ஞாயிறு, 7 நவம்பர், 2010

உளவு தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்: தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக போராடும்: மும்பையில் ஒபாமா பேச்சு

உளவு தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்: தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக போராடும்: மும்பையில் ஒபாமா பேச்சுமும்பை, நவ.7-
 
மும்பை வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், அவர் மனைவி மிச்செல்லும் அங்குள்ள தாஜ் ஓட்டலுக்கு சென்றனர். அந்த ஓட்டல், கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானது குறிப்பிடத்தக்கது.

அத்தாக்குதலில் பலியானவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டை ஒபாமா பார்வையிட்டார். பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
 
பின்னர், அங்கு திரண்டிருந்த, பலியானோரின் குடும்பத்தினர் மற்றும் ஓட்டல் ஊழியர்களுடன் கைகுலுக்கினார். அவர்களிடையே ஒபாமா 6 நிமிட நேரம் உரையாற்றினார். மும்பை தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உரை அமைந்திருந்தது. ஒபாமா பேசியதாவது:-
 
மும்பைக்கு வந்து இருப்பதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். மும்பை தாக்குதல் நடைபெற்றபோது, இந்தியர்களுடன் சேர்ந்து அமெரிக்கர்களும் கவலையுடன் பார்த்தோம். தாஜ் ஓட்டல், 4 நாட்கள் பற்றி எரிந்ததை எங்களால் மறக்க முடியாது.
 
அந்த தாக்குதல் நடந்தபோது, முன்பின் தெரியாதவர்கள், ஒருவருக்கொருவர் உதவினர். தாக்குதலை போலீசார் முடிவுக்கு கொண்டு வந்தனர். ஓட்டல் ஊழியர்கள், உயிர்த்தியாகம் செய்து நிறைய பேரைக் காப்பாற்றினர். தனது குடும்பத்தை பறிகொடுத்த இந்த ஓட்டல் மேனேஜர், தொடர்ந்து இங்கேயே பணியாற்றி வருகிறார். மும்பை மக்களின் மனஉறுதியும், மீள்திறனும் பாராட்டுக்குரியவை.
 
மும்பை என்பது பல்வேறு தரப்பினர் வாழும் நகரம். பல நாட்டு மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்துவதன் மூலம், மக்களை பிரித்து விடலாம் என்று தீவிரவாதிகள் கருதினர். ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினர். மும்பையையும், இந்தியாவையும் சீர்குலைக்க திட்டமிட்டனர். ஆனால் அவர்கள் தோற்றுப் போய் விட்டனர்.
 
ஏனென்றால், மறுநாளே மும்பை வாசிகள் பணிக்குத் திரும்பி விட்டனர். தாஜ் ஓட்டல் ஊழியர்கள் பணிக்கு வந்தனர். சில வாரங்களில், தாஜ் ஓட்டல், விருந்தினர்களை வரவேற்க தயாராகி விட்டது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், சீக்கியர்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகளாக, ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
 
தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டணியை பலப்படுத்தும் வகையில், பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சு நடத்துவேன். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, இனிமேலும் தீவிரவாத தாக்குதல்கள் நீடிக்கக்கூடாது என்று, உளவு தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்.
 
நான் மும்பை தாஜ் ஓட்டலில் தங்குவது, தீவிரவாதத்துக்கு எதிராக நான் விடுக்கும் வலிமையான செய்தியா? என்று பலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லும் பதில், `ஆம்' என்பது தான். இந்திய மக்களின் வலிமைக்கு அடையாளமே, தாஜ் தான். மும்பை தாக்குதலின் பின்னணியில் உள்ள சதிகாரர்களை நீதியின் முன்பு பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்.
 
இவ்வாறு ஒபாமா பேசினார்.

கருத்துகள் இல்லை: