புதன், 2 மார்ச், 2011

தேமுதிக, அதிமுக தொகுதி பங்கீடு அறிவிப்பு!

தமிழக அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, நடிகர் விஜயகாந்த்தின் கட்சியான தே.மு.தி.க.,வுடன் எதிர் வரும் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு இறுதி அறிவிப்பு வரும் மார்ச் மாதம் நான்காம் தேதியன்று வெளியாகும் என்று இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து தங்களது தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவுள்ளார் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிறிய கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு ஏற்கனவே முடிவாகியுள்ளது. மனித நேய மக்கள் கட்சி - புதிய தமிழகம் - இந்திய குடியரசுக் கட்சி - அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் - பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது.
கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி மற்றும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு ஒரு தொகுதி வீதம் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க., - ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தமிழக சட்டசபைக்கு தேர்தல் மே மாதம் முதல் வாரத்தில் நடக்கும் என்று  எதிர்பார்த்திருந்த வேளையில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி நடக்கவுள்ளதாக நேற்றுமாலை தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து, பிரசாரத்தில் இறங்க, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
தற்போது தேய்பிறை நடந்து வரும் நிலையில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதை தே.மு.தி.க., விரும்பவில்லை அதனால் தேய்பிறை முடிந்து, வரும் 4ம்தேதி அமாவாசை அன்று இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி உடன்பாடு ஏற்படும் எனத்தெரிகிறது. தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து அறிவிக்கும் வகையில், வரும் 4ம்தேதி ஜெயலலிதாவை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் முடிவில், தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, அறிவிப்பு வெளியாகவுள்ளது. மேலும் அப்போதே ம.தி.மு.க., மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: