செவ்வாய், 1 மார்ச், 2011

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் கைது

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்றிரவு சோதனை செய்தனர். சொத்து வரி விதிப்புக்காக 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, பில் கலெக்டரை கைது செய்தனர்.

திருப்பூர், ரங்கநாதபுரம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம்; பனியன் கம்பெனி உரிமையாளர். இவருக்கு சொந்தமான வீட்டை இடித்து, விஸ்தரிப்பு செய்துள்ளார். சொத்து வரி விதிப்பில் மாற்றம் செய்வதற்காக, குமரன் வணிக வளாகத்தில் செயல்படும் மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் வருவாய் பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். வரியை நிர்ணயம் செய்ய, 10 ஆயிரம் ரூபாய் வேண்டுமென, பில் கலெக்டர் ராஜூ, லஞ்சம் கேட்டு கட்டாயப்படுத்தி உள்ளார்.

கடந்த 25ம் தேதி, 6,000 ரூபாயை எடுத்துச் சென்றபோது, "10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே வரி விதிக்கப்படும்' என மறுத்துள்ளார். இதையடுத்து, கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் வெங்கடாசலம் புகார் அளித்தார். அதன்படி, ரசாயனம் தடவிய இருபது 500 ரூபாய் நோட்டுகளுடன், நேற்று மாலை 4.30 மணிக்கு அலுவலகம் சென்றுள்ளார். அப்போது, ராஜூ வெளியே சென்றிருந்ததால், ஊத்துக்குளி ரோட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். மாலை 6.15 மணிக்கு, ஊத்துக்குளி ரோடு ஸ்டேட் பாங்க் முன் நின்று, 10 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். மறைந்திருந்த லஞ்சு ஒழிப்பு போலீசார் உடனடியாக வந்து, ராஜூவை கையும் களவுமாக பிடித்தனர். அவரை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணை நடத்தி, கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை: