சனி, 5 மார்ச், 2011

லிபிய அதிபர் கடாபி கைது ஆவாரா? எண்ணெய் வள பகுதியில் ராணுவம் குண்டு வீச்சு

போராட்டக்காரர்கள் வசம் உள்ள லிபியாவின் எண்ணெய் வள பகுதிகளை மீட்க ராணுவம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல் தொடர்ந்தால் கடாபி கைது செய்யப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.லிபியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. கிழக்குப் பகுதியில் உள்ள பிரெகா, அஜ்படியா உள்ளிட்ட பகுதிகளை போராட்டக்காரர்கள் கைப்பற்றி உள்ளனர். கச்சா எண்ணெய் வளம் மிகுந்த இப்பகுதியை மீட்பதற்காக, இப்பகுதியில் கடந்த 3 நாட்களாக ராணுவம் போர் விமானங்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. உலகில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் 12வது இடத்தில் லிபியா உள்ளது குறிப்பிடத்தக்கது. தாக்குதலை முறியடிக்கும் வகையில், போராட்டக்காரர்களும் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மக்கள் மீதான தாக்குதலை முறியடிக்கவும், கடாபியை பதவியிலிருந்து தூக்கி எறியவும் அந்நாட்டு ராணுவம் மீது போர் தொடுக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. இதற்கு பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கிடையில், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றத்துக்காக, கடாபி, அவரது மகன்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப் போவதாக சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் கடாபி கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ1.44 லட்சம் கோடி சொத்து அமெரிக்காவில் முடக்கம்

அமெரிக்காவில் லிபிய அரசு மற்றும் அதிபர் கடாபிக்கு சொந்தமாக உள்ள ஸி1.44 லட்சம் கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நிதியமைச்சர் திமோதி கெய்த்னர் தெரிவித்துள்ளார். இதில் அவரது மகன்கள் மற்றும் லிபிய மத்திய வங்கி, முதலீட்டு ஆணையம் உட்பட அரசுக்கு சொந்தமான சொத்துக்களும் அடக்கம். கடாபிக்கு சொந்தமான ஸி1.33 லட்சம் கோடி சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் ஸி11 ஆயிரம் கோடி சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதையும் முடக்கி உள்ளோம் என கெய்த்னர் கூறியுள்ளார்.

பிரச்னையை தீர்க்க வெனிசுலா முயற்சி

லிபியா பிரச்னைக்கு பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கான முயற்சியில் வெனிசுலா அதிபர் சாவேஸ் ஈடுபட்டுள்ளார். அதாவது வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த கடாபி ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், கடாபி பதவி விலகும் வரை பேச்சுக்கே இடம் இல்லை என போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: