ஞாயிறு, 7 நவம்பர், 2010

இஸ்லாத்தின் கோட்பாடுகளை விட்டு விலகிச் சென்றுவிட்ட தீவிரவாதிகள்-ஒபாமா

Obamaமும்பை: ஜிகாத் என்ற வார்த்தைக்கு தீவிரவாதிகள் பல்வேறு அர்த்தங்களைக் கொடுத்துக் கொண்டு அதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்துகின்றனர். இஸ்லாம் என்ற புனிதமான மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விட்டு தீவிரவாதிகள் விலகிச் சென்றுவிட்டனர் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார்.

மும்பையில் புனித சேவியர் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே இன்று ஒபாமா உரையாற்றினார். பின்னர் மாணவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு ஒபாமா பதிலளித்தார்.

அவர் கூறுகையில், இந்தியா வளர்ந்து வரும் தேசம் என்கிறார்கள். இதை நான் மறுக்கிறேன். இந்தியா ஒரு வளர்ந்து விட்ட தேசம் தான். உலக விவகாரங்களில் இந்தியாவின் பங்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக நாடுகளை அதிசயிக்க வைத்துள்ளது. வறுமையையும் தீவிரவாதத்தையும் ஒழித்துக் கட்டும் தகுதியும் பலமும் இந்தியாவிடம் உள்ளது.

இந்திய-அமெரிக்க உறவு என்பது இந்த நேரத்தில் மிக மிக அவசியமானது. உலகின் பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒத்த கருத்து நிலவுகிறது என்றார்.

பின்னர் ஜிகாத் குறித்து ஒரு மாணவர் எழுப்பி கேள்விக்கு பதிலளித்த ஒபாமா, ஜிகாத் என்ற வார்த்தைக்கு தீவிரவாதிகள் பல்வேறு அர்த்தங்களைக் கொடுத்துக் கொண்டு அதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்துகின்றனர். இஸ்லாம் என்ற புனிதமான மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விட்டு தீவிரவாதிகள் விலகிச் சென்றுவிட்டனர் என்பதே உண்மை. அவர்களை ஒடுக்குவது நம் முன் உள்ள பெரிய சவால்.

அனைவருமே உலகின் எல்லா மதங்களையும் மதித்து நடக்க வேண்டும். பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் அமைதியையும் நியாயத்தையும் நேர்மையையும் விரும்புபவர்கள். அவர்கள் அதீத சகிப்புத்தன்மை கொண்டவர்கள் தான் என்றார்.

மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு குறித்து நேற்று எந்தக் கருத்தையும் தெரிவிக்காத ஒபாமாவிடம், ஒரு மாணவி கேள்வி எழுப்புகையில், தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் தவறிவிட்டதை சுட்டிக் காட்டினார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஒபாமா,

தீவிரவாதத்தை ஒடுக்குவதில் எவ்வளவு வேகம் காட்ட வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அந்த வேகம் பாகிஸ்தானிடம் இல்லை. தீவிரவத்தை பாகிஸ்தான் இன்னும் வேகம் கொண்டு ஒடுக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து இரு நாடுகளும் அனைத்துப் பிரச்சனைகளையும் பேசித் தீர்க்க வேண்டும். இரு நாடுகளுமே இணைந்து வளர்ச்சி பெற முடியும். இதில் அமெரிக்காவுக்கும் உதவ முடியும். ஆனால், எங்களது கருத்தை எந்த நாடு மீதும் திணிக்க மாட்டோம்.

ஆப்கானி்ஸ்தானிலும் அமைதியைத் திரும்பச் செய்து அந்த தேசத்தை ஸ்திரமுள்ளதாக்குவதும் சாத்தியம் தான் என்றார்.

முன்னதாக மாணவர்களுடன் கலந்துரையாடலுக்கு ஒபாமா தயாரானபோது மைக்கைப் பிடித்த அவரது மனைவி மிஷேல், குழந்தைகளே, ஒபாமாவிடம் மிகக் கடினமான கேள்விகளைக் கேளுங்கள் என்றார்.
   

கருத்துகள் இல்லை: