செவ்வாய், 1 மார்ச், 2011

தொல்லை தரும் போன் அழைப்பு விடிவுக்கு வர இன்னும் 20 நாள்

புதுடில்லி: மொபைல் போன்களுக்கு வரும், தொல்லை தரும் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்., களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை, மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இம்மாதம் 21ம்தேதி வரை தள்ளி வைத்துள்ளது.

மொபைல் போன்களில் தினமும் தேவையற்ற அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. வங்கியில் கடன் வேண்டுமா? உங்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டுமா? உங்களுக்கு பல லட்சம் ரூபாயில் பரிசு காத்திருக்கிறது என்பது போன்ற, பல்வேறு விதமான விளம்பரங்கள், மொபைல் போன் வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்கின்றன. இப்பிரச்னைக்கு முடிவு கட்ட மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி நடவடிக்கையை எடுத்தது. தேவையில்லாத அழைப்புகளை விரும்பாதவர்கள் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. டெலிமார்க்கெட்டிங்கில் ஈடுபடுபவர்களிடமிருந்து, வெறுப்படைச் செய்யும் அழைப்புகளும், குறுந்தகவல்களும் (எஸ்.எம்.எஸ்.,) வந்து கொண்டு தான் இருக்கின்றன. "அழைக்காதீர்' பட்டியலில் தங்கள் மொபைல் எண்ணை வாடிக்கையாளர்கள் பதிவு செய்த பிறகும், டெலிமார்க்கெட்டிங் சேவை நிறுவனங்களிடமிருந்து வரும் அழைப்புகளுக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, கூறப்பட்டது. இதை டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களோ, தொலைபேசி சேவை நிறுவனங்களோ கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனவே, அபராத தொகையை கணிசமாக உயர்த்த "டிராய்' முடிவு செய்தது.

டிராய் விதித்த விதிமுறைகளின் விவரம் வருமாறு: டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களிடமிருந்து வரும் அழைப்புகளை விரும்பாதவர்கள், 1909 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அல்லது இதே எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி, "என்னை அழைக்காதீர்' என்று குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ளலாம். டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் "700' என்ற இலக்கத்தில் துவங்கும் எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிலிருந்து தான் விளம்பர எஸ்.எம்.எஸ்.,க்களை அனுப்ப வேண்டும். இதற்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, என்றால் சேவையை தொடரலாம். அவர்கள் இதை தொல்லை தரும் அழைப்பாகக் கருதி புகார் செய்தால், சம்பந்தப்பட்ட டெலிமார்க்கெட்டிங் நிறுவனத்துக்கு முதலில் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை தேவையற்ற அழைப்பை அனுப்பினால் 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது அழைப்புக்கு 80 ஆயிரமும், நான்காவது அழைப்புக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரமும், ஐந்தாவது அழைப்புக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், ஆறாவது அழைப்புக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த சேவையை நடத்துவதற்க டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள், தொலைபேசி சேவை நிறுவனத்திடம் கணிசமான உத்தரவாத தொகையை முன்கூட்டியே செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தேவையற்ற அழைப்புகள் குறித்து பதிவு செய்யாத சந்தாதாரர் ஒருவரது மொபைல் போனில் இருந்து, வர்த்தக தொடர்பான விளம்பரங்களை அனுப்பினால், அவருக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும். அடுத்த முறையும் தவறை செய்தால், அவரது தொடர்பு துண்டிக்கப்படும். டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் விளம்பரங்களை இரவு 9 மணி முதல் காலை 9 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி தொந்தரவு செய்யக்கூடாது. டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் அனுப்பும் தகவல்கள், சேவை வழங்கும் மொபைல் நிறுவனம் வழியாக வர வேண்டும். அந்த தகவல்களை, அந்நிறுவனம் பரிசோதித்து தேவையற்றதை நீக்கவும் உரிமை உள்ளது. இவ்வாறு டிராய் விதிமுறைகளை வகுத்தது.

வேண்டாத அழைப்புகளை தவிர்க்க ஒதுக்கப்படும் எண் குறித்து, பல்வேறு குழப்பங்கள் நிலவுவதால் டிராய், டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு விதித்த கெடுவை மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது. தேவையற்ற அழைப்புகளை தடுக்க ஒதுக்கப்பட்ட எண்ணுக்கும், எஸ்.டி.டி.,எண்ணுக்கும் இடையே சில இடங்களில் குழப்பம் காணப்படுகிறது. தொலை தொடர்புத் துறை இதற்கென இன்னும் உரிய எண்களை ஒதுக்கீடு செய்யாததால், நேற்றுடன் முடிவடைந்த கெடுவை வரும் 20ம் தேதி வரை டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு நீட்டித்துள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் வரும் 21ம்தேதி வரை தொல்லை தரும் அழைப்புகளையும், குறுந்தகவல்களையும் பொறுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும்.

கருத்துகள் இல்லை: