சனி, 5 மார்ச், 2011

வேட்பாளரை கண்காணிக்க 8 அதிரடிப்படை அமைப்பு

வேட்பாளர்களின் பிரசாரத்துக்கு புதிய கட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷன் விதித்துள்ளது. இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட 9 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். வேட்பாளர்களை கண்காணிக்க தொகுதி வாரியாக 8 அதிரடிப்படைகள் அமைக்கப்படுகின்றன. தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 13&ம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், வரும் 19&ம் தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து தேர்தல் ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாவட்ட அளவிலும், தொகுதி வாரியாகவும் போலீசார் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வில் சுறுசுறுப்பு காட்டி வருகின்றன.

தேர்தலை அமைதியாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது. அதற்காக பல புதிய விதிமுறைகள், கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது. சமீபத்தில் நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களை கண்காணிக்க தொகுதி வாரியாக அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டன. அதுபோல தமிழகத்திலும் வேட்பாளர்களை கண்காணிக்க தொகுதி வாரியாக 8 அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.வேட்பு மனு தாக்கலின்போது ஊர்வலமாக செல்லக்கூடாது, வேட்பாளருடன் 5 வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும். பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதியில் ஒலிபெருக்கியை பயன்படுத்தக் கூடாது. இரவு 10 மணிக்குமேல் பிரசாரம் செய்யக் கூடாது. பூத் சிலிப்புகளை அரசு ஊழியர்களே வழங்க வேண்டும், வாக்குச்சாவடிகளுக்கு ஆட்களை வாகனங்களில் ஏற்றிச் செல்லக் கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் சேகரிக்கும் செலவு கணக்குகளுடன் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் கணக்கு சரிபார்க்கப்படும். வேட்பாளர் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கி, அதன் மூலமே செலவு செய்ய வேண்டும் என்ற அதிரடி உத்தரவும் போடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இன்று மாலை 5.30 மணிக்கு கோட்டையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு தேர்தல் ஏற்பாடுகள், விதிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் விளக்கம் அளிக்கிறார்.

அப்போது தேர்தலில் கடைபிடிக்கப்பட உள்ள புதிய விதிமுறைகள் குறித்த கையேடுகள் கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் என்று தேர்தல் கமிஷன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையே, தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

* தேர்தல் பிரசாரத்தின்போது சாதி, மத, மொழி உணர்வுகளை தூண்டும் விதமாகவோ, தனி நபர் விமர்சனங்களோ பேசக் கூடாது. வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்யக் கூடாது.

* இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ, ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையிலோ பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது.

* கூட்டம் நடத்துவதற்கு குறைந்தபட்சம் 48 மணி நேரத்துக்கு முன்னதாக காவல் துறையினரின் அனுமதி பெற வேண்டும். கூட்டம் நடக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள்தான் தட்டிகள், கொடிகள், குழல் விளக்குகள் மற்றும் ஒலி பெருக்கிகள் அமைக்க வேண்டும்.

* அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளின் மைதானங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது. கூட்டம் நடக்கும் வளாகத்தில் டி.வி., டிஜிட்டல் திரை போன்றவற்றை பொருத்தக் கூடாது. கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பயன்படுத்த கூடாது.

* கூட்டம் முடிந்த 24 மணி நேரத்துக்குள் மேடை, தட்டிகள், கொடிகள் உள்ளிட்ட அனைத்தையும் அகற்றிவிட வேண்டும்.

கருத்துகள் இல்லை: