திங்கள், 7 மார்ச், 2011

தி.மு.க., மத்திய மந்திரிகள் இன்று ராஜினாமா : இருதரப்பும் மனம் திறக்க பெரும் தயக்கம்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து விலகுவதாக தி.மு.க., அறிவித்த பின்னும், காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. மனம் திறக்க இரு தரப்பினரும் தயக்கம் காட்டி வருகின்றனர். அதனால், தி.மு.க., அமைச்சர்கள் ஆறு பேரும் இன்று டில்லி சென்று, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ராஜினாமா கடிதங்களை அளிக்கின்றனர். இதற்கிடையில்,முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, மத்தியில் ஆட்சிக்கு முழு ஆதரவு தர முன்வந்திருக்கிறது.
வரும் சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க., - காங்கிரஸ் இடையே நடைபெற்று வந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து, மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து தி.மு.க., அமைச்சர்கள் விலகுவது என, அந்தக் கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.தி.மு.க.,வின் இந்த முடிவால், காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடையவில்லை. அந்தக் கட்சியின் தலைவர்கள் யாரும் பீதியடைந்தது போன்ற அறிக்கை விடாததோடு, கூட்டணியை புதுப்பிப்பதற்காக தி.மு.க.,வை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியவில்லை. இரு தரப்பினரும் மனம் திறந்து பேசாமல் பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
"தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில், பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவர்' என, காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறினர். காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அரசியல் விவகார ஆலோசகர் அகமது படேலும் நேற்று ஆலோசனை நடத்தினாலும் தகவல் ஏதும் வெளிவரவில்லை. மேலும் மே.வங்கம் மற்றும் கேரளாவில் அதிக இடங்களைப் பெறும் திட்டத்திற்கு தி.மு.க.,வுடன் அணிசேராமல் இருப்பது நல்லது என்ற கருத்து பொதுச் செயலர் ராகுலிடம் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் இந்த இருமாநிலங்களிலும் அதிகம் எதிரொலிக்காமல் இருக்க இது உதவும் என்ற கருத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசிய தி.மு.க., பார்லிமென்டரி கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு, ""காங்கிரசைச் சேர்ந்த யாரும் எங்கள் கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசவில்லை. எங்கள் கட்சியைச் சேர்ந்த ஆறு மத்திய அமைச்சர்களும் நாளை (இன்று) டில்லி சென்று தங்களின் ராஜினாமா கடிதங்களை, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பிப்பர்,'' என்றார்.
அதே நேரத்தில், மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., அமைச்சர்கள் விலகுவதால் ஏற்படும் ஆதரவு இழப்பை சரிக்கட்ட, முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் ஆதரவைப் பெறும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூன்று நாட்களுக்கு முன், பிரதமர் மன்மோகனுடன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் நீண்ட நேரம் சந்தித்து பேசியுள்ளார்.
தவிரவும், உத்தர பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியை வீழ்த்த பலமான கூட்டணி வேண்டும் என, காங்கிரஸ் விரும்புகிறது. அதற்காக சமாஜ்வாடி கட்சியுடன் இணக்கமாக இருப்பதை விரும்புகிறது. ஏற்கனவே, மத்திய அரசுக்கு சமாஜ்வாடி கட்சி வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தாலும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இரு கட்சிகளும் நெருக்கம் கொள்வது உ.பி.,யில் சமாஜ்வாடி கட்சிக்கு வசதியாகும். அதனால், வெளிப்படையாக சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் ஆதரவு கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக லக்னோவில் நிருபர்களிடம் பேசிய முலாயம் சிங், "மத்திய அரசில் சமாஜ்வாடி கட்சி சேருமா என்பது அனுமானத்தின் அடிப்படையிலான கேள்வி. எங்கள் கட்சி ஏற்கனவே மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதால், அரசுக்கு ஆபத்து என்ற கேள்விக்கே இடமில்லை' என்றார்.

கருத்துகள் இல்லை: