புதன், 27 அக்டோபர், 2010

அருந்ததி ராய் மீது வழக்குப் போட மத்திய உள்துறை அனுமதி!

டெல்லியில் நடந்த கருத்தரங்கில் தேச விரோதமாகப் பேசியதாகக் கூறி பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

ஏற்கெனவே இந்த கருத்தரங்கில் தேச விரோதமாகப் பேசியதாக ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் சையத் அலி ஷா கிலானி மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

டெல்லியில் அண்மையில் நடந்த கருத்தரங்கில் கிலானி, எழுத்தாளர் அருந்ததி ராய், மாவோயிஸ்டு ஆதரவு தலைவர் வரவர ராவ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

தேச விரோதமாகவும் பிரிவினையைத் தூண்டும் வகையிலும் கருத்தரங்கில் பேசப்பட்டதாக கூறி பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தேச விரோதமாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவின் அருண் ஜேட்லி வலியுறுத்தினார்.

இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் எந்தச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்வது என்பது குறித்து டெல்லி காவல்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: