ஆங்கிலத் தொலைக்காட்சி!

சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நடந்த சிபிஐ சோதனை ஈழத் தமிழ் ஆதரவாளர்களுக்கு எதிரான, பழிவாங்கல் நடவடிக்கையோ என்று சந்தேகப்படுத்தும் வகையில் ஆங்கில மீடியாக்களின் செய்திகள் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. நக்கீரன் இதழை ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி விடுதலைப் புலிகள் ஆதரவு பத்திரிக்கை என்று வர்ணித்திருப்பதே இந்த சந்தேகத்திற்குக் காரணம்.

இன்று காலை தொடங்கிய இந்த சிபிஐ ரெய்டு குறித்த செய்திகளை அனைத்து தமிழ் மீடியாக்களும் நடுநிலையுடன் கூறி வரும் நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சி மட்டும் குயுக்தியான பார்வையுடன் வெளியிட்டு வருவது பலத்த சந்தேங்கங்களை ஏற்படுத்தியுள்ளது. (Pro-LTTE Nakkeran என்று நக்கீரனை இந்த ஆங்கிலத் தொலைக்காட்சி வர்ணிக்கிறது)

இதனால், நக்கீரன் இணையாசிரியர் காமராஜ், மத போதகரும் தமிழ் மையம் அமைப்பின் தலைவருமான ஜெகத் கஸ்பார் ஆகியோரது வீடுகளை குறி வைத்து நடந்து வரும் சோதனைக்கு உண்மையான காரணம் என்ன என்பது தற்போது பலத்த விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

இவர்கள் குறித்து அந்தத் தொலைக்காட்சி, விடுதலைப் புலிகள் ஆதரவாளர் கஸ்பார் என்றும், விடுதலைப் புலிகள் ஆதரவுப் பத்திரிக்கை நக்கீரன் என்றும் கூறுவது விஷமத்தனமாகவே தோன்றுகிறது.

ஈழத் தமிழர்கள் என்றாலே ஒரு தீவிரவாதக் கூட்டம் போலவே சித்தரித்துப் பழகி விட்டவை இந்த ஆங்கில மீடியாக்கள். காரணம், இவர்களுக்கு இலங்கை விவகாரம் குறித்து எந்த ஆழமான அறிவும் கிடையாது. அவ்வப்போது கிடைக்கும் தகவல்களை வைத்து அன்றைய பொழுதை 'கத்திக் கத்தியே' கழிப்பது தான் இந்த அரைகுறை மீடியாக்களின் வழக்கம்.

ஈழத்தில் போர் உக்கிரத்தில் இருந்தபோது செத்துக் கொண்டிருந்த அப்பாவி மக்கள் குறித்துக் கவலையுடன் கூடிய செய்திகளை தமிழ் மீடியாக்கள் வெளியிட்டு வந்த நேரத்தில், அந் நாட்டு அதிபர் ராஜபக்சேவை ஆதரித்து (இந்த மீடியாக்களுக்கு மட்டும் இலங்கை அரசு உடனுக்குடன் விசாவும் அனுமதியும் தந்தது நினைவுகூறத்தக்கது) கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தவை இந்த மீடியாக்கள்.

இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நடந்து வரும் சிபிஐ விசாரணையிலும் தங்களது 'புத்தியை' திணிக்க ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி முயல்வது உண்மையில் இந்த சோதனையின் நோக்கம் என்ன என்பது குறித்தே அடிப்படை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை ஈழத் தமிழர்களை ஆதரித்து வருவதால் தான் ஜெகத் காஸ்பரையும் நக்கீரனையும் மத்திய அரசு குறி வைக்கிறதோ என்ற எண்ணம் கூட எழுகிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் மட்டும் மொத்தம் 27 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் அருகே உள்ள ராஜாவின் வீட்டில் மீண்டும் ரெய்டு நடந்து வருகிறது. ராஜாவின் உறவினர்கள், நண்பர்கள், நக்கீரன் இணையாசிரியர் காமராஜ் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.

சென்னையில் உள்ள ராஜாவின் ஆடிட்டர் கணபதி சுப்ரிமணியம், பெசன்ட் நகரில் உள்ள நக்கீரன் வார இதழின் இணையாசிரியர் காமராஜ், பாதிரியார் ஜெகத் காஸ்பர், ராஜாவின் நண்பரான சாதிக் பாட்சாவின் சென்னை வீடு உள்ளிட்டவை ரெய்டுக்குள்ளாகியுள்ளன.

இதில் காமராஜ், ராஜாவின் நண்பர் என்பதால் சோதனை நடந்து வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

ராஜா எம்.பியாக உள்ள நீலகிரி தொகுதிக்குட்பட்ட ஊட்டியிலும் ரெய்டுநடந்து வருகிறது.

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ராஜாவின் உறவினர்கள் வீடுகளும் ரெய்டுக்குள்ளாகியுள்ளன.

பெரம்பலூர் அருகே உள்ள ராஜாவின் வீடு 2வது முறையாக சோதனைக்குள்ளாகியுள்ளது.

பெரம்பலூரில் உள்ள சாதிக் பாட்ஷாவின் நண்பர்கள் வீடுகளிலும் ரெய்டு நடந்து வருகிறது.

கிட்டத்தட்ட100க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ரெய்டுகள் முடிந்து சிபிஐ அந்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது தான் ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து மேலும் பல விவரங்கள் வெளிவரும்.

கருத்துகள் இல்லை: