செவ்வாய், 1 மார்ச், 2011

மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்டோர் தெரிவிக்க அழைப்பு

தஞ்சாவூர்: தஞ்சையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவங்கள் திரும்ப பெறுதல் தொடர்பான பயிற்சி வகுப்பு நடந்தது. கலெக்டர் சண்முகம் பேசியதாவது: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஃபிப்ரவரி ஒன்பதாம் தேதி முதல் நடந்து வருகிறது. இதுவரை தங்கள் பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான கணக்கெடுப்பாளர் வராமல் இருந்தால், எங்களிடம் தெரிவிக்கலாம். கலெக்டர் அலுவலகம் 04362 230121, டி.ஆர்.ஓ., 9445000923, மக்கள் தொகை கணக்கெடுப்பு மண்டல ஒருங்கிணைப்பாளர் 9444706443, தஞ்சை ஆர்.டி.ஓ., 9445000465, கும்பகோணம் ஆர்.டி.ஓ., 9445000466, பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ., 9445000467 என்ற எண்ணில் விடுபட்டவர்கள் புகார் தெரிவிக்க அழைக்கலாம். உடனடியாக அப்பகுதியில் வந்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும். இதுவரை மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணிக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்ட பணியாளர்கள் கணக்கெடுப்பு துவங்காமல் இருந்தால் அவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கணக்கெடுப்புப்பணி இதுவரை நடந்த விபரங்களை மேற்பார்வையாளர்கள், பொறுப்பு அலுவலர்கள் சரியாக மேற்பார்வை செய்து ஆய்வு செய்ய வேண்டும். விடுதல் இன்றி கணக்கெடுப்பு பணி முடிக்கப்பட வேண்டும். குறிப்பாக, கணக்கெடுப்பு பணி முடிந்த பின் படிவங்களை திரும்ப பெறும்போது ஒவ்வொரு படிவங்களும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்த பின்பே வாங்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பில் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதால், கடைசி நேர தவறுகளை தவிர்த்திட அனைத்து அலுவலர்களும் மிகுந்த பொறுப்புடன் திட்டமிட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார், மக்கள் தொகை கணக்கெடுப்பு மண்டல ஒருங்கிணைப்பாளர் நடராஜன் ஆகியோர் இறுதிக்கட்ட பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர்.

கருத்துகள் இல்லை: