ஞாயிறு, 31 அக்டோபர், 2010

234 தொகுதிகளும் வேண்டும்! - ஈவிகேஎஸ் இளங்கோவன்!

EVKS Ilangovanதமிழகத்தில் அடுத்த தேர்தலில் காங்கிரஸுக்கு 234 தொகுதிகளுமே வேண்டும், என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.

இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் அருகில் பொதுக் கூட்டம் நடந்தது. மத்திய மந்திரி ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கூட்டாக கலந்து கொண்டு பேசினர். இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது:

அகிலஇந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கிரண்குமார் ரெட்டி பேசும்போது இளைஞர் காங்கிரசாருக்கு தேர்தலில் அதிக எம்.எல்.ஏ., சீட் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவர்களுக்கு தமிழ்நாட்டில் 130 சீட்டு கொடுக்க வேண்டும். என்னை போன்ற கிழடுகளுக்கு 100-சீட்டாவது வேண்டும்.

ஆக காங்கிரஸ் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டால்தான் சரியாக இருக்கும்.

இதுபோன்ற விஷயங்கள்தான் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் பிடிக்கும். ஆகவே கிரண் குமார் ரெட்டி இன்று டெல்லி செல்லும் போது இதை அவரிடம் எடுத்து சொல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சோனியாகாந்தி கலந்து கொண்ட திருச்சி பொதுக் கூட்டத்தில் லட்சக் கணக்கான மக்கள் திரண்டதைப் பார்த்த பின்னர் இங்கு சிலர் புலம்பி கொண்டு இருக்கிறார்கள். சோனியா நினைத்திருந்தால் அவர் இந்தியாவின் பிரதமர் ஆகிவிட்டு, மகன் ராகுலை துணைப் பிரதமராகவும், மகள் பிரியங்காவை டெல்லியில் முதல்வராகவும், மருமகன் ராபர்ட் வதேராவை மகாராஷ்டிரா முதல்வராகவும் ஆக்கியிருக்க முடியும்.

யாராவது தடுத்திருக்க முடியுமா? ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. காரணம் சோனியா தன் குடும்பத்துக்காக வாழாமல் நாட்டுக்காக வாழும் தலைவர்.

காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் வரவேண்டும் என மக்கள் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். தமிழக மக்கள் யாருக்கும் அடிமையாக இருக்க விரும்பவில்லை. சிலர் காங்கிரஸ் மீது மரியாதை உண்டு.நான் காங்கிரசுக்காக கஷ்டபட்டேன் என்றுசொல்லுகிறார்கள். இவர்கள் ஜவர்லால் நேரு மீது சென்னையில் செருப்பு வீசவில்லையா? இந்திரா காந்தி ரத்தம் சிந்தியபோது எப்படி எல்லாம் பேசினார்கள்? இதை காங்கிரஸ்காரர்கள் மறந்து விடவில்லை.

இளம் தலைவர் ராகுல் பின்னால் ஒரு பட்டாளம் வந்து கொண்டு இருக்கிறது. எனவே காங்கிரசார் யாருடைய மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டார்கள்.

இளைஞர் காங்கிரசார் தமிழக அமைச்சர்களின் சொத்து கணக்கை கேட்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்கள். நீங்கள் கேட்டால் யாரும் கோபப்பட மாட்டார்கள். நான் கேட்டால் கோபம் வருகிறது. ஜி.கே.வாசன் சில விஷயங்களை சொல்லும்போது லேசாக முகம் சுழிக்கிறார்கள். ஆகவே நாங்கள் பேசவேண்டியதை உங்களிடம் சொல்கிறோம். நீங்கள் பேசுங்கள். தமிழ் நாட்டில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்போல நல்ல தலைவர்களும் உள்ளனர்.

ஆனால் ஒருவர் காங்கிரஸ் கட்சியை முடக்கி வைத்து விட்டார். அவர் பெயரை நான் சொல்லி இருப்பேன். ஜி.கே.வாசன் இருப்பதால் சொல்லவில்லை. அவர் தமிழக காங்கிரஸ் கட்சியை வேறொரு கட்சிக்கு அடகு வைத்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். விரைவில் நாம் விரும்பும் மாற்றம் தமிழகத்தில் ஏற்படும்", என்றார்.

கருத்துகள் இல்லை: