வெள்ளி, 4 மார்ச், 2011

நட்சத்திர பேச்சாளர் விமான செலவை ஏற்பது யார்?அரண்டு நிற்கும் அரசியல் கட்சிகள்

சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், தேர்தல் செலவுக்கு 16 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிட முடியும் என்பதால், கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு பிரசாரத்துக்கு வரும் நட்சத்திர பேச்சாளர்களின் விமானச் செலவை யார் ஏற்பது என்பதில், முக்கிய கட்சிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.சட்டசபைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. புதிய விதிமுறைகளின்படி, ஒரு வேட்பாளர் 16 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிட முடியும். இதற்கான வரவு, செலவு கணக்கும் முறையான ரசீதுகளுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
தேர்தல் செலவுகளை மேற்கொள்ள, வங்கிகளில் தனியாக கணக்கு துவங்கி, வங்கிகள் வாயிலாக மட்டுமே தேர்தல் செலவுகளை மேற்கொள்ள வேண்டும்.மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் சுவரொட்டி, சுவரில் எழுதுவது ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் பிரசாரத்தை விரிவாக மேற்கொள்வதில், அரசியல் கட்சிகளுக்கு சிக்கல் எழுந்துள்ளது. அதை விட முக்கியமாக, டில்லியில் இருந்து பிரதமர், காங்கிரஸ் கட்சி தலைவர், உள்துறை அமைச்சர் போன்ற நட்சத்திர பேச்சாளர்களை, பிரசாரத்துக்கு அழைத்து வர திட்டமிட்டிருந்த கட்சியினர், கவலையில் மூழ்கியுள்ளனர்.
நட்சத்திர பேச்சாளர்கள் ரயிலில் வந்தாலும், விமானத்தில் வந்தாலும், அதற்கான செலவும் வேட்பாளரின் கணக்கில் வந்து விடும் என்பது தான் காரணம். கூட்டணி கட்சியை சேர்ந்த நட்சத்திர பேச்சாளர் என்றால், பிரசார மேடையில் இருக்கும் எந்த வேட்பாளரின் பெயரைக் கூறி ஓட்டுக் கேட்கிறாரோ, அவர்தான் கூட்டத்துக்கான முழு செலவையும் ஏற்க வேண்டி வரும்.டில்லியில் இருந்து தனி விமானத்தில் மத்திய அமைச்சரோ, கட்சித் தலைவர்களோ வரும் பட்சத்தில், விமானக் கட்டணமே, "லகரங்களை' விழுங்கி விடும். அத்துடன் பிரசார செலவுகளும் சேர்ந்து கொள்ளும். கோவையை பொறுத்தவரையில், திருப்பூர், சேலம், ஈரோடு, நீலகிரி என எங்கு செல்ல வேண்டுமானாலும், நட்சத்திர பேச்சாளர்கள், கோவை விமான நிலையத்தில்தான் வந்திறங்கியாக வேண்டும்.அப்போது கட்சியின் உள்ளூர் தலைவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
பிற கட்சியினரை விட காங்கிரஸ், பா.ஜ., கட்சியினர்தான் டில்லி தலைவர்களை அழைத்து வர வேண்டியதிருக்கும். கட்சியினரின் அனைத்து செலவுகளையும் வீடியோவில் பதிவு செய்து, வங்கி கணக்கு வழக்குகளை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தேர்தல் கமிஷன் கண்காணிப்பதால், பிற கட்சியினரை விட இந்த இரு கட்சியினர் அதிக கவலையில் மூழ்கியுள்ளனர்.தேர்தல் செலவுகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி, பதவியை பிடிக்க காத்திருக்கும் அரசியல் கட்சியினர், தேர்தல் கமிஷனின் இந்த கிடுக்கிப் பிடி விதிமுறைகளை எப்படி சமாளிக்கப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: