செவ்வாய், 1 மார்ச், 2011

லட்சியத்தை நிறைவேற்ற ராமதாசும், நானும் ஒன்றுபட்டு நிற்போம்: முதல்வர் கருணாநிதி

ஒரு லட்சியத்தை நிறைவேற்ற நானும், ராமதாசும் ஒன்றுபட்டு நிற்போம்,'' என முதல்வர் கருணாநிதி பேசினார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேரன் சுகந்தன் - டீனாவின் திருமணம் சென்னையில் நேற்று நடந்தது.

விழாவில் முதல்வர் கருணாநிதி வாழ்த்தி பேசியதாவது:மணமக்களை ஸ்டாலின் வாழ்த்தும் போது, "தேர்தல் திருமணம்' என்றார். இது மண மகனை, மண மகள் வீட்டாரும், மண மகளை மணமகன் வீட்டாரும் தேர்வு செய்த பின் நடக்கின்ற திருமணம். ஏற்கனவே இல்லத்தார் தேர்ந்தெடுத்து நடத்துகின்ற திருமணம். எனவே, ஒரு நல்ல கூட்டணி. இரு குடும்பத்திற்கிடையே அமைந்து அந்தக் கூட்டணி இந்தக் குடும்பத்தின் குலவிளக்குகளை ஏற்றி வைக்கக் கூடிய கூட்டணியாக விளங்கும். மணி பேசும் போது என்னைச் சிறப்பிக்கும் போது எதிர்கட்சித் தலைவராக, எதிர்கட்சித் துணை தலைவராக, எதிர்க் கட்சி கொறடாவாக, அமைச்சராக, பின் முதல்வராக என்று இப்படி 56, 60 ஆண்டுகளில் நான் வகித்த பதவிகளையெல்லாம் சொன்னார்.அந்த பதவிகளை விட இன்றைக்கு இந்தத் திருமண விழாவிலே புரோகிதராக அமர்ந்திருக்கின்ற, இந்தத் திருமணத்தை நடத்தி வைக்கின்ற இந்தப் பணியைத் தான் பெரும் பதவியாக கருதுகிறேன்.

புரோகிதர் பதவியை பெரிய பதவியாகக் கருதுகிறாய் என, யாராவது கேட்டால் இன்றைக்கு அந்தப் பதவிக்குத் தான் நாட்டிலே பெருமை. எனவே அந்தப் புரோகிதராக இந்தத் திருமண விழாவிலே கலந்து கொண்டு மண மக்களை நான் வாழ்த்துகிறேன். குடும்பம் என்றால் இடையிலே சில பிணக்குகள் வரக்கூடும். என்ன தான் நான் மண மகனாக, ராமதாஸ் மணமகளாக இருந்தாலும் எங்கள் குடும்பத்திற்குள்ளே பிணக்குகள் வரும் போகும். ஆனாலும் ஒரு லட்சியத்தை நிறைவேற்ற, ஈடேற்ற முனையும் போது நாங்கள் ஒன்றுபட்டு நிற்போம்.எங்களுடைய குடும்பங்களிலும் தமிழ் வழியிலே திருமணங்களை நடத்த முடியும்; நடத்துவோம். சட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நடத்துவோம் என்ற உறுதியோடு ராமதாஸ் இங்கே நடத்திக் காட்டிய திருமணம், பழந்தமிழர் காலத்திலே பசும்புல் தரையில் பால் வண்ண உடை உடுத்தி, காதலுக்கும் கடவுளுக்கும் வேறுபாடில்லை; அது காலத்தால் அழிவதுமில்லை' என, வாழ்த்த தமிழர்கள் காலத்துத் திருமண முறையாக இங்கே இருந்ததை நான் கண்டேன்; வியந்தேன்.

ராமதாசையும், அவரது குடும்பத்தாரையும் அவருடைய கட்சித் தொண்டர்களையும் நான் வாழ்த்துகிறேன். நாம் அடையப் போகும் வெற்றிக்கு இது முதல் அடையாளமாக இருக்கட்டும் என்று கூறி, இதுவும் ஒரு மங்கலமான விழா தான் என்று எல்லோராலும் பாராட்டப்படக் கூடிய, போற்றக் கூடிய, விரும்பக் கூடிய விழாவாக அமையும்.இந்தக் குடும்ப விழா, எல்லாராலும் பாராட்டக் கூடிய ஒரு விழாவாக வெற்றிக்கு அடையாள விழாவாக அமைந்திருக்கிறது. மணமக்கள் பல்லாண்டு வாழ்க. ராமதாசின் கொள்ளுப் பேரனுக்கு நடைபெறுகின்ற திருமண விழாவிலும் கலந்து கொள்கிற வாய்ப்பு நமக்கெல்லாம் கிடைக்கும் என்று சொல்வதற்குக் காரணம் அந்த அளவிற்கு எங்களுடைய நட்பு நீடிக்க வேண்டும் என்ற ஆசையோடு இதைச் சொல்கிறேன். அப்படி நீடிப்பதற்கு அன்புமணியும் அருள் பாலிக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

தரமான கல்வி கிடைத்தால் இட ஒதுக்கீடு தேவையில்லை : திருமண விழாவில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:நேரம் தவறாது காரியம் செய்து முடிப்பவர் கருணாநிதி. அவரைப் பார்த்து நான் நேரம் தவறாமையை கடைபிடிக்கிறேன். நான் எந்த காரியத்தை துவக்கினாலும், என் உள்ளம் அவரைத் தான் நினைக்கும். நான் துவக்கிய, "டிவி', பத்திரிகை, கல்வி அறக்கட்டளை, பண்ணிசை மன்றம் என அனைத்திற்கும் அவரைத் தான் அழைத்தேன். அவர் தான் துவக்கி வைத்தார். எங்கள் நட்பும் பாசமும் என்றும் இருக்கும். 31 தொகுதிகளை அள்ளி வந்ததில் பாட்டாளிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆறாவது முறையாக கருணாநிதியை முதல்வராக்க அனைவரும் துடிக்கிறார்கள். யார் சதிவலை பின்னினாலும் அதை தூள் தூளாக்க நாங்கள் இருக்கிறோம். கருணாநிதி குடும்ப பாசத்தோடு, பேரன், பேத்திகளோடு குதுகலித்து வாழ்வாங்கு வாழ்கிறார். சில பேருக்கு அது பொறாமையாக உள்ளது.

கொள்ளு பேரன் திருமணத்தையும் நான் நடத்த வேண்டும் என, கருணாநிதி குறிப்பிட்டார். நான் இருக்கிறேனோ இல்லையோ 100 ஆண்டுகளையும் கடந்து கருணாநிதி வாழ்ந்து, தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கி தமிழகத்தில் பசி - பட்டினி இல்லாத நிலையை உருவாக்கி இருக்கிறார். அடுத்த முறை ஆட்சிக்கு வரும் போது, வேளாண்மை முதன்மையாக இருக்க வேண்டும். எல்லோருக்கும் தரமான கல்வி கிடைத்துவிட்டால், இட ஒதுக்கீடு தேவை இல்லை. அதை நோக்கி நாம் செல்ல வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

கருத்துகள் இல்லை: