செவ்வாய், 8 மார்ச், 2011

சட்டசபை தேர்தலில் முதல்வர் போட்டியில்லை?

இதுவரை தொடர்ந்து 11 முறை தேர்தல் களம் கண்டு, அத்தனை முறையும் வென்று, நீண்ட ஜனநாயகப் பயணத்தை தொடர்ந்து வரும் தி.மு.க., தலைவர் கருணாநிதி, 12வது முறையாக மீண்டும் தேர்தல் களம் காண்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

"இது தான் நான் களமிறங்கும் கடைசி தேர்தல்' என்று, 2001 பிப்ரவரியில் நடந்த கட்சிப் பொதுக்குழுவில் உருக்கமுடன் குறிப்பிட்டார் கருணாநிதி. உடனே பொதுக்குழு உறுப்பினர்கள், "அப்படி சொல்லக் கூடாது' என்று குரல் எழுப்பினர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, அந்தத் தேர்தலில் மட்டுமல்லாது, அடுத்து வந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு வென்றார். முதல்வராகவும் அரியணை ஏறினார். ஆனால், தற்போதைய நிலைமை அப்படி இல்லை. "தமிழக முதல்வர் என்று என்னை அழைப்பதை விட, தி.மு.க., தலைவர் என்று அழைப்பதையே பெருமையாக கருதுகிறேன்' என்றெல்லாம், பல முறை தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். கட்சியை வழிநடத்தவும், ஆட்சியை நடத்தவும் அழகிரி, ஸ்டாலின் என இருவரும் தயாராகிவிட்ட நிலையில், முதல்வர் இந்த முடிவை எடுப்பதற்கான சூழல் கனிந்துவிட்டதாகவே பலரும் நினைத்தனர். லோக்சபா தேர்தல் நேரத்திலும் பிரசாரத்திற்கான நாட்களை தி.மு.க., தலைவர் குறைத்துக்கொண்டார். ஐந்தாண்டுகளில் நடந்த எந்த இடைத்தேர்தலிலும் பிரசாரத்துக்குச் செல்லவில்லை - பென்னாகரத்தில் நடந்த ஒரே ஒரு பொதுக்கூட்டத்தைத் தவிர.

அவரது உடல்நிலை முன்னைப்போல் ஒத்துழைக்காததை அவரது குடும்பத்தினரும் கவலையோடு கவனித்து வந்தனர். இந்த சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை, இளைஞர்களுக்கு, மூத்தவர்கள் வழிவிட வேண்டும் என்ற கோஷம் தி.மு.க.,வில் எழுந்துள்ளது. அவர்களுக்கு முன்மாதிரியாக, முதல்வர் கருணாநிதி, இந்தத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று கருத்து வலுப்பட்டுள்ளது. அவரது இந்த ஆலோசனைக்கு, அவரது குடும்ப சூழலும் ஒரு காரணமாக முன்வைக்கப்படுகிறது. காங்கிரசுடனான கூட்டணியில் ஏற்பட்ட கசப்பான சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. "ஓய்வு என்பது வேலை செய்து கொண்டிருப்பது தான் என உணர்பவர்களே, பொதுத் தொண்டில் ஊக்கமுடையவர்களாக இருக்க முடியும்' என்பது தி.மு.க., தலைவரின் வார்த்தைகள். தேர்தல் களம் கண்டு, தொடர்ந்து வேலை செய்துகொண்டிருப்பதா அல்லது அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு கொடுத்து, முதுகெலும்பாய் நிற்பதா என்பது, முதல்வரின் முடிவில் இருக்கிறது.

தயாராகிறது திருவாரூர்: இந்த சட்டசபைத் தேர்தலில் முதல்வர் போட்டியிட மாட்டார் என்றே, அவரை நன்கு அறிந்த வட்டாரங்கள் சொல்கின்றன. மூத்த தலைவர்களின் நெருக்குதல் காரணமாக, ஒருவேளை அவர் போட்டியிட்டால், திருவாரூரைத் தேர்ந்தெடுக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதை வலியுறுத்தி, ஏராளமானோர் விருப்ப மனுவும் தாக்கல் செய்துள்ளனர். தி.மு.க., மேல்மட்டத்தில் சிலரிடம் விசாரித்தபோது, "அடிப்படைப் பணிகள் எப்போதோ துவங்கிவிட்டன. சொந்தத் தொகுதியில் முதல்வர் களமிறங்குவது நிச்சயம்' என்கின்றனர்.

கருத்துகள் இல்லை: