ஞாயிறு, 7 நவம்பர், 2010

சிறுவனை உயிருடன் மீட்க பிணையத் தொகை கொடுத்தது காவல்துறை மேற்கொண்ட ஒருவகை சமயோசித உத்திதான்: கருணாநிதி விளக்கம்

சிறுவனை உயிருடன் மீட்க பிணையத் தொகை கொடுத்தது காவல்துறை மேற்கொண்ட ஒருவகை சமயோசித உத்திதான்: கருணாநிதி விளக்கம்
                                                                            
சென்னை, நவ.7-
 
முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி- பதில் வருமாறு:-

கேள்வி:-முல்லைப் பெரியாறு அணையில் பழுதுபார்க்கும் பணியை தமிழக அரசு மேற்கொள்வதற்கு, கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரே?

பதில்:- முல்லைப் பெரியாறு அணையில் வழக்கமான பராமரிப்புப் பணியைத் தமிழக அரசு மேற்கொள்ளலாம் என்று இந்திய உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது.
 
 அதன் அடிப்படையில், அவ்வப்போது சிறுசிறு பராமரிப்புப் பணிகளைத் தமிழக அரசு மேற்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இப்படி மேற்கொள்வது ஒன்றும் புதிதாக நடைபெறுவது அல்ல. இது ஏதோ புதிதாக நடைபெறுவதைப் போலவும்; அதற்கு ஏதோ அடிப்படை இருப்பதைப் போலவும்; கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் விமர்சித்திருப்பது தவறு.

கேள்வி:- இந்திரா நினைவு தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டத்தில் பெயர் மாற்றம் செய்திருப்பதாக ஒருவர் தெரிவித்திருக்கிறாரே?

பதில்:- இந்திரா நினைவு தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். இதில், பெயர் மாற்றம் செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமை கிடையாது. அப்படி பெயர் மாற்றம் செய்திருப்பதாகச் சொல்வது வேண்டுமென்றே இட்டுக்கட்டி, உள்நோக்கத்துடன் சொல்லப்படுவதாகும். இதில் எவ்வித அடிப்படையோ, உண்மையோ கிடையாது.

ஒருவேளை மத்திய அரசின் இந்திரா வீடுகட்டும் திட்டத்திற்கும், தமிழக அரசின் கலைஞர் வீடுவழங்கும் திட்டத்திற்கும் வேறுபாடு தெரியாமல், அவர் அப்படிக் கூறியிருக்கலாம். அவர் இன்னொரு செய்தியையும் அறிந்து கொள்ள வேண்டும்.
 
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்திலேதான் ஆதிதிராவிடர் இலவச வீட்டுவசதிக் கழகம் 15.2.1974 அன்று தொடங்கப்பட்டது. 1975ம் ஆண்டு ஜனவரியில், செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கத்தில் அரிசன வீட்டு வசதிக் கழகத்தின் சார்பில் கட்டப்பட்டிருந்த குடியிருப்புகளைத் திறந்து வைத்து உரையாற்றிய போது, வாடகை எதுவும் இல்லாமல், இலவசமாக இந்த வீடுகளை அரிசனச் சகோதரர்களுக்கு வழங்குவதென்று தமிழக முதலமைச்சர் கலைஞர் முடிவு செய்திருப்பது, அவருடைய சீரிய மனப்பான்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். தமிழ்நாடு காட்டியுள்ள இந்தச் சிறந்த முன்னுதாரணத்தை, மற்ற மாநிலங்களும் பின்பற்ற முயலும் என்று நம்புவோமாக! என்று மத்திய உணவு அமைச்சராகத் திகழ்ந்த பாபு ஜெகஜீவன்ராம் பாராட்டினார்.

சென்னை- அடையாறு, ஊரூர்ப் பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஜெயப்பிரகாஷ் நாராயண், காந்தி அடிகள் கண்ட கனவினை முதல்வர் கலைஞர் நனவாக்கியதையெண்ணிப் பரவசம் அடைகிறேன்; பாராட்டுகிறேன்; போற்றுகிறேன் என்று புகழ்ந்துரைத்தார்.
 
தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு இலவச கான்கிரீட் வீடு திட்டம்தான்; இந்திரா வீட்டுவசதித் திட்டம் என்று மத்திய அரசால் ஏற்கப்பட்டு, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.
 
இந்திராகாந்தி நினைவு குடியிருப்புத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு குடியிருப்பும், மத்திய அரசு வழங்கும் 33,750 ரூபாயுடன், தமிழக அரசு வழங்கும் 26,250 ரூபாயையும் சேர்த்து, ரூ.60,000 செலவில் கட்டப்பட்டு வந்தது. இத்திட்டத்தின்கீழ், ஒரு குடியிருப்புக்கு தமிழக அரசு வழங்கும் நிதி 26,250 ரூபாய் என்பதில், மேலும் 15,000 ரூபாய் கூடுதலாகச் சேர்த்து 41,250 ரூபாயாக வழங்கிட தமிழக அரசு முடிவு செய்து அறிவித்தது. தற்போது, 2010, ஆகஸ்டு மாதத்தில் இருந்து இந்திராகாந்தி நினைவு குடியிருப்புத் திட்டத்தின்ÕÕகீழ் ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது என்பதையும்; மத்திய அரசு இந்தத் திட்டத்திற்கு வழங்கியுள்ள பெயரை எக்காரணம் கொண்டும், எக்காலத்திலும் மாற்றும் எண்ணம் கிஞ்சிற்றும் தமிழக அரசுக்குக் கிடையாது என்பதையும்; விமர்சித்த விவேகி அறிந்து கொள்வாராக!
 
கேள்வி:- சிறுபான்மையினரின் இடஒதுக்கீட்டுக்காக ஒரு கமிஷன் அமைக்கப்பட்டதே தனது ஆட்சிக் காலத்தில்தான் என்று ஜெயலலிதா, தனது 4.11.2010 நாளிட்ட அறிக்கையிலே, கூறியிருக்கிறாரே?
 
பதில்:- அவரது இந்த அறிக்கையைப் படிக்கும் சிறுபான்மையினர் எவரும் சிரிக்காமல் இருக்க மாட்டார்கள்! சிறுபான்மையினருக்கு எதிராக கட்டாய மதமாற்றச் சட்டம்கொண்டு வந்தவர் ஜெயலலிதா என்பதையும்; அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீரவேண்டும் என்று சொன்னவர் அவர் என்பதையும்; கரசேவைக்காக தமிழகத்தில் இருந்து தன் சார்பில் ஆட்களை அனுப்பி வைத்தவர் அவர் என்பதையும்; இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு பற்றி, முஸ்லிம்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல; கிறித்தவர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், புத்த மதத்தினர் இருக்கிறார்கள்; தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் சமமாக இருக்கிறார்கள் என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர் ஜெயலலிதா என்பதையும்; சிறுபான்மையினர் மறந்து விடவில்லை.
 
2006 சட்டப்பேரவைத் தேர்தலுக்குச் சற்று முன்பு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தை நீதியரசர் குமார் ராஜரத்தினம் தலைமையில் திருத்தி அமைத்து, அது நடைமுறைக்கே வராமல் போனதை மறந்து விட்டு; அதையும், சிறுபான்மைக் கமிஷனையும் இணைத்து ஜெயலலிதா குழப்பம் அடைந்திருக்கிறார் என்பது புரிகிறது.
தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்1.7.1999 அன்று தனி அமைப்பாக கழக ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
 
தமிழகத்தில் முதன்முதலில் சிறுபான்மையினர் நல ஆணையம் கழக ஆட்சியில் 13.2.1989 அன்று தொடங்கப்பட்டது. அதன் முதல் தலைவராக வி.எம்.அப்துல் ஜப்பார் கழக அரசால் நியமனம் செய்யப்பட்டார்; தற்போது அதன் தலைவராக வின்சென்ட் சின்னதுரை நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.உருது அகடமிகழக அரசில் உருவாக்கப்பட்டது. உலமாக்கள் நல வாரியம் கழக ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியருக்கென தனியே 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதும் கழக ஆட்சியிலே தான்.
 
ஜெயலலிதா ஆட்சியில் சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும்; கழக ஆட்சியில் சிறுபான்மையினருக்குச் செய்யப்பட்டு வரும் நன்மைகளையும்; இந்த ஆட்சியே சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கான ஆட்சி என்று நான் அறிவித்ததையும்; சிறுபான்மையினர் நிச்சயமாக மறந்துவிடமாட்டார்கள். இந்த உண்மைகளையெல்லாம் எந்தவிதமாக திருத்திச் சொன்னாலும்; தேர்தல் நெருங்க நெருங்க எத்தகைய வேடம் போட்டாலும்; சிறுபான்மையினர் ஜெயலலிதாவை நம்பமாட்டார்கள்!
கேள்வி:- சர்க்காரியா விசாரணை ஆணையத்தைப் பற்றி ஜெயலலிதா மீண்டும் சொல்லியிருக்கிறாரே?
 
பதில்:- சர்க்காரியா விசாரணை ஆணையத்தைப் பற்றி நான் பலமுறை விளக்கம் அளித்திருக்கிறேன். எனினும், வேண்டுமென்றே தன் மீதுள்ள ஊழல் வழக்குகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காக ஜெயலலிதா அவ்வப்போது சர்க்காரியா விசாரணை ஆணையத்தை கையிலெடுத்துக் கொள்கிறார். 1972ல் எம்.ஜி.ஆரால் தரப்பட்ட புகார்களின்மீது 1976ல் தான் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்தது. புகார் கொடுத்த எம்.ஜி.ஆர். அந்த கமிஷன் முன் ஆஜராகி, விளக்கம் அளிக்கத் தயாராக இல்லை என்பது மட்டுமல்ல; விசாரணைக் கமிஷனுக்கு அவர் எழுத்துமூலம் தந்த வாக்குமூலத்தில்கூட - அந்தப் புகார் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும், சேலம் கண்ணன் என்ற வக்கீல் சொன்னதைத்தான், தனது புகார் மனுவில் குறிப்பிட்டதாகவும் தெரிவித்து விட்டார்.
 
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அட்வகேட் ஜெனரலாக இருந்த வி.பி.ராமன், அந்த அறிக்கையை முழுவதும் படித்துப் பார்த்துவிட்டு, வழக்கு தொடர் வதற்கான எந்த ஆதாரமும் கிடையாது என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.  முன்னாள் டி.ஜி.பி. லட்சுமிநாராயணன் 31.5.2001 அன்று, சர்க்காரியா கமிஷன் வழக்கை மீண்டும் புதுப்பிக்க முடியாது. இப்போது அந்த வழக்கை மீண்டும் தொடரலாமா என்று அரசுத் தரப்பில் பேசுவது, சட்டத்தை அமல்படுத்துவதற்காக அல்ல; அரசியல்ரீதியாகப் பழிவாங்குவதற்காக என்றே தோன்றுகிறது என்று தனது கருத்தை வெளியிட்டார்.
 
கேள்வி:- கோடநாடு எஸ்டேட் வழக்குகளைப் பற்றியும், சிறுதாவூரில் நில ஆக்கிரமிப்பு பற்றியும் ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
 
பதில்:- கோடநாடு எஸ்டேட் வழக்குகளைப் பொறுத்தவரை; சென்னை உயர்நீதிமன்றத்திலும், இந்திய உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் இருந்துவரும் வழக்குகள் முடிவுக்கு வந்து, அவற்றின்மீது தீர்ப்புகள் வெளியானதற்குப் பிறகே உண்மைகள் ஊருக்குத் தெரியும். சிறுதாவூர் நில ஆக்கிரமிப்பைப் பொறுத்தவரை; இரண்டு, நில ஆக்கிரமிப்புப் பிரச்சினைகள் அதிலே அடங்கி இருக்கின்றன. சிறுதாவூர் பங்களாவுக்கு வெளியே, தலித்துகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 50 ஏக்கர் அரசு நிலத்தை அபகரித்ததைப் பற்றிய பிரச்சினையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையினை ஏற்று, அமைக்கப்பட்ட சிவசுப்பிரமணியன் கமிஷன், ஆக்கிரமிப்புச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது.
 
எனினும்,  உடனடியாக அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியாத அளவிற்கு, எதிர்தரப்பினர் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்திலே நிலுவையில் இருக்கிறது.  அந்த வழக்கு முடிவுக்கு வந்ததும்,  நில ஆக்கிரமிப்புச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மற்றொன்று; சிறுதாவூர் பங்களாவுக்குள்ளே 30 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, வளைத்துப் போடப்பட்டிருக்கும் பிரச்சினை. இதில் நில ஆக்கிரமிப்புச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இரண்டு பிரச்சினைகளிலும், ஜெயலலிதா தன்னை, மிகவும் சாமர்த்தியமாக நிரபராதி என்று சொல்லிக் கொள்வதன் மாசுபடிந்த பின்னணியை மக்கள் அறிவார்கள்!
 
கேள்வி:- சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த தொழிலதிபர் மகன் கீர்த்திவாசன் மீட்கப்பட்ட பிரச்சினை வெட்கக்கேடானது என்று ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறாரே?
 
பதில்:- ஒருவேளை கீர்த்திவாசன் மீட்கப்படாமல், கடத்தப்பட்டவர்களால் கொலை செய்யப்பட்டிருந்தால், ஜெயலலிதா மகிழ்ச்சி கொண்டாடியிருப்பாரோ என்னவோ!  சிறுவனை மீட்பதற்கு பிணையத் தொகை கொடுத்தது காவல்துறை சமயோசிதமாக மேற்கொண்ட ஒருவகை உத்தி தானே தவிர; வேறல்ல. பிணையத் தொகை கைமாறியதற்குப் பிறகு, சிறுவன் மீட்கப்பட்டதையும்; பிணையத் தொகையைக் கைப்பற்றியதோடு, குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டதையும்; சென்னைவாழ் பொதுமக்கள் பெருமளவுக்கு வரவேற்றிருக்கிறார்கள். இந்த வரவேற்பைக் கண்டு பொறுக்க முடியாமல் தான் ஜெயலலிதா, வெட்கக்கேடு என்றெல்லாம் சொல்லி வேதனைப்படுகிறார்! என் செய்வது? வெட்கக்கேடு என்போர் - தமிழகத்தின் சாபக்கேடு!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: