புதன், 3 நவம்பர், 2010

போலீசார் மென்மை போக்கை கைவிட வேண்டும்: குழந்தைகளை கடத்தியவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்; ஜெயலலிதா அறிக்கை

போலீசார் மென்மை போக்கை கைவிட வேண்டும்:
 
 குழந்தைகளை கடத்தியவர்களுக்கு
 
 கடும் தண்டனை வழங்க வேண்டும்;
 
 ஜெயலலிதா அறிக்கை
                                                                           
சென்னை, நவ. 3-
 
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 
 
பணத்திற்காக குழந்தைகளைக் கடத்தும் கொடூரச் செயல்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை 50-க்கும் மேற்பட்ட கடத்தல் சம்பவங்கள் நடந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. சில வாரங்களுக்கு முன்னர், சென்னை கொடுங்கை யூரைச் சேர்ந்த சிறுவன் கிருஷ் ஆனந்த் மர்ம நபர்களால் கடத்தப்பட்டான். கடந்த ஜூலை மாதம் சென்னையைச் சேர்ந்த ஆதித்யா என்ற சிறுவன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டான்.
 
கடந்த மாதம் 29-ஆம் தேதி கோவை நகரில் வசிக்கும் துணிக்கடை அதிபர் ரஞ்சித்குமாரின் மகள் முஸ்கான் மற்றும் மகன் ரித்திக் ஆகியோர் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரத்துக்குப் பிறகு, ஈவு இரக்கமின்றி, மனிதாபிமானமற்ற முறையில் பணத்திற்காக கொல்லபட்டிருக்கின்றனர். திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு படுபாதக கொலைச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்ற விதத்தை பத்திரிகையில் படித்த போது எனது நெஞ்சம் பதைபதைத்தது. இந்தக் கொடூரச் சம்பவத்தையடுத்து அனைத்துப் பெற்றோர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
 
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைவில் பெற்றுத் தர காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, இளம் பிஞ்சுகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் கீர்த்தி வாசனை சில மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளதாக வந்துள்ள செய்தி என்னை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இது போன்ற தொடர் சம்பவங்கள் தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதைத் தான் நமக்கு உணர்த்துகின்றன.
 
பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு தர வேண்டும்; சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்து; கொலைக் குற்றவாளிகளிடமும், ரவுடிகளிடமும் மென்மையான போக்கைக் கடைபிடிக்காமல் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும்; கோவையில் இளம் பிஞ்சுகள் இறந்ததற்குக் காரணமான கொடூரர்களை விரைந்து தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் கருணாநிதியை தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
 
 

கருத்துகள் இல்லை: