வியாழன், 3 மார்ச், 2011

மேற்கு வங்க தேர்தலில் மந்திரி மம்தா போட்டியில்லை : ஆட்சியை கட்சி பிடித்தால் முதல்வராக முடிவு

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என, திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மத்திய ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கம், தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. "மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு திருப்தியளிக்கவில்லை. அங்கு கட்சிகளுக்கிடையே மோதல் நிலவுகிறது. எனவே, தேர்தலின் போது 100 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்' என, உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்டுகளின் தாக்குதல் சில பகுதிகளில் அதிகம் உள்ளதால், மேற்கு வங்க மாநிலத்தில் ஆறு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் கடந்த ஏழு முறை நடந்த சட்டசபை தேர்தல்களில் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்று வந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சியை அகற்ற வேண்டும் என, காங்கிரஸ் எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை.
ஆனால், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தீவிர முயற்சியால் கடந்த லோக்சபா மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் இடதுசாரிகளின் வெற்றி வாய்ப்புகள் பின்னுக்கு தள்ளப்பட்டன. இதன் மூலம், நடைபெற உள்ள தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக கருதப்படுகிறது.


மேற்கு வங்கத்தில் புத்ததேவ் அரசின் பல்வேறு குறைகளை மக்களிடையே எடுத்துக்கூறி செல்வாக்கு பெற்று வருகிறார் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அவர் ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, முதல்வர் பதவிக்காக தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக களம் இறங்குவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், "இந்த தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை' என, மம்தா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.


பேட்டி: கோல்கட்டாவில் இது குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. பிரசாரம் மட்டுமே செய்வேன். ரயில்வே பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விவாதம் நாளை நடைபெற உள்ளது. எனவே, இந்த முக்கிய பணி இருப்பதால் நான் இதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மேற்கு வங்க தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், அப்போது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஆறு மாத காலத்தில் நான் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆவதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் இடம் இருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டதும் எங்கள் வெற்றிப் பயணம் துவங்கி விட்டது. எங்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியலும் தயாராக உள்ளது. தேர்தல் பிரசாரத்தை எந்த வன்முறையும் இன்றி அமைதியாக நடத்த அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும்.


எந்தவித காழ்ப்புணர்ச்சிக்கும் இடம் தராமல் அரசியல் நாகரிகத்துடன் கட்சிகள் நடந்து கொள்ள வேண்டும். அடுத்த மாதம் 8 அல்லது 9ம் தேதிகளில் தேர்தல் பிரசாரத்துக்காக டில்லியிலிருந்து கோல்கட்டா வர இருக்கிறேன். காங்கிரசுடனான கூட்டணி குறித்து எந்த கவலையும் கொள்ளத்தேவையில்லை. காங்கிரசுடனான எங்களது உறவு நல்ல முறையில் இருக்கிறது. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.


திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெற்றிக் கனியை பறிக்க தீவிரமாக உள்ளதால், ஆளும் இடதுசாரி கட்சிகளும் எதிர்க்கட்சிகளின் வியூகத்தை உடைக்க தயாராகி விட்டன.


ஆளும் கட்சி தொண்டர்கள் நடத்தும் முகாம்களில் ஆயுத பயிற்சி அளித்து திரிணமுல் காங்கிரஸ் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதல் நடத்தப்படுவதை பூதாகரமாக பிரசாரம் செய்ய உள்ளார் மம்தா. மாணவர் சங்க தலைவர் கொலை உள்ளிட்ட விஷயங்களை பெரிது படுத்தி, மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குலைந்து விட்டதை சுட்டிக்காட்ட இருக்கிறார் மம்தா.


கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது மேற்கு வங்க மாநில இளைஞர்களுக்காக, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டதாகவும், அதே போன்ற யுக்தியை இந்த தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் செய்து வருவதாக, மேற்கு வங்க இடது சாரி கமிட்டி தலைவர் பிமன் போஸ் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு போன்றவற்றை முன்னிறுத்தி ஆளும் கட்சி தேர்தல் பிரசாரத்தை துவக்க உள்ளது.

கருத்துகள் இல்லை: