செவ்வாய், 1 மார்ச், 2011

வாக்காளர்களுக்கு பணமழை; கட்சிகளுக்கு கவலை!

தமிழகத்தில் உள்ள 10 பெரிய தொகுதிகளில் அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்பதால், அதில் போட்டியிடப்போகும் அரசியல் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர். பத்து சிறிய தொகுதிகளில் திருப்தியளிக்கும் அளவிற்கு பணமழை பொழியும் என்பதால், வாக்காளர்கள் குஷி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி, அதிகாரத்தை நிர்ணயிக்கும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கு, அனைத்து அரசியல் கட்சிகளும் தயார் நிலையில் உள்ளன. தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணிகளில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் தேதி, அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, கட்சியின் மேல் மட்டம் முதல் அடிமட்டம் வரையுள்ள நிர்வாகிகள், தொண்டர்களை, "கவனிக்கும்' பணிகள் துவங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் நலத்திட்டம் என்ற பெயரில் இலவசங்கள், தடபுடல் பிரியாணி, மது விருந்துகள் இப்போதே களைகட்ட துவங்கியுள்ளது. கட்சியினருக்கு கிடைக்கும், "கவனிப்பு' அடுத்த சில நாட்களில் பொதுமக்களுக்கு கிடைக்கப் போகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளிடம் இருந்து பணமழை பொழியும் என்பதால், மக்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் வாக்காளர்கள் அதிகம் இருக்கும் 10 சட்டசபை தொகுதிகளில், அதிக பணத்தை செலவழிக்க வேண்டிய நிர்பந்தம் அரசியல் கட்சிகளுக்கும், அதில் போட்டியிடப் போகும் வேட்பாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அந்த 10 பெரிய தொகுதிகளில், சோழிங்கநல்லூர் (3,40,615 ஓட்டு - காஞ்சிபுரம் மாவட்டம்), கவுண்டம்பாளையம் (2,89,912 - கோவை), ஆவடி (2,65,914 - திருவள்ளூர்), பல்லாவரம் (2,65,703 - காஞ்சிபுரம்), மதுரவாயல் (2,57,528 - திருவள்ளூர்), மாதவரம் (2,54,654 - திருவள்ளூர்), முதுகுளத்தூர் (2,54,552 - ராமநாதபுரம்), அம்பத்தூர் (2,51,002 - திருவள்ளூர்), செங்கல்பட்டு (2,40,496 - காஞ்சிபுரம்), தாம்பரம் (2,38,295 - காஞ்சிபுரம்) ஆகியவை அடக்கம்.

இத்தொகுதிகளில் வாக்காளர்களை கவர அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்பதால், அரசியல் கட்சியினர் கலக்கம் அடைந்தனர். அதிக வாக்காளர்கள் உள்ள நிலையில், குறைந்த அளவே கவனிப்பு இருக்கும் என்பதால், வாக்காளர்களும் சோகமடைந்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் வாக்காளர்கள் குறைவாக உள்ள 10 சிறிய தொகுதிகளில் திருப்தியளிக்கும் அளவிற்கு, "கவனிப்பு' இருக்கும் என்பதால் வாக்காளர்கள் குஷியடைந்துள்ளனர். அந்த 10 சிறிய தொகுதிகளில் கீழ்வேளூர் (1,40,127 - நாகை மாவட்டம்), துறைமுகம் (1,45,183 - சென்னை), கந்தர்வகோட்டை (1,48,625 - புதுக்கோட்டை), நாகப்பட்டினம் (1,49,560 - நாகை), ராயபுரம் (1,51,333 - சென்னை), வேதாரண்யம் (1,54,281 - நாகை), கூடலூர் (1,55,357 - நீலகிரி), விராலிமலை (1,57,653 - புதுக்கோட்டை), எழும்பூர் (1,58,945 - சென்னை), திருப்பூர் (1,59,886 - திருப்பூர்) ஆகியவை அடக்கம்.

மற்ற தொகுதிகளைக் காட்டிலும், குறைந்த அளவே பணம் செலவாகும் என்பதால், இத்தொகுதிகளில் போட்டியிட, பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுமட்டுமின்றி கட்சி தலைவர்கள் போட்டியிடும் வி.வி.ஐ.பி., தொகுதிகளிலும், இம்முறை வரலாறு படைக்கும் அளவிற்கு, பணம் வாரியிறைக்கப்படும் வாய்ப்புள்ளது. அந்த தொகுதிகள் பெரியது, சிறியதாக இருந்தாலும் திருமங்கலம், "பார்முலா' அரங்கேறுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால், தலைவர்கள் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினருக்கும், வாக்காளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: