சனி, 30 அக்டோபர், 2010

நிதீஷ் குமார் திருடன் : ராப்ரி தேவி!

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஒழுக்கம் அற்றவர் என்றும் அவர் ஒரு திருடன் என்றும் பீகார் மாநில முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி கூறியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து பீகார் மாநில அரசியல் மிகவும் கீழ்த்தரமாக ஆகியுள்ளது. அரசியல் கட்சிகள் எதிர் கட்சிகளின் கொள்கைகளையம் திட்டங்களையும் விமர்சனம் செய்வதை விட்டு அவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது அதிகரித்துவிட்டது. ராகுல் காந்தியை கங்கையில் தூக்கி வீச வேண்டும், நிதீஷ்குமார் எதற்குமே பயனற்றவர் என்பன போன்ற வார்த்தைகளே பிரச்சாரம் என்றாகிவிட்டது.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய பீகார் மாநில முன்னாள் முதல்வரும் லாலு பிரசாத் யாதவின் மனைவியுமாகிய ராப்ரி தேவி,  நிதீஷ் குமார் ஒழுக்கம் அற்றவர். அவர் ஒரு திருடர். அவரை ஆட்சியிலிருந்து தூக்கி எறிய வேண்டும் என்று பேசினார்.

அரசு கணக்கு தணிக்கையாளரின் அறிக்கை படி, சுமார் 11,400 கோடி ரூபாய் மதிப்பிலான பீகார் மாநில வளர்ச்சித் திட்டங்களில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் ராப்ரி தேவி குற்றம் சாட்டினார்.

இந்தக் குளறுபடிகள் தொடர்பாக சிபிஐ விசாரணையை அனுமதிப்பதை விட்டுவிட்டு, சிபிஐ விசாரணையைத் தடுத்து நிறுத்துவதற்காக நிதீஷ் குமாரும் அவரது அரசும் பாட்னா உயர் நீதிமன்றத்திற்குச் சென்றதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: